13-14-15
()
About this ebook
Read more from Yandamoori Veerendranath
Developing Right Brain Rating: 5 out of 5 stars5/5Secrets of Success Rating: 3 out of 5 stars3/5
Related to 13-14-15
Reviews for 13-14-15
0 ratings0 reviews
Book preview
13-14-15 - Yandamoori Veerendranath
http://www.pustaka.co.in
13 - 14- 15
Author:
எண்டமூரி வீரேந்திரநாத்
Yandamoori Veerendranath
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1-1
அத்தியாயம் 1-2
அத்தியாயம் 1-3
அத்தியாயம் 1-4
அத்தியாயம் 1-5
அத்தியாயம் 1-6
அத்தியாயம் 2-1
அத்தியாயம் 2-2
அத்தியாயம் 2-3
அத்தியாயம் 2-4
அத்தியாயம் 2-5
அத்தியாயம் 2-6
அத்தியாயம் 2-7
அத்தியாயம் 3-1
அத்தியாயம் 3-2
அத்தியாயம் 3-3
அத்தியாயம் 3-4
அத்தியாயம் 3-5
அத்தியாயம் 4-1
அத்தியாயம் 4-2
அத்தியாயம் 4-3
அத்தியாயம் 4-4
அத்தியாயம் 4-5
அத்தியாயம் 4-6
அத்தியாயம் 4-7
அத்தியாயம் 4-8
அத்தியாயம் 5-1
அத்தியாயம் 5-2
அத்தியாயம் 5-3
அத்தியாயம் 5-4
அத்தியாயம் 5-5
அத்தியாயம் 5-6
அத்தியாயம் 6-1
அத்தியாயம் 6-2
அத்தியாயம் 6-3
அத்தியாயம் 6-4
அத்தியாயம் 6-5
1
'உனக்குத் தெரியுமா? நள்ளிரவில் கடல் பேசுமென்று... அந்தக் கடல் ஓசையில் என் இதயத்தின் ஒலி கேட்கிறது.'
என்னைப் போலவே கடலும் தனிமையில் இருக்கிறது. வானம் போல் நீ எட்டாத தொலைவில் இருக்கும் வரை...
கடல் போன்ற மௌனத்தில், மையிருட்டில் உலகம் முழுவதும் பயத்தின் அணைப்பில், முழு பாதுகாப்பை உணர முடியாமல், தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போது, சவுக்கு மரத்தின் இடையே விழும் நிலவின் ஒளிக் கீற்றாய் உன் நினைவு தவழ்ந்து வரும் அந்த நினைவுகளில் நான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பேன்... உலகத்தைப் பார்த்து இரக்கப்படுவேன்.
ஆனால் 'மகிழ்ச்சி' க்கு என்னைக் கண்டால் திகட்டி விட்டது போலும்...
அதனால்தான், இந்த வசந்த காலத்து மாலை வேளையில், குளிருக்கு உடல் கரும்பு வில்லாய் மாறிய போது, உன் அருகாமையின் வெப்பத்துக்காக எனது கண்ணீர்த் துளி சுழலாய் மாறியது...
வாழ்வது வேறு, உயிரோடு இருப்பது வேறாம்... நாம் வாழ்வதை விட்டு விட்டு, உயிரோடு இருக்கத் தொடங்கி எத்தனை நாட்களாகி விட்டனவோ?
கணவன் மனைவிக்கிடையே, எப்போதும் கல்யாணம் காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும் என்றால், ஒருவரை ஒருவர் மனப் பூர்வமாய் நம்பணும்... எப்போதும் கம்யூனிகேஷன் என்ற பாலம் இருக்க வேண்டும். 'வெறுமை' வெள்ளமாய் பொங்கி அந்த பாலத்தை மூழ்கடிக்கக் கூடாது.
இதயத்தில் வேதனை சேறாகப் படிந்துவிடாமல், சுத்தமாக வைத்திருக்கத் தான். அந்தக் கடவுள் கண்ணீரைத் தந்தாராம்... இந்தத் திருமணம் என்ற அமைப்பில் ஏதோ குறை இருக்க வேண்டும்... நிறைய பெண்கள் ஒத்துப் போவதையும், ஆண்கள் தப்பித்துக் கொள்ளுதலையும் தம் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு, வாழப் பழகி விட்டார்கள்... உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் வாழ்க்கை என்ற அபிப்பிராயத்துக்கு நாமிருவரும் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டோம்... நாம் இருவரும், ஒருவருக்கொருவர் எதுவும் ஆகாமல், வெறும் கணவன் மனைவியாய்... சிரிப்புத்தான் வருகிறது எனக்கு...
நீ சத்தம் போடுவாய்... நான் பிடிவாதம் பிடிப்பேன்.
நீ தள்ளி விடுவாய்... நான் விழுந்து விடுவேன்.
நீ அந்தப் பக்கம்... நான் இந்தப் பக்கம்...
படுத்துக் கொண்டு - சண்டை போட்டுக் கொண்டு,
வேண்டுமென்று நீயும் - இல்லையென்று நானும்
அன்பு கீதமா அது? மைய்யலின் தாளகதியில் ஒவ்வொரு நாளும், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று உணர்த்தும், நமக்கு மட்டுமே தெரிந்த மொழியல்லவா அது? எங்கே போய்விட்டது அந்த கீதம்? எந்த மலைகளுக்கு அப்பாலோ, எந்த கானகத்துக்கோ ஓடிப் போய்விட்டது போலும்.
எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி உறவு ரொம்ப உயர்வானதாம்... இல்லை... இல்லவேயில்லை. அதைவிட ஒரு குழந்தைக்குத்தான் விளையாடும் சொப்புகளிடம் இருக்கும் பிணைப்பு உயர்வானது. குறைந்தபட்சம் நான்கு வருடங்களாவது அவற்றை வைத்துக் கொண்டு விளையாடுவாள்... ஆனால் நான்கு வருடங்களுக்குள் நான் உனக்கு அலுத்துப் போய்விட்டேன்.
திருமணமான புதிதில் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தோம்? நீ வெளியில் சென்றபோது, நான் என் இதயத்திலிருந்து, உன் நினைவுகளை நூலாக நூற்க நினைத்து, அது சிக்கலாகிவிட, சரிப்படுத்தத் தெரியாமல், அழுகையை அடக்க முயலும் போது,
நீ வந்து, சிக்கலை எடுத்து, ஆறுதலாக என்னை அணைத்து (அந்தச் செயலில் கொஞ்சம் பெருமையும் கலந்திருக்கும்.)
உத்வேகத்துடன் உன்னைப் பிணைத்துவிட எனக்கு, மூளை மரத்துப் போக, உயிர் மட்டும் வேட்கையுடன் தவிக்க...
அப்படி இருந்த பக்கம்... இன்று இப்படி மாறியதேன்?
கார் நின்றுவிட்டதால், அதைப் பிரித்து எந்தப் பாகம் பழுதடைந்ததென்று தெரிந்துகொண்டு விடலாம்... உறவின் பிணைப்பு அறுபட்டால், எந்த இடத்தில் அறுந்து விட்டதென்று எப்படித் தெரிந்து கொள்வது? நான் எப்படி இருந்தால் உனக்குப் பிடிக்கும்? அதையேனும் சொல்... நான் என்னையே மாற்றிக் கொள்வேன்.
தவறு என் மீதுதானா?
உண்மையின் என்னுதுதானா?
ஒவ்வொரு மாலையிலும் நீ உன் சினேகிதர்களுடன்...
2
'டிரிங்... டிரிங்...'
காலிங்பெல் ஒலித்தது. அவள் டைரியை எழுதுவதை நிறுத்திவிட்டு, அதைப் புடவைகளுக்கு அடியில் வைத்து விட்டுக் கதவைத் திறந்தாள்.
அவன் உள்ளே வந்தான்... இரண்டாவது முறை காலிங்பெல்லை அழுத்துமுன் அவள் கதவைத் திறந்ததைக் கவனித்து,
'இன்னும் நீ தூங்கவில்லையா?' என்று கேட்டான்.
எத்தனை கணவர்கள் எத்தனை நள்ளிரவுகளில் தம் மனைவிகளிடம் இதே கேள்வியைக் கேட்டிருப்பார்கள்? முக்கியமாய் இந்த நாட்டில்? இன்னும் கொஞ்ச நாட்கள் போகணும். நீ நேரம் கழித்து வந்தால் தூக்கத்திலிருந்து எழுந்து, கொட்டாவியுடன் வந்து கதவைத் திறக்க, என் மனம் இன்னும் கொஞ்சம் கரடு தட்டிப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்...
அவன் சாப்பிட உட்கார்ந்து கொண்டான். அவள் அருகிலேயே அமர்ந்திருந்தாள்... சாப்பிடும்போது அவன் பேசமாட்டான். மௌனமாய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கட்டிலில் படுத்துப் பேப்பரை படிக்கத் தொடங்கினான். அவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து, கட்டிலில், அவனருகில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவன் ஸ்போர்ட்ஸ் பக்கத்தையும் படித்து முடித்து, பேப்பரை வீசிவிட்டு, அவள் பக்கம் திரும்பி அணைக்கும் போது, ஒருவிதமான வெறுமை அவள் மனதில் நிரம்பிவிட...
வாழ்க்கைக்கு அர்த்தம் நாம் வாழும்போதுதான் தெரியும். மரணத்துக்கு அர்த்தம். நெருக்கமானவர்கள் இறந்த போதுதான் புரியும். காதலுக்குச் சரியான அர்த்தம் நாம் காதலித்தால்தான் தெரியும். 'ரொட்டீனு' க்கு அர்த்தம், நெருக்கமானவர்களின் நடத்தையில் தெரிந்து விடும்...
இதற்குமுன்...
சாகர மர்த்தனத்தில் பிறந்த அமிருதத்தைவிட... நம் இதழ் மந்தனத்தில் பிறந்த அமிருதம் மதுரமாக இருந்தது...
நீ முன்பு சொல்வாயே நினைவு இருக்கா? விருப்பமில்லாதவருடன் கல்வி புரிவதும் சாத்தியமாகலாம்... ஆனால் இதழுடன் இதழ் சேர்த்து முத்தமிட தீவிரமான விருப்பம் இருக்க வேண்டுமென்றும்... இல்லாவிட்டால் முகத்தைத் திருப்பிக் கொள்ளத் தோன்றுமென்று...
நாம் காதலுடன் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு எவ்வளவு நாட்களாயிற்று? வருத்தமான உண்மை என்னவென்றால், சாதாரணமாக இல்லாவிட்டாலும், இன்ப மயக்கத்திலாவது முத்தமிட்டது உண்டு... இப்பொ அதுவும் நின்றுவிட்டது. அவன் திரும்பிப் படுத்தான். அவள் மேற்கூரையை வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வண்ணத்துப் பூச்சி வந்து தன்மீது உட்கார்ந்து, பிறகு பறந்து போகும் போது, பூவாகப் பட்டது, மென்மையாக அசையும்... வெட்கத்துடன் விடை கொடுக்கும்... கால்களுக்கு மகரந்தத்தூளைப் பாரணியாய் இட்டு, அனுப்பி விட்டு, திருப்தியுடன் இதழ்களை மூடி, தாயாவதற்கு அவசரப்படும்...
ஆனால் நாம் இருவரும் சேர்ந்து, மலையேறும் போது, உன் சிகரத்தை நீ தொட்டு விட்டதும், பாதி வழியில் என்னை விட்டுவிட்டு, திருப்தியாய் நீ சென்று விடுவாய். தனியாக நான் மேலே போகவும் முடியாமல், கீழே வரவும் இயலாமல் நிசப்தம் சூழ்ந்து நள்ளிரவில் திருப்தியின்மையில் தவித்து... தனித்து...
என் கனவு எத்தனை சிறியதென்றால், அதை உணரும் முன்பே பாதரசமாய் கண் இமைகளிலிருந்து நழுவி விடும்... என் விருப்பம் எவ்வளவு பெரியதென்றால் அதை நிரப்புவதற்கு என் இதயம் கூடப் போதவில்லை.
'லஷ்மி' அவன் தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டவன் போல் அழைத்தான்.
'ஊம்'
நாளைக்கு பதினோரு மணிக்கு நீ ஸ்டேடியத்துக்கு வந்துவிடு... டேவிஸ் கப் மேட்ச் இருக்கு... உன் பேக்கில் டிக்கெட் வைத்திருக்கிறேன்... எடுத்துக்கொள்... நான் ஆபீசிலிருந்து நேராக ஸ்டேடியத்துக்கு வந்துவிடுவேன்...'
அவள் பதிலளிக்கவில்லை...
'மாதுர், கிருஷ்ணன்... எல்லோரும் வருவார்கள்.'
டென்னிஸ் என்றால் அவளுக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவளுடைய கணவனுக்கும் அதில் உற்சாகம் கிடையாது. தன்னுடன் ஜாலியாகக் கழிப்பதற்காக இல்லை கணவன் தன்னை, டென்னிஸ் மேட்சைப் பார்க்க அழைத்தது...
மாதுர் போன்றவர்களுக்குமுன் தன்னுடைய டேஸ்ட்டை காண்பித்துக் கொள்ள... மனைவியை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கண்களில் மெலிதாகத் தெரியும் பொறாமையைப் பார்த்து, மனதிலேயே சிரித்துக்கொள்ள...
அவளுக்கு இது போன்றவற்றில் விருப்பம் இல்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கணவனுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் பிடிக்கும்.
'என்ன விஷயமிருக்கு பேசுவதற்கு?' என்பான் அவன். நண்பர்களுடன் மணிக்கணக்காய் பேசுவதற்கு மட்டும் என்ன விஷயங்கள் இருக்க முடியும்?
அவள் அப்படியே மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். வாமனாவதாரம் முடிந்த பின், ஸ்ரீ மகாவிஷ்ணு, வைகுண்டத்துக்குத் திரும்பினாராம்... வெகு நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பானதால், அந்தச் சந்திப்பு போருக்கு இணையாய் இருந்ததாம்.
லஷ்மிதேவியின் அழகில் ஆவேசமடைந்துவிட்ட திருமால் தானும் விசுவரூபம் எடுத்தாராம். அந்த ஆவேசத்தில் துர்வாச முனிவர் மீது தன் கால்பட்டு, அவருடைய தவம் கலைந்துவிட்டதை கவனிக்கவில்லை. அதனால் கோபமடைந்த முனிவர் வைகுண்டத்துக்கு வந்தது, 'இனிமேல் நீ எந்த அவதாரம் எடுத்தாலும், உன் மனைவி உனக்குத் துணையாக இல்லாமல் இருக்கட்டும்' என்று சாபம் கொடுத்தாராம். அதனால் பரசுராமர், ஸ்ரீராமர், புத்தபகவான் எல்லோரும் மனைவியே இல்லாமலோ, அல்லது யோகத்திலோ கழித்தார்களாம்... (ரொம்ப கெஞ்சிய பின் பலராமருக்கு கன்செஷன் கொடுத்திருக்கக் கூடும். அது வேறு விஷயம்) அதன் பிறகு துர்வாச முனிவர் ஸ்ரீ மகாலஷ்மியைப் பார்த்து, 'நீ பூமியில் சராசரி மானிடப் பெண்ணாய்ப் பிறப்பாய்... திருமணம் முடிந்து கொஞ்ச காலம் வரை தான் உன் கணவன் உன்னிடம் உற்சாகம் காண்பிப்பான். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் உன்னைப் பொருட்படுத்தமாட்டான். அதுதான் நான் உனக்குக் கொடுக்கும் சாபம்' எனக் கூறி இருக்க வேண்டும்.
தன் எண்ணங்களைக் கண்டு அவளுக்கே விசித்திரமாக இருந்தது. இந்தக் கதை பரவாயில்லை. நன்றாகவே இருக்கு. தானும் எழுத்தாளராகி விடலாம். வாழ்க்கையில் ஏதோ திருப்தியின்மை இருந்தால்தான். எழுத்தாளர்களாக மாறுவார்களாமே...
அவனுடைய குரட்டை ஒலி மெலிதாகக் கேட்டுக் கொண்டு இருந்தது. கடியாரத்தைப் பார்த்தாள் லஷ்மி. பன்னிரண்டாவதற்கு ஒரு நிமிடம் இருந்தது.
அந்த நிமிடமும் தாண்டிவிட்டால்? என்னவாகும்? மற்றும் ஒரு நாள் தொடங்கும்.
இந்த உலகத்தில் ரொம்ப குறைவான நபர்களுக்குத் தான் 'நேற்று' போகும்போது ஓர் இனிமையான அனுபவத்தை வாழ்க்கை டைரியில் இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும்... 'நாளை' இன்றாக மாறும்போது புதிய உற்சாகத்துடன் மனம் துள்ளிக் குதிக்கும்
தனக்கு மட்டும்...
இன்று... நேற்றானாலும்
நாளை... இன்றானாலும்
நாட்கள்... ஒரு வருடமானாலும்
வருடம்... வாழ்க்கையின் கடைசி நாளானாலும் ஒரே மாதிரி இருக்கும். அன்றிரவு அவளுக்கு ஒரு கனவு வந்தது. யாரோ ஓர் இளைஞன் டென்னிஸ் பந்தை சுவற்றில் பலமாக அடித்துக் கொண்டிருந்தான். அதே வேகத்துடன் அது திரும்பி வந்து கொண்டிருந்தது.
3
மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது. டென்னிஸ் மேட்சுக்குப் போவதற்காக அவள் தயாராகிக் கொண்டிருந்தாள். அத்தனை பரபரப்பிலும் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். சரியாக பத்தரை மணிக்கு பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் செய்தாள்.
'மதூஹா வேண்டும்' அவள் ஆபீசுக்கு வந்தாளோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே மதூஹா லைனில் வந்தாள்.
'நான்தான்' லஷ்மி சொன்னாள்.
'ஹாய்... ரொம்ப ஆச்சரியமாய் இருக்கே? எப்படி இருக்கே?'
'இன்னும் அரைமணியில் டென்னிஸ் மேட்சைப் பார்க்கப் போகிறேன். அவர் நேராக வந்து விடுவதாகச் சொல்லி இருக்கார்.'
'உன்னைப் பார்த்தால் பொறாமையாய் இருக்கு.'
லஷ்மி சிரித்துவிட்டு, 'அது போகட்டும்... நான் ஒரு கதை எழுதலாமென்று நினைக்கறேன்' என்றாள்.
மதூஹா உற்சாகமாய் 'எட்டாவது அதிசயம் தான்... என்ன தீம்?' என்றாள்.
லஷ்மி தான் யோசித்த 'துர்வாச முனிவர் சாபத்தை' கதையாகச் சொன்னாள். முழுவதுமாக கேட்ட மதூஹா விழுந்து விழுந்து சிரித்தாள்.
'நல்லாத்தான் இருக்கு. சின்ன கதை போட்டி ஒன்று விரைவில் நடத்தப் போகிறோம். அதுக்கு எழுது. எங்க எடிட்டரிடம் நானே சுயமாய் கொடுத்து விடுகிறேன்.'
'தாங்க்ஸ்... ஏதோ ஒரு வேகத்தில் எழுதணும் என்று தோன்றியதே தவிர, இந்த மேட்சைப் பார்த்து விட்டு மாலையில் வரும்போது, அந்த வேகம் காணாமல் போய் விடலாம். பை தி பை ராஜீ என்ன சொல்கிறான்?'
'எந்த பாய் பிரண்டும் என்ன சொல்வான்? தங்கைக்கு கல்யாணம் முடிய வேண்டுமாம், ஒரு வருடம் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறான். வைத்து விடட்டுமா? பை...' ஃபோனை வைத்து விட்டாள்.
ஃபிரான்ஸ்... இந்தியா டேவீஸ் கப் செமீ ஃபைனல்ஸ் அன்றுதான் கடைசி நாள்.
அதற்கு முன் நான்கு மேட்சுகள் முடிந்திருந்தன. இரண்டு ஒற்றயர் ஆட்டங்களில் இந்தியா ஜெயித்திருந்தது. இரட்டையர் ஆட்டத்திலும், முதல் ரிவர்ஸ் சிங்கில்ஸிலும் ஃபிரான்ஸ் வெற்றி பெற்றிருந்தது. அதாவது, இன்று விளையாடப் போகிற ஐந்தாவது மேட்சில் எந்த நாடு ஜெயிக்கிறதோ... அந்த நாடு ஃபைனல்ஸுக்குப் போகும். ரொம்ப பரபரப்பான நிலைமைதான் - அன்றைய மேட்சைப் பார்க்க டென்னிஸ் ரசிகர்கள், நிறைய பேர் வந்துவிட்டதில், அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.
லஷ்மி கால் மணி நேரமாய் கணவனுக்காக எதிர் பார்த்து நின்றிருந்தாள். அவனைக் காணவில்லை. சொன்ன நேரத்துக்கு என்றுமே அவன் வந்ததில்லை. நேரம் கழித்து வந்த பிறகு (நிஜமாகவே வந்து விட்டால்) ஏதோ அவசர வேலை வந்தால் நேரமாகி விட்டதென்று சொல்லுவான். இதுவும் அவளுக்குப் பழக்கமான விஷயம்தான்.
இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றன. எல்லோருடைய கண்களும் தனியாக நின்ற அவளையே பார்த்தன. அவள் ரொம்ப சங்கடமாக உணர்ந்தாள். இறுக்கமாய் பின்னிய பிறகும் கூந்தல் காற்றில் அலை பாய்ந்தது. அதற்குள் அவளுக்குத் தன் கணவன் உள்ளே உட்கார்ந்து இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது.
அந்த எண்ணம் வந்ததும், அவள் உள்ளே சென்றாள். எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றவே, புடவைத் தலைப்பை எடுத்து தோளைச் சுற்றிப் போர்த்தி, அமெரிக்கையாக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். ரொம்ப சின்ன பாக்ஸ் அது. அவளுடைய கணவன் இன்னும் வந்திருக்கவில்லை.
வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தாள். இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றன. மறுபடியும் அதே தனிமை. மற்றவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் போது...
கை தட்டல்கள் பலமாய் கேட்டதும் அவள் யோசனைகளிலிருந்து மீண்டவளாய் பார்த்தாள்.
இந்தியாவின் சார்பில் விளையாடும் பிரஹஸித் களத்தில் நுழைந்து கொண்டிருந்தான்.
ஆறடி உயரம், அழகான சீரான உடற்கட்டு, எடுப்பாக அமைந்துவிட்ட மூக்கு, இவையெல்லாம் மீறி அவன் முகத்தில் பிடிவாதம் தென்பட்டது. எதிராளியை ஜெயித்து விடவேண்டும் என்ற பிடிவாதம் அவன் முகத்தில் பிரதி பலித்துக் கொண்டிருந்தது.
அங்கிருந்த பெண்களில் நிறையபேர் அவனைப் பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த செமிஃபைனல்ஸ் பற்றி நேற்றைய தினமே ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளிவந்தது. பிரஹஸித் பற்றி எழுதும்போது அவன் டென்னிஸ் விளையாட்டை அவன் தன் ஹாபியாகத் தேர்வு செய்ததில் சினிமாத்துறை ஓர் அழகான நடிகனை இழந்து விட்டதாக எழுதியது.
அதில் மிகை ஒன்றும் இல்லை... தொழில் ரீதியாக பிரஹஸித் ஒரு டாக்டராக இருந்தாலும்... டென்னிஸில் இருந்த ஆர்வத்தில், தீவிரமாக முயற்சி செய்து, நேஷனல் ப்ளேயர் ஆகிவிட்டான்... இப்பொழுது இந்தியாவின் எதிர்பார்ப்புகள் எல்லாம் அவன்மேல் தான் இருந்தன...
ஆட்டம் தொடங்கி விட்டது... முதல் சர்வீஸ் பிரஹஸித் செய்தான்... ஏஸ் - கைதட்டல்கள் - 15-0 வுடன் ஆட்டம் ஆரம்பமாயிற்று. இரண்டாவது பாயிண்டை எதிராளி எடுத்தான். 15-15 முதல் கேமிலிருந்தே பரபரப்பான சூழ்நிலை உருவாயிற்று.
ஃபிரான்ஸ் நாட்டு விளையாட்டு வீரன் சாதாரண ஆள் இல்லை. வேர்ல்ட் ரேங்கில் இருப்பவன்.
லஷ்மிக்குத் தன் சமையலறையில் அடுப்பை அணைத்து விட்டு வந்தோமா இல்லையா என்ற சந்தேகம் வந்தது. கிளம்பும் முன் ரசத்தை அடுப்பில் வைத்திருந்தாள்... சந்தேகம் வலுவடைய, தான் வீட்டுக்குப் போகும்போது, ஈயச் சொம்பு எந்த ஷேப்பில் இருக்குமோ என்று பயமாக இருந்தது... சமீபகாலமாய் யோசிப்பது அதிகமாகி விட்டது... வேலைக்காரியை வைத்துக்கொள் என்று விஷ்ணு சொன்னான்... அவளுக்குத்தான் விருப்பமில்லை. வீட்டு வேலைகளைச் சுயமாய் செய்து கொண்டிருக்கும் போதே, நிறைய நேரம் பாக்கியிருக்கு... இன்னும் வேலைகளை குறைத்துக் கொண்டால், வேண்டாத யோசனைகள் ஆளையே விழுங்கிவிடும்... இரவு எட்டுமணிக்கே எல்லா வேலைகளும் முடிந்துவிட... நள்ளிரவு கணவன் வரும் வரை... ஓய்வுதான்... அந்த ஓய்வு எவ்வளவு வேதனையாய் இருக்குமோ அவளுக்குத்தான் அனுபவபூர்வமாய் தெரியும்...
திடீரென்று மடியில் ஏதோ வந்து விழுந்ததும் திடுக்கிட்டாள்... சுற்றிலும் மக்களின் ஆரவாரம்.
பிரஹஸித் போட்ட சர்வீஸை எதிர் ஆட்டக்காரன் எடுக்க முயன்றபோது, பந்து ராக்கெட்டில் பட்டு நேராக அவள் மடியில் வந்து விழுந்தது. எல்லோருடைய பார்வையும் தன் மீதே இருப்பதை உணர்ந்ததும், கூனிக் குறுகியவளாய், பந்தை எடுத்துக் கோர்ட்டில் வீசினாள்...
சரியாக அதே நேரத்தில் பிரஹஸித் அவளைப் பார்த்தான். அந்த நிமிஷம் அவன் தன்னையே மறந்து விட்டான்... அது ஒரு ப்ளேகிரவுண்ட் என்றும், தான் இந்தியாவின் சார்பில் விளையாடிக் கொண்டு இருப்பதையும், மறந்து போய் விட்டான்... ஓர் அழகான இளைஞனாக, டாக்டராக, நாட்டுக்காக விளையாடும் டென்னிஸ் ப்ளேயராக... அவன்மேல் உயிரையே வைத்திருக்கும் பெண்கள் ஏராளம். ஆனால்...
இருபத்தைந்து வருட வாழ்க்கையில், முதல் தடவையாக அவன் ஒரு பெண்ணைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டான்.
மக்களின் ஆரவாரம் இன்னும் அடங்கவில்லை...
'கொயட் ப்ளீஸ்' அம்பயர் வேண்டுகோள் விடுத்தார். பிரஹஸித்தால் அவளிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொள்ள முடியவில்லை.
லஷ்மி தலையைக் குனிந்து கொண்டு, கை நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்... பந்து வந்து தன் மடியில் விழுந்த நிகழ்ச்சியிலிருந்து அவள் இன்னும் மீளவில்லை. இன்னமும் பின்னாடி யாராவது இதைப் பற்றிப் பேசிச் சிரிக்கிறார்களோ என்று அவள் இதயம் வேகமாய் துடித்துக் கொண்டிருந்தது.
பிரஹஸித் அவளையே இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தான். அது வெறும் டீன் ஏஜின் ஈர்ப்பு இல்லையென்று அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. கரூர் மலைகளில் பல வருடங்களாய் தேடியவனுக்குக் கடைசியில் வைரம் கிடைத்துவிட்ட உணர்ச்சி அது.
எதிராளி தன் சர்வீஸுக்காக காத்திருப்பது நினைவுக்கு வரவே, தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு சர்வீஸ் போட்டான், 'நெட்' ஆகிவிட்டது. அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் முன் வரிசையில் உட்கார்ந்து இருந்ததால், அவள் உருவம் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தது. சாதாரணமாக இந்த மாதிரி மேட்சுகளில் பார்வையாளர்கள் ரொம்ப நேரம் உட்கார வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் பின்னாடி சாய்ந்து கொண்டோ, கால் மேல் கால் போட்டுக் கொண்டோ, ரிலாக்ஸ்ஸாக அமர்ந்து கொள்வார்கள். அவள் அப்படியில்லாமல், ரொம்ப மரியாதையாக, அமரிக்கையாக, மலர்போல் அமர்ந்து இருந்தாள். ரொம்ப நேரமாக – அப்படியே தலையைக் குனிந்து கொண்டு நடு நடுவில் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டு, இரு கைகளையும் இணைத்து மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சம் அசைந்தாலும் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற கூச்சத்தில் அழகான பதுமையைப் போல் அமர்ந்து இருந்த அவளை. அந்த ஒருமணி நேரத்திற்குள் நூறு தடவைகளாவது பார்த்து இருப்பான் பிரஹஸித்.
திடீரென்று பெரிய ஆரவாரம் கேட்கவே பிரஹஸித் இவ்வுலகிற்கு வந்தான். மக்கள் பலமாக கைதட்டிக் கொண்டிருந்தார்கள். காரணம் என்னவென்று புரியாதவனாய் ஸ்கோர் போர்டை பார்த்தான்.
4-6, 6-7, 6-2, 6-2, 5-1.
பிரஹஸித் அதிர்ந்துவிட்டான். எதிராளி வர்ல்ட்ரேங்கில் இருப்பவன் என்று தெரியும். இருந்தாலும், முதல் இரண்டு செட்டுகளை, ரொம்ப கஷ்டப்பட்டு ஜெயித்திருந்தான். ஆனால்... அதன் பிறகு...
தோற்றுப் போவதற்கு வருத்தமாக இல்லை. தோற்றுக் கொண்டு இருக்கிறோம் என்ற நினைப்புகூட இல்லாமல் எப்படி விளையாடிக் கொண்டிருந்தோம்? தன்னுடைய உயிர்மூச்சே டென்னிஸ்தான், என்றைக்கும் இப்படி நடந்தது இல்லை. இது வெறும் விளையாட்டு இல்லை. ஒரு நாட்டின் கௌரவத்துக்குச் சம்பந்தப்பட்டது. எந்த விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து இராது.
பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணினால், நான் ஆட்டத்தில் கான்ஸன்ட்ரேஷனை இழந்து விட்டேனோ. அவனுக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது. தன் மீதே தனக்குக் கோபமும் வந்தது. அவள் மட்டும்