Vaarayo Vennilave!
5/5
()
About this ebook
இந்தக் கதையின் நாயகி புவனா நியாயத் திற்காகப் போராடுபவள்... நியாயத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பவள்... தன் வாழ்க்கையையே பணயமாக வைத்து... அநியாயத்தை எதிர்க்கத் துணிகிறாள்... அதில் வெற்றியும் பெறுகிறாள்...
நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும்... அக்கிரமங்களை எதிர்க்கும் துணிச் சலும்... முன் வைத்த காலைப் பின் வாங்காமல்... எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற மன உறு தியும் கொண்ட புவனா உங்கள் இதயங்களைக் கவருவாள் என்பது நிச்சயம்... இந்த நாவலைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்பது என் ஆசை.
Read more from Arunaa Nandhini
En Uyiril Kalantha Uyire Rating: 5 out of 5 stars5/5Poomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Malarey Ennidam Mayangathey Rating: 4 out of 5 stars4/5Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Nalai Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5En Vasam Naanillai Rating: 3 out of 5 stars3/5Ninaikka Therindha Manamey! Rating: 3 out of 5 stars3/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 2 out of 5 stars2/5Sonna Sollai Marandhidalamo… Rating: 4 out of 5 stars4/5Endhan Uyirallavo Kanmani... Rating: 5 out of 5 stars5/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5Neeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsRadha Kaadhal Varatha Rating: 4 out of 5 stars4/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5
Related to Vaarayo Vennilave!
Related ebooks
Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5Iru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Para Para! Part-2 Rating: 5 out of 5 stars5/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsUrave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Odi Vaa Penne…! Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsKannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Ennavale.. Enathuyire.. Rating: 4 out of 5 stars4/5Engirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Ilakkanam Maarumo Rating: 4 out of 5 stars4/5Neela Nayanangalil... Rating: 2 out of 5 stars2/5Idhayathil Yetho Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsNenjam Irandin Sangamam sudha Rating: 1 out of 5 stars1/5Vaa… En Anichapoove Vaa… Rating: 4 out of 5 stars4/5Jagame [Kaadhal] Thanthiram Rating: 0 out of 5 stars0 ratingsSwasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Kaadhal Raasi..! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Yaaro Manathile... Yetho Ninaivile... Rating: 5 out of 5 stars5/5Puthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vaarayo Vennilave!
1 rating0 reviews
Book preview
Vaarayo Vennilave! - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
வாராயோ வெண்ணிலாவே!
Vaarayo Vennilave!
Author:
அருணா நந்தினி
Arunaa Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
என் பக்கம்
இந்தக் கதையின் நாயகி புவனா நியாயத்திற்காகப் போராடுபவள்... நியாயத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பவள்... தன் வாழ்க்கையையே பணயமாக வைத்து... அநியாயத்தை எதிர்க்கத் துணிகிறாள்... அதில் வெற்றியும் பெறுகிறாள்...
நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும்... அக்கிரமங்களை எதிர்க்கும் துணிச்சலும்... முன் வைத்த காலைப் பின் வாங்காமல்... எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற மன உறுதியும் கொண்ட புவனா உங்கள் இதயங்களைக் கவருவாள் என்பது நிச்சயம்...
இந்த நாவலைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்பது என் ஆசை.
உங்கள்
- அருணாநந்தினி
தொடர்புக்கு: arunaanandhini@gmail.com
1
அந்தப் பெரிய அலுவலகக் கட்டடத்தைப் பார்த்துவிட்டு மூக்கில் விரலை வைத்து அதிசயித்துப் போனாள் புவனா...
அம்மாடி!. பெரிய கம்பெனிதான்... அதுதான் அத்தனை திமிர் போலும்... இருக்கட்டும்... அந்தத் திமிரை அடக்கத்தானே நான் வந்திருப்பது... வலிக்க வலிக்கச் சுளுக்கு எடுத்துவிட மாட்டேன்..!
யாருங்க நீங்க... யாரைப் பார்க்கணும்...?
வழிமறித்துக் கேட்டான் அங்கிருந்த காவலாளி.
"நான் உங்க முதலாளியைப் பார்க்க வந்திருக்கேன்... உடனே அவரைப் பார்க்கணும்..’’ கொஞ்சம் அதிகாரத்துடனே சொன்னாள்... அவள்.
முன் அனுமதி வாங்கியிருக்கீங்களா?
என்று கேட்டான். 'இல்லை’ என்று தலையசைத்தாள்.
"அப்போ... முடியாதுங்க. போயிடுங்க,’ என்று கண்டிப்புக் கலந்த குரலில் சொன்னான் அந்தக் காவல்காரன்.
அவளது உடலில் விரைப்பு வந்தது. திரும்பப் போவதா... நானா... அதற்காகவா இத்தனை தூரம் நான் சிரமப்பட்டு வந்தது... நோ... முன் வைத்த காலைப் பின் வாங்க முடியவே முடியாது.
அந்த உறுதியில் தலை நிமிர்ந்து சொன்னாள்.
நான் உங்க முதலாளிக்கு உறவு. நெருங்கிய சொந்தம். ஊரிலிருந்து அவரைப் பார்க்க நேரே இங்கு வந்து விட்டேன். அவருக்கு நான் ம்ம்... ஆங்... அத்தை மகள். போதுமா?
அதைக் கேட்டதும் அந்தக் காவலாளிக்குச் சர்வாங்கமும் ஒடுங்கியது. வினயத்துடன் ஒரு 'சல்யூட் அடித்தான்.
ஏம்மா... இதை முதல்லே சொல்லக்கூடாதா... உடனே அனுப்பியிருப்பேன் இல்லையா... சரி... உள்ளே போங்க,
என்று கேட்டைத் திறந்து விட்டான்.
லிஃப்டில் ஏறி... நான்காவது தளத்திற்குச் சென்றாள்.
முன் பகுதியில் வழிமறைக்கும் நந்தியைப் போல் அமர்ந்திருந்த வரவேற்புப் பெண்ணிடம் போய்ச் சொல்ல... அவள் அந்தரங்கக் காரியதரிசியிடம் அனுப்பி வைத்தாள்.
அவளே… புவனாவை ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்துவிட்ட ‘ஏலியன்ஸ்’ஸைப் பார்ப்பதுபோல ஒரு வினோதப் பார்வையுடன் நோக்கினாள்.
மீண்டும் அதே கேள்வி!
‘அப்பாயிண்ட்மென்ட்’ வாங்கியிருக்கிறீர்களா?
அதற்கு அதே இல்லை பதில்.
அந்தக் காரியதரிசியின் முகத்தில் அலட்சியம் தெரிந்தது.
சாரி... இப்போ பாஸ் அவசர வேலையில் இருக்கிறார். அவரை இப்போது சந்திக்க முடியாது. ஒன்று செய்யுங்கள். நாளை வந்து பாருங்கள்.
என்றாள் வெகு அசட்டையாய்.
அவளது அலட்சியத் தோரணையைக் கண்டு உள்ளூரக் கொதித்துப் போனாள் புவனா.
நாளையா... அதெப்படி முடியும். அன்றே. அப்போதே சந்திக்க வேண்டும் என்றுதானே வந்திருப்பது.
பொறுமையை இழுத்துப் பிடித்து. தணிந்த குரலில் அவள் சொன்னாள்.
நான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறேன். அவரைப் பார்த்துவிட்டு உடனே கிளம்ப வேண்டும்.. ப்ளீஸ்... ட்ரை டு அன்டர்ஸ்டாண்ட் மை கண்டிஷன் மேடம்.
பாவம்… அந்தப் பெண்... சங்கடத்தில் நெளிந்தாள். அவளுக்குத் தர்மசங்கடமாக இருந்தது.
‘பாஸ்’ அவசர வேலையில் என்றாளே... அது என்ன என்று அவளுக்குத்தானே தெரியும்.
மிஸ்டர் குணசேகர் இப்போது தனியாக இல்லையே. அவருடன் அவருடைய பெண் சிநேகிதி சிநேகாவும் இருக்கிறாளே.
அவள் வெறும் பெண் சினேகிதியா... இல்லை, காதலியா என்று தெரியாமல்.. ஏன்.. வருங்கால மனைவியாகவும் கூட இருக்கலாம்.. யாருக்குத் தெரியும்?
என்னவோ வருவாள்.. அனுமதியும் எதிர்பாராமல் உரிமையுடன் அறைக்குள் செல்வாள். பிறகு. மணிக்கணக்காய்ப் பேச்சுதான்.
வெறும் பேச்சு மட்டுமா... கூடவே சல்லாபமும் இருக்கலாம்... யார் கண்டது?
அந்த வேளையில் முதலாளி யாரையும் பார்ப்பதில்லை. எந்தப் போனையும் ஏற்பதில்லை என்று திட்ட வட்டமாய்த் தெரியும். அதை மீற முடியாதே...
இப்போது… திடும் என்று இந்தப் பெண் வந்து நின்று... அவசரமாய்ப் பார்க்க வேண்டும் என்றால்... அது எப்படி முடியும்?
அது இருக்கட்டும்... யார் இவள்... எதற்காக வந்திருக்கிறாள்? இப்படி ஊர் விட்டு ஊர் வந்து... அவரைப் பார்க்க வேண்டுமென்றால்... அதற்கு அவசியம் என்ன... அதுவும் அவசரமாமே.
ஒருவேளை.. நம் ‘பாஸ்’ இவளிடமும் விளையாடியிருப்பாரோ.. அவர்தான் பெண்கள் விஷயத்தில் ஒரு மாதிரியாமே. அந்த மன்மதராஜாவுக்கும் இவளுக்கும் என்ன தொடர்போ?
ஆனால்... இந்தப் பெண்ணைப் பார்த்தால்... எளிதில் சறுக்கி விழும் ரகமாயும் தெரியவில்லையே... நல்ல குடும்பத்துப் பெண்ணாய்... படித்தவளாய்த் தெரிகிறாள்.
அவளையும் மீறி ஒரு பெருமூச்சு வந்தது.
யார் எப்படி இருந்தால் நமக்கு என்ன வந்தது? அத னால் நமக்கு என்ன லாபம்.? இதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரம். நம் வேலையைப் பார்த்தால் அது போதும்.
அந்த நினைப்புடன் பேசினாள் அந்தக் காரியதரிசி.
சாரி... மேடம்... இப்போது முடியவே முடியாது... நீங்கள் வீணாய்க் காத்திருக்க வேண்டும். அதனால் சொல்கிறேன்.
பரவாயில்லை... ஆனால் அவரைப் பார்த்தேயாக வேண்டும்!
என்று அவளும் விடாப்பிடியாய்ச் சொல்ல –
கொஞ்சம் இருங்கள்... அனுமதி கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்,
என்றவள்... ரிஸீவரை எடுத்துப் பேசினாள்.
பிறகு.. அவள் பக்கம் திரும்பி, "மேடம். உங்கள் பெயர்...’’ என்று வினவ...
புவனா... புவனேசுவரி..
என்று பதில் சொன்னாள் அவள்.
அதை அவனிடம் திருப்பிச் சொன்னாள் அந்தப் பெண்.
மறுமுனையில் அவன் என்ன சொன்னானோ... அவளது முகத்தில் மாற்றம் தெரிந்தது.
ஓகே சார்...
என்றவள் இவள் பக்கம் திரும்பி மிஸ். புவனேசுவரி. பாஸ் என்னைக் கோபித்துக் கொள்கிறார். இப்போது யாரையும் பார்க்க முடியாதாம். ஏன் அதைச் சொல்லி அனுப்பவில்லை என்கிறார். ஒரு அந்தரங்கக் காரியதரிசிக்கு இதுகூடத் தெரியாதா.. சொல்ல வேண்டுமா என்று பாய்கிறார். தயவு செய்து போய் விடுங்கள்..
என்றாள் எரிச்சலுடன்.
பார்க்க முடியாதாமா… இவன் என்ன பெரிய்ய்ய... தேவ லோகத்துத் தேவேந்திரனா... ஆத்திரத்துடன் நினைத்தவள் ஆவேசத்துடன் எழுந்தாள்.
அவனைப் பார்க்காமல் போகக்கூடாது என்ற வெறியோடு... நேரே அவனது அறையை நோக்கிச் சென்றாள்.
அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அந்தக் காரிய தரிசி.
ஹலோ... மேடம். நில்லுங்க..
என்று அலறினாள்.
அது காதில் விழாத மாதிரி அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் புவனா... மேஜை மீது ஒய்யாரமாய் அமர்ந்திருந்த பெண்ணின் கரத்தைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தான் குணசேகர்.
பூஜை வேளைக் கரடியாய்... சொல்லாமல் கொள்ளாமல்... திடீர் என்று யாரோ ஒருத்தி உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு... திகைத்துப் போனான்.
சினம் உச்சியில் ஏற... முகம் ‘செவ செவ’ என்று ஆனது.
ஏய்... என்ன இது. கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல்... என் பி.ஏ. சொல்லவில்லை...
என்று உறுமலாய்க் கூற.
ஓ! சொன்னார்களே... நான்தான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை...
என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னாள்.
அதே சமயம் பின்னால் ஓடி வந்த பி.ஏ. பெண்... சாரி... சார்... சொல்லச் சொல்ல இவர்கள் கேட்காமல் வந்து விட்டார்கள்... தடுத்தும் நிற்கவில்லை. மேடம்... வெளியில் வருகிறீர்களா..?
என்று அழைத்தாள்.
இதையெல்லாம் எதிர்பார்த்துத்தானே அவள் வந்தது... அவனைப் பார்த்தாக வேண்டும் என்று எண்ணியது ஈடேறி விட்டது. இன்னும்.. சொல்ல வந்ததைச் சொல்லி விட்டால் கிளம்பிவிடலாம்.
குணசேகரை ஏறிட்டுப் பார்த்தாள். பரவாயில்லை. ஆளும் அசத்தலாய்த்தான் இருக்கிறான். பாட்டி சொன்னதும் உண்மைதான். அவன் அச்சு அசலாய் உன் பெரிய தாத்தா மாதிரி இருப்பான் தெரியுமா? நிறம் இன்னும் கூட.
ஆனால் குணம்...? உதட்டைப் பிதுக்கினாள். பூஜ்யம் தான்.
தாத்தா எங்கே..! இவன் எங்கே!
ஹலோ... உன்னைத்தான்... திறந்த இடத்தில் ‘ஏதோ’ நுழையுமாமே... அது மாதிரி நீ வந்திருக்கிறாயே, உனக்கு மட்டு மரியாதை எதுவும் இல்லையா? நாகரிகம் என்றால் என்னன்னு தெரியாதா..? முதலில் அனுமதி பெற்று வரவேண்டும் என்ற பண்பாடு கூட இல்லாமல்... கதவைத் தட்டிவிட்டு வர வேண்டும் என்ற நாசூக்கும் இன்றி... இப்படியா... நான்சென்ஸ்...
கண்களில் தீப் பொறி பறக்க... சினத்துடன் சொன்னான் அவன்.
மிஸ்டர் குணசேகர்.. நான் வந்த காரணத்தைக் கேட்டுவிட்டு... அப்புறம் பண்பாடு... நயம்... நாசூக்குப் பற்றி பேசுங்கள்.
உன் கோபம் என்னை ஒன்றும் செய்ய வில்லை என்பது போல் முகத்தை நிமிர்த்திக் கொண்டு சொன்னாள் புவனா.
நான் எதையும் கேட்கத் தயாராய் இல்லை. யூ கெட் அவுட், மிஸ்... லீலா... இந்தப் பெண்ணை வெளியேற்றுங்கள்,
என்று அதட்டும் குரலில் அவன் சொல்ல.
"எனக்கு நாகரிகம் தெரியவில்லை என்றீர்கள். உங்களுக்கு மட்டும் அது இருக்கிறதா... வராத விருந்தாளி வந்திருக்கிறேன். இப்படித்தான் ஒரு நெருங்கிய உறவினரை வரவேற்பார்களா... குணசேகர்..’’ என்றாள் அவள்.. கிண்டலாய்.
அதுவும்... நெருங்கிய என்ற வார்த்தையை வெகு அழுத்தமாய் உச்சரித்து.
அதைக் கேட்டுப் புருவங்களை உயர்த்தினான் அவன்.
உறவா.. அதுவும் நெருங்கியதாமே.. திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
என்ன இது பேத்தல்.. நிலைமையைச் சமாளிக்கும் நாடக உத்தியா.. ரீல் விடுகிறாளா?
அவனது பார்வையில் தெரிந்த அவநம்பிக்கையினைக் கண்டு அவள் ஏளனமாய்ச் சிரித்தாள்.
நம்பிக்கையில்லை... ம்ம்... அது சரி... உறவுகளை அண்ட விட்டால்தானே யார் எந்த வகையில் சொந்தம் என்று தெரிய வரும்... இந்த உலகத்தில் நாம் மட்டுமே.. நம்மைச் சுற்றி யாருமே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தால்... இப்படித்தான். ஒன்றும் புரியாமல் விழிக்க வேண்டிவரும். போகட்டும். இப்போதாவது நான் யார்.. என்ன உறவுன்னு தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா.. குணசேகர்..?
என்று கேட்டாள் அமர்த்தலாய்…
தன் பெயரை வெகு உரிமையாய் அழைக்கிறாளே... என்ற எரிச்சலுடன் அவளை வெறித்தான் குணசேகர்.
யார் நீ... இங்கே எதற்கு வந்திருக்கிறாய்?
மிரட்டல் குரலில் அவன் கேட்டதும்.
சொல்றேன்... சொல்லத்தானே நான் வந்திருப்பது. ஆனால் அதை அந்நியர் முன் எப்படிச் சொல்வது... வேண்டாமே.. நம் வீட்டு விவகாரத்தை மூன்றாம் மனிதர் முன் ‘டமாரம்’ அடிக்க எனக்குப் பிடிக்கவில்லை குணசேகர்!
என்றவளின் பார்வை அர்த்தத்துடன் சிநேகாவின் மீது பதிந்தது.
அதுவரையில் ஒருவிதச் சங்கடத்துடன் நெளிந்தவாறு நின்றிருந்த பி.ஏ.வும், வருகிறேன் சார்,
என்று சொல்லி விட்டு ஓடாத குறையாய் அங்கிருந்து விரைந்தாள்.
அப்போ நானும் கிளம்புகிறேன்… குணா..
என்று சிநேகாவும் கிளம்ப..
நீ இருக்கலாம்.. சிநேகா.. நீ அறியக்கூடாத ரகசியம் எதுவும் இல்லை!
என்று அவளது கரத்தைப் பிடித்து நிறுத்தினான் அவன்.
சாரி... குணசேகர்... நான் சொல்லத் தயாராக இல்லை... உங்களுக்கு வேண்டுமானால் மான... அவமானம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால்... எனக்கு... என் சொந்தங்களின் விஷயங்கள் நமக்குள்ளே இருக்க வேண்டும் என்றுதான் எண்ணம். இவங்க... உங்களுக்கு மனைவியா... சொல்லுங்க... அப்படியிருந்தால் மட்டுமே அவங்களுக்கு கேட்கும் உரிமை உண்டு. ஆனால்.. இவங்களைப் பார்த்தால்.. இன்னும் செல்வி என்றுதான் தோன்றுகிறது. அப்போ அனுமதி இல்லவே இல்லை. இதுகூட உங்களுடைய நாகரிக ஏட்டில்.. பண்புப் பாடத்தில் வருகிறது. தெரியுமா..?
என்று சொல்லிவிட்டு நமுட்டுப் புன்னகையுடன் பார்க்க... அவன் முகம் கன்றிப் போனது.
சிநேகாவுக்கோ... சொல்லவே வேண்டாம்... அவமானத்தில் குன்றிப் போனவளாய்.. இனியும் இருந்தால் தனக்கு மரியாதை இருக்காது என்று நினைத்தவளாய்த் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
வருகிறேன்... குணா... இனியும் நான் இருந்தால் அது அசிங்கம்.. அப்புறம் உங்களை வந்து பார்க்கிறேன்,
என்று சொல்லிவிட்டுச் சென்றவளை இயலாமையுடன் வெறித்துக் கொண்டிருந்தான்.
அவள் சென்றதும்… ‘கடுகடு’ வென்று சிடுக்கு முகத்துடன் புவனா பக்கம் திரும்பியவன் அவளைச் சுட்டு எரிப்பது போலப் பார்த்தான்.
அவனது கண்களில் தெரிந்த நெருப்பு ஜ்வாலையைப் பார்த்தும் அவள் அயரவில்லை. இதையெல்லாம் எதிர் பார்த்துத்தானே வந்திருக்கிறாள்.
அவனது தகிக்கும் பார்வையைத் தைரியமாய் எதிர் கொண்டு நின்றாள்.
உம்.. இப்போது சொல்.. அதென்ன.. அப்படித் தலை போகின்ற விஷயம். எதையாவது சொல்லிப் பிரச்சனையை உண்டு பண்ணி.. பணம் கறக்கலாம் என்று மட்டும் நினைக்காதே!
சிம்மக் குரலின் கர்ஜனையாய் வந்தன வார்த்தைகள்.
"அடடா.. எப்படிப் பிரச்சனை செய்து.. பணத்தை எப்படிச் சுருட்டலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது... மிஸ்டர்... குணசேகர். அதெல்லாம் உங்க அப்பா அம்மாக்கு கைவந்த கலையாக்கும். அந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கத்தானே நான் வந்திருக்கிறேன்...’’ என்று அவள் சொன்னதும்... அவளைத் துளைத்தெடுப்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
அவனது தாடையில் இறுகல் தெரிந்தது... அய்யாவுக்குக் கோபமோ. உள்ளூர ஏளனமாய் நினைத்தாள்.
உண்மையிலே.. அவனுக்குச் சீற்றம் புதுப்புனல் போல பொங்கி வந்தது.
என் இருப்பிடத்திற்கே வந்து... என் பெற்றவர்களைப் பற்றிக் கீழ்த்தரமாய்ப் பேசுகிறாளே... என்ன திமிர்... இவளை..
கைகள் தினவெடுத்தது போலத் துடித்தன... அப்படியே கழுத்தை நெரித்துவிட வேண்டும் போல் ஆவேசம் வந்தது. கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு கீழ்க்குரலில்.. அதுவும்.. அழுத்தந்திருத்தமாய்ச் சொன்னான்.
பொய்யும் புரட்டுமாய்ப் பேசினால்... பல்லைத் தட்டிக் கையில் கொடுத்து விடுவேன்.. என் அப்பா.. அம்மா யாருக்கு அநியாயத்தைச் செய்தார்கள். வீண் புரளி பேச வந்திருக்கிறாயா.. பெண்ணே?
ஆமாம்... எனக்கு வேறே வேலையில்லை.. பொழுது போக்க இங்கே வந்து வீண் கதையளக்கிறேன் பாருங்க.. சரி.. இப்போ.. என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்கள். உங்களோட தாத்தா.. பாட்டி.. அதாவது.. உங்க அப்பாவோட பெற்றவர்கள் இப்போது எங்கே.. ம்ம்..
என்று மாணவனை அதட்டிக் கேட்கும் ஆசிரியரின் தோரணையில் விசாரித்தாள்.
இதென்ன அசட்டுக் கேள்வி என்பது போல அவளைப் பார்த்தான் அவன்.
எனக்குப் பதினொரு வயதாகும்போதே அவர்கள் இறந்து விட்டார்கள். ஆனால்... இதைக் கேட்க நீ யார்... உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..?
என்று கடுப்புடன் கேட்டான்.
ஒ... இறந்து விட்டார்களாக்கும். சரிதான்... ஓகே... இந்த. ஃபோட்டோவில் இருப்பது யார் என்று சொல்வீர்களா..??
என்றவள்... தன் கைப்பைக்குள் இருந்து ஒரு புகைப் படத்தை எடுத்து நீட்டினாள்.
வேண்டா வெறுப்புடன் அதை வாங்கிப் பார்த்தான் குணசேகர்.
அதில் இருந்த வயது முதிர்ந்த தம்பதியினரைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு... இவர்களா... பத்து வருடங்களுக்கு முன் தன் வீட்டில் 'அவுட் ஹவு’ஸில் வசித்தவர்களாயிற்றே.. அப்புறம் எங்கோ ஒரு கிராமத்திற்குப் போய் விட்டார்கள் என்று அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறான். அது சரி... இந்த விசாரணையெல்லாம் இவளுக்கு எதுக்கு?
குழம்பிப்போய் நின்றவனைப் பார்த்துப் புவனா நக்கலாய்க் கேட்டாள்.
என்ன.. இவர்கள் யார் என்று தெரியவில்லையா.. இல்லை.. தெரியாதது மாதிரி நடிக்கிறீர்களா?
ஷட் அப்.. நான் ஏன் நடிக்க வேண்டும். இவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். எங்கள் வீட்டில் வேலை செய்தவர்கள்.. வயதாகி விட்டதால் கிராமத்திற்குப் போய் விட்டார்கள்..
அதுசரி.. இவள் கேள்விகளுக்கு நான் ஏன் பதில் சொல்கிறேன்.. அது அவனுக்கே விளங்கவில்லை.
"அட! உங்கம்மா சாமர்த்தியமாய் உங்ககிட்டே அப்படியொரு கதையளந்திருக்கிறார்களாக்கும்... என்ன கெட்டிக்காரத்தனம்... ஆமாம். அதற்கு... உங்கப்பா தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையாட்டம் ‘அதே.. அதே’ என்று தலையாட்டியிருப்பாரே..’ என்று கிண்டலாய் வினவினாள் புவனா.
அவனுக்குச் சினம் தலைக்கு ஏறியது. ஏய்.. என்ன வாய் நீளுகிறது. என் முன் நின்று.. என் பெற்றவர்களைப் பற்றிப் பேச உனக்கு எத்தனை துணிச்சல்.. அது சரி.. நீ என்ன.. நீதி தேவதையா.. பெரிதாய் நியாயம் பேச வந்து விட்டாய்.. இங்கே.. உன் பப்பு வேகாது.. உடனே போய் விடு.. கெட் லாஸ்ட்!
என்று கத்தினான் பதிலுக்கு.
அவள் ஒன்றும் அசைகிற மாதிரித் தெரியவில்லை. அவனது கோபத்தைச் சட்டை செய்யாதவள் போல அமைதியாகப் பேசினாள்.
அய்யே... நான் இன்னும் முழுசாய்ச் சொல்லி முடிக்க வில்லையே.. அதற்குள் பித்தம் தலைக்கேறியது போலச் சத்தம் போட்டால் எப்படி.. சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டுத்தான் போவதாய் உத்தேசம். மிஸ்டர் குணசேகர். அவர்களைப் பற்றி உங்களுக்கு விலாவாரியா விளக்கம் கொடுத்துவிட்டு அப்புறம்தான் போகணும் என்ற முடிவோடதான் நானும் வந்திருப்பது. வேறு வழியில்லை... நீங்க காது கொடுத்துக் கேட்டுத்தான் ஆகணும்.
"தேவையில்லை... அவர்கள் எனக்குச் சம்பந்தமில்லாத மனிதர்கள்.. அவர்கள் யாரோ.. எவரோ. கண்டவர்களைப் பற்றிப் பேசி என் நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பம் இல்லை. நீ போகலாம்..’’ என்றான் உறுதியான குரலில்.
அவளும் விடுவதாக இல்லை.
மன்னிக்கவும்... குணசேகர்... இவங்க யாரோவோ... எவரோவோ இல்லை... உங்களோட தாத்தா.. பாட்டி.. உங்கப்பாவைப் பெற்று எடுத்த புண்ணியர்கள். இன்னும் சொல்லப்போனால் உங்களோட ரத்தமும்.. சதையுமான சொந்தம்.. உங்க பெயர் குணசேகர்.. யாருடையது என்று நினைக்கிறீர்கள்.. இவரோடதுதான்.. தெரியுமா..? உற்றுப் பார்த்தால்.. உங்களுக்கே அது புரியும்.. நீங்க தாத்தாவின் மறு வார்ப்பாம்.. அதை நான் சொல்லவில்லை.. பாட்டி சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
அவனது முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. கொஞ்ச நேரம்தான்... சுதாரித்தவனாய்...
பொய்.. இது கட்டுக்கதை.. நாடகம் ஆடி என்னை ப்ளாக் மெயில் பண்ண வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்!
என்று கோபத்துடன் சொன்னான்.
தெரியுமே... நான் சொல்வதை நீங்க நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். இன்னொரு ஆதாரமும் இருக்கு.. உங்களைப் பெற்றவர்கள் தாத்தா பாட்டியுடன் இருக்கும் புகைப்படம்.. அதைச் சட்டம் போட்டு மாட்டி வைத்திருப்பதால். கொண்டு வர முடியவில்லை. பாவம் அவர்கள். வயதான காலத்தில் பிள்ளையோட கவனிப்பு இல்லாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த அவலத்தை எங்கே போய்ச் சொல்ல... கடல் மாதிரிச் சொத்து இருந்தும் அங்கே சின்னக் கிராமத்தில் எந்த வசதியும் இல்லாமல் அன்னக்காவடிகளாய் அல்லாடுகிறார்கள். அந்த வேதனை தாங்காமல்தான் அவர்கள் தடுத்தும் இங்கே வந்தேன். நேரே.. உங்கள் வீட்டிற்கே வந்திருப்பேன். ஆனால் எதையாவது சொல்லி உங்களை... உங்க புத்தியை மழுங்கடித்திருப்பார்கள். அந்தப் பயம் தான் என்னை இங்கே வர வைத்தது. இதோ பாருங்கள் குணசேகர். உங்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால்... இருந்தால் என்ன... இருக்கத்தான் வேண்டும்.. அவர்களை வந்து பாருங்கள்.. இல்லேன்னா.. உங்க பெற்றவர்கள் மாதிரியே கல் மனசோடு இருந்து விடுங்கள்.. நான் யார் அவர்களுக்கு வக்காலத்து வாங்க.. என்று நினைப்பீர்கள். அதையும் சொல்கிறேன்.. நானும் அவர்களுக்குப் பேத்திதான்.. உங்க தாத்தாவின் தம்பியோட மகள் வயிற்றுப் பேத்தி.. அவர்களைக் கவனித்துக் கொள்வது நாங்கள் தான்.. விளக்கம் போதுமா?
அவள் சொல்லச் சொல்ல... அவன் மலைத்துப் போனான்.
இவள் சொல்வதெல்லாம் உண்மையா? என் தாத்தா.. பாட்டி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்களா? இதோ.. தாத்தாவின் முகத்தில் என் சாயல் தெரிகிறதே.. அப்படியென்றால்.. அது உண்மைதானே. பின் ஏன் அதை மறைத்து.. அம்மாவும் அப்பாவும் பொய் சொல்ல வேண்டும்.
முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது போல அல்லவா. அவர்களை உயிருடன் புதைத்து விட்டார்கள்.
தலை வீங்கிக் கொண்டு வருவது போலக் கனமாய்க் கனத்தது.
கண்களை மூடிக் கொண்டு. நெற்றியை அழுத்தினான்.. எத்தனை வினாடிகளே.. இல்லை.. நிமிடங்களோ..!
சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கையில் புவனா அங்கு இல்லை.
***
2
மொறு மொறுவென்று இருந்த முந்திரி பக்கோடாவைச் சுவைத்தவாறு தொலைக்காட்சியில் ஒடிக் கொண்டிருந்த மெகா சீரியலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி.
அப்போதுதான் உள்ளே வந்தான் குணா.
பேரனைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.
என்னப்பா... இன்னிக்குச் சீக்கிரம் வந்துட்டே.. வா.. வா.. ரொம்ப பசியோட இருப்பே. உனக்குப் பிடிச்ச முந்திரி பக்கோடா இன்னிக்கு.. சுடச்சுடக் கொண்டு வரச் சொல்றேன்... சாப்பிடு குணா...
எனக் கரிசனத்துடன் சொன்னாள்.
மந்தாகினிக்கு மகள் வீட்டில் இருக்கும் உரிமையும் சலுகையும் பிள்ளை வீட்டில் இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு மந்தாகினிக்கும் மருமகளுக்கும் ஏழாம் பொருத்தம்... மந்தாகினி மருமகளிடம் குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாக இருப்பாள்… அதை எதிர்த்துப் பேசும் மருமகளைக் கண்டபடி திட்டித் தீர்ப்பாள்...
தாய்க்குப் பரிந்து பேசாமல் வாய் மூடிக் கொண்டிருக்கும் மகனின் மீது ஆத்திரம் வெடிக்கும்... இப்படியா இருப்பான் ஒரு பிள்ளை.. அவள் கன்னத்தில் நான்கு அறை கொடுத்து... என் அம்மாவுக்கு அடங்கி நடக்கிறாயா... இல்லை, வீட்டை விட்டுப் போகிறாயா என்று சொல்ல வேண்டாமா? என்னவோ... மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்கிறானே என்று பற்களைக் கடிப்பாள்.
அதைப் பொறுக்காமல்தான் அடிக்கடி மகள் வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பித்ததும்... குசுமாவும், ‘அங்கே போய் ஏம்மா நீ அவதிப்பட்றே... இங்கேயே இருந்து விடேன்,’ என்றதும் அதையே வேதவாக்காய்க் கொண்டு அங்கேயே தங்கி விட்டாள்.
சொகுசான வாழ்க்கை வா வா என்று அழைக்கும் போது அதை வேண்டாம் என்று மறுக்கக் கசக்குமா என்ன! உட்கார வைத்து உபசரிக்கும் மகள்... சுணக்கம் காட்டாத மாப்பிள்ளை... பாட்டி... பாட்டி என்று நாய்க் குட்டியாய்ச் சுற்றி வரும் பேரன்... இதை விட வேறு என்ன வேண்டும்... நிரந்தரமாய் ‘டேரா’ போட்டு விட்டாள்.
ஆனால்... இன்று பேரனுக்கு என்ன ஆச்சு... பாட்டியிடம் நின்று வார்த்தையாடவும் பொறுமையின்றி ஓடுகிறானே... நல்ல மனநிலையிலும் இல்லை. மந்தாகினி பேரனைக் குழப்பத்துடன் பார்த்தாள். அவளுக்கு எப்படித் தெரியும். அவளே அவனுக்குப் பிரச்சனையாக இப்போது தெரிகிறாள் என்று... குணாவிற்கு... தலைக்குள் ஆயிரம் வண்டுகள் ‘உய்ய்ங்ங்’ என்ற ரீங்காரத்துடன் சுற்றி வருவது போல இருந்தது.. புவனாவின் வார்த்தைகள் மண்டைக்குள் நண்டாய்க் குடைந்தெடுத்தன.
யாரிடம் விசாரித்தால் உண்மை தெரிய வரும்... அப்பாவிடம் கேட்டால்... ப்ச்சு. அம்மாவிடம் பயப்படும் அவர் அம்மாவுக்கும் பாட்டிக்கும் எதிராகப் பேசுவாரா..? ஊகூம்… பிரயோசனமில்லை.
அதே சமயம் கொஞ்சம் நெருடலும் இருந்தது. அந்தப் பெண் சொல்வதில் எந்த அளவு உண்மை? ஒருவேளை வீண் புரளியாகவும் இருக்கலாம்...
நமக்கு வேண்டாதவர்... வயிற்றெரிச்சலில் வேண்டும் என்றே கிளப்பி விட்டிருக்கலாம்... வீட்டின் நிம்மதியைக் குலைக்க வேண்டும் என்று அவளை அனுப்பி வைத்து...
அப்படித் தெரியவில்லையே... அந்தப் பெண் உண்மையான பாசத்துடன் பாட்டனாருக்குப் பரிந்து கொண்டு வந்த மாதிரி இருந்ததே... அதில் பாசாங்கோ... நடிப்போ தென்படவில்லையே. நெற்றிப் பொட்டில் ‘விண்'ணென்று தெறித்த வலியில் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
என்னடா ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கே..? உடம்பு சரியில்லையா என்ன..?
பாட்டியின் கேள்விக்குப் பதில் அசட்டையாகவே வந்தது.
அதெல்லாம் இல்லை... அம்மா எங்கே..?
யாரையோ பார்த்து வரப் போயிருக்கா... சரி... பக் கோடாவைச் சாப்பிட்றேயா... கொண்டு வரச் சொல்லட்டுமா... ?
நான்தான் வேண்டாம் என்கிறேனே... ஏன் நச்சரிக்கிறீர்கள்…?
என்று எரிச்சலோடு சொன்னவன் அங்கிருந்து சென்றான்.
தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தவன் திடீர் என்று எதையோ நினைத்துக் கொண்டவனாய் எழுந்து சென்று பழைய ஆல்பங்களைத் தேடி எடுத்தான்.
தனது பிறந்த நாள் விழா... பெற்றவர்களின் திருமண ஆண்டுக் கொண்டாட்டம்... பண்டிகை நாள் என எடுத்திருந்த பழைய புகைப்படங்களையெல்லாம் ஆராய்ந்தான்.
அவற்றில் ஒன்றில் கூட அவர்கள் இல்லை.
ஏன்... அவர்கள் வரவில்லையா... இல்லை.. அழைக்கப்படவில்லையா..?
அப்பாவின் ஐம்பதாவது பிறந்த நாள் கூட வெகு விமரிசையாக நடந்ததே... அதிலும் அவர்கள் இல்லையே... நெற்றியை அழுத்தித் தேய்த்தான்.
அந்தப் பெண் சொல்வதுபோல… தாத்தா பாட்டியை ஒதுக்கி வைத்தார்களா... இல்லை... இவர்களின் உதாசீனத்தால் மனம் நொந்து அவர்களே ஒதுங்கி விட்டார்களா..?
அந்த அளவுக்கு என் பெற்றவர்கள் கல் மனம் கொண்டவர்களா… வயதானவர்களையும் புறக்கணிக்கும் அளவுக்கு இரக்கமில்லாதவர்களா..? என்னால் நம்ப முடியவில்லையே.
அனைத்துப் போட்டோவிலும் தப்பாமல் மந்தாகினிப் பாட்டியும்... மணி மாமாவும் இருந்தார்கள்... ஏன்... அம்மாவின் அப்பா... ராமுத் தாத்தாவும்தான் இருந்தார்.
ஆனால் எதிலும் அப்பாவின் பெற்றோர்கள் இல்லையே. என் பதினோராம் வயதில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போதும்… என் ஐந்தாம் வயது பிறந்த நாள் விழாவில் ஏன் இல்லை... அப்போது அவர்கள் உயிருடன்தானே இருந்தார்கள்...
அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால்... தலை வீங்கி... சுக்கு நூறாய் உடைந்து விடும் போல இருந்தது. மறு படியும் கீழே இறங்கி வந்தான்.
பாட்டி... எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்,
என்றான் மந்தாகினியிடம்.
என்னப்பா அது... கேள்...
நம் வீட்டில் எல்லோருடைய போட்டோவும் இருக்கிறது... ஆனால்... அப்பாவின் பெற்றவர்களோட போட்டோ எதுவும் இல்லையே... அது ஏன்..?
அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத மந்தாகினி திடுக்கிட்டுப் போனாள்.
திடீர் என்று எதற்கு விசாரிக்கிறான் என்று புரியாமல் விழித்தாள்.
அம்மாவின் சொந்தம் என்று நீங்கெல்லாம் இருக்கும் போது.. அப்பாவின் உறவுகள் என்ன ஆனார்கள்.. யாரும் வருவதில்லையே.. அது போகட்டும்... ராமுத் தாத்தா போட்டோ எல்லாம் இருக்கிறது. அப்பாவோட பெற்றவர்களின் போட்டோ ஒன்றுகூட இல்லையே... ஏன்?
என்ற பேரனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது திகைத்தாள். இப்படி ஒரு அணுகுண்டுக் கேள்வியை அவன் கேட்பான் என்று அவளுக்குத் தெரியாததால் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தாள்.
என்ன பாட்டி... பதிலைக் காணோம். அப்பாவுக்குச் சொந்தக்காரர் யாரும் இல்லையா என்ன... அப்படி இருக்க முடியாதே...
உனக்கு யாரைப் பத்தி தெரியணும் குணா..?
கொஞ்சம் தடுமாற்றத்துடன் கேட்டாள் பாட்டியம்மாள்.
என் தாத்தா பாட்டியைப் பற்றி... அவர்கள் இருக்கிறார்களா.. அவர்களின் படம் எதுவும் நம் வீட்டில் இல்லையே... என்ன காரணம்...? அதைச் சொல்லுங்கள்,
என்றான் அவன்.
மந்தாகினிக்குத் 'திக்’கென்றது…
இதுநாள் வரைக்கும் குணசேகருக்குத் தாத்தாவும் பாட்டியும் உயிரோடு இருப்பதும் தெரியாதே. இப்போது எதுக்கு இந்தக் கேள்வியைக் கேட்கிறான்? கடவுளே... இக்கட்டான நிலைமையில் என்னைச் சிக்க வைத்து விட்டாயே. குசுமா இங்கே இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே... இப்போது என்ன சொல்லிச் சமாளிப்பேன்.. சரி.. சொன்னதையே சொல்லிச் சமாளிக்க வேண்டியது தான்... என்று எண்ணியவளாய்ப் பழைய பாட்டையே பாடினாள் மந்தாகினி.
அவங்களா... அவங்கதான் உயிருடன் இல்லையே ராஜா... அதான் சொன்னோமே... உனக்குப் பதினொரு வயசு இருக்கிறப்போ உங்க பாட்டிபோயிட்டாங்க... அந்த வேதனை தாங்காமல்... உங்க தாத்தாவும் இறந்துட்டாங்க..
என்ற பாட்டியைத் துளைப்பது போலப் பார்த்தான் குணா.
அந்தப் பார்வையில் நடுங்கிப் போனாள் மந்தாகினி... சட்டென்று பேச்சை மாற்றினாள் அவள்.
தலைவலி என்றாயே... இப்போ பரவாயில்லையா குணா..? பசி என்றால் சாப்பிட்டு விடு... தலைவலியும் போயிடும்.
வேண்டாம்... அப்புறம் சாப்பிடுகிறேன்,
என்று சொல்லிவிட்டுச் சென்றான் பேரன்.
எப்பவும் கலகலப்பாய் இருக்கும் பேரன்... இன்று இறுகிப் போன முகத்துடன் இருப்பதைக் கண்டு கலக்கம் தான் வந்தது மந்தாகினிக்கு.
பால்கனியில் ‘சில்’லென்ற காற்றை அனுபவித்துக் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான் அவன். அவனது ‘செல்’ அவனைத் தட்டி எழுப்பியது. எடுத்துக் காதில் வைத்தான்.
அவளேதான்...
அலோ... என்ன... வீட்டில் போய் விசாரித்தீர்களா..? அவர்கள் எங்கே என்று கேட்டீர்களா..?
"ம்ம்...''
அவங்க உயிரோடு இல்லைன்னு சொல்லியிருப்பார்களே...
"ம்ம்...''
அதான் அவர்களை உயிரோடு வைத்துச் சமாதி கட்டி விட்டார்களே... ஓகே... உங்க சந்தேகம் இன்னும் தீரவில்லை என்றால்... நான் சொல்லும் இடத்திற்கு வருகிறீர்களா... மிஸ்டர் குணசேகர்?
எதற்கு...?
நீங்க நம்ப வேண்டாமா... அதற்கு இன்னொரு ஆதாரம் கிடைச்சிருக்கு... உங்கப்பாவின் திருமணப் போட்டோ... இப்போ... எங்க மாமா வீட்டில் இருக்கு... அதாவது உங்கப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரன்... அதாவது கஸின் வீடு. அங்கேதான் நான் தங்கியிருப்பது... அதை நான் பத்திரமாய் வாங்கி வச்சிருக்கேன்... நீங்க வந்தால் அதைப் பார்க்கலாம்…
"முதலில் உனக்கு இந்த ‘செல்’ நம்பர் எப்படிக் கிடைத்தது...? அதைச் சொல்...’’ என்று கோபத்துடன் கேட்டான் குணா.
சிம்ப்பிள்... உங்க ‘ரிஸப்ஷனிஸ்டிடம்’ உங்களோட சொந்தக்காரப் பெண் என்றேன். உடனே உங்க செல் நம்பரை தயக்கமில்லாமல் கொடுத்து விட்டாள். என்ன... ‘நறநற’ன்னு சத்தம்… ஒ... பற்களைக் கடிக்கிறீர்களாக்கும்... பார்த்து... உதிர்ந்து விடப் போகிறது… அப்புறம் உங்க தாத்தாவைப் பார்க்க வரும்போது... நீங்களே தாத்தா மாதிரி பொக்கை வாயோடு இருக்கப் போறீங்க..
என்று சொல்லிவிட்டு... அதைக் கற்பனையில் பார்த்தது போல ‘களுக்’கென்றும் சிரித்தாள்.
என்ன... மிஸ்டர். குணசேகர்... வருகிறீர்கள்தானே...
என்று அவள் திரும்பவும் கேட்க…
"வந்து தொலைக்கிறேன்... எங்கே வர வேண்டும் என்று சொல்...’’ என்று எரிச்சலுடன் கேட்டான்...
அவள் விலாசத்தைச் சொன்னாள். அவனும் புறப்பட்டுச் சென்றான்.
ஆனால்... அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அவனது கோபம்... எரிச்சல்... சிடுசிடுப்பு எல்லாமே மறைந்து போனது... மனம் கரைந்து போனது.
இளம் வயதில் அவனது பெற்றோர்கள் அழகாய் இருந்ததைக் கண்டு உள்ளம் சந்தோஷத்தில் தத்தளித்தது.
ஏதோ கிடைக்காத பொக்கிஷம் கைக்கு வந்த மாதிரி களிப்பில் திக்கு முக்காடிப் போனான்.
அப்பாவின் கம்பீரத் தோற்றம்… அம்மாவின் அழகு இரண்டையும் பெருமிதத்துடன் பார்த்து ரசித்தவனின் நெஞ்சம் விம்மியது.
அவர்களுடன் தாத்தா குணசேகர்... நடுத்தர வயதில்... அவரும் மிடுக்குடன் தலை நிமிர்ந்து நின்றிருந்தார். அவரது முகத்தில் தன் சாயலைக் கண்டான்... அதுவும் அப்பட்ட சாயல்…
நான் தாத்தா மாதிரிதான்... பாட்டியும் அழகாகத்தான் இருந்தார்கள். லட்சணமாய்... லட்சுமிகரமாய்...
ஆக… புவனா சொன்னது அனைத்தும் உண்மைதான்.
இந்தப் படத்தில்... தாத்தாவும் பாட்டியும் செல்வந்தர்களைப் போலத் தளதளப்புடன் இருக்கிறார்களே. ஆனால்... தன் வீட்டில்... அவுட் ஹவுஸில் இருக்கும்போது வாடி... பரதேசிகளைப் போல் இருந்தது ஏன்... ஏன்... ஏன்...?
இப்போது புரிகிறதா... நான் சொன்னது எல்லாமே உண்மை... உண்மையைத் தவிர வேறு ஏதும் இல்லை என்று... ஓகே... இப்போ என்ன செய்வதாய் உத்தேசம்...
என்று கேட்டாள் புவனா.
நேரே வீட்டிற்குச் சென்று இதைப் பற்றிக் கேட்கப் போகிறேன்... ஏன் இப்படிச் செய்தீர்கள் என்றும் கேட்பேன்...
"உடனே அவங்க குற்றத்தை ஒப்புக்கொண்டு தாம் செய்தது தப்புன்னு வருந்துவார்கள் என்று நினைக்கிறீர்களா குணசேகர்... ஊகூம்... முதலில் நீங்க செய்ய வேண்டியது ஊருக்கு வந்து உங்க தாத்தா பாட்டியைப் பார்ப்பது தான். அவர்களும் சந்தோஷப்படுவாங்க.
என்ன... வருகிறீர்கள்தானே...
அவன் தயங்குவதைப் பார்த்துவிட்டு அவளே சொன்னாள். என்ன... உங்கப்பா அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்ற பயமா?
நான் தயங்குவது அதற்கு இல்லை... தாத்தாவும் பாட்டியும் என்னிடம் பேசுவார்களா என்றுதான். அவர்களுக்கும் கோபம் இருக்குமே...
இதோ பாருங்க குணசேகர்... உங்க தாத்தாவுக்கும் பாட்டிக்கும் உங்கள் மீது கொள்ளைப்பிரியம்... உங்களைப் பார்க்கத் துடியாத் துடிக்கிறார்கள்... ஆனால்... நீங்க வந்து அவர்களைப் பார்க்கும் விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியக்கூடாது... அவ்வளவுதான்...
இதுவரைக்கும் அவர்களிடமிருந்து நான் எதையும் மறைத்ததில்லை... எதையும் ஒளிக்காமல் சொல்லி விடுவேன்... ஆனால்...
எதையுமா... அலுவலகத்தில் நடக்கும் காதல் விளையாட்டுக்களையுமா?
என்று தலையைச் சரித்து... ஏளனக் குரலில் அவள் வினவ...
அவன் முகம் கன்றிப் போனது. மைகாட்! நீ வக்கீலுக்குப் படித்திருக்கலாம். எங்கே குத்தினால் நன்றாய் உறைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறாய்,
என்றான் கடுப்புடன்.
அட... எப்படி ‘கரெக்டாய்’ சொன்னீங்க... குணசேகர்... நான் ஒரு லாயர்தான்... அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் நியாயமான வக்கீல்... அதான். இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாமல் வந்தேன்... ஓகே... இப்போ விஷயத்திற்கு வருவோம். எப்போது ஊருக்குப் புறப்படலாம்?
விடாக் கண்டனாய் அவள் கேட்டாள்.
எந்த ஊர்...?
பவானிதான். அதுதான் தாத்தாவின் பூர்வீக ஊர்... அங்கே அவர்களுக்கு வீடும்... நிலமும் இருக்கு... அப்படியொன்றும் பெரிதான சொத்து இல்லை... அந்தக் காலத்து வீடு... ஊருக்குத் தள்ளிக் கொஞ்சம் நிலம்... நல்ல வேளையாய்... அவற்றின் மீது உங்கம்மாவின் கண் படவில்லை. விழுந்திருந்தால்... அவற்றையும் சுருட்டி... சுவாகா செய்திருப்பார்கள்.
"என் அம்மாவைப் பற்றி என்னிடமே தரக்குறைவாய்ப் பேச உனக்கு என்ன தைரியம்...’’ என்று கடுகடுத்தான் அவன்.
உண்மையைச் சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது... உங்க அம்மாவோட சுயரூபம் உங்களுக்குத் தெரியாது போல...
என்றாள் கிண்டலாய்...
எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
தப்பு... தப்பு... உங்களுக்குக் கண்டிப்பாய் அது தெரிந்தே ஆக வேண்டும். உங்க தாத்தா... பாட்டிக்கு நடந்த அநியாயத்தைத் தெரிந்து கொள்ளாமல்... எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பீங்க மிஸ்டர்... குணசேகர்... இப்ப கிளை விட்டு வளர்ந்திருக்கிறதே உங்க கம்பெனி... அதுக்கு அஸ்திவாரம் போட்டது யாருன்னு நினைக்கிறீங்க... உங்க தாத்தாவேதான்... முதல் போட்டுச் சின்னத் தொழிலாய் ஆரம்பித்தார். அது அபார வளர்ச்சி அடைந்ததும்... உங்க தாத்தாவை ஒய்வு என்ற பெயரில் வீட்டில் உட்கார வைத்து விட்டார்கள்... அப்புறம்... அந்த வீடு... ஊரில் இருந்த நிலத்தை விற்று அந்தப் பணத்தில் வாங்கிய இடம்... தாத்தாவும் பாட்டியும் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அது. ஆனால் மருமகள் வந்த பிறகு அந்த வீட்டில் அவர்களுக்கே உரிமையில்லாது போனதுதான் கொடுமை. உங்களுக்கு ஒன்று தெரியுமா... குணசேகர்... காக்கா மரத்தில் கூடு கட்டுமாம்... குயில் வந்து அதில் முட்டையிடுமாம். அந்த மாதிரிதான். யார் வீட்டில் யார் தர்பார் நடத்துவது. எங்க தாத்தாவும் பாட்டியும் இருக்க வேண்டிய உங்கள் வீட்டில்... உங்க பாட்டி... அதான் மந்தாகினிப் பாட்டியின் தர்பார் நடக்கிறது... இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்பது யார்...?
அவளது ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியாய் அவனை அடித்தது... சாட்டையின் விளாறலாய் அவனுக்கு வலித்தது.
"போகட்டும்... நமக்கு வீட்டையும் செல்வத்தையும் வாரி வழங்கியிருக்கும் அவர்களை அன்புடன் நடத்துவோம் என்ற நல்ல எண்ணமாவது இருந்ததா... அதுவும் இல்லை... மாமனார் மாமியார் என்ற மரியாதை இல்லை... வயதானவர்கள் என்ற கனிவும் கிடையாது... அவர்களைப் பரதேசிகளைப் போல் அவுட் ஹவுஸில் இருக்கச் செய்து... புழு மாதிரிப் பார்த்து... கேவலமாய் நடத்தியிருக்கிறார்களே உங்க அம்மா... இதைத் தட்டிக் கேட்காமல் கோழையாய் இருந்திருக்கிறார் உங்கப்பா... அதனால் மனம் நொந்து அந்த வீட்டை விட்டே போயிருக்கிறார்கள் இருவரும். அதற்கப்புறம் அவங்க என்ன ஆனார்கள் என்று வந்து பார்த்தார்களா என்றால் அதுவும் இல்லை... உங்கம்மாவுக்குத்தான் பாசமோ... பரிவோ இருந்திருக்காது... ஏன்னா... அவங்க எங்கிருந்தோ வந்தவங்க. ஆனால் உங்கப்பா... அவருக்கு என்ன கொள்ளை... ஏன் எட்டியும் பார்க்கவில்லை...? நான் யார்... உங்க தாத்தாவின் தம்பியோட பேத்தி... எனக்கு இருக்கும் ஆத்திரமும் ஆவேசமும் உங்களுக்கு வர வேண்டாமா..? என் தாத்தா பாட்டிக்கா அநியாயம் நடந்தது என்று பொங்கி எழ வேண்டாமா..? இந்த லட்சணத்தில் உங்களுக்குக் கோபம் வேறா..? இத்தனைக்கும் காரணம் உங்கம்மாதான்…. அவங்களைக் குற்றம் சொல்லாமல் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா..? தேவைதான்...’’ என்று சீற்றத்துடன் சொன்னாள் அவள்.
அவள் 'பளார்’ என்று கன்னத்தில் அறைந்திருந்தாலும் வலித்திருக்காது... அவளது ஒவ்வொரு வார்த்தையும் அம்பாய் நெஞ்சைத் துளைத்து வலிக்கச் செய்தது.
உண்மை சுடும் என்பார்கள்... ஆனால் இந்த உண்மை எரிமலையின் ஜ்வாலையாய்ச் சுட்டுத் தகிக்க வைத்தது.
பெற்றவர்கள் மீது சொல்ல முடியாத அளவிற்குக் கோபம் பொங்கி வந்தது. அவர்கள் மீது இருந்த மதிப்பும். மரியாதையும் ‘விர்'ரென்று அதலபாதாளத்திற்கு இறங்கியது.
அவர்கள் செய்தது குற்றம் என்பதைவிட... அதை ஒரு பெண்... இளையவள் சுட்டிக் காட்டும்படி ஆனதே என உடல் குறுகி... உள்ளமும் குன்றினான் அவன்.
நாளைக்கே நாம் புறப்படுகிறோம்... புறப்படும் முன் உனக்கு ஃபோன் செய்கிறேன்... தயாராக இரு,
என்று சொன்னான்.
ஓகே... ஆனால் இந்த விஷயம்... அதாவது நாம் ஊருக்குப் போகும் விஷயம் உங்க வீட்டில் தெரிய வேண்டாம். ப்ளீஸ்!
என்றாள் அவள்.
அவன் தலையசைத்துவிட்டு காரில் ஏறினான். அவன் செல்வதைத் திருப்தியுடன் நோக்கினாள் புவனா. அவளது முகத்தில் சந்தோஷம் தெரிந்தது... சாதித்து விட்டோம் என்ற மன நிறைவில்...
வீட்டிற்கு வந்த குணாவிற்கு யாரிடமும் பேசும் மனநிலை இல்லை.
பேசினால் எங்கே கோபத்தில் வெடித்து விடுவோமோ என்ற எண்ணம்.
உள்ளே நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது உள்ளம்…
அது புரியாமல்... வழக்கம்போலக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த மந்தாகினி... என்ன குணா... சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனே... நேரத்தோடு சாப்பிடாமல் இப்படி ஊரைச் சுற்றினால் எப்படிப்பா? போ... போய்ச் சாப்பிடு...
என்று அதட்டலாய்ச் சொல்ல... அவனுக்குச் ‘சுரீர்’ என்றது.
காக்கா கூடு கட்டுமாம்... குயில் வந்து அதில் முட்டையிடுமாம்... யார் வீட்டில் யார் தர்பார் நடத்துவது?
புவனா காதருகே பேசுவதுபோலப் பிரமை. அடச்சே.. தலையை உதறிக் கொண்டான் குணா.
சாப்பாட்டு மேஜையில் எல்லாம் இருக்கு... போய்ச் சாப்பிடு குணா...
என்ற பாட்டியை எரிப்பது போலப் பார்த்தவன்...
எனக்குத் தெரியும்... எப்போது சாப்பிட வேண்டும் என்று... நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள்!
என்று முகத்தில் அறைவது போல பேசி விட்டு மாடி ஏறினான்.
பாம்பாய்ச் சீறிவிட்டுப் போன் பேரனை அதிர்ச்சியுடன் பார்த்த மந்தாகினிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவாயிற்று இவனுக்கு என்று திகைத்தாள்.
***
3
தங்கள் காலில் விழுந்து வணங்கிய பேரப்பிள்ளையைப் பார்த்துப் பூரித்துப் போனார்கள் தாத்தாவும் பாட்டியும்.
அவனை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை... அவனை வாரி எடுத்து... அணைத்து உச்சி முகர்ந்தனர்.
இருவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்… பாசத்தில் இருவரும் தத்தளித்துப் போனார்கள்…
அவர்கள் மட்டுமா... குணசேகரும்தான்... அவனும் அவர்களின் அன்பு வெள்ளத்தில் சிக்குண்டு மெய் சிலிர்த்துப் போனான்.
அவனது கண்களிலும் நீரின் கசிவு. இத்தனை நாள் பார்த்திராத பாட்டனார். பாட்டியை நேரில் பார்த்ததால் மனசுக்குள் நெகிழ்ச்சியும் வந்தது.
அதைப் பார்த்துவிட்டுப் புவனாவும் கண் கலங்கினாள். தான் எடுத்த முயற்சி வீண் போகவில்லை என்ற மனநிறைவும் ஏற்பட்டது நிஜம்.
என் பேரப்பிள்ளையைப் பார்த்துவிட்டேன். இனி... இந்தக் கட்டை வேகும். கல்யாணி...
என்றார் மனைவியிடம்.
இப்போதானே சந்திச்சீங்க... தாத்தா... அதுக்குள் போறதுப்பத்தி என்ன பேச்சு... உங்க பேரனோட கல்யாணத்தைப் பார்த்து ரசிக்க வேண்டாமா..? உங்க கொள்ளுப் பேரங்க கையால அடி வாங்க வேண்டாமா..? போங்க தாத்தா..
என்று கேலி செய்தாள் பேத்தி.
"என் பேரப்பிள்ளையைப் பார்த்ததே என்னோட புண்ணியம்மா... அதுக்கு மேலும் அதிகமா நான் ஆசைப்படக் கூடாது இல்லையா... அதான்..’’ என்றார் தாத்தா.
அதுக்கு. உனக்குதான் நன்றி சொல்லணும் புவனா... நாங்க கனவிலும் நினைக்கல்லே. என் பேரன் எங்ககிட்ட வருவான்னு. நீதான் சவால் விட்டுட்டுப் போனேயே... உங்க பேரனோடதான் வருவேன்னு... அப்படியே செஞ்சு காட்டிட்டே புவனா... உன்னை எப்படி மெச்சறதுன்னுதான் எங்களுக்குப் புரியல்லே...
குரல் தழுதழுக்கச் சொன்னார் பாட்டி கல்யாணி.
குணசேகரைச் குறும்பாய்ப் பார்த்துவிட்டு… புவனா சொன்னாள்.
அய்யோ... பாட்டி... நீங்க வேறு... இவரை அழைத்து வர நான் பட்ட கஷ்டம்... எனக்கு அல்லவா தெரியும். இவரை உசுப்பிவிட்டு... கிளப்பிக் கொண்டு வருவதற்குள்.. அப்பப்பா.. போதும் போதும் என்றாகி விட்டது. பாட்டி.. சும்மா சொல்லக்கூடாது. உங்க பேரன் மகா கல்லுளி மங்கனாக்கும். அசைந்து கொடுத்தால்தானே... என்னை நம்பாமல் அவர் பார்த்த பார்வை இருக்கே... உம். நெற்றிக்கண் மட்டும் இருந்திருந்தால்... மை காட்! நான் எரிந்து சம்பலாகியிருப்பேன்... தெரியுமா பாட்டி. இப்ப உங்க முன்னாடி ரொம்ப சாதுப்பிராணி மாதிரி விழுந்து எழுந்திருக்கிறதைப் பார்த்தால்... ஆஹா... அவனா இவன்... சாரி... மரியாதையா சொல்லணும் இல்லே... அவரா இவர் என்று தோன்றுகிறது.
சும்மா... இரும்மா புவனா... என் பேரப்பிள்ளையொண்ணும் நீ சொல்ற மாதிரி அழுத்தக்காரன் இல்லை... அவன் அப்பாவிம்மா.
அடடா... உங்க பேரனுக்கு வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாதுங்கறீங்க... அப்படித்தானே... தேவைதான்...
என்று அவள் குறைப்பட்டுக்கொள்ள.
அவளது கன்னத்தை வருடியவாறு சொன்னார் கல்யாணி.
இல்லைடா... அவனுக்கு என்ன தெரியும்... பெரிய வங்க பேச்சைக் கேட்டு அதை நம்பியிருக்கிறான்னு சொன்னேன்.. எங்களுக்கு நீ எப்படியோ அது மாதிரிதான் என் பேரனும்.. நீங்க ரெண்டு பேரும் எங்களோட ரெண்டு கண் மாதிரிம்மா.
பாட்டி.. உங்க பேத்தி மட்டும் என்ன.. சாமானியமா.. சரியான சண்டைக் கோழியாக்கும்.. அம்மாடீ.. என்ன மாய்.. எங்கிட்டே சண்டை போட்டாள் தெரியுமா... விட மாட்டேன் பார் என்று கடைசி வரைக்கும் அழிச்சாட்டியம் பண்ணி.. உஃப்.. நீங்க எப்படித்தான் இவளைச் சமாளிக்கிறீர்களோ..
என்று அவன் சொன்னதும் அவள் முறைத்துப் பார்த்தாள்.
அவளது முறைப்பைக் கண்டு நடுங்கிப் பயந்தவன் போல பாவனை செய்து...
பார்த்தீர்களா தாத்தா... உங்கள் முன்னாலேயே எப்படி முறைக்கிறாள் என்று... இவளிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டு நான் என்ன பாடுபட்டிருப்பேன் என்று இப்போ உங்களுக்குப் புரியுதா..?
என்று சொன்னதும் பாட்டியும் தாத்தாவும் சிரித்து விட்டார்கள்.
நல்ல பேரன்... நல்ல பேத்தி... ரெண்டு பேரும் சரியா இருக்கீங்க.. ஜாடிக்கேத்த மூடியாட்டம்... ஜோடி அருமை தான்… இல்லீங்க... ம்ம்.. எங்க ஆசை நிறைவேறினா...
என்று சொன்ன பாட்டி பெருமூச்சு விட்டார்.
அதை ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார் தாத்தா.
புவனாவும்… குணசேகரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
புவனா சுதாரித்துக் கொண்டு. அய்யோ... பாட்டி... உடனே... மேட்ச் மேக்கிங்கா... இந்த வயசானவங்க புத்தியே இப்படித்தான். எங்களுக்குன்னு மனசு ஒண்ணு இருக்கும் என்று நினைக்காது...
என்று சலித்த குரலில் சொன்னாள்.
என் பேரனை மணக்க உனக்குக் கசக்குதாடீ!
என்று கேட்டார் கல்யாணி.
பாட்டி... உங்க பேரன் உங்களுக்கு உசத்தியா இருக்கலாம்.. அவர் மகாராஜாவாகவே இருந்தாலும்... எனக்கு வேண்டாம்... விடுங்கள்... என் பாதையே வேறு... எனக்கு வருகிற மணமகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறேன்... இவர் அதற்குப் பொருந்த மாட்டாரே..
என்று உதட்டைப் பிதுக்கினாள் புவனா.
அது என்ன கணக்கு... அதை எங்களுக்கும் சொல்லேன்... பார்க்கலாம்,
என்று சீனியர் குணசேகர் கேட்க...
ஜூனியரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அலட்சியமாய்ச் சொன்னாள் அவள்.
ஏன் தாத்தா... நாம் ஏன் திருமணம் செய்து கொள்கிறோம். சொல்லுங்க...
இதென்னம்மா அசட்டுக் கேள்வி…
என்று வினவினார் தாத்தா.
முதல்லே நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.
அது வந்து... ஒருவனுக்கு ஒருத்தியா வாழணும்னுதான்... அதுக்கு என்ன இப்போ...
நீங்களும் அப்படித்தானே வாழ்றீங்க..
இதில் என்னம்மா சந்தேகம். நாங்க ராமனும் சீதையுமாத்தான் வாழ்றோம்.
ஆங்.. எல்லாப் பெண்களும் தன் புருஷன் ராமனா இருக்கணும்னுதான் விரும்புவாள். இல்லையா... நானும் அப்படித்தான். ஆனால் உங்க பேரன் அப்படியில்லையே... அவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாய்.. அதாவது.. கோகிலத்துக் கிருஷ்ணனாய் அல்லவா இருக்கிறார். அதை அவரிடமே கேளுங்களேன்.
என்று போட்டுக் கொடுத்துவிட்டு... உதட்டைச் சுழித்துக் கொண்டு அவனை ஏளனமாய்ப் பார்த்தாள். இது எப்படி இருக்கு... என்பது போல ஒரு விஷமப் பார்வையுடன்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத குணசேகர் அதிர்ந்து போனான்.
வயசுக் கோளாறில் பெண்களிடம் சீண்டி விளையாடி யவன்தான். சிநேகாவுடன் சுற்றுவதும் தெரிந்த விஷயம் தான் என்றாலும்,
தாத்தா... பாட்டி முன் இப்படியா... ‘பட்’ என்று போட்டு உடைப்பது... அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். சே!
நேரம் பார்த்துக் காலை வாருகிறாள்... பாவி!
அவனது அவஸ்தையைப் பார்த்து ரசித்தாள் புவனா.
என்னப்பா... குணா... இவள் சொல்வதெல்லாம் உண்மையா... இல்லை... வேணும் என்றே இவள் உன்னை வம்புக்கு இழுக்கிறாளா..?
என்று கேட்டார் தாத்தா.
இவள் சொல்வதில் பாதி பொய்... தாத்தா... எனக்குப் பெண் சினேகிதிகள் உண்டுதான். ஆனால் நான் பொறுக்கியில்லை... இவள் பொய் சொல்கிறாள்!
என்றான்... அவளை உறுத்துப் பார்த்தவாறு... அதாவது என் விஷயத்துக்கு வந்தால் பொல்லாதவனாகி விடுவேன் என்று அச்சுறுத்தலாய்.
என்ன... நான் பொய் சொல்கிறேனா..? பாட்டி... இவரைச் சந்தித்த வேளையில்.. இவருடைய அறையில் இருந்தாளே... எவளோ ஒருத்தி... அவள் யாராம்... அதைக் கேளுங்க முதல்ல...
என்றாள் அவள்.
ஓ அப்படியா சமாச்சாரம். யாரப்பா அது? அவளும் உன் பெண் சிநேகிதியா..? இந்த விஷயம் உன் அப்பா அம்மாவுக்குத் தெரியுமா ராஜா... இல்லே... அவங்களுக்குத் தெரியாம நடக்குதா..?
என்று கேட்டார் தாத்தா.
என்ன கேள்வி இது தாத்தா... சிநேகா வேறு யாரும் இல்லை. நமக்குச் சொந்தம்தான். உங்களுக்கும் தெரிந்திருக்கும் தாத்தா.. விமலா பாட்டியோட பேத்தி.. ராகவன் மாமாவின் மகள்...
என்றான் பேரன்.
யாரு... உன் மிலிட்டிரி தாத்தாவோட பேத்தியா..?
ஆமாம் தாத்தா... அவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே.
‘எப்பவாவது வீட்டுக்கு வருவதுண்டு. நல்ல மனிதர். நல்லாவும் பேசுவார். நல்ல குடும்பமும்தான். ஆனால்..."
"அதில்லேப்பா குணா.. கொஞ்ச நாளாய் அவங்களுக்கும் உங்க பாட்டிக்கும் பேச்சு வார்த்தை இல்லாம இருந்தது. அதான் கேட்டேன்..’’ என்றார் பாட்டி.
அதெல்லாம் சரியாகி விட்டது பாட்டி.. இப்ப ரொம்ப நெருக்கமாகி விட்டார்கள்.. பாட்டியும் அவர்களும் சமாதானம் ஆகி எத்தனையோ வருடங்கள் ஆயிற்று தெரியுமா..? சிநேகாவை வீட்டுக்கு அழைத்து வந்ததே பாட்டி தான்.
அப்போ அவர்கள் பார்த்த பொண்ணுங்கறே.. அப் படித்தானே..?
என்றார் பெரியவர்.
ஆமாம்.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் சிநேகாவை ரொம்பப் பிடிக்கும்.. அம்மா அவளைப் பார்த்து,
வாடி... என் ஆசை மருமகளே! என்று சந்தோஷமாய்க் கூப்பிடு வார் தெரியுமா தாத்தா...
என்று சொன்னவனின் பார்வை அருகே இருந்த புவனாவை வெட்டுவதைப் போலப் பாய்ந்தது.
அதாவது... நீ நினைப்பது போல் நான் ஒன்றும் பெண் பித்தன் இல்லை என்பது போல..
"நீ சொல்வதைப் பார்த்தால்... அவள்தான் மருமகள் என்று முடிவே