Thavippu
By Gnani
()
About this ebook
ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.
பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.
Read more from Gnani
Ayogiyargalum Muttalgalum Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsBalloon(Nadagam) Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5O! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsNarendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsSandaikarigal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsSankarachari Yar? Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thavippu
Related ebooks
Nathiyin Pizhaiyandru Narumpunal Inmai Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthapadatha Theerpugal Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Kathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsNermai Oru Kuttrama? Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Iniyavale... Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Indiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsArabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsSaviyil Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsSirakugal Murivathillai Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nerathil Ival Rating: 0 out of 5 stars0 ratingsJannal Kaithigal Rating: 5 out of 5 stars5/5Annai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiyai Meeri Nindru Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Jayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsSivamalar Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsKaliyan Mathavu Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thavippu
0 ratings0 reviews
Book preview
Thavippu - Gnani
http://www.pustaka.co.in
தவிப்பு
Thavippu
Author:
ஞாநி
Gnani
For more books
http://www.pustaka.co.in/home/author/tamil/gnani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
இந்நூல்
தமிழுக்காக இந்தியாவையோ இந்தியாவுக்காகத் தமிழையோ விட்டுத் தர விரும்பாமல் தவித்த சென்ற தலைமுறைத் தலைவர் ம.பொ.சி. யின் நினைவாக
இன்றும் தொடரும் தவிப்பு......
'தவிப்பு' தொடர்கதையாக 1998 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 'ஆனந்த விகடன்' இதழில் வெளியாயிற்று. சுமார் பத்தாண்டுகள் கழித்து இந்த நூலுக்கான அச்சு நகல்களை இப்போது வாசித்தபோது, அயர்ச்சியும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது.
அயர்ச்சிக்குக் காரணம் நம் சமூகத்தின் அரசியல் முதல் தனி மனித உறவுகள் வரை ஒவ்வொன்றைப் பற்றியும் இந்தக் கதையில் நான் பகிர்ந்து கொண்டிருக்கும் என் பார்வை இன்னமும் அர்த்தமுள்ளதாக இருப்பதுதான். மகிழ்ச்சிக்குக் காரணம் இப்படிப்பட்ட பார்வையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள 'ஆனந்த விகடன்' எனக்குத் தொடர்ந்து இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்ற மன நிறைவுதான்.
உண்மையில் இந்தக் கதையை நான் முதலில் எழுதியது 1998-ல் அல்ல. 1990-ல்! என்னிடம் தொடர்ந்து அன்பு பாராட்டி வருபவர்களில் ஒருவரான 'ஆனந்த விகடன்' சேர்மன் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், 'தேச ஒருமைப்பாடு பற்றி சிறுகதை எழுத முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது. 'கதை எழுதும் முன்பாக தேச ஒருமைப்பாடு என்றால் என்ன என்பது பற்றி எனக்கு இருக்கும் கோட்பாட்டை உங்களுடன் விவாதிக்க வேண்டும்' என்றேன்.
'இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் தமது தனித்தன்மையை இழக்காமல் சமத்துவத்துடன் ஒன்று கூடி வாழ்வதே தேச ஒருமைப்பாடு; அதாவது தேசிய இனங்களின் சமத்துவக் கூட்டமைப்பே இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்றே நான் கருதுகிறேன்' என்று சொன்னேன். 'ஆனால், தற்போது தேசிய இனங்களிடையே சமத்துவம் இல்லை; தனி அடையாளங்களை மறுக்கிற மனோபாவம் இருக்கிறது. இந்த அணுகுமுறையே உண்மையில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது' என்றும் நான் சொன்னேன்.
'இந்தக் கருத்தை வைத்துக் கொண்டே கதை எழுத முயற்சியுங்களேன்' என்றார் அவர்.
'தேசம் என்பது வரைபடமல்ல!' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதித் தந்தேன். அவர் அதைப் படித்து விட்டு, 'கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை ஒரே இதழில் வெளியிடுவதானால், முழு விகடனும் தேவைப்படும்; தொடராக வெளியிட்டால், நான்கு வாரங்களில் முடிந்துவிடும். எனவே, இதை 26 வாரங்களாவது வெளியிட ஏற்றாற்போல விரித்து எழுதிக் கொடுங்களேன்' என்றார்.
17 வருடங்களில் இதழியல் எவ்வளவு மாறிவிட்டது பாருங்கள். இன்று, 26 வாரம் வரும் நீளத்துக்குக் கதை எழுதினால், இரண்டே பக்கத்தில் வெளியிட ஏற்ற மாதிரி சுருக்கிச் சின்னதாகத் தரச்சொல்லும் அணுகுமுறை வந்து விட்டது!
மேற்படி உரையாடல் நடந்த சில வாரங்களில், நான் அன்றைய விகடன் வெளியீடான 'ஜூனியர் போஸ்ட்' டின் பொறுப்பாசிரியர் பணியில் அமர்ந்தேன். ஓராண்டுக்குப் பின் அதிலிருந்து விலகி, தொலைக்காட்சித் தொடர்கள், செய்திப்படங்கள் தயாரிப்பு, 'தினகரன்' ஏட்டின் டி.வி. உலகம் ஆசிரியர் பணி, அடுத்து 'தினமணி' நாளோட்டின் இதழாசிரியர் பணி என்று வெவ்வேறு வேலைகளில் அடுத்த ஏழாண்டுகள் மூழ்கிப் போனேன்.
அந்த ஏழாண்டுகளில் ஆசிரியரோடு பேச நேர்ந்த ஒவ்வொரு முறையும் ஞாபகமாக 'அந்தக் கதையை எழுதிவிட்டீர்களா?' என்று கேட்பார். 1998 தொடக்கத்தில் அவரைச் சந்தித்தபோது, 'தேதி குறித்தால்தான் நீங்கள் எழுதுவீர்கள். இன்னும் மூன்று மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் தொடங்குகிறோம்' என்றார். தொடங்கிவிட்டேன்.
விரித்து எழுதும் போது பல புதிய பாத்திரங்கள் தாங்களாகவே கதைக்குள் வந்துவிட்டார்கள். சுபாஷிணி, உமா, முரளி சண்முகவேலன் என்று பலரும் அப்படி வந்தவர்கள்தான். என் வாழ்க்கையின் சில முக்கிய தருணங்களைக் கழித்த செங்கல்பட்டு, மயிலாப்பூர் இரண்டும் உள்ளே வந்ததும் அப்படித்தான்.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அசாம், பஞ்சாப் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர் கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றைத் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன். கதையின் கடைசிப் பகுதியில் விஜயனுக்கு வேலு அனுப்பும் கடிதத்தில், ஈழப்போராளிகளில் ஒருவரான கோவிந்தன், 1985-ல் எழுதிய 'புதியதோர் உலகம்' நூலின் இறுதிப் பகுதியிலிருந்து சில வரிகளை, கருத்தைப் பிரதிபலிக்கிறேன். தமிழ்ச் சூழலுக்கேற்ப எழுதத் தேவைப்பட்ட பல தகவல்கள் ம.பொ.சி, முரசொலி மாறன், பழ.நெடுமாறன் ஆகியோரின் நூல்களிலிருந்து கிடைத்தன.
விகடனில் தொடராக இந்தக் கதை வெளியான போது, எனக்குக் கிடைத்த அனுபவங்களில் முக்கியமாகக் குறிப்பிட விரும்புபவை இரண்டு. ஒன்று, வழக்கமாகப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதும் பழக்கம் இல்லாத பல வாசகர்கள் இதற்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அரசியல் பற்றியும், பெண்கள் நிலை பற்றியும், ஆழ்ந்த அக்கறையும் கவலையும் தெரிவித்த கடிதங்கள் அவை.
இரண்டாவது முக்கியச் செய்தி, அரசியல் பிரச்சனைகள் சார்ந்து எழுதப்பட்ட இந்தக் கதையை நிறைய பெண்கள் கவனத்தோடு படித்தார்கள். 'இந்த மாதிரிக் கதைகளைப் பெண் வாசகர்கள் அதிகம் விரும்புவதில்லை என்று நிலவிவரும் கருத்து தவறானது' என்ற என் கருத்தை இது மெய்ப்பித்தது.
இந்தத் தொடர்கதை வெளியான பின்னர், விகடன் சார்பில் கார்கில் பகுதிக்கு யுத்த நேரத்தில் சென்று கண்டு எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பஞ்சாப், அசாம் பிரச்னைகளைப் போலவே காஷ்மீர் பிரச்னையும் டெல்லி ஆட்சியாளர்களின் தவறுகளாலேயே பிரும்மாண்டமாகிக்கொண்டே போனது என்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது.
'தவிப்பு' வெளியான பின்னர், டெல்லி அரசியல், மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டணி அரசியலாக மாறியிருக்கிறது. ஆனாலும், எல்லா தேசிய இனங்களையும் சமமாக மதிக்கும் பார்வை இன்னும் வரவில்லை. மாநில சுயாட்சி பேசுபவர்கள் கூட சட்டீஸ்கர் முதல் மணிப்பூர் வரை ஆதிவாசிகளையும் விளிம்புநிலை மக்களையும் டெல்லி ஆட்சி நடத்தும் விதம் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை.
கனமான, சிக்கலான, ஆழமான விஷயங்களை எளிய மொழியில் வெகுஜன வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற என் மாறாத நம்பிக்கைக்கு இன்னொரு வாய்ப்பு அளித்த விகடன் சேர்மனுக்கு, இந்த நாவல், விகடன் பிரசுரமாக வெளிவரும் இந்தத் தருணத்தில் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
என் கதைகளின் கலைத் தன்மை பற்றி மாறுபட்ட கருத்து கொண்டுள்ள போதும், தொடரை எழுதும் வேளையில் கூடவே நான் மேற்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு உள்ளிட்ட பல சுமைகளைப் பகிர்ந்து கொண்ட என் சிநேகிதி பத்மாவுக்கும், என்றேனும் ஒரு நாள் என் கதைகளைப் படிப்பான் அல்லது படமாக்குவான் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிற என் மகன் மனுஷ் நந்தனுக்கும், என் வேலைச்சுமையால் நான் கொடுத்த தொல்லைகளைச் சகித்தமைக்காக நன்றி.
'தவிப்பு' விகடனில் வெளிவந்து பல வருடங்-களுக்குப் பிறகும் எங்கேனும் சந்திக்கும் ஏதோ ஒரு வாசகர், 'ஆனந்திக்கு அந்த முடிவு-தான் வாய்த்திருக்க வேண்டுமா?' என்று கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார். இது நமக்கு வெளியே இருக்கும் அரசியல் பற்றிய நாவல் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கும் வாழ்க்கையின் அரசியல் பற்றியுமான நாவல். உங்கள் தயக்கமற்ற விமர்சனம், என்னைத் தொடர்ந்து இயங்க செழுமைப்படுத்தும்.
அன்புடன்,
ஞாநி
gnanisankaran@gmail.com
சென்னை-78,
ஆகஸ்ட், 2007.
1
அந்த அழைப்பும் அந்தச் செய்தியும் விஜயனுக்கு ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன. அப்போது அவன் தொலைக்காட்சி நிலையத்தின் ஹைபேண்ட் வீடியோ எடிட்டிங் அறையில் இருந்தான். தேவராட்டக் கலைஞர் குமாரராமன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கு ஆட்ட அசைவுகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் முயற்சி செய்து பார்த்து விட்டுச் சரியாக வரவில்லை என்பதால், வெட்கப்பட்டுப் புன்னகைத்த இடத்தில் ஷாட்டை வெட்டும்படி எடிட்டர் சந்தோஷிடம் சொன்னான் விஜயன். அப்போதுதான் கடைநிலை ஊழியன் ஹரி அறைக்கு வந்தான்.
என்ன, திரும்பவும் விஜூ சாருக்கு டி.ஜி., போன் பண்ணிட்டாரா...?
என்றான் சந்தோஷ்.
அதுமட்டுமல்ல...விஜூ சாரோட ஊர்ல குண்டு வெடிச்சிருக்கு!
என்றான் ஹரி.
விஜயன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
தமிழ்நாட்டிலா.!? எந்த ஊர்ல ஹரி?
சென்னைக்குப் பக்கத்துல... எனக்குப் பேர் சரியா சொல்ல வரல...
விஜயன் எழுந்து சந்தோஷிடம், இதுக்கு அடுத்து மு.ராமசாமி பேசறது வரணும். மூணாவது டேப் ஆரம்பத்துல இருக்கு. போட்டு வெச்சுடு. அப்புறமா வரேன்...
என்றபடி வெளியேறினான்.
நிலையத்தின் நீண்ட வராந்தாவில் நடக்கும் போது, எதிரே வந்தவர்களுக்கு பதில் சிரிப்பை வழங்கும் மனநிலையில் விஜயன் இல்லை. 'தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பா...?' என்ற கவலையே தலையை ஆக்கிரமித்திருந்தது. முதலில் செய்தி ஆசிரியர் அறைக்குப் போய் விசாரிக்க வேண்டும். பிறகு டி.ஜியைப் பார்த்துக் கொள்ளலாம். டி.ஜி என்கிற டைரக்டர் ஜெனரல் அழைப்பதென்பது நிலையத்தின் வேறு ஊழியர்களுக்கு வேண்டுமானால் அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். விஜயனுக்குப் பழகிப் போய்விட்டது. பல நேரங்களில் வெட்டி அரட்டைக்காகக் கூப்பிடுவார்.
அரசாங்க உத்தியோக அடுக்குகளின்படி விஜயனின் புரோக்ராம் எக்ஸிகியூட்டிவ் பதவி டி.ஜியிலிருந்து பல அடுக்குகள் கீழே இருந்த போதும் விஜயன், நிலையத்தின் செல்லப்பிள்ளை. நிலையத்துக்கு மட்டுமல்ல... நேயர்களுக்கும்தான். ஞாயிறு காலை எட்டு மணி என்றால், எல்லா நகரங்களிலும் டி.வி. பெட்டி முன்னால் விஜயனுக்காகக் காத்திருப்பார்கள். நேயர்களின் கேள்விகளுக்கு அசடு வழியாமல், அதே சமயம் நகைச்சுவை உணர்வோடு புத்திசாலித்தனமாகப் பதிலளிப்பது விஜயனின் தனித்திறமை. ஆங்கில நிகழ்ச்சி என்றாலும் ஆங்காங்கே தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி என்று ஓரிரு வாக்கியங்களைக் கலப்பதும் விஜயனுக்கு ரசிகர்களைத் தேடித் தந்திருந்தது.
அசாமிலிருந்து ஒரு நேயர் கேட்டதற்காக, ஒரு முறை விஜயன் அசாமிய மொழி தெரிந்த ஆளைத் தேடிப் பிடித்து, சில வாக்கியங்களை எழுதி வாங்கி, மனப்பாடம் செய்து நிகழ்ச்சியில் பேசினான். இந்த மாதிரி ஏதாவது செய்து பார்க்கிற சுவாரசியம் தான் அவனையும் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நேயர் கேள்விகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருக்கிறது.
இந்தியாவில் விஜயன் போய் கொஞ்சநாளாவது வேலை செய்யாத டி.வி. நிலையமே இல்லை. யாராவது போக விரும்பாவிட்டால், நான் அங்கே போகிறேனே என்று ஆர்டரைக் கேட்டு வாங்கிக் கொண்டு போய்விடுவான். கல்யாணம் ஆகவில்லை.
விஜயனிடம் நேயர்கள் உட்பட யாரும் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் வந்துவிடும். 'ஏன் கல்யாணம் செய்யவில்லை...? எப்போது கல்யாணம்...?' என்ற கேள்விகளுக்கு மட்டும் ஒரு பதிலும் வராது! அவனுடைய பிரபலமான புன்னகையைப் பதிலாக வழங்கிவிட்டு, அடுத்த விஷயத்துக்குப் போய் விடுவான். அந்தக் கேள்விகளுக்கான பதில் அவனுக்கே தெரியாது. ஆனால், அவனுக்குள்ளேயும் அந்தக் கேள்விகள் எப்போதாவது தலைதூக்கும். சில அபூர்வ தருணங்களில், இரவு பதினொரு மணிக்கு டேப்பிலிருந்து ஒலிக்கும் கிஷோரி அமோன்க்கரின் சுண்டியிழுக்கிற குரலை மட்டுமே துணையாகக் கொண்டு படுத்திருக்கிற வேளைகளில்... அலுவலக வேலையாக இட்டார்சியிலிருந்து ஜபல்பூர் மாதிரி இடங்களுக்குத் தனியே பகல்நேர ரயிலில் ஜன்னலோரப் பயணத்தில் இயற்கையில் அமிழ்ந்து போகிற வேளைகளில்...எதைத் தேடி யாருக்காக இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று தன்னையே கேட்டுக் கொள்வான். அடுத்த வேலையில் ஆழ்ந்தவுடன் கேள்விகள், கம்ப்யூட்டர் திரையில் அடுத்த ஃபைலை அழைத்ததும் முந்திய ஃபைலின் முகம் பின்னே ஒளிந்து கொள்வது போல் ஒளிந்து கொள்ளும்.
செய்தி ஆசிரியர் அறைக்குள் நுழைந்தான் விஜயன்.
அவன் கேட்பதற்கு முன்பாகவே, கே.கே.சர்தேசாய் கற்றையாக வைத்திருந்த பி.டி.ஐ., யு.என்.ஐ. செய்திக் குறிப்புகளை நீட்டினார்.
வாங்கி வேகமாகப் புரட்டினான் விஜயன்.
சென்னைக்கு ஐம்பத்தாறு கிலோ மீட்டர் அருகிலுள்ள செங்கல்பட்டில்...
'செங்கல்பட்டிலா...!? விஜயனுக்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. அவனுடைய ஊர். பிறந்து வளர்ந்து படித்து ஆளான ஊர்.
கே.கே.! இது என் நேட்டிவ் பிளேஸ்...
அச்சா!
என்றார் சர்தேசாய் தன்னிச்சையாக.
ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்தன. நகரின் மையப்பகுதியான கிளாக் டவர் பகுதியில் குண்டு வெடித்ததில் எட்டுப் பேர் செத்தார்கள். மூன்று குதிரைகள் செத்தன.
உன் டவுன்ல குதிரையெல்லாம் இருக்குதா, என்ன...?
மணிக்கூண்டு அருகே குதிரை வண்டி ஸ்டாண்ட். சென்னையில் குதிரை வண்டிகளை விஜயன் அண்மைக் காலத்தில் பார்த்ததில்லை. செங்கல்பட்டில் இன்னுமா இருக்கின்றன...? அவன் கடைசியாகக் குதிரை வண்டியில் போனது, அப்பா இறந்த போதுதான். மார்ச்சுவரியிலிருந்து பிணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்ற குதிரை வண்டியில் கூட உட்கார்ந்து போனான். அது தான் செங்கல்பட்டுக்குக் கடைசியாகப் போனது. பன்னிரெண்டு வருடங்களாகிவிட்டன. அந்தக் குதிரையும் இப்போது செத்திருக்குமோ...?
மணிக்கூண்டு அருகேதான் அவன் படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம். தென்னை மர ஸ்கூல் என்பார்கள். அவன் படித்த காலத்திலேயே தென்னை மரம் இருக்கவில்லை. அதற்கும் முன்பு எப்போதோ இருந்திருக்கும்.
குண்டு வெடித்தபோது பள்ளிக் குழந்தைகள் எங்கே இருந்திருப்பார்கள்...? மாலையில் நடக்கப்போகும் ஆண்டு விழாவுக்காகப் பகலில் விடுமுறை விட்டிருந்தார்கள். எனவே வெடி விபத்தில் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்றது யு.என்.ஐ. செய்தி. விஜயனுக்கு, தான் ஒரு ஆண்டுவிழாவில் பாரதியார் வேடம் போட்டு, தலைப்பாகை கீழே விழுந்தது நினைவுக்கு வந்தது.
சர்தேசாய் மேஜையில் டெலிபோன் மணி அடித்தது. எடுத்துப் பேசினார்.
விஜூ... உனக்குத்தான்...டி.ஜி!
அவன் நடமாட்டத்தைத் தெரிந்து கொண்டு துரத்திப் பிடித்து அழைக்கிறார் என்றால், நிச்சயம் அரட்டைக்காக இருக்காது.
சார்.....விஜூ...
எவ்வளவு நேரமாக உன்னைத் தேடுவது...? இனிமேல் உன்னை புரொடக்ஷன் செய்யவே அனுமதிக்கப் போவதில்லை. எப்போது பார்த்தாலும் ஷ¨ட்டிங், எடிட்டிங் என்று காணாமல் போய்விடுகிறாய். உடனே வா...!
என்றார் டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி.
புரொடக்ஷன் செய்யாமல் இருப்பதாவது... தொடர்ந்து நிகழ்ச்சிகளை தயாரிக்க அனுமதித்தால்தான், பதவி உயர்வையே ஏற்றுக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்த அபூர்வமான டி.வி. புரொடியூசர் விஜயன். ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது தமிழில் ஒரு அரைமணி நேரத் தயாரிப்பு செய்யாவிட்டால் பைத்தியம் பிடித்தாற் போலாகி விடும் அவனுக்கு.
கடைசியாக ரசிகர் மன்றங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி செய்தான். இப்போது தேவராட்டம். இரண்டுக்கும் ஊற்றுக்கண் மதுரைதான் என்பதுதான் விஜயனுக்கு சுவாரசியமான ஆராய்ச்சி.
அடுத்த சில நிமிடங்களில் டி.ஜி முன்னால் உட்கார்ந்திருந்தான் விஜயன்.
டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, எந்த ஆட்சி மாற்றத்திலும் பாதிக்கப்படாத அபூர்வமான அரசாங்க அதிகாரி! எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. அரசியல் மாற்றங்கள் எந்தத்திசையில் நடக்கின்றன என்பது பற்றிய தன் அனுமானங்களை உரசிப் பார்த்துக் கொள்ள, விஜயன் அவருக்கு ஓர் உரைகல். சில நேரங்களில் அவனுக்கும் அவரிடமிருந்து சில முன்னெச்சரிக்கைக் குறிப்புகள் கிட்டுவதுண்டு.
இன்று வழக்கமான அரட்டை எதுவுமில்லை. ஆரம்பப் புன்னகைக்குப் பிறகு, நேரே விஷயத்துக்கு வந்தார். விஜூ உனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு வரப்போகிறது. ஹோம் மினிஸ்ட்ரியிலிருந்து உன்னுடைய சர்வீஸ் ஃபைலைக் கேட்டிருந்தார்கள். பார்த்து விட்டு, ஹோம் செக்ரெட்டரி பேசினார். நீயும் அவரோடு இப்போது பேசு. உன்னைத் தேரந்தெடுத்திருக்கிறார்கள்
.
எதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்...?
அதெல்லாம் எனக்குத் தெரியாது... தெரிந்தாலும் சொல்ல மாட்டேன். நீயே நேரில் போய்த் தெரிந்துகொள்.
தன் ஐடென்டிடி கார்டைக் காட்டியபடி, ஏராளமான ஏ.கே.47& களைக் கடந்து உள்துறைச் செயலாளரின் அறையை விஜயன் அடைந்த போது... அவருடைய பி.ஏ., அவனை கான்ஃபரன்ஸ் அறைக்கு வழி நடத்தினார். அந்த அறைக்கு விஜயன் வருவது அதுதான் முதல் முறை. அங்கே அவனுக்காக ஒரு மாநாடே காத்திருந்தது. பத்துப் பதினைந்து உள்துறை, உளவுத்துறை அதிகாரிகளின் கைகள் விஜயனுடன் கைகுலுக்கின. ஒரு சில முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தன. எல்லோரும் அமைச்சருக்காகக் காத்திருந்தார்கள்.
அந்த கான்ஃபரன்ஸ் அறையில், ஒரு சுவரில் சம்பிரதாயமான காந்தி, குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் தொங்கின.
எதிர்ச் சுவரில் தனியே, ஒரு ஒற்றை பெயிண்டிங் தொங்கியது. காத்திருந்த நேரத்தில், விஜயன் அந்தப் படத்தை அருகே போய்ப் பார்த்தான். வெள்ளைப் பின்னணியில் ஒரு சில பட்டையான கோடுகளில் ஒரு பெண்ணின் தோற்றம். மார்பகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் மொத்தமாக ஒரு பெரிய சிவப்பு வட்டம். அதன் உள்ளே சின்னதான இன்னொரு சிவப்பு வட்டம். இதற்கு என்ன அர்த்தம்...? விஜயனுக்கு அது துப்பாக்கி சுடுகிறவர்களின் டார்கெட் ப்ராக்டீஸுக்காக மாட்டப்படுகிற புல்ஸ் ஐ மாதிரி தோன்றியது! 'எதற்காக அந்தப் பெண்ணைச் சுட வேண்டும்...?' படம் வரைந்ததும் ஒரு பெண்தான் -சஜிதா என்று போட்டிருக்கிறது. அவளை என்றாவது சந்தித்தால் காரணம் கேட்க வேண்டும். அவளை எங்கே நான் சந்திக்கப் போகிறேன்...?
செயலாளர் உள்ளே நுழைந்தார். பின்னாலேயே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் கறுப்புப் பூனைகள் சூழ அமைச்சர் வந்து சேர்ந்தார். அதிகாரிகள் எல்லோரையும் ஒவ்வொருவராக இந்தியில் நலம் விசாரித்தார். விஜயனிடம் தமிழில்!
செயலாளர் சக்சேனா, தென்னிந்தியாவில் புதிதாகத் தொடங்கியிருக்கிற ஒரு சிக்கலைப் பற்றிப் பேசப்போகிறோம்...
என்று முன்னுரையுடன் கூட்டத்தைக் தொடங்கினார்.
தற்போது சென்னை அருகே குண்டுகள் வெடித்து இருப்பது புதிய தீவிரவாதக் குழுவான 'தவிப்பு'... குழுவின் முழுப்பெயர் 'தமில்னாட்' விடுதலைப் புராட்சியாலர் குலு
... சக்சேனா. தவிப்பு என்றால் என்ன பொருள்...?
என்று கேட்டார் இணைச் செயலாளர் ஷ்யாம் முகர்ஜி. ஆக்ஸ்போர்டில் படித்தவரான அமைச்சர், ஆறேழு வார்த்தைகளைச் சொல்லிப் பார்த்துத் தானே நிராகரித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானது 'அர்ஜ்!'
என்றான் விஜயன்.
அப்படியானால் நமது பதில் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் பர்ஜ்' என்று பெயர் சூட்டிக் கொள்ளலாம்
... என்று அமைச்சர் வார்த்தை ஜாலம் செய்ததும் கூட்டத்தில் இறுக்கம் சற்று தளர்ந்தது.
சக்சேனா தொடர்ந்து அரசாங்கம் எடுக்கப்போகும் முயற்சிகள் பற்றிச் சொன்னார். அங்குள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் என்னென்ன பொறுப்பு என்று விவரித்தார். விஜயனின் முறை வந்தது.
தனித் தமிழ்நாடு கேட்கிறவர்ளைப் பற்றிய எந்தச் செய்தி டி.வி. யிலும் ரேடியாவிலும் வெளியாவதாக இருந்தாலும் அதை முன்னதாகக் கவனித்து 'க்ளியர்' செய்வது உங்கள் பொறுப்பு. எல்லா கேந்திரங்களிலும் உள்ள செய்தி ஆசியர்களுக்கும் கைட்லைன்ஸ் அனுப்பப்படும். சந்தேகம் வந்தால், எந்த நேரமானாலும் உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று உத்தரவு. நாம் எப்படிப்பட்ட செய்திகளை அனுமதிக்கலாம் என்பதை, இனி தினசரி காலையில் நடக்கப்போகும் கூட்டத்தில் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளலாம்!
என்றார் சக்சேனா.
அமைச்சர் குறுக்கிட்டார்.
இதற்கு முன்பெல்லாம் நிறைய குளறுபடி செய்து விட்டார்கள். பஞ்சாப், காஷ்மீர், சிலோன் விவகாரங்களில் ஒரு சீரான அணுகுமுறை நியூஸ் ரூமில் இருக்கவில்லை. போராளி என்பதா? தீவிரவாதி என்பதா? பயங்கரவாதி என்பதா? என்றே தெரியாமல் குழம்புகிறார்கள். அதனால்தான் இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இந்த முறை தகவல் தொடர்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை டி.வி.யிலிருந்தே போடச் சொன்னேன். பி.ஐ.பி. ஆசாமிகளுக்கு விவரம் போதாது. நீங்கள் இதற்குப் பொருத்தமானவர் மிஸ்டர் விஜயன்...
என்றார் அமைச்சர்.
கூட்டம் முடிந்து கலையும் போது, விஜயனுக்கு அருகே வந்த அமைச்சர், அவன் தோளில் கையைப் போட்டபடி, 'கடைசியாக எப்போது சென்னைக்குப் போனாய்?" என்று விசாரித்தார்.
அய்யாவும் அம்மாவும் என்ன சொல்றாங்க?
என்று அவர் கேஷ¨வலாக அரசியல் பற்றிக் கேட்கத் தொடங்கியதும் ஜாக்கிரதையாக பதில் சொல்லாமல் தவிர்த்தான் விஜயன்.
செயலாளர் சக்சேனாவும் உளவுத் துறைத் தலைவர் கோவிந்தும் விஜயனைத் தனியே கூப்பிட்டார்கள்.
இன்டெலிஜன்ஸ் திரட்டிய தகவல்களின்படி, இந்த ஏழெட்டு பேர்தான் 'தவிப்பு' அமைப்பின் கோர் குரூப். ஓர் ஐடியாவுக்காகப் புரட்டிப் பாருங்கள்
என்று ஒரு கோப்பை விஜயனிடம் நீட்டினார் சக்சேனா.
புரட்டினான்.
குமாரசாமி, மூர்த்தி, தமிழ்வேள், ஹமீது, ராஜன், ஜோ என்று வரிசையாக விதவிதமான தமிழ் இளைஞர்கள் பாஸ்போர்ட் சைஸில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரின் பயோடேட்டாவும் எம்.ஏ., எம்.எஸ்ஸி., இன்ஜினீயரிங், ஸ்கூல் டிராப் அவுட், டாக்டரேட் என்று வகைவகையாக இருந்தன!
அடுத்த காகிதத்தைப் புரட்டினான் விஜயன்.
ஆனந்தி!
அதே ஆனந்தியா....?
அதே ஆனந்திதான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் பாஸ்போர்ட் புகைப்படம் விஜயனுக்கு பதில் சொல்லிற்று.
'ஒளிபடைத்த கண்ணினாய் வா...வா...வா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...வா...வா...!'
என்று தெளிவான குரலில், தீர்க்கமான பார்வையோடு பாடிய அதே முகம்...!அதே ஆனந்தி!
"உங்களுக்கு இவளைத் தெரியுமா...? என்றார் உளவு அதிகாரி கோவிந்த்.
தெரியும்....
என்றான் விஜயன்
அது எங்களுக்கும் தெரியும்!
என்றார் சக்சேனா.
2
விஜயன், அமைச்சகத்திலிருந்து வெளியே வந்து ஸ்கூட்டரை எடுத்தான். ஒவ்வொரு கட்டத்திலும் செக்யூரிட்டி செக். அடையாள அட்டையைக் காட்டியபடியே நடப்பது டெல்லியில் பழகிப் போய்விட்டது. வழியில் பிரஸ் கிளப்பில் எட்டிப் பார்த்தான். பாண்டேக்களும் ஜோஷிகளும் கபூர்களும்தான் இருந்தார்கள். உமாசங்கர், ஸ்ரீதர் யாரையும் காணோம்.
ஒரே ஒரு தமிழ் முகம்தான் இருந்தது. பி.டி.ஐ. கணேசன். செங்கல்பட்டில் குண்டு வெடித்தது தெரியுமா?
என்று கேட்டான் விஜயன். ஒழிஞ்சது சனியன். அது ஸ்டுப்பிட்டான ஊர். சிட்டி மாதிரியும் இருக்காது. வில்லேஜாவும் இருக்காது. போனது நல்லதுதான். புதுசா கட்டிக்கலாம்
என்றான் கணேசன். பெரிய கோவில்ல குண்டு வெடிச்சா மட்டும் தான் நீ கவலைப்படுவே?
என்றான்