Bakthi Thamizh - Part 1
By N. Chokkan
()
About this ebook
Reviews for Bakthi Thamizh - Part 1
0 ratings0 reviews
Book preview
Bakthi Thamizh - Part 1 - N. Chokkan
http://www.pustaka.co.in
பக்தித் தமிழ் - பாகம் 1
Bakthi Thamizh - Part 1
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
பக்தித் தமிழ்
*********************
அறிமுகம்: பாக்ஸ் மேட்டர்
*********************
உங்களுக்குப் பக்திப் பாட்டுகள் பிடிக்குமா? விரும்பிக் கேட்டு ரசிப்பீர்களா?
இதென்ன கேள்வி? பக்திப் பாடல்கள் ரசிப்பதற்கானவை அல்லவே, அவற்றில் கவிதைச் சுவை, மொழிச் சுவையைவிட, உருக்கம்தானே அதிகமாக இருக்கும்? 'கடவுளே, நீ பெரியவன், நான் சிறியவன், உன்னையன்றி எனக்கு ஏது கதி? என்னைக் காப்பாற்று, உன்னோடு சேர்த்துக்கொள்'... பெரும்பாலான பக்திப் பாடல்கள் இப்படிதானே அமையும்?
ம்ஹூம், நீங்கள் நினைப்பது தவறு. உண்மையில் தமிழில் அற்புதமான விஷயங்களை உள்ளடக்கிய பக்திப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பக்தி ரசத்துக்குக் குறைச்சல் இருக்காது, ஆனால் அதேசமயம் ஒவ்வொரு பாடலிலும் ஏதேனும் ஒரு வித்தியாசமான, அழகான சமாசாரம் ஒளிந்திருக்கும். புதுமையான உவமைகள், உதாரணங்கள், வார்த்தை விளையாட்டுகள், புள்ளி விவரங்கள், இறைவனையே உரிமையோடு கேலி செய்கிற வேடிக்கைகள், அவனைக் காதலனாக நினைத்துக்கொண்டு உருகும் நேசம், இக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மைகள், பாடங்கள், எளிமையான தத்துவங்கள்... இப்படிப் படிக்கப் படிக்க நம்மைப் பரவசப்படுத்தும் அளவுக்குப் பல புதையல்கள் பக்தித் தமிழில் உண்டு.
அப்படிப்பட்ட வித்தியாசமான பாடல்களை எளிய விளக்கத்துடன் அறிமுகப்படுத்துகிற தொடர் இது.
1
பிள்ளையார் சுழியோடு தொடங்குவோம். அதுவும், தமிழ் மூதாட்டியாகிய 'ஔவை'யின் பாடலோடு ஆரம்பித்தால் இன்னும் விசேஷம்.
ஔவையார் பிள்ளையாரைப் பாடியிருக்கிறாரா என்ன? அவர் முருகனிடம் சுட்ட பழம் வாங்கித் தின்றுவிட்டுப் பாடியதுதானே பிரபலம்?
தமிழுக்கு முருகன், பிள்ளையார் என்கிற பேதம் ஏது? முருகனைப் பாடிய அதே ஔவை பிள்ளையாரையும் மிக அற்புதமாக வர்ணித்துப் பாடியுள்ளார். அதில் ஒரு பாட்டு நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்தது:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் ... கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா!
'திருவிளையாடல்' படத்தில் வருகிற ஔவையாரிடம் ஒரு கேள்வி கேட்பார்கள்: 'ஔவையே, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என இறைவனை வரிசைப்படுத்திப் பாடு!'
உடனே, சினிமா ஔவையார் இப்படிப் பாடுவார்:
'ஒன்றானவன்,
உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்கான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்,
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
தித்திக்கும் நவ ரச வித்தானவன்,
பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!'
இனிமையான இந்தப் பாடலை எழுதியவர் ஔவையார் அல்ல. கவியரசர் கண்ணதாசன்.
ஆனால் அதற்காக, ஔவையைக் குறைவாக நினைத்துவிடாதீர்கள், கண்ணதாசனுக்கு முன்பாகவே இறைவனை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று வரிசைப்படுத்திப் பாடியிருக்கிறார் ஔவையார். 'விநாயகர் அகவல்' என்ற நூலில் இடம்பெற்றுள்ள பாடல் அது:
'அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நால் இரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்...'
ஒவ்வொரு வரியாக வர்ணனை அழகைக் கவனியுங்கள்:
* அஞ்சு கரம் = பிள்ளையாருக்கு ஐந்து கைகள் (நான்கு கைகள் + ஒரு தும்பிக்கை)
* அங்குச பாசம் = அந்த ஐந்து கைகளில் அவர் தாங்கியிருக்கும் கருவிகள்
* பக்தர்கள் நெஞ்சில் குடி கொண்ட நீல மேனி
* நான்ற வாய் = தொங்கிய வாய், அதாவது தும்பிக்கை
* நால் இரு புயம் = நான்கு பெரிய தோள்கள்
* மூன்று கண்கள் = சிவனுக்குமட்டுமில்லை, பிள்ளையாருக்கும் மூன்று கண்கள் உண்டாம். அவை: அப்ராக்ருத சூர்ய, அப்ராக்ருத சந்த்ர, அப்ராக்ருத அக்னி
* மும்மதச் சுவடு = அவர் யானைமுகன் இல்லையா, மூன்று விதமான மத நீர்கள் பொழிவதால் ஏற்பட்ட சுவடுகள்
* இரண்டு காதுகள்
* ஒரு சிறந்த பொன் முடி
இப்படி ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று ராக்கெட் விடுவதற்கான கவுன்ட் டவுன்போலப் பிள்ளையாரை வர்ணித்துவிட்டு இறுதியாக ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறார் ஔவையார்: 'சொற்பதம் கடந்த'வனே. அதாவது, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அழகனே!
***
காளமேகம் பெரிய கவிஞர். 'இம்' என்று சொல்வதற்கு முன்னால் எழுநூறும் எண்ணூறுமாகப் பாடல்களை எழுதி அடுக்கிவிடுகிற திறமைசாலி.
ஒருமுறை, அவரிடம் யாரோ கேட்டார்கள். 'திருமால் எத்தனை அவதாரங்கள் எடுத்தார்?'
'பத்து.'
'அந்தப் பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டுக்குள் அமைத்துப் பாடமுடியுமா?'
'ஓ, செய்யலாமே!'
'ஆனால் ஒரு நிபந்தனை.'
'என்னது?'
'நாலே நாலு வரிகளுக்குள் திருமாலின் பத்து அவதாரங்களையும் சொல்லிவிடவேண்டும். உங்களால் முடியுமா?'
காளமேகம் நிமிர்ந்து உட்கார்ந்தார். 'எனக்கே சவாலா?' என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 'நாலு வரி எதற்கு? அதில் பாதி போதும், வெறும் இரண்டே வரிகளில் பத்து அவதாரங்களையும் சொல்லிவிடுகிறேன்' என்றார். கடகடவென்று பாட ஆரம்பித்தார்:
மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என்
இச்சையில்உன் சென்மம் எடுக்கவா ... மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்
இந்தப் பாட்டை நேரடியாகப் படித்தால் தலை சுற்றும். வரி வரியாகப் பிரித்துவைத்து ரசிக்கவேண்டும்:
முதல் இரண்டு வரிகளின் பொருள்: உலகமே மெச்சுகின்ற புகழைக் கொண்ட பெருமாளே, ஒரு வெண்பாவில் பாதிக்குள் (அதாவது இரண்டு வரிகளில்) உன்னுடைய அனைத்து அவதாரங்களையும் சொல்லிவிட ஆசை கொண்டேன்.
அடுத்த இரண்டு வரிகளை இப்படிப் பிரிக்கவேண்டும்:
மச்சா = மச்சாவதாரம்
கூர்மா = கூர்மாவதாரம்
கோலா = கோலம், அதாவது பன்றி அல்லது வராக அவதாரம்
சிங்கா = நரசிம்ம அவதாரம்
வாமா = வாமன அவதாரம்
ராமா, ராமா, ராமா = மூன்று ராமர்கள், அதாவது, பரசுராம அவதாரம், தசரதனின் மகனான ராமாவதாரம், பலராம அவதாரம்
கோபாலா = கிருஷ்ணாவதாரம்
மா ஆவாய் = தமிழில் 'மா' என்றால் குதிரை, இனி வரப்போகும் கல்கி அவதாரத்தைக் குறிக்கிறது
இப்போது மீண்டும் அந்தப் பாட்டைப் படித்துப்பாருங்கள். காளமேகம் எப்பேர்ப்பட்ட மேதை என்பது விளங்கும்!
***
நீங்கள் சர்க்கஸ் பார்த்திருக்கிறீர்களா? அந்தரத்தில் தாவித் தாவிப் பிடிக்கும் 'பார் விளையாட்டு'களை ரசிப்பது உண்டா?
கீழே இருந்து பார்க்கும் நமக்கு, அந்த விளையாட்டு பரவசம் தரும். ஜாலியாகக் கைகட்டி ஆனந்தமாக ரசிப்போம். ஆனால் அபத்திரமாக அங்கும் இங்கும் தாவும் அந்த சர்க்கஸ் கலைஞர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் 'விளையாடு'கிறார்கள். இல்லையா?
நிஜ வாழ்க்கையில் நாம் யாரும் அப்படி ரிஸ்க் எடுத்து சர்க்கஸ் விளையாட விரும்புவதில்லை. பாதுகாப்புதான் முக்கியம் என்று நினைக்கிறோம்.
உதாரணமாக, பெரிய வேலையில் இருக்கிற ஒருவர் அதை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு வேலை தேடுவாரா? அல்லது, இன்னொரு வேலை கிடைத்தபிறகு இதை ராஜினாமா செய்வாரா?
வித்தியாசம் புரிகிறதல்லவா? ஒன்றைப் பிடித்தபிறகுதான் இன்னொன்றை விடவேண்டும், அதுதான் புத்திசாலித்தனம். ஆபத்து இல்லாத விளையாட்டு.
அதைவிட பெட்டர், இப்படித் தாவாமலே இருந்துவிடுவது. அங்கும் இங்கும் பறக்காமல் ஒரே இடத்தில் நிலைத்திருப்பது இன்னொருவிதமான சந்தோஷம், நிம்மதி.
ஆனால் அது எல்லோராலும் முடிகிறதா? 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்று மாறி மாறி ஓடிக்கொண்டே இருப்பதுதானே நம் நிலைமை? 'போதும் என்கிற மனம்' எப்போது கிடைக்கும்? அமைதியாக ஓர் இடத்தில் உட்காரும் சுகம் என்றைக்கு வரும்?
நுணுக்கமான இந்த உணர்வைப் பக்தித் தமிழில் பதிவு செய்திருக்கிறார் ஒருவர். இன்றைக்கு அல்ல, பல நூற்றாண்டுகள் முன்பாகவே!
மருள் நீக்கியார், அப்பர், ஆளுடைய அரசர் என்றெல்லாம் பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், 'நாவுக்கு அரசர்' என்பதுதான் இவருக்கு மிகப் பொருத்தமான பெயர். அவர் பாடிய அந்தத் தேவாரப் பாடல்:
உறுகயிறு ஊசல் போல
ஒன்றுவிட்டு ஒன்று பற்றி
மறுகயிறு ஊசல் போல
வந்துவந்து உலவு நெஞ்சம்
பெறுகயிறு ஊசல் போலப்
பிறைபுல்கு சடையாய் பாதத்து
அறுகயிறு ஊசல் ஆனேன்
அதிகை வீரட்டனீரே!
கயிற்றில் கட்டிய ஊசல், அது அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருக்கிறது. அதைப்போல, என்னுடைய நெஞ்சமும் ஒன்றை விட்டு இன்னொன்றைப் பற்றிப் பாய்கிறது, சிறிது நேரம் கழித்து மீண்டும் இங்கே தாவுகிறது, அப்புறம் இன்னொரு பக்கம் ஓடுகிறது, அலைபாய்கிறது.
இப்படி ஆடி ஓடியதால் எனக்கு நிம்மதி கிடைத்ததா? இல்லை, பதற்றம்தான், குழப்பம்தான், எப்போது என்ன நடக்குமோ என்கிற வேதனைதான்.
இந்நிலையில், நான் உன்னுடைய திருவடிகளைச் சரணடைந்தேன். என் மனம் என்கிற ஊசலின் கயிறு அறுந்துவிட்டது. அது கீழே விழுந்தது. அமைதியானது. இப்படி என்னைத் தேற்றி ஆட்கொண்ட இறைவா, திருவதிகையில் குடிகொண்ட வீரட்டனீரே, உமக்கு நன்றி!
இந்தப் பாடலில் வரும் 'திருவதிகை' என்பது ஊரின் பெயர், அங்குள்ள கோயிலின் பெயர் 'வீரட்டானம்', இறைவன் பெயர் 'வீரட்டேசுவரர்'.
***
என். சொக்கன்...
04.01.2012
2
நம்மாழ்வாரின் பாடல் ஒன்று. இதனைத் 'தாய்ப் பாசுரம்' என்று நெகிழ்ச்சியாக அழைப்பார்கள்.
'தாய்ப் பாசுரம்' என்றால், பிறப்பினால் ஆணாக இருக்கிற ஆழ்வார், தன்னை ஒரு பெண்ணாக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ஓர் இளம் பெண்ணின் தாயாகக் கற்பனை செய்துகொண்டு பாடுகிறார். தன்னுடைய மகள் திருமாலின்மீது கொண்டிருக்கும் காதலைப் பற்றிப் பேசுகிறார்.
ஆண் ஆழ்வார் எதற்காகப் பெண் வேடம் போடவேண்டும்? தன்னை ஒரு தந்தையாகவே நினைத்துக்கொண்டு பாடலாமே?
நிச்சயமாகப் பாடலாம். ஆனால் மகளின் காதலைக் கண்டு ஒரு தாய் கொள்ளும் பரிதவிப்பு வேறுவிதமானது. அந்த உணர்வுகளை இந்தப் பாசுரத்தில் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் நம்மாழ்வார்.
ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடி நாடி 'நரசிங்கா' என்று
வாடி வாடும் இவ் வாள்நுதலே
'நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்' என்றும் 'ஆழ்வார்கள் அருளிச் செயல்' என்றும் அழைக்கப்படுகிற இந்தத் தொகுப்பு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. ஆனாலும், இப்போது படித்தாலும் நேரடியாகப் பொருள் புரியக்கூடிய எளிமையான சொற்களும் வரிக்கு வரி பொங்கி வழிகிற பக்திரசமும்தான் அதன் மிகப் பெரிய பலங்கள்.
உதாரணமாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். இதனைச் சரியான முறையில் வார்த்தை பிரித்துப் படித்தால், 'நரசிம்ம அவதாரம் எடுத்த திருமாலே, உன்னை எண்ணி என்னுடைய மகள் வாடுகிறாள், எந்நேரமும் உன் புகழைப் பாடி ஆடிக் கண்ணீர் சிந்துகிறாள், பார்க்கும் இடங்களிலெல்லாம் உன்னைத் தேடித் தேடி அலைகிறாள்' என்கிற பொருள் யாருக்கும் சுலபமாக விளங்கிவிடும்.
ஆனால் நாம் இங்கே கவனிக்கவேண்டியது, அந்த நேரடிப் பொருளைத் தாண்டி நம்மாழ்வார் ஒளித்துவைத்திருக்கிற நுணுக்கமான செய்திகள், சுவையான தகவல்கள்.
முதலில், திருமாலை ஏன் 'நரசிம்மா' என்று அழைக்கவேண்டும்? பத்து அவதாரங்கள் எடுத்த இறைவன் அவன், அதில் நரசிம்மாவதாரத்துக்குமட்டும் என்ன விசேஷம்? ராமா, கிருஷ்ணா, வாமனா என்றெல்லாம் அழைத்தால் ஆகாதா?
திருமாலை எந்தப் பெயர் சொல்லியும் அழைக்கலாம். ஆனால் இந்த இடத்தில் 'நரசிம்மா' என்ற பெயர்தான் சரியாகப் பொருந்தும் என்று நம்மாழ்வாருக்குத் தெரிந்திருக்கிறது.
யோசித்துப்பாருங்கள், எந்தமாதிரி சூழ்நிலையில் நரசிம்மாவதாரம் நிகழ்கிறது?
இரணியன் தன்னுடைய மகன் பிரகலாதனைக் கொலையே செய்துவிடும் அளவுக்குக் கோபத்தில் துடிக்கிறான். 'உன்னுடைய இறைவன் எங்கே இருக்கிறான்? சீக்கிரம் சொல்!' என்று கர்ஜிக்கிறான். இப்போது அந்தக் கடவுள் தோன்றாவிட்டால், பிரகலாதனின் உயிருக்கே ஆபத்து.
அப்போது, தூணை உடைத்துக்கொண்டு நரசிம்மம் வெளிப்படுகிறது. இரணியனை வதம் செய்து பிரகலாதனைக் காப்பாற்றுகிறது.
'இறைவன் எங்கே?' என்று பிரகலாதன் எங்கேயும் தேடவில்லை, அலையவில்லை, வருந்தவில்லை, அவனுக்குத் தேவை ஏற்பட்டபோது சட்டென்று அங்கே தோன்றினார் திருமால், அதாவது நரசிம்மர்.
'அந்தப் பிரகலாதனுடன் ஒப்பிடும்போது, என் மகளுடைய பக்தி எந்த அளவு குறைந்துவிட்டது?' என்று மறைமுகமாகக் கேட்கிறார் நம்மாழ்வார். 'அவனுக்குமட்டும் சட்டென்று காட்சி கொடுத்த நீ என்னுடைய குழந்தையை இப்படி அலையவைக்கிறாயே, நியாயமா? சொல் நரசிம்மா!'
அடுத்து, 'ஆடி ஆடி', 'பாடிப் பாடி', 'நாடி நாடி' என்று ஒவ்வொரு வரியிலும் சொற்கள் அடுக்கப்பட்டிருக்கும் விதத்தைக் கவனியுங்கள். இப்படி நம்மாழ்வார் ஒரே வார்த்தையைத் திரும்பவும் இன்னொருமுறை சொல்வது எதற்காக? கூடுதல் அழுத்தத்துக்காகவா?
உண்மைதான். ஆனால் அதைக்காட்டிலும் நுணுக்கமான இன்னொரு காரணமும் சொல்வார்கள்.
'ஆடி ஆடி' என்று ஒருமுறை சொல்லிப் பாருங்கள். முதல் 'ஆடி' பலமாக ஒலிக்கும், இரண்டாவது 'ஆடி' லேசாகச் சுருதி குறைந்து கேட்கும். 'பாடிப் பாடி', 'நாடி நாடி' எல்லாமே இப்படிதான்.
அதாவது, ஆரம்பத்தில் நீ கிடைத்துவிடுவாய் என்கிற நம்பிக்கையில் அவள் உற்சாகமாக ஆடினாள், ஆனால் நீ உடனே வராதவுடன் கொஞ்சம் தெம்பு இறங்கிவிட்டது,