Mattravai Nalliravu 1.05kku
By Rajesh Kumar
4.5/5
()
About this ebook
Reviews for Mattravai Nalliravu 1.05kku
5 ratings0 reviews
Book preview
Mattravai Nalliravu 1.05kku - Rajesh Kumar
http://www.pustaka.co.in
மற்றவை நள்ளிரவு 1.05க்கு
Mattravai Nalliravu 1.05kku
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
விடியற்காலை ஐந்து மணி.
கோவையின் புறநகரில் புதிதாய்ப் பிறந்திருக்கும் ஐஸ்வர்யா காலனி. ‘ஏ’டைப் வீடுகளில் ‘ஈ’ பிளாக்கின் முதல் மாடி. சிவக்கக் காத்திருக்கும் கிழக்குத் திசை. வெளிச்சம் துளியூண்டு வந்தாலும் பறக்க் காத்திருக்கும் பறவை சமாச்சாரங்கள். வாக்கிங் புறப்பட்டுப் போக கார்களை வெளியே எடுக்கும் பணக்கார வர்க்கம். இன்றைக்கு ஏதாவது வேலை கிடைத்து – குழந்தைகளுக்கு அரை வயிற்று கஞ்சியாவது வார்க்க முடியுமா என்று கவலைப்பட்டுக் கொண்டே கண் விழிக்கும் தொழிலாள வர்க்கம். அவசர அவசரமாய்த் திருட்டுததனமாய் ‘நோட்டீஸ் ஒட்டாதே’அறிவிப்பின் மேல் ‘தீராத மோகம்’ மலையாளப்பட போஸ்டர்களை ஒட்டும் சைக்கிற் பையன்கள். எந்தத் தெரு குழாடியில் தண்ணீர் பிடித்து- பாலில் ஊற்றலாம் என்று யோசித்துக் கொண்டே சைக்கிள்களை ஓட்டும் பால்காரர்கள். நீளமான கொட்டாவிகளோடு வீட்டிற்குத் தூங்கப் போகும் ராத்திரி நேர வாட்ச்மேன்.
இவ்வளவு அவஸ்தைகளோடு அந்த வெள்ளிக்கிழமை காலை விடிந்து கொண்டிருக்க- ‘ஈ’ பிளாக்கின் முதல் மாடியின் பாத்ரூமிலிருந்து சித்ரா ஈரம் சொட்டும் உடம்போடு வெளிப்பட்டாள். பெட்டிக் கோட்டை மார்பு வரைக்கும் ஏற்றிக் கட்டிக்கொண்டு அருகிலிருந்த ட்ரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்து விருட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள். இந்த ஒரு பத்து விநாடிக்காலம் உங்களால் பார்க்கப் பட்ட சித்ராவுக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். பழுத்த எலுமிச்ச நிறம். பெண்களுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். நடிகை நளினி மாதிரி நீள்வட்ட முகம். கண்கள் இரண்டும் பெரிசு… பெரிசாய்… மை போட்டுக் கொள்கிற நாட்களில் ஏராளமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
கல்யாணமாகி இன்றைய தேதிக்கு ஐந்து வருஷம் முடியப் போகிறது. அவளுடைய கழுத்தில் தாலி கட்டிய முரளி இன்னமும் அடுத்த அறையில் குறட்டையோடு தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். இப்போது அவகாசமில்லை. பின்னால் பார்த்துக் கொள்ளலாம். சித்ராவுக்கு ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் ‘ஜெய்சன் அண்ட் ஜான்ஸன்’ கம்பெனியில் டைப்ரைட்டிங் மெஷினைத் தட்டும் உத்யோகம். வேர்வை சிந்தாத அந்த வேலைக்கு மாதமானால் சுளையாக ஆயிரத்து ஐநூறு ரூபாயை கவரில் போட்டுக் கொடுத்தார்கள். தீபாவளி வந்தால் மூன்று மாத போனஸ் தந்தார்கள். காலையில் பத்து மணிக்குப் போனால் சாயந்தாரம் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து காப்பி குடிக்கலாம்.
ட்ரெஸ்ஸிங் அறையிலிருந்து வெளிப்பட்டாள் சித்ரா. வெள்ளைப் பூக்கள் சிரித்த கருநீல ஷிபானை உடம்புக்குக் கொடுத்திருந்தாள். அதே நிற ஜாக்கெட்டில் மார்புகளைக் கஷ்டப்படுத்தியிருந்தாள். கூந்தலைக் தளரப் பின்னி அதன் முடிச்சில ஒரு ரப்பர் பாண்டை மாட்டியிருந்தாள். லேசான பவுடர் பூச்சிலும், நெற்றியில் பதித்திருந்த நீலநிற ஸ்டிக்கர் பொட்டிலும் ஜொலித்தாள். படுக்கையறைக்குள் நுழைந்து… கட்டிலை நெருங்கினாள். குப்புறப்படுத்து வாயைக் கோணி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த கணவன் முரளியின் மேல் கையை வைத்தாள்.
"என்னங்க…?’’
"ர் ர் ர் ர் ர். ’’
பதிலுக்கு குறட்டை.
என்னங்க… உங்களைத்தானே…?’’ அவனுடைய வலுவான புஜத்தைப் பற்றி தன் கண்ணாடி கைவளையல்கள் கலகலக்க உசுப்பினாள்.
ம் ம் ம்…’’ எழுந்திரிங்க…’’ மல்லாந்து படுத்த முரளி பாதிக் கண்களை மட்டும். திறந்து…
மணி என்ன?’’ என்று கேட்டான். அவனருகே உட்கார்ந்த படி சித்ரா சொன்னாள். "அஞ்சரை…’’
"இந்நேரத்துக்கே ஏன் என்னை எழுப்பறே?’’
"மறந்துட்டீங்களா…? இன்னிக்கு என்னோட ஆபீஸ் கலீக் சுமதியோட கல்யாணம்… ஆறு மணிக்கு முகூர்த்தம்… நான் புறப்படறேன்… நீங்க வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்குங்க. ’’
படுத்திருந்த முரளி எழுந்து உட்கார்ந்தான். ஆநாகரிகமாய் வாயைத் திறந்து நீளமாய்க் கொட்டாவி விட்ட முரளியின் முழுப்பெயர் முரளிகிருஷ்ணனை வெட்டி விட்டு முரளியானான். நல்ல உயரம், எழுபது கிலோ உடம்பு. எப்படி சீவினாலும் முள்ளு முள்ளாய் சிலும்பிக் கொள்ளும் கிராப். தினசரி நான்கைந்து சிகரெட் பாக்கெட்டுகளைப் புகைத்து தள்ளுகிற உதடுகள். சிகரெட் புகையில் குளித்து, குளித்து மஞ்சளான பல் வரிசை, ராம்நகர் விவேகானந்தா ரோட்டில் இருக்கும் ‘நாத்ஃபெர்டிலைஸர்ஸ்’ கம்பெனியில் கேஷியர் உத்யோகம். இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி… வீட்டுக்கு ஆயிரம் கொடுத்து… பாக்கி ஆயிரத்துக்கு செலவுக் கணக்கு சொன்னான்.
"கல்யாணத்துக்குன்னு சொல்றே… பட்டுப் புடவை கட்டிக்கலையா… சித்ரா…’’
"கட்டிக்கலை…’’
"ஏன்…?’’
"அதுல ஒரு கிழிசல் இருக்கு…’’
"வேற பட்டுப் புடவை உன்கிட்டே இல்லையா…?’’
"எப்ப எடுத்துக் குடுத்தீங்க?’’
"சரி… சரி… நீ இப்போ கட்டியிருக்கிற இந்த ஷிபான் சேலையே நல்லாயிருக்கு… புறப்படு… புறப்படு…’’ சொல்லி விட்டுச் சிரித்தான் முரளி. .
சித்ரா சிரிக்காமல் சொன்னாள்.
"நான் கல்யாண வீட்ல இருந்துட்டு… சாப்ட்டுட்டு… அப்படியே ஆபீசுக்குப் போயிடறேன்… நீங்க…?’’
"என்னைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே…? நான் எட்டு மணிக்கு மேல சாவகாசமா எந்திரிச்சு குளிச்சு… எதிர்த்தாப்புல இருக்கிற ஜெயலெட்சுமி ஓட்டல்ல காப்பி சாப்பிட்டு ஆபீசுக்குப் புறப்பட்டுப் போயிடறேன்… சாய்ந்தரம் ரிசப்ஷன் ஒண்ணும் இல்லையே?’’
"இல்லை…’’
"அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவியா?’’
"வந்துடுவேன். ’’
புறப்பட எழுந்த சித்ரா கண்ணாடி முன் நின்று ஒரு முறை தலையைக் கோதிக் கொண்டாள்:ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையத்துக்கு நகர்த்தினாள்: நேற்றைக்கு ராத்திரியே வாங்கி ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்த மல்லிகைப்பூச் சரத்தை எடுத்து, தளரப் பின்னியிருந்த கூந்தலில் சொருகினாள்.
படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த முரளி "தலையில பூ ஏறின பின்னாடிதான் அமர்க்களமா இருக்கே… சித்ரா கல்யாண வீட்ல கல்யாணப் பொண்ணை யாரும் பார்க்க மாட்டாங்க… உன்னைத்தான் பார்க்கப் போறாங்க…’’ என்றான்.
சித்ரா புன்னகைத்தபடியே … கண்ணாடியை விட்டு நகர்ந்த அதே வினாடி அபார்ட்மெண்ட் வாசலில் ஆட்டோ ஒன்று படபடத்து நிற்கும் சத்தம் கேட்டது. சித்ரா வேக வேகமாய் போய் ஜன்னல் வழியே கீழே எட்டிப் பார்த்தாள்.
பரவியிருந்த விடிகாலை இருட்டில்… ஆட்டோ ஒன்று நின்றிருக்க அதிலிருந்து ரமேஷ்… அவளுடைய தம்பி… கையில் வைத்திருந்த சூட்கேசோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தான். முதுகுக்குப் பின்னால் முரளியின் குரல் கேட்டது.
"ஆட்டோவில யார் சித்ரா?’’
"என்னோட தம்பி. ’’
"ரமேஷா…? என்ன திடீர்ன்னு புறப்பட்டு வந்திருக்கான்…’’
"தெரியலையே…. ’’
"உடம்பைச் சுற்றியிருந்த போர்வையை உதறிவிட்டு லுங்கியோடு எழுந்து நின்றான் முரளி. படியேறி வரும் ரமேஷைச் சந்திக்கத் தயாரானான்.
ஆரை நிமிஷ அவகாசத்திற்குப் பிறகு…
ரமேஷ் உள்ளே வந்தான்: இருபத்திரெண்டு வயது. அசப்பில் சித்ராவின் முகஜாடை. நிறத்தை மட்டும் வாங்க தவறிப் போய்… புண்ணாக்கு நிறத்தில் இருந்தான். கண்களுக்கு அந்த நேரத்திலும் குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான். கரிக்கட்டியால் கோடிழுத்த மாதிரி அடர்த்தியான மீசை. பற்களில் பான் கறை. ஸ்டோன்வாஷ் சர்ட்டிலும், பேண்டிலும் பிரயாணக் களைப்புத் தெரிய உள்ளே வந்து கொண்டிருந்தான்.
"வாடா ரமேஷ்…’’ சித்ரா வரவேற்றாள்.
என்ன ரமேஷ்… திடீர்ன்னு…’’ முரளி ஆச்சர்யமாய்க் கேட்டுக் கொண்டே சொன்னான்.
அத்தான்… ஒரு மாசம் உங்க வீட்டுலதான் டேரா போடப் போறேன்… எனக்கு உங்க ஊர் மில்லுல அப்ரண்டீஸ் வேலை கிடைச்சிருக்கு…’’
"கங்கிராட்ஸ் … எந்த மில்லுல…?’’
"சூலூர் ஸ்பின்னர்ஸ்…’’
"ட்ரெயினிங் பிரியட் எவ்வளவு மாசம்?’’ சித்ரா கேட்டாள்.
"ஒரு மாசம்…’’
"அப்புறம்…?’’
"அப்புறம் நம்ம ஊர் ராஜபாளையத்திலேயே ஜெயஜோதி மில்ஸ்ல ஏ. எஸ். எம். போஸ்ட்ல வேலை… சம்பளம் ஆரம்பத்திலேயே ஆயிரம் ரூபாய்த் தாண்டும்…’’
"ராஜபாளையத்திலிருந்து ராத்திரி எத்தனை மணிக்குப் புறப்பட்டே?’’
"ஒன்பது மணிக்கு…’’
"வீட்ல அம்மாவும், அப்பாவும் சவுக்யமா?’’
"ம்… நல்லாத்தான் இருக்காங்க…’’
"அப்பாவுக்கு இன்னும் அந்த நெஞ்சுவலி வருதா…?’’
"எப்பவாவது வரும்… மாத்திரை சாப்பிட்டா சரியாயிடும்…. ஆமா… நீ எங்கேக்கா கிளம்பிட்ட… இந்த நேரத்தில? கோயிலுக்கா…?’’
"இல்ல… ஒரு கல்யாணத்துக்கு… ரொம்பவும் நெருங்கின சிநேகிதியோட கல்யாணம். கல்யாண வீட்டில சில மணி நேரமாவது இருக்கணும்… அங்கே இருந்துட்டு அப்படியே ஆபீஸ் போறேன்… சாயந்தரம்தான் வீட்டுக்குத் திரும்பி வருவேன்… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு குளி… அத்தான் கூடவே ஓட்டலுக்குப் போய் சாப்ட்டுட்டு மில்லுக்குப் போயிடு…’’
"ம்…’’
"நான் கிளம்பறேன்…’’
"ஏன்க்கா நீ தனியாவா போறே?’’
"என்னடா பயம்…. ? பொழுதுதான் விடிஞ்சாச்சே… ஒரு ஆட்டோ பிடிச்சா, நேரா கல்யாண மண்டபத்துக்குப் போயிடப் போறேன்…’’
சொல்லிக் கொண்டே…
வாசல் கதவைத் தாண்டினாள் சித்ரா.
கல்யாண வீட்டில் ஒன்பது மணி வரைக்கும் இருந்து விட்டு, ஆபீஸ் புறப்பட்டுப் போக பஸ் ஸ்டாப்புக்கு வந்தாள் சித்ரா. பஸ் ஸ்டாப்பில் கூட்டம் கசகசத்தது. எல்லாருமே ஆபீஸ் புறப்பட்டுப் போகிறவர்கள். கையிலிருந்து வாட்ச்சையும் பஸ் வரும் திசையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வந்த ஒரு பஸ்சிலும் ஜனங்கள் காய்ந்து தொங்க… அந்த பஸ், ஸ்டாப்பிங்கில் நிற்காமல் தள்ளிப் போய் நின்றது. சித்ரா பஸ்ஸைப் பிடிக்க ஓடினாள்: தபதபவென்று ஓடி பஸ்சை நெருங்கிய சமயம்… அந்த பஸ் பீறிட்டு வேகம் பிடித்தது.
சித்ரா ஏமாற்றமாய்த் திகைத்து நின்ற நேரம்…
அருகில் அந்த மாருதி கார் உரசிக் கொண்டு வந்து நின்றது.
காரின் கண்ணாடிக் கதவைக் கீழே இறக்கியபடி… டிரைவிங் சீட்டிலிருந்த இளைஞன் எட்டிப் பார்த்தான். அழகாய் இருந்தான். அவனுடைய சுருண்ட கிராப் காற்றில் அலைந்தது. சித்ராவைப் பார்த்து மெல்லிய குரலில் கேட்டான்.
"நீங்க மிஸஸ் சித்ரா முரளிதானே…?’’
குழப்பத்தை முகத்தில் தேக்கினபடி சித்ரா அவனைப் பார்த்தாள். "ஆமா…’’ என்றாள்.
அந்த இளைஞன் புன்னகைத்தான். "நான் முரளியோட ஃப்ரெணட். ஒரு கன்சர்ன்ல சார்ட்டட் அக்கவுண்டண்ட்டா இருக்கேன்… என்னோட பேரு கவுரிசங்கர்… என்னைப்பத்தி முரளி உங்ககிட்டே சொல்லியிருக்கலாம்…’’
சித்ராவுக்கு சட்டென்று ஞாபகம் வந்தது. "என்னோட ஃப்ரணெட் கவுரிசங்கர் தன்னோட வீட்டுக்கு வா வான்னு ரொம்ப நாளா கூப்பிட்டுகிட்டே இருக்கான்… எனக்குத் தான் அவனோட வீட்டுக்குப் போறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு… அவன் ஆகாயத்துல ஜம்போ ஆசாமி…. அவன் ஏதோ பேச்சுக்காக் கூப்பிடறான்…
‘அந்த கவுரிசங்கரா இவன்…?’
சித்ரா சுதாரித்து சொன்னாள். "ஆமா… உங்களைப் பத்திச் சொல்லியிருக்கார்…’’
"நீங்க எங்கே போகணும்…?’’
"ஆபீசுக்கு…’’
"உங்க ஆபீஸ் எங்க இருக்கு…?’’
"ரேஸ் கோர்ஸ் ரோட்ல…?’’
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா என்னோட கார்லேயே வரலாம்… ப்ளீஸ்கெட் இன்… நான் அந்த வழியாத்தான் போறேன்…’’
"வேண்டாம்… எனக்கு பஸ் வந்துடும்…’’
"டோன்ட் ஹெசிடேட்… ட்ரீட் மீ ஆஸ் யுவர் பிரதர்… பஸ் ஸ்டாப்புல கூட்டத்தைப் பார்த்தீங்களா…? நீங்க ரெண்டு மணி நேரம் இங்கே நின்னாலும் உங்களுக்கு பஸ் கிடைக்காது. ’’
பஸ் ஸ்டாப்பைத் திரும்பிப் பார்த்தாள் சித்ரா. கூட்டம் முன்னைக்கு இப்போது அதிகமாயிருந்தது. பெரும்பாலும் ஆண்கள்.
"என்ன யோசனை பண்றீங்க… மிஸஸ் சித்ரா…. ? ப்ளீஸ் ஏறுங்க…’’ அவன் மறுபடியும் வற்புறுத்தவே, காருக்குள் ஏறிக் கொண்டாள் சித்ரா.
கார் நகர்ந்தது. சிறிது நேர நகரலுக்குப் பின் அவன் கேட்டான்.
"நீங்க எந்தக் கம்பெனியில வேலை பார்க்கறீங்க?’’
"ஜெய்சன் அண்ட் ஜான்ஸன்…’’
"டெசிக்னேஷன்?’’
"டைப்பிஸ்ட்…’’
"நீங்களும் வேலைக்குப் போற விஷயம் ஆறுதலா இருக்கு. முரளியோட சஸ்பெண்ட் ஆர்டரை எப்போ ரத்து செய்யப் போறாங்களாம்…?’’
திக்கென்று நிமிர்ந்தாள் சித்ரா.
"சஸ்பெண்ட் ஆர்டரா…? ஏன்ன சொல்றீங்க…?’’
இப்போது கவுரிசங்கர் ஆச்சரியப்பட்டான்.
"உங்க ஹஸ்பெண்ட் முரளி சஸ்பெண்ட் ஆன விஷயமே உங்களுக்குத் தெரியாதா…? போன வாரத்துல ஒரு நாள் அவனைப் பார்க்கிறதுக்காக அவனோட கம்பெனிக்குப் போனேன்…. அங்கேயிருந்த ரிசப்சனிஷ்ட்தான் சொன்னான். முரளியை நிர்வாகம் சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருக்கிற விஷயத்தையும்… அவன் மேல இருக்கிற என்கொய்ரியையும் சொன்னாள். முரளி உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லவேயில்லையா…?’’
விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தாள் சித்ரா.
சித்ராவின் இருதயம் ஏராளமான துடிப்பில் இருந்தது. முகத்திலும் கழுத்தின் பின் பகுதியிலும் குபீரென்று வியர்த்துப் போனாள். அவளுடைய முக பாவத்தை சட்டென்று படித்து விட்ட கவுரிசங்கர் பதற்றக் குரலில் சொன்னான்.