Mannkudiraigal
By Sivasankari
4.5/5
()
About this ebook
Read more from Sivasankari
Knit India Through Literature Volume 1 - The South Rating: 5 out of 5 stars5/5Bridges Rating: 4 out of 5 stars4/5Gods Wait To Punish Rating: 0 out of 5 stars0 ratingsThe Betrayal and Other Stories Rating: 0 out of 5 stars0 ratingsKnit India Through Literature Volume 4 - The North Rating: 0 out of 5 stars0 ratingsAn Uncle, A Niece and Two Nephews Rating: 5 out of 5 stars5/5
Related to Mannkudiraigal
Reviews for Mannkudiraigal
4 ratings1 review
- Rating: 2 out of 5 stars2/5I have not read any successful woman's story yet. All are failures or devastated at the end why? Can't women win life alone?
Book preview
Mannkudiraigal - Sivasankari
http://www.pustaka.co.in
மண்குதிரைகள்
Mannkudiraigal
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
( 1 )
கூடத்துத் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கல்யாணி, இருப்புக்கொள்ளாமல் எழுந்து நின்றாள்.
தட்டுத்தடவி கதவருகே வந்து விளக்கைப் போட்டு, இத்தனை நேரம் இருட்டில் பார்த்த கண்கள் திடீரென்று பரவிய வெளிச்சத்தில் கூசிப்போக, கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்தாள்.
மெதுவாய் வாசப்பக்கம் நகர்ந்து, தெருவோரமாய் நின்று அந்தக்கோடிக்கும் இந்தக்கோடிக்குமாய் பார்வையை அலையவிட்டாள்.
தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்து, இத்தனை நேரம் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்கள் உள்ளே போயிருந்தார்கள்.
இரண்டு வீடுகள் தள்ளி எதிர்ச்சாரியிலிருந்த கோபாலய்யர் வீட்டு வாசலில் மட்டும், ஏழெட்டுப் பையன்கள் உரக்கப் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்தச் சின்ன தெருவிலேயே காம்பவுண்ட் சுவர் இருந்த ஒரே வீடு அதுதான். அத்தனை பசங்களும் வரிசையாய் அந்தச் சுவரில் உடுகார்ந்திருக்க, ராஜுவும் அந்த கும்பலில் இருக்கிறானா என்று தேடினாள்.
இல்லை. அப்படிப் பொறுப்பில்லாமல் உட்கார்ந்து அரட்டையடிக்கிற பிள்ளை இல்லை அவன்.
நாலு மணிக்கு ஸ்கூல் விட்டு வந்தவன், பையை வீசிவிட்டு உடனே ஓட்டமாய் ஓடியிருக்கிறான்.
பாவம்... எங்கே அலைந்துகொண்டிருக்கிறதோ, தெரியவில்லை.
மத்தியானம் சாப்பிட்ட துளி மோர்சாதம்தான்... ஒரு வாய் டீகூடக் குடிக்காமல்...
எங்கேயாவது விழுந்துவைத்திருக்கப் போகிறானே!
ஆனால், அவனுக்கு வைராக்கியம் அதிகம். போன காரியம் முடியாமல் வீடுதிரும்ப மாட்டான்.
ஃபாக்டரில பாத்துட்டு, அப்பா ஃப்ரெண்டுஸ் வீட்டுலயும் விசாரிச்சுட்டு வந்து டறேன்... போய்க் கேட்டா, ஆபீஸ்ல யாராவது சொல்லமாட்டாளா என்ன?
என்று ரொம்ப நம்பிக்கையோடு போயிருக்கிறான்.
கல்யாணிக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. இது பழைய குருடி கதவைத் திறடி சமாச்சாரமாகத்தான் தோன்றியது.
சிவராமன் வீட்டை விட்டுக் காணாமல் போவது, இது ஒன்றும் முதல் தடவை இல்லையே!
கல்யாணமான இந்தப் பதினெட்டு வருஷங்களில், கணவனைக் காணமென்று கவலையோடு இரண்டு தரம் தேடியாகிவிட்டது. இது மூன்றாவது முறை.
சந்தேகமேயில்லை... இந்தத் தரமும் ஓடித்தான் போயிருக்கிறார்.
ஏனாம்?
இதற்கு ஒரு பெரிய விளக்கமே தேவையில்லை. காரணமும் வேண்டியதில்லை.
வீட்டை விட்டுப் போய்விடுகிற அளவுக்கு சண்டை சச்சரவு ஏதும்கூட நடக்கத் தேவையில்லை.
பார்க்கப்போனால், சிவராமன் வீட்டுக்கு வருவதற்கும், தாலிகடுடின புருஷனாகப் பொறுப்புடன் நடந்துகொள்வதற்கும்தான் காரணங்கள் தேவைப்படும்.
இஷ்டம்போல போவார், வருவார்.
இன்றைய தேதியில் என்ன வேலை பார்க்கிறார் என்றுகூட யாருக்கும் அவர் சொன்னதில்லை.
தப்பித்தவறி அது விஷயமாய் யாரேனும் ஏதேனும் கேடுடுவிட்டால் போயிற்று...
கண்களை இடுக்கிக்கொள்வார்... 'ஓ, துரைக்கு அவசியம் தெரிஞ்சாகணுமோ! மகாராணிகிட்ட வெவரம் சொல்லாட்டா, சாப்பாடு போடமாட்டேளோ? தெரிஞ்சுண்டு என்னத்தை வெட்டிமுறிக்கப்போறேள்? ம்? அதான் மாசாமாசம் கொண்டுவந்து கொட்ட றேனே... போறாதா? எங்க ஏதுன்னு வெவரமெல்லாம் தெரியணுமாக்கும்! சர்த்தான் போடீ, நாயே... எதிர்ல நின்னுண்டு கேள்வியா கேக்கறே? பல்லைத் தட்டி கையில குடுத்துடுவேன்! பட்டி முண்ட!"
நமுட்டாக ஆரம்பிப்பவர், ஆத்திரம் அதிகமாகி, நாக்கைப் பிடுங்கிக்கொள்ளாத
குறையாகக் கத்திய நாள்கள்தான் எத்தனையெத்தனை!
முதலில் பிசினெஸ், பிற்பாகு நாலைந்து வேலைகள் என்று இண்டு இடுக்கில்
பார்த்ததாக ஒரு ஊகம்தானே ஒழிய, எதுவும் தீர்மானமாகத் தெரியாது.
சொன்னால்தானே தெரிந்துகொள்ள!
இப்போதும், அவருடைய ஃபாக்டரியிலிருந்து எதேச்சையாய் யாரோ வந்து, ஏதோ சாவி வாங்கிக்கொண்டு போன நாளில்தான், சிவராமன் அந்தத் தொழிற்சாலையில் ஸ்டோர்ஸில் இருப்பதுகூடத் தெரியவந்தது.
ஆனால், எங்கே வேலைபார்த்தாலும் சரி, எப்போது கிளம்பிப் போனாலும் சரி...
டாணென்று மணியடித்த தினுசில் சாப்பாட்டுக்கும் படுக்கைக்கும் மட்டும் வீட்டுக்கு வந்து விடுவார்.
இதற்கெல்லாம் வெளியே போனால் பணம் செலவாகும் என்பதோடு, காலணா செலவில்லாமல் வீட்டிலேயே ஒரு கல்யாணி எந்நேரமும் ரெடியாக சாப்பாட்டுடன் காத்திருப்பாள் என்பதும் ஒரு காரணம்.
அந்த மனுஷர்தான் நேற்றுக் காலையிலிருந்து இன்னமும் வீட்டுக்கு வந்தபாடில்லை.
காரணமேயில்லாமல் அவர் இரண்டு தரம் காணாமல்போனதே இன்னமும் மறக்கவில்லை...
இந்த லட்சணத்தில் சொல்லிக்காட்ட நேற்று ஒரு சந்தர்ப்பம் வேறு வாய்த்துவிட்டதில், அவர் நிச்சயமாய் ஓடித்தான்போயிருக்கிறார் என்று அழுத்தம்திருத்தமாக மனசில் ஏதோ சொல்லியது.
உப்புப்பெறாத விஷயம்...
வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, மனுஷருக்கு வக்கணையாய் சாப்பாடு
போட்டுவிட வேண்டும். அது இல்லை, இது இல்லை என்ற பேச்செல்லாம், மூச்... வாயைத்
திறக்கக் கூடாது.
நேற்றும் அப்படித்தான்... தட்டின் முன் உட்கார்ந்து, சாதம், குழம்பு பரிமாறப் பட்டதும், கோபமாக நிமிர்ந்து இவளைப் பார்த்த உடனேயே தெரிந்துபோயிற்று, எதுவோ சரியில்லை என்று.
பருப்பு வெக்கலியா?
...............
ம்? பதில் சொல்லித் தொலையேண்டி?
இல்ல...
சின்னக் குரலில் முனகிவிட்டுத் தலையாட்டினவளிடம், ஏனென்றுகூடக் கேட்காமல் தட்டை அப்படியே தூக்கியெறிந்தார்.
ருத்ரமூர்த்தியாய் எழுந்து நின்று கை நீட்டி, இவளைப் புரட்டியெடுத்து, மூச்சு
விடாமல் அரைமணிநேரம் கத்தி...
"ஒரு பருப்பு வெச்சு சமையல் பண்ணத் தெரியல, என்னடீ எழவு குடுத்தனம் பண்றே? மனுஷன் நிம்மதியா சாப்பிட உக்காந்தா, எப்பவும் இல்லப் பாட்டுத்தான்! ஒண்ணாந்தேதி அன்னிக்குதானே மளிகைக் கடைக்காரன் வண்டில கொண்டுவந்து எறக்கிட்டுப் போறான்... அதுக்குள்ள தீந்துடுத்தா? வடிச்சுவடிச்சு நீயே எட்டு வேளை கொட்டிக்கறியா, என்ன? ஆனாலும் ஒரு பொம்மனாட்டிக்கு