Amma, Please, Enakkaga...
By Sivasankari
2/5
()
About this ebook
எனக்கு ஒரு சினேகிதி இருந்தாள். அவள் தன் ஒரே பிள்ளை தவறு செய்யும் போதெல்லாம், அடிக்கமாட்டாள், திட்டமாட்டாள். 'நீ இந்த தப்பு செய்து விட்டாய், அதனால் இன்று முழுவதும் உனக்கு வெறும் மோர்சாதம்தான்' என்று சொல்லி, பையனுக்குக் கண்டிப்பாக அன்றைக்கு மோரும் சாதமும்தான் போடுவாள். ' ஏன் இப்படிச் செய்கிறாய்?' என்று தாங்கமாட்டாமல் நான் ஒருநாள் அவளிடம் கேட்டபோது, 'நாவை அட்க்கத் தெரிந்தவனுக்கு, வயதாக ஆக எந்தவொரு உணர்வையும் அடக்கத் தெரிந்து விடும். பொறாமை, கோபம், ஆங்காரம் போன்ற பல தீய உணர்வுகளே, பேராசை என்ற ரூபத்தில் ஒருவனைப் பிற்காலத்தில் ஆட்டிவைக்கின்றன. இன்று என் மகனின் நாவை அடக்குவதன்மூலம், நாளைக்குக் பேராசையை வென்று, எந்தவொரு தப்புத்தண்டாவுக்கும் போகாமல் நேர்மையாய் அவன் வாழ உதவுகிறேன்' என்றாள்.
அன்று என் சினேகிதி பேசியது, எனக்குள் விழிப்பை உண்டாக்கிய ஓர் அறிவுரையாகவே இருந்தது.
எத்தனை தாய் தந்தையர், தங்கள் அதீதமான செல்லத்தால் பிள்ளைகள் தவறான பாதையில் போகத் தாங்களே காரணமாகின்றார்கள் என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தபோது, மனசு அதிர்ந்துபோற்று.
அந்த அதிர்ச்சி, முன் சொன்ன மர்மநாவல் ஆசை, இரண்டுமாகச் சேர்ந்து உருவாக்கிய கதைதான், ' அம்மா, பீளீஸ், எனக்காக...'
இந்த கதை நிஜத்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு வருஷம்போல இதற்குத் தேவையான விவரச் சேகரிப்பை(Spade Work) செய்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன். எனக்கு தெரிந்த பாங்க் ஏஜென்டுகள், மற்ற அதிகாரிகள், என்னைக் கண்டாலே பிடறியில் கால் படுமளவுக்கு ஓடத் தொடங்கினார்கள் என்றால், அது, விவரங்களுக்காக நான் அவர்களை நச்சரிப்புக்ளையும் தொண தொணப்புக்ளையும் தாங்கமாட்டாம்ல்தான்.
இந்தக் கதையைப் படித்த அனைவரும் ஒருமுகமாக, 'ஆ... சிவசங்கரி பாங்க்கில் வேலைபார்த்திருக்கிறாள், அதுதான் அழமாக விவரித்து எழுதுவது அவளுக்கு சாத்தியமாயிற்று!' என்று சொல்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு சரியில்லை. நான் சிட்டி பாங்க்கில்() டெவலப்மெண்ட் செக்ஷனில்(Development Section) வேலை பார்த்தது நிஜம்தான்... ஆனால், கதை முழுக்கமுழுக்க கேஷ், செக்யூரிடி(Cash, Security) பற்றியது. நான் வேலைபார்த்த டிபார்ட்மெண்டுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாங்க்கில் வேலைபார்ப்பவர்களுக்குத்தான், ஒரு பகுதியில் வேலை செய்பவர்களுக்கு மற்றொரு பகுதிக்குள் நுழையக்கூட அனுமதி கிடையாது என்பதெல்லாம் தெரியும். பாங்க்கில் நான் அக்கெளண்டண்டாக வேலைபார்த்திருக்கிறேன் என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு இக்கதை உண்டுபண்ணுகிறதென்றால், அத்தனை நிஜத்தன்மையை இந்த நாவல் உண்டாக்குகிறதென்றால், அதையே என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டு பூரித்துதான்போகிறேன்.
-- சிவசங்கரி
Read more from Sivasankari
Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pahal Oru Iravu Rating: 5 out of 5 stars5/5Avargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5
Related to Amma, Please, Enakkaga...
Related ebooks
Naan Naanaga... Rating: 5 out of 5 stars5/5Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsIvale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Malargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsSoundarammal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaathal Crime Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Ragasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Ithuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Vinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsYen? Rating: 5 out of 5 stars5/5Maalayil Pookkum Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Vegathodu… Rating: 5 out of 5 stars5/5Poi Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsKizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNagarangal Manithargal Panpaadugal Rating: 0 out of 5 stars0 ratingsSabash! Parvathi! Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Rushi Kanda Poonai Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Amma, Please, Enakkaga...
1 rating0 reviews
Book preview
Amma, Please, Enakkaga... - Sivasankari
http://www.pustaka.co.in
அம்மா, ப்ளீஸ், எனக்காக...
Amma, Please, Enakkaga…
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
என்னுரை
ரொம்ப நாள்களாகவே மர்மநாவல் ஒன்றை எழுதிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் பூத்திருந்தாலும், முழுக்க முழுக்க கொலை, கொள்ளை என்கிற திகில் சமாச்சாரமாக இல்லாமல், பந்தபாசங்களோடு இணைந்த ஒரு சஸ்பென்ஸ் தொடரையே எழுத விரும்பினேன்.
எனக்கு ஒரு சினேகிதி இருந்தாள். அவள் தன் ஒரே பிள்ளை தவறு செய்யும் போதெல்லாம், அடிக்கமாட்டாள், திட்டமாட்டாள். 'நீ இந்தத் தப்பு செய்து விட்டாய், அதனால் இன்று முழுவதும் உனக்கு வெறும் மோர்சாதம்தான்' என்று சொல்லி, பையனுக்குக் கண்டிப்பாக அன்றைக்கு மோரும் சாதமும்தான் போடுவாள். 'ஏன் இப்படிச் செய்கிறாய்?' என்று தாங்க மாட்டாமல் நான் ஒருநாள் அவளிடம் கேட்டபோது, 'நாவை அடக்கத் தெரிந்தவனுக்கு, வயதாக ஆக எந்தவொரு உணர்வையும் அடக்கத் தெரிந்து விடும். பொறாமை, கோபம், ஆங்காரம் போன்ற பல தீய உணர்வுகளே, பேராசை என்ற ரூபத்தில் ஒருவனைப் பிற்காலத்தில் ஆட்டி வைக்கின்றன. இன்று என் மகனின் நாவை அடக்குவதன் மூலம், நாளைக்குப் பேராசையை வென்று, எந்தவொரு தப்புத்தண்டாவுக்கும் போகாமல் நேர்மையாய் அவன் வாழ உதவுகிறேன்' என்றாள்.
அன்று என் சினேகிதி பேசியது, எனக்குள் விழிப்பை உண்டாக்கிய ஓர் அறிவுரையாகவே இருந்தது.
எத்தனை தாய் தந்தையர், தங்கள் அதீதமான செல்லத்தால் பிள்ளைகள் தவறான பாதையில் போகத் தாங்களே காரணமாகின்றார்கள் என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தபோது, மனசு அதிர்ந்து போயிற்று.
அந்த அதிர்ச்சி, முன் சொன்ன மர்மநாவல் ஆசை, இரண்டுமாகச் சேர்ந்து உருவாக்கிய கதைதான், 'அம்மா, ப்ளீஸ், எனக்காக...'
இந்தக் கதை நிஜத்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு வருஷம்போல இதற்குத் தேவையான விவரச் சேகரிப்பை (Spade work) செய்திருக்கிறேன் என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த பாங்க் ஏஜென்குகள், மற்ற அதிகாரிகள், என்னைக் கண்டாலே பிடறியில் கால் படுமளவுக்கு ஓடத் தொடங்கினார்கள் என்றால், அது, விவரங்களுக்காக நான் அவர்களை நச்சரித்த நச்சரிப்புகளையும் தொண தொணப்புகளையும் தாங்க மாட்டாமல்தான்.
இந்தக் கதையைப் படித்த அனைவரும் ஒருமுகமாக, 'ஆ... சிவசங்கரி பாங்க்கில் வேலை பார்த்திருக்கிறாள், அதுதான் இத்தனை ஆழமாக விவரித்து எழுதுவது அவளுக்கு சாத்தியமாயிற்று!' என்று சொல்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு சரியில்லை. நான் சிட்டி பாங்க்கில் (Citi Bank) டெவலப்மெண்ட் செக்ஷனில் (Development Section) வேலை பார்த்தது நிஜம்தான்... ஆனால், கதை முழுக்க முழுக்க கேஷ், செக்யூரிடி (Cash, Security) பற்றியது. நான் வேலை பார்த்த டிபார்ட்மெண்டுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பாங்க்கில் வேலை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு பகுதியில் வேலை செய்பவர்களுக்கு மற்றொரு பகுதிக்குள் நுழையக்கூட அனுமதி கிடையாது என்பதெல்லாம் தெரியும். பாங்க்கில் நான் அக்கெளண்டண்டாக வேலை பார்த்திருக்கிறேன் என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு இக்கதை உண்டு பண்ணுகிறதென்றால், அத்தனை நிஜத்தன்மையை இந்த நாவல் உண்டாக்குகிறதென்றால், அதையே என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டு பூரித்துதான் போகிறேன்.
சிவசங்கரி.
விழுப்புரம் 15.12.1980.
1
மணி என்ன?
ஒன்பதா?
நாழியாகிவிட்டது... ரொம்ப நாழியாகிவிட்டது. சரியாய் ஒன்பதேகாலுக்கு பாங்க் கார் வந்துவிடும். எல்லா டிரைவர்களையும்போல முத்தையன் வாசலில் காரை நிறுத்தி 'பேம்... பேம்...' என்று ஹாரனை அடிக்கமாட்டான் என்றாலும், அவன் வரும்போது நான் ரெடியாய் இல்லாவிட்டால் எப்படி?
பரக்கப்பரக்க கொண்டையைப் போட்டுக்கொண்டு, கெளரி சாப்பாட்டு மேஜையின் முன் வந்து அமர்ந்தாள்.
மாது, மெத்துமெத்தென்ற சூடான இட்லிகளைத் தட்டில் வைத்து, சட்னி, எண்ணெய் பரிமாறினான்.
விஜய் காபி குடிச்சானா, மாது?
கார்த்தால கொண்டு வெச்சதைக் குடிக்கவேயில்லம்மா... செத்த முன்னாடி 'டிபன் சாப்பிட வரேளா?'னு கேக்கப் போனப்போ, ஆறி ஏடுபடிஞ்ச காபி அப்படியே இருந்துது... அதை சுடப்பண்ணி, தாயிகிட்ட குடுத்துட்டு, வேற கலந்து எடுத்துண்டுபோய், கிட்ட நின்னு குடிக்க வெச்சேன். விஜய்க்கு உடம்பு சரியில்லியாம்மா? நாலைஞ்சு நாளா என்னமோ மாதிரி இருக்காரே? நா கேட்டா ஏதோ சொல்லி மழுப்பறார்...
மாதுவின் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று கெளரிக்குப் புரியவில்லை. பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். கை, இட்லியோடு விளையாடியது. பசி இல்லை.
எப்படி இருக்கும்! ஒரே பிள்ளை... உயிருக்கு உயிராய், இந்த உலகமே அவன் தான், தன் வாழ்வின் அர்த்தமே அவன்தான் என்று இவள் வாழும் பிள்ளைக்கு, சில நாள்களாய் மனசில் ஏதோ கஷ்டம் இருக்கிறதென்று புரிந்த பிறகு, பசி எப்படியெடுக்கும்! இல்லை, வயிறார சாப்பிடத்தான் எப்படிப் பிடிக்கும்!
சாதாரணமாய் விஜய் ஒருத்தன் வீட்டில் இருப்பதுகூட, பத்து பேர்கள் இருப்பதற்குச் சமம். அத்தனை கலகலப்பு, அத்தனை சிரிப்பு, அத்தனை பேச்சு.
ஸ்டீரியோ ரெகார்ட் பிளேயரில் 'அப்பா' பாடல்களைப் போட்டுவிட்டு, இருக்கிற சப்தம் போதாதென்று தானும் கிதார் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு அலறுவான்.
எட்டு மணிக்கு முன் தூக்கத்திலிருந்து அவன் எழுந்துகொள்வது வழக்கமில்லை. கண் விழித்துவிட்டால், உடனே காபி வேண்டும்.
மாது, காபி...
என்று படுக்கையில் படுத்தபடியே கத்துவான். காபி வந்ததும் அதைக் குடித்துவிட்டு, கொசுறுபோலப் பத்து நிமிஷம் திரும்பக் கண்மூடிப் பகுத்திருப்பான்.
அம்மாவோடு டிபன் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டவன் ஆதலால், எட்டே முக்காலுக்குள் அடித்துப்பிடித்துக்கொண்டு ஷேவ் செய்து, குளித்து, ஈர உடம்பில் ஒட்டும் துணியோடு வந்து உட்காருவான்.
ஹாய் மம்மி!
என்பான். யூ லுக் நைஸ் டுடே!
என்பான். நாளுக்கு நாள் நீ அழகாயிண்டே வரேம்மா... அதெப்படி? ரெக்ஸோனா உபயோகிக்கறியா? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உங்கள் மேனியின் அழகு வளர, ரெக்ஸோனா... டட்டடாண்!
என்று விளம்பரத்தில் சொல்வதுபோலப் பேசி, அவளைச் சிரிக்கவைப்பான்.
தனக்கு ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் விஜய் அம்மாவிடம் சாதித்துக் கொள்வது டிபன் நேரத்தில்தான். அந்தக் கால்மணிக்குள் அம்மாவைச் சிரிக்கவைத்து, மனசு பூரிக்கவைத்து, நெகிழவைத்து, தனக்கு என்ன காரியம் ஆகவேண்டுமோ அதையும் கூறி, சம்மதம் வாங்கிவிடுவான்.
அப்புறம், மாலையில் கெளரி பாங்க்கிலிருந்து வரும்போது, அவன் எங்கே வீட்டில் இருப்பான்!
நண்பர்களோடு சினிமா, கிளப் என்று எங்கு சுற்றுவானோ தெரியாது... இரவு பதினொன்றுக்குக் குறைந்து அவன் வீட்டுக்கு வந்து கெளரி பார்த்ததில்லை.
கல்லூரியில் படிக்கும் சமயத்தில், இப்படி நண்பர்களுடன் சுற்றுவது, இரவு லேட்டாய் வருவது என்பதெல்லாம் அதிகமாகிய சமயத்தில், பத்து மணிவரை பிள்ளைக்காகக் காத்திருந்து அலுத்தவளாய், மறுநாள் காலை கெளரி அவனை லேசாய்க் கோபித்துக் கொண்டதுண்டு.
என்ன விஜய், படிக்கற பிள்ளை இப்படி ஊர் சுத்தினா, அப்பறம் படிக்க நேரம் ஏது? ஐ டோண்ட் லைக் ஆல் திஸ்!
என்றால், கண்களை மலர்த்திக்கொண்டு அழகாய் சிரிப்பான் விஜய், 'கோபமா? உனக்கா? என்மேலாம்மா?' என்று வியக்கிற மாதிரி.
சிரிப்பதோடு சரி. அம்மாவின் கோபத்துக்கு ஆழமே கிடையாது என்பது அவனுக்குத் தெரியுமாதலால், தொடர்ந்து தன் இஷ்டம் போலத்தான் செய்வான்.
மிஞ்சிப்போய் ஒருமுறை, என் ·பிரெண்ட்ஸ் யார் வீட்டுலயும் என்ன ஏதுன்னு கேள்வி யாரும் கேக்கறதில்லம்மா... நீயும் ஃபஸ் பண்ணாதயேன்! நாங்க இன்னும் சின்னக் குழந்தைங்க இல்ல... மம்மி, ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்டு!
என்றான்.
அந்தப் பேச்சில், 'அம்மா, நீ தொணதொணப்பது எனக்குப் பிடிக்கவில்லை' என்ற எச்சரிக்கை கலந்திருப்பதாய் தோன்ற, அப்புறம் கெளரி அவனை ஏன், என்ன என்று கேட்பதைக் குறைத்துக் கொண்டாள்.
என்றைக்கு கெளரி அவனைக் கண்டித்திருக்கிறாள், இன்றைக்குப் புதுசாய்க் கண்டிக்க! அதுவும், தலைக்குமேலே வளர்ந்து நிற்கும் பிள்ளை, இருபத்திரண்டு வயசான பிள்ளை, தகப்பன் இல்லாத பிள்ளை என்ற நினைப்புகள் தோன்றிவிட்டால், கெளரிக்கு அவனை அதட்டுவது என்பது ரொம்ப சங்கடமான சமாச்சாரம்.
இப்படி சங்கடப்பட்டு, சங்கடப்பட்டுத்தான், அவன் பள்ளிப்படிப்பைப் பதினேழாவது வயசில் ஒரு தினுசாய் பாஸ் செய்தபோதுகூட, பி.யூ.சி. படிக்கும்போதே ஸ்கூட்டர் வேண்டுமென்று பிடிவாதம் பண்ணி வாங்கிக் கொண்டபோது கூட, படிக்காமல் சிகரெட்டும் சினேகிதர்களுமாய் திரிகின்றபோதுகூட, கெளரி அதிகம் தன் அதிருப்தியை மகனிடம் காட்டிக் கொண்டவளில்லை. 'விஜய் செய்வது நன்றாக இல்லை, வயசுக்கேற்ற பொறுப்பில்லை... என்ன இதெல்லாம்? வரட்டும், இன்றைக்கு உறைக்கிற மாதிரி ஒரு வார்த்தை கேட்கவேண்டும்' என்று கெளரி தீர்மானித்துக்கொண்ட நாள்கள் அனேகம். தீர்மானம்தான் பெரிசாய் இருக்கும்... மகனை நேரில் பார்த்துவிட்டால், அவன் 'ஹாய் மம்மி' என்று கழுத்தைக் கட்டிக் கொண்டுவிட்டால், அந்தச் சிரிப்பில், அந்தக் குழந்தைத்தனத்தில், அவள் தன் தீர்மானத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிடுவதுதான் நிஜம்.
என்றைக்காவது அதிசயமாய் மகன் ஒன்றைக் கேட்டு, கெளரி இல்லையென்று சொன்னதும் உண்டு.
அப்போதெல்லாம், தலைமீது கூரை இடிந்து விழுந்துவிட்ட துக்கத்தோடு விஜய் அறைக்குள் அடைந்து கிடப்பான். சோகமாய் முகத்தை வைத்துக்கொள்வான். ஆட்டம், பாட்டம்? ம்ஹூம், ஒன்றும் இருக்காது. எல்லாம் ஒரு அரை நாளுக்குத்தான்... ஒன்று, மகனின் ஏக்கம் தாங்காது கெளரி விட்டுக்கொடுத்து விடுவாள்; அல்லது, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, 'அம்மா, ப்ளீஸ்ம்மா... எனக்காகம்மா... ஒன்லி திஸ் டைம், மம்மி...' என்று விஜய் தன் ட்ரம்ப் கார்ட் கெஞ்சலை, கண்களும் முகமும் ஒருசேரக் கெஞ்சும் கெஞ்சலைக் கெஞ்சி, அவளைச் சரிக்கட்டி விடுவான்.
விஜய்யின் அந்தப் பார்வைக்குத்தான் எத்தனை சக்தி! அந்த முகத்துக்குத்தான் எத்தனை சக்தி! 'அம்மா, ப்ளீஸ்...' என்று கெஞ்சும் குரலுக்குத்தான் எத்தனை சக்தி!
கெளரி முதலில் மாட்டேன் என்று சொல்லி, பிறகு ஸ்கூட்டரில் பெங்களூர் போனது, நண்பர்களுடன் நேபாள் போனது போன்றவற்றுக்கெல்லாம் சம்மதித்தது இந்தத் தினுசில்தான்.
ஏன்? அந்த சேட்டிடம் விஜய் கடன் பட்டிருந்ததை அறிந்து, இவள் அக்கடனைத் தீர்த்ததும் இந்தக் கெஞ்சலின் காரணமாய்த்தானே!
விஷயம் தெரிந்த அன்று, கெளரி அதிர்ந்துதான் போனாள். விஜய்யா? சேட்டிடம் கடன் வாங்கியிருக்கிறானா? பாங்குக்கு சேட் போன் பண்ணி, உங்க மகன் கடனை நீங்க பொறுப்பெடுத்துக்கறீங்களா, இல்ல, நா ஆக்ஷன் எடுக்கட்டுமா?
என்று கேட்டபோதுதான், அவளுக்கு உண்மை தெரிய வந்தது. அன்று முழுவதும் அவளுள் விவரிக்கத்தெரியாத ஒரு படபடப்பு.
ஏன் கடன் வாங்க வேண்டும்? நான் கொடுக்காத பணமா? ஏன்? இரவு மகன் வரும்வரை காத்திருந்து, அவனோடு இதுபற்றிப் பேசினாள். என்ன விஜய், இதெல்லாம்? சேட்டுகிட்ட கடன் வாங்கினியா? அவர் பாங்க்குக்கு போன் பண்ணினார்... எனக்கு அவமானமா இருந்தது...
விஜய் முகத்தில் லேசாய் சலனம். உடனேயே சமாளித்துக் கொண்டான்.
ஓ, அதுவாம்மா... அதப்பத்தி நானே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்... ஆனா, மறந்துட்டேன். சதீஷ் இல்ல மம்மி, சதீஷ்? அவனோட அப்பாவுக்கு உடம்பு முடியாம இருந்தப்போ, வைத்தியத்துக்காக இந்த சேட்டுகிட்ட பணம் வாங்கினான்... ஷ்யூரிடுடி போடுன்னு என்னைக் கேட்டான்... ஆபத்துக்கு உதவாட்டா எப்படி, மம்மி? அதான் போட்டேன்.
காலேஜ் பசங்க கடன் வாங்க முடியுமா? எதை நம்பிப் பணுத்தைக் குடுப்பான்?
ஒரு நிமிஷம் தயங்கினான் விஜய். பின், மெதுவாய் பேசினான்.
என் ஸ்கூட்டர்மேல கடன் குடுத்தான், மம்மி... வைத்தியத்துக்குனு கேக்கறப்போ, மறுக்க எனக்கு மனசில்ல... ஐ'ம் ஸாரி...
...............
ஸ்கூட்டரை வைத்து சேட்டிடம் கடன் வாங்குமளவுக்கு விஜய் போயிருக்கிறான் என்பதை கெளரியால் நம்பமுடியவில்லை.
இந்தச் சின்னப் பையனா? இவனுக்கா இத்தனை தைரியம்?
கெளரி மெளனமாய் நிற்கையில், விஜய் அவள் கிட்டத்தில் வந்து, கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
ஐ'ம் ஸாரி, மம்மி... உன்கிட்ட பணம் கேக்க பயமா இருந்துது... ஐ'ம் ஸாரி... இனிமே இப்படிப் பண்ணமாட்டேன்...
பயமா! இவனுக்கா! ஸ்கூட்டரை வைத்துப் பணம் வாங்க இல்லாத பயம், என்னிடம் சொல்ல மட்டுமா!
அம்மா, ப்ளீஸ்... கோச்சுக்காதேம்மா... இந்த ஒரு தடவை மட்டும் சேட்டுக்குப் பணம் குடுத்துடும்மா... அம்மா, ப்ளீஸ், எனக்காகம்மா... இன்னொரு தடவை இப்படி நடக்காது... ஐ ப்ராமிஸ்!
வழக்கம்போல பிள்ளையின் கெஞ்சலுக்கு கெளரி அடிபணிந்து, சேட்டின் கடனைத் தீர்த்தாலும், இனி மகனிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்று மனசுக்குள் தீர்மானித்தது உண்டுதான். இப்போது கிட்டத்தட்ட ஆறு மாசங்களாய் விஜய் கொஞ்சம் ஒழுங்காய் இருக்கிற மாதிரிதான் தெரிகிறது.
ஒழுங்கு என்றால், அர்த்தராத்திரி வரை சுற்றல் இல்லை... பத்துக்குள் வந்து விடுகிறான். சினேகிதனோடு அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று ஒருநாள், இரண்டு நாள் போய்வரும் கூத்து இல்லை.
விஜய் டிகிரிப் படிப்பைக்கூட முடிக்காமல், ஏப்ரல், செப்டம்பர் என்று மாற்றிமாற்றி இரண்டு வருஷங்களாய் முற்றுகையிடுவதுபற்றி கெளரிக்கு ஏகக் குறைதான். இருந்தாலும், என்ன செய்ய?
கெளரியின் அங்கலாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தினுசில், விஜய் போன நான்காம் மாசம் பேசினான்.
டிகிரி முடிச்சு என்னம்மா ஆகப்போறது? எம்.ஏ., எம்.எஸ்ஸி. முடிச்சவனெல்லாம் வேலைக்குப் பறக்கற நாடு இது... ஸோ, நா இனிமே இந்தப் படிப்போடு மண்டைய உடைச்சுக்கப் போறதில்ல! என் ஃப்ரெண்ட் மதுசூதன் தெரியுமாம்மா? அவனோட அப்பா ஆந்திரால ஒரு பிசினெஸ் மாக்னெடு... அவருக்கு மெட்ராஸ்ல பெரிய ஆட்டோமொபைல் ஏஜென்சி இருக்கு... அதை மதுசூதன்தான் கவனிச்சுக்கறான்... 'என் கம்பெனில ட்ரெய்னிங்குக்குச் சேருடா, ஒரே வருஷத்துல நீ முன்னுக்கு வந்துடலாம்'ங்கறான்... ஐ'ம் கோயிங் டு ஜாயின் ஹிம்! என்னம்மா?
இந்த மட்டுக்கும் பிள்ளைக்குப் பொறுப்பு வந்ததே என்ற சந்தோஷம் எழ, கெளரி சம்மதித்தாள்.
ஒழுங்காய் பயிற்சிக்குப் போய்வந்த பிள்ளை, நான்கு நாள்களாய் இப்படி என்னவோ போல இருப்பதுதான் கெளரிக்குக் கவலையாய் இருக்கிறது.
என்னாயிற்று?
நண்பனுக்கும் இவனுக்கும் சண்டையா? மனஸ்தாபமா?
ட்ரெய்னிங்குக்குப் போகாமல், சரியாய் சாப்பிடாமல், அறையோடு அறையாக முடங்கிக்கொண்டு, சிரிக்காமல், ஒரு வார்த்தை பேசாமல்... என்ன இதெல்லாம்?
இரண்டு நாள்களுக்கு மேல் இந்த மாற்றத்தை அவளால் தாங்க முடியாது போனதும், இரவு சாப்பாட்டுக்கு உட்கார்ந்த சமயத்தில், ஏதாவது பிரச்சினையா, விஜய்?
என்று சின்னக்குரலில் கேட்டாள்.
விஜய், தலை நிமிராமலேயே, நோ...
என்றான். சில விநாடிகள் கழித்து, எனக்குப் பசிக்கல...
என்று முனகிவிட்டு எழுந்து போய்விட்டான்.
சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் எதையோ கேட்டு, அவனைச் சாப்பிட விடாமல் செய்துவிட்டோமே என்று கெளரிக்கு வருத்தம்.
அப்புறம், போன் அடித்தால் விஜய், 'யார் கேட்டாலும், நான் இல்லையென்று சொல்' என்கிறானே... இது ஏன்?
முதல் நாள் இரவு போன் ஒலித்தபோது, கெளரியே எடுத்துப் பேசினாள். விஜய்கிட்ட பேசலாமா?
என்றது ஒரு பெண் குரல். அவன் வீட்டில் இல்லை என்ற பதிலைக் கேட்டுவிட்டு, இப்பவும் வெளிய போயிட்டானா? ஆல்ரைட்! எங்க போனாலும் விடமாட்டேன்னு சொல்லுங்க!
என்று கூறியவள், கெளரி மேற்கொண்டு ஏதும் கேட்க இடமில்லாமல், போன் தொடர்பைத் துண்டித்து விட்டாள்.
ரிசீவரை வைத்த கெளரிக்கு வெலவெலத்துப் போயிற்று.
'எங்கு போனாலும் விடமாட்டேன்' என்றால் என்ன அர்த்தம்?
விஜய் ஏதாவது பெண் விவகாரத்தில் மாட்டிக் கொண்டுவிட்டானா?
என்ன விஷயம்?
மனசை திடப்படுத்திக்கொண்டு, காலையில் முதல் வேலையாய் விஜய்யின் அறைக் கதவைத் தட்டினாள் கெளரி. கதவைத் திறந்த விஜய்யின் கண்கள் சிவந்திருந்தன. முகம் ஜிவுஜிவுத்து, உப்பியிருந்தது.
கொட்டும் அருவியாய் கலகலக்கும் பிள்ளை, அடிபட்டுப்போய் வதங்கிக்கிடப்பதைப் பார்த்த கெளரி பரிதவித்துப் போனாள்.
என்ன விஷயம், விஜய்? என்கிடுட சொல்லுப்பா...
...............
சொல்லுப்பா... என்ன பிரச்சினை?
நீ பாங்க்குக்குப் போக வேண்டாமாம்மா? நாழியாகலை?
'
'பேச்சை மாத்தாதே, விஜய்! எனக்கு இன்னிக்கு விஷயம் என்னன்னு தெரிஞ்சாகணும்! பாங்க்குக்கு லீவு போட்டுடட்டுமா, சொல்லுப்பா... நாலு நாளா நீ படற வேதனையத் தாங்க எனக்கு சக்தியில்ல... என்னவானாலும் சரி, மனசுல இருக்கறதைச் சொல்லிடு..."
தலையை நிமிர்த்தி அம்மாவைப் பார்த்த விஜய்யின் கண்கள் லேசாய்க் கலங்கின. உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டான். பார்வையைக் கீழே தாழ்த்தினான்.
நீ இப்போ பாங்க்குக்குப் போம்மா... சாயங்காலம் விவரமா சொல்றேன்... ப்ராமிஸ்! இப்ப வேண்டாம்... ப்ளீஸ் மம்மி...
இரண்டு வரி பேசின விஜய், பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு விட்டான்.
இட்லி அப்படியே இருக்கேம்மா? அதை வெச்சுடுங்கோ... வேற சூடாப் போடறேன்...
மாதுவின் குரல் கேட்டு கெளரி திரும்பினாள்.
ம்? பசியில்ல, மாது... மோர் மட்டும் குடு...
என்றவள், எழுந்து கையை அலம்பிக் கொண்டே, மத்தியானத்துக்கு விஜய்க்குப் பிடிச்சதா பிசிபேளாவும் உருளைக்கிழங்கு சிப்ஸும் பண்ணிடு... சாயங்காலம் வந்து நா அவன்கிட்ட பேசறேன்...
என்று சொல்வதற்கும், வாசலில் பாங்க்கிலிருந்து கார் வந்துவிட்டதற்கு அடையாளமாய் முத்தையன் காலிங் பெல் அடிப்பதற்கும் சரியாக இருந்தது.
2
கெளரி ஏறுவதற்குச் செளகர்யமாய் முத்தையன் கதவைத் திறந்து பிடித்திருந்தான்.
முன்சீட்டில் அமர்ந்திருந்த சீஃப் காஷியர் சந்திரமெளலியிடம், குட்மார்னிங்...
என்று 'விஷ்' செய்த கெளரி, பின்சீட்டில் உட்கார்ந்து, பின்னோடு வந்த மாது நீட்டிய மதியச் சாப்பாட்டுக் கூடையை வாங்கி தன் பக்கத்தில் வைத்துக் கொண்டாள்.
கார் நகர்ந்தது.
இவள் பாங்க்கில் இப்படியொரு பழக்கம். அன்றாடம் காலை பத்து மணிக்கு பாங்க்கின் வியாபாரம் தொடங்க முக்கியக் காரணகர்த்தாக்களாக இருக்கும் இவ்விருவரும் - பாங்க்கின் ஸ்ட்ராங் ரூமை (strong room) திறக்க அதிகாரமுள்ள இவ்விருவரும் - நேரம் தவறாமல் பாங்க்குக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக, சாந்தோமில் வசிக்கும் தலைமைக் காஷியர் சந்திரமெளலிக்கும், தலைமை அக்கெளண்டண்டு ஆன கெளரிக்கும் காலையில் டாணென்று பாங்க் ஸ்டாஃப் கார் வந்து விடும்.
சந்திரமெளலியை அழைத்துக்கொண்டு, இவளுக்கு வண்டி