Bakthi Thamizh - Part 3
By N. Chokkan
()
About this ebook
Reviews for Bakthi Thamizh - Part 3
0 ratings0 reviews
Book preview
Bakthi Thamizh - Part 3 - N. Chokkan
http://www.pustaka.co.in
பக்தித் தமிழ் - பாகம் 3
Bakthi Thamizh - Part 3
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 57
அத்தியாயம் 58
அத்தியாயம் 59
அத்தியாயம் 60
அத்தியாயம் 61
அத்தியாயம் 62
அத்தியாயம் 63
அத்தியாயம் 64
அத்தியாயம் 65
அத்தியாயம் 66
அத்தியாயம் 67
அத்தியாயம் 68
அத்தியாயம் 69
அத்தியாயம் 70
அத்தியாயம் 71
அத்தியாயம் 72
அத்தியாயம் 73
அத்தியாயம் 74
அத்தியாயம் 75
51
முதலாமவர் பெயர், பொய்கையாழ்வார். காஞ்சியில் பிறந்தவர்.
இரண்டாமவர் பெயர், பூதத்தாழ்வார். மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
மூன்றாமவர் பெயர், பேயாழ்வார். மயிலையில் பிறந்தவர்.
மூவருக்கும் ஒற்றுமை, திருமாலின் புகழைப் பாடியவர்கள், வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று இறைவனின் பெருமையைச் சொல்லி மகிழ்ந்தவர்கள்.
இவர்கள் மூவரும், ஒருநாள் திருக்கோயிலூர் சென்றிருந்தார்கள். அங்கே அன்றைக்கு நல்ல மழை.
பொய்கையாழ்வார் ஓர் ஆசிரமத்துக்குச் சென்றார். ஒரு சிறு அறையில் ஒதுங்கினார். மழை தொடர்ந்து பெய்ததால், அங்கேயே படுத்துக்கொண்டார்.
பின்னர் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். மழைக்கு ஒதுங்க இடம் கேட்டார்.
படுத்திருந்த பொய்கையாழ்வார் அமர்ந்துகொண்டார். அருகே பூதத்தாழ்வாரும் அமர்ந்தார்.
பின்னர் அங்கே பேயாழ்வார் வந்தார். மழைக்கு ஒதுங்க இடம் கேட்டார்.
அமர்ந்திருந்த பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் எழுந்துகொண்டார்கள். அருகே பேயாழ்வாரும் நின்றார்.
அந்தச் சிறிய அறையில், இப்போது அவர்கள் மூவரும் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தார்கள். அவர்களுடன் இன்னொருவரும் இருப்பதுபோல் உணர்ந்தார்கள்.
யார் அவர்? எப்படிக் கண்டறிவது?
‘விளக்கேற்றிப் பார்க்கலாம்’ என்றார் பொய்கையாழ்வார். அவரே முதல் விளக்கைப் பாடலாகத் தந்தார்:
வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று!
இந்த உலகமே ஒரு பெரிய விளக்காக, அதில் உள்ள கடலே நெய்யாக, வெப்பம் நிறைந்த சூரியனே விளக்காகச் செய்து, இறைவனின் திருவடிக்குச் சொற்களால் மாலை சூட்டினேன். அவன் என் துன்பக் கடலை நீக்கி அருள் செய்வான்!
அடுத்து, பூதத்தாழ்வார் ஒரு விளக்கைப் பாடினார்:
அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா,
இன்பு உருகு சிந்தை இடுதிரியா, என்பு உருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
என்னுடைய அன்பே விளக்காக, இறைவன்மீது உள்ள ஆர்வமே நெய்யாக, அவனை எண்ணி உருகும் சிந்தனைகளே திரியாகச் செய்து, உடல் உருக ஒரு ஞான விளக்கு ஏற்றிவைத்தேன், சிறந்த தமிழால் அந்த நாரணனைப் போற்றினேன்.
இப்போது, பேயாழ்வார் பாடினார்:
திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்,
என் ஆழிவண்ணன்பால் இன்று
கடல்வண்ணனான எம்பெருமானைக் கண்டேன், பிராட்டியான திருமகளைக் கண்டேன், அவனது அழகிய திருமேனியைக் கண்டேன், சூரியன்போல் திகழும் சிறப்பைக் கண்டேன், அவனுடைய திருக்கைகளைக் கண்டேன், போரில் வீரம் காட்டும் சக்ராயுதம், வலம்புரிச் சங்கைக் கண்டேன். இன்று நான் கண்ட திருக்காட்சிகள் இவை!
திருக்கோயிலூரில் பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் இறைவனைக் கண்டு மகிழ்ந்து பாடிய பாடல்கள்’திருவந்தாதி’ என அழைக்கப்படுகின்றன. எளிய மொழியில் இறைவனை இனிமையாகப் பாடிய இம்மூவரை’முதலாழ்வார்கள்’ என்று வணங்கிப் போற்றுகிறது வைணவ மரபு.
அன்னை வயிற்றில் இருக்கும்போதே அரங்கனை வணங்கத் தொடங்கிவிடவேண்டும் என்கிறார் பொய்கையாழ்வார்:
ஒன்றும் மறந்தறியேன், ஓதநீர் வண்ணனைநான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேன்,
திருவரங்க மேயான் திசை
இந்தப் பூமியில் பிறக்க நேரும்போது, கருப்பையினுள் வசிக்கும்பொழுதே திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நோக்கிக் கை தொழுதேன், அவனை இன்று நான் மறந்துவிடுவேனா? மறக்கமாட்டேன். என்றைக்கும் அவனையே எண்ணியிருப்பேன்!
திருமாலின் பல்வேறு அவதாரங்களை ஒரே பாட்டில் வைத்துச் சொல்கிறார் பூதத்தாழ்வார்:
கொண்டது உலகம் குறளுருவாய், கோளரியாய்
ஒண்திறலோன் மார்வத்து உகிர்வைத்தது, உண்டதுவும்
தான்கடந்த ஏழுஉலகே, தாமரைக்கண் மால் ஒருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு
விண்ணையும் விஞ்சும் அளவு பெருமை கொண்ட தாமரைக்கண் திருமால் செய்த செயல்கள் என்னென்ன தெரியுமா? வாமனனாக வந்து உலகை அளந்து பெற்றான், நரசிம்ம உருவெடுத்து இரணியனின் மார்பில் நகம் வைத்துக் கிழித்தான், தான் பெற்றுக்கொண்ட ஏழு உலகங்களையும் பிரளயத்தின்போது உண்டு, தன் வயிற்றில் வைத்துக் காத்தான்!
பாற்கடலில் பள்ளிகொள்ளும் இறைவன் பக்தர்களின் உள்ளத்திலும் தங்கி அருள்வான் என்கிறார் பேயாழ்வார்:
பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிகளாலே அணிந்து, அங்கு
அனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனம்தன் அணைக்கிடக்கும் வந்து
அலைகள் மேலும் கீழும் மோத, மணிகள் நிறைந்த தலையைத் தாழ்த்தி இறைவனுக்குப் படுக்கை அமைத்துத் தருகிற ஆதிசேஷன்மீது பள்ளிகொள்கிறவன் திருமால். என் மனத்திலும் அவன் வந்து தங்குகிறான்!
இறைவனின் தன்மை எப்படிப்பட்டது என்று விவரிக்கிறார் பொய்கையாழ்வார்:
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே,
தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர், தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே,
அவ்வண்ணம் ஆழியானாம்
எம்பெருமானைப் பக்தர்கள் எந்த உருவில் காண விரும்புகிறார்களோ, அந்த உருவில் அவன் திகழ்கிறான். பக்தர்கள் எந்தப் பெயர் சொல்லி அவனை அழைக்க விரும்புகிறார்களோ, அந்தப் பெயரே அவனுக்கு விருப்பம். பக்தர்கள் எந்தவிதமாக அவனைச் சிந்தித்துப் போற்றுகிறார்களோ, அந்தவிதமாகவே அவன் எழுந்தருளுகிறான்.
திருமாலின் பெயரைச் சொல்வது கடமை என்கிறார் பூதத்தாழ்வார்:
திருமங்கை நின்றருளும் தெய்வம் நாவாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்
நாற்றிசையும், கேட்டீரே நாம்?
திருமகளை மார்பில் தாங்கிய தெய்வமாகிய திருமாலை நாவினால் வாழ்த்துகின்ற பணியைத் தொடர்ந்து செய்வோம், உரிமையுடன் அவனுடைய பாதங்களைத் தொழுவோம், நீண்ட திருக்கைகளையுடைய இறைவனின் பெயரைப் பாடுவோம், நான்கு திசைகளிலும் அவன் பெயர் ஒலிக்கட்டும்.
இறைவன் பல அவதாரங்களில் செய்த லீலைகளைக் குறிப்பிட்டு நெகிழ்கிறார் பேயாழ்வார்:
நீயன்றே நீரேற்று உலகம் அடியளந்தாய்!
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய்! நீயன்றே
மாவாய் உரம் பிளந்து, மாமருதினூடுபோய்
தேவாசுரம் பொருதாய் செற்று!
பெருமானே, மகாபலியிடம் உலகத்தைப் பெற்று அதனை அளந்தவன் நீயல்லவா! கண்ணனாக வந்து பசுக்களை மேய்த்தவன் நீயல்லவா! குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனின் வாயைப் பிளந்தவன் நீயல்லவா! பெரிய மருத மரங்களின் இடையே போய் அவற்றை முறித்தவன் நீயல்லவா! தேவர்கள், அசுரர்கள் இடையிலான யுத்தத்தில் தேவர்கள் வெல்ல உதவிய வீரன் நீயல்லவா!
திருமாலைச் சிந்தித்தவர்கள் பெறும் நன்மைகளைச் சொல்கிறார் பொய்கையாழ்வார்:
காப்பு உன்னை உன்னக் கழியும், அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும், மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே, நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி
திருமாலே, உன்னை எண்ணினால் தடைகள் விலகும், அருவினைகளின் பந்தம் அவிழ்ந்தொழியும், மூப்பு வராது, உன்னை வந்தனம் செய்து போற்றுபவர்களுக்கு நல்வழி தானே தெரியும்!
இறைவனைக் காண எப்படிப்பட்ட தவம் செய்யவேண்டும் என்று சொல்கிறார் பூதத்தாழ்வார்:
நவின்று உரைத்த நாவலர்கள் நாள்மலர் கொண்டுஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல்! பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்புஅரிய மேக மணிவண்ணனை, யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று!
இறைவன் பெயரைக் கவிஞர்கள் சொல்லிச் சொல்லி, அன்றைக்குப் பூத்த மலர்களைத் தூவி வணங்குகிறார்கள். இதனால் அவர்கள் பெற்ற பயன் என்ன? உடலை வருத்தித் தவம் செய்தால் அவனைக் கண்டுவிட இயலுமா? மேகம் போன்ற, நீலமணி போன்ற வண்ணம் கொண்ட அந்தப் பெருமானை நான் எந்தத் தவத்தால் காண்பேன்? அவனே மனம் இரங்கி எனக்குக் காட்சி தந்தால்தான் உண்டு!
இறைவனைக் காண்பது எளிய விஷயம்தான். நினைத்தாலே போதும், அவன் காட்சி தருவான் என்கிறார் பேயாழ்வார்:
நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைபெற்று என்
நெஞ்சமே பேசாய், நினைக்குங்கால் நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
ஓராது நிற்பது உணர்வு
என் நெஞ்சமே, திருமாலை நெஞ்சால் நினைப்பது அரிய விஷயம்தான். ஆனாலும், நீ அவன் புகழைத் தொடர்ந்து பேசிக்கொண்டிரு.
ஒருமுறை நினைத்தாலே அந்த நெஞ்சத்திலிருந்து விலகாமல் நிற்பவன் நம்பெருமான். நீ எப்போதும் அவனையே எண்ணியிருப்பாய்!
பொய்கையாழ்வாரும் இதையே தன் மனத்துக்குச் சொல்கிறார்:
ஓரடியும் சாடு உதைத்த ஒண்மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என் நெஞ்சே, ஓரடியில்
தாயவனை, கேசவனை, தண்துழாய் மாலைசேர்
மாயவனையே மனத்து வை
என் நெஞ்சே, ஒரே காலடியில் இந்த உலகத்தை அளந்தவனை, கேசவனை, குளிர்ச்சியான துளசி மாலை அணிந்த மாயவனை மனத்தில் வை!
அப்படிச் செய்தால், உலகத்தை அளந்த அவனுடைய ஓரடியைக் காணலாம், குழந்தைக் கண்ணனைத் தாக்குவதற்காகச் சக்கரத்தின் வடிவில் ஓர் அரக்கன் வந்தபோது, அந்தச் சக்கரம் உடையும்படி உதைத்த அழகிய பூப்போன்ற சிவந்த அடியைக் காணலாம், இந்த இரண்டு திருவடிகளையும் நாம் கண்டு வணங்கலாம்!
இறைவன்மீது தான் வைத்துள்ள அன்பு அளவற்றது என்கிறார் பூதத்தாழ்வார்:
மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு
மேலா! வியன்துழாய்க் கண்ணியனே! மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
அளவு அன்றால் யானுடைய அன்பு
திருமாலே, நெடியவனே, கண்ணனே, விண்ணவர்க்கெல்லாம் மேலானவனே, அழகிய துளசி மாலையை அணிந்தவனே, முன்பு ஒரு கன்றை வீசி விளாங்காயை உதிர்த்தவனே, உன்மேல் நான் வைத்திருக்கிற அன்புக்கு அளவில்லை!
எம்பெருமானின் பிராட்டியான திருமகளின் பெருமையைச் சொல்லி மூன்றாம் திருவந்தாதியை நிறைவு செய்கிறார் பேயாழ்வார்:
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான், தண்துழாய்த்
தார்வாழ் வரைமார்பன்தான் முயங்கும் கார்ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண்தாமரை நெடும்கண்
தேன் அமரும் பூமேல் திரு
சக்ராயுதத்தை ஏந்தியவன், குளிர்ச்சியான துளசி மாலை விளங்கும் மலை போன்ற மார்பை உடையவனால் விரும்பப்படுகிறவள், மேகங்கள் நிறைந்த வானத்திலே மின்னல் அடிப்பதுபோல் அழகிய தாமரை போன்ற நீண்ட திருக்கண்களை உடையவள், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் வசிப்பவள், அந்தத் திருமகளைச் சரணம் அடைந்து வணங்குவோம்!
முதலாழ்வார்களின் பாடல்கள் அனைத்தும் தனிச்சுவை கொண்டவை. அவற்றில் வெளிப்படும் ஆழமான அன்பும் பக்தியும் அற்புதமானவை!
***
என். சொக்கன்...
01.06.2015
52
அவர் ஒரு சிவயோகியார்.
நந்தியின் மாணவர், சிவபெருமான்மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
அவர் அகத்தியரைச் சந்திப்பதற்காகப் பொதிகை மலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். வழியிலுள்ள சிவத்தலங்கள் அனைத்திலும் இறைவனையும் இறைவியையும் தரிசித்து நெகிழ்ந்தார்.
ஒன்று அவன், தானே இரண்டு, அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டே!
இந்த உலகுக்கெல்லாம் ஒரு பொருள், அந்தச் சிவபெருமான்.
அவனே சிவன், சக்தி என இரு பொருள்களாகவும் இருக்கிறான். ஆண், பெண், அஃறிணைப் பொருள்கள் என மூன்றிலும் அவன் உயிராக நிற்கிறான், அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கையும் உணர்த்துகிறான் ஐம்புலன்களை வென்ற அவன்.
ஆறு ஆதாரங்களிலும் அந்தச் சிவன் விரிந்துள்ளான், ஏழாவது இடமான சகசிரதளத்தில் விளங்குகிறான், நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டுப் பொருள்களிலும் உணர்வோடு கலந்திருக்கிறான். அவனை நாம் வணங்குவோம்!
ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டுவந்த அந்தச் சிவயோகியார் திருவாவடுதுறைக்கு வந்திருந்தார். அங்கே சிவபெருமானைத் தரிசித்து வணங்கினார்.
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை,
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை,
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே!
சிவனுக்கு இணையான தெய்வம் தேடினாலும் கிடைக்காது. அவனோடு ஒப்பிட்டுப் பேசக்கூடிய யாரும் இங்கே இல்லை. அவனுடைய செந்நிறச் சடைமுடியின் பொன்னொளி இந்த உலகைக் கடந்து வீசும், அந்தத் தாமரையானை வணங்குவோம்!
திருவாவடுதுறையிலிருந்து கிளம்ப எண்ணியபோது, அவருக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு. இந்த ஊரை விட்டுச் செல்லக்கூடாது என்று அவர் மனம் சொன்னது.
அந்த நேரத்தில் அவர் ஒரு விநோதமான