Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saranagadhi
Saranagadhi
Saranagadhi
Ebook334 pages3 hours

Saranagadhi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100702618
Saranagadhi

Read more from Indira Soundarajan

Related to Saranagadhi

Related ebooks

Related categories

Reviews for Saranagadhi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saranagadhi - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    சரணாகதி

    Saranagadhi

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சரணாகதி

    மாய தரிசனம்

    அள்ளி அள்ளித் தருவேன்

    என்னுரை

    கடந்த 36 வருட என் எழுத்துலக வாழ்வில் எவ்வளவோ கதைகளை எழுதிவிட்டேன். சரித்திரம், சமூகம், அமானுஷ்யம் என்று அவைகளை வகைப்படுத்தலாம். இந்தக் கதைகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்த கதை’ என்று நான் பேட்டி காணப்படும் தருணங்களில் என்னிடம் கேட்பார்கள். இந்த மாதிரிக் கேள்வியை போல ஒரு தர்மசங்கடமான கேள்வியும் இருக்க முடியாது.

    எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல எல்லா எழுத்தாளர்களுக்குமே இது ஒரு தர்ம சங்கடமான கேள்வி. எனவே இந்தக் கேள்வி முன் மழுப்பலாக சிரிப்போம். சிலர் 'உங்களை மிக வருத்திய கதை எது?’என்று கேட்பார்கள்.

    பொதுவாக பேட்டி என்றால் இப்படி எல்லாம் கேட்பது தான் வழக்கம் என்றாகிவிட்டது. ஒருவேளை இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில் ஒன்றும் பிரமாதமான விஷயமில்லை.

    ஆனால் இப்போது என்னிடம் யாராவது கேட்டால் நான் எனக்கு மிகப் பிடித்த கதை என்று என் கதைகளில் பல கதைகளை வரிசைப்படுத்துவேன். பல காரணங்களுக்காக அது எதனால் என்றும் கூறுவேன்.

    38 வருட என் எழுத்துலக வாழ்வில் தொடக்கத்தில் எழுதியது போல இப்போதும் நான் எழுதுகிறேன் என்றால் நான் வளரவேயில்லை என்று அர்த்தமாகிவிடும். உண்மையில் கதைக்குக் கதை ஒரு எழுத்தாளன் பெரும் வளர்ச்சியை காண்கிறான். கண்டாகவேண்டும். அடுத்து, கதைகள் என்பவை அவை வெளிப்படும் காலகட்டத்தைப் பிரதிபலிப்பவை. அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தின் இருப்பைப் படம் பிடிப்பவை.

    என் எல்லாக் கதைகளிலும் கேள்வி கேட்பது, காலப் பதிவை உருவாக்குவது, முரண்களை அலசுவது, நேர்மைக்காகப் போராடுவது என்பவை முக்கிய இடம்பெற்றிருக்கும்.

    இந்த ‘அள்ளி அள்ளித்தருவேன்’ நாவலில் இந்தச் சம்பவங்கள் மிகத் தூக்கலாக இருக்கும். இன்றைய நம் வாழ்க்கை முறை மிகவே மாறிவிட்ட ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நினைத்தால் எனக்கு பிரமிப்புத் தட்டுகிறது. அந்த நாளில் ஒரு நல்ல சினிமாவின் ஆயுள் என்பது கிட்டத்தட்ட 25 வாரங்கள். இன்று மிக அதிகபட்சமாக வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்கள் அது ஓடினாலே போதும் என்றாகிவிட்டது.

    அன்று அயல்நாடுகள் திரைப்படங்களில் மட்டுமே நாம் காண முடிந்தவை. இன்று வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் வசிப்பவராக உள்ளார்.

    அன்று சாதிவிட்டு சாதி திருமணம் என்பது நகர் புறங்களில் கூட சலனமேற்படுத்தும் சங்கடமான விஷயம். இன்று கிராமப்புறத்தில் கூட கலப்புமணம் சாதாரணமாகி வருகிறது.

    அன்று தபால் கார்டுதான் மலிவான தகவல் தொடர்புச் சாதனம். இன்று கைபேசி எஸ்எம்எஸ், அந்த தபால் கார்டையே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

    அன்று பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருந்தனர். இன்று தினக்கூலிகளைத் தவிர எல்லோரிடமும் கார் இருக்கிறது.

    இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் பல விஷயங்கள் மாற்றம் சார்ந்தவை, சில விஷயங்கள்தான் வளர்ச்சி சார்ந்தவை.

    குறிப்பாக குடும்ப உறவுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. கல்யாண உறவுகளில் பெண்களின் கை மிகவே ஓங்கியுள்ளது. திருமண வயதை நெருங்கி விட்ட பெண்களில் பலர் சர்வாதிகாரி போல நடந்து கொள்கின்றனர். இவர்களால் ஆண்களில் பலர் சன்னியாசியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    30 வயதைக் கடந்தவர்களுக்குத் திருமணம் என்பது கேள்விக் குறியாகி இறுதியில் முற்றுப்புள்ளியில் முடிந்து விடுகிறது. என் உறவினரில் ஒருவருக்கு 38 வயதாகிறது. சாதியைப் பொருட்படுத்தாமல் திருமணமானால் போதும் என்று ஒரு விதவைப் பெண்ணை மணக்கச் சம்மதித்து அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்த போது அந்தப் பெண் இறுதி நேரத்தில் எனக்கு இந்த பையனைப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாள். அதன்பின் அந்த பையன்(?) தன்னை மிகவே வெறுக்கத் தொடங்கி விட்டான்.

    விவாகரத்துக்களும் சாதாரணமாகி வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விவாகரத்து செய்த ஒருத்தி காதலிக்கும் தன் தோழிக்கு ஒரு கட்டத்தில் அட்வைஸ் செய்யும் போது தைரியமாக திருமணம் செய். பின்னால் ஒத்து வராவிட்டால் நல்ல ஜீவனாம்சம் வாங்கிக் கொண்டு விலகிவிடலாம். நான் அப்படித்தான் செய்தேன் என்று கூறுகிறாள்.

    மொத்தத்தில் உறவுமுறைகள் இன்று பழமைக்கும் புதுமைக்கும் இடையே விதவிதமான நசுக்கத்துக்கு ஆளாகிவருகின்றன. இந்த அள்ளி அள்ளித் தருவேனின் அடிநாதமே இந்தச் சிக்கலை அலசுவது தான்.

    இது தொடராக வந்தபோது வாசித்த பலர் இதன் முடிவை மிகவே எதிர்பார்த்தனர்.

    ‘சார், விக்ரமாதித்தன் - வேதாளம் கதையில் வேதாளம் கேட்கும் கேள்விக்கு பதில் கூறும் விக்ரமாதித்தனால் கூட இந்தக் கதைக்கு ஒரு சரியான முடிவைக் கூற முடியாது’ என்றனர்.

    சிலர், ‘சார், இதை பாலசந்தர் சார் படமா எடுத்தா பின்னும்’ என்றனர். நானும் அனுபவித்து எழுதினேன். இன்னும் கூட எழுதியிருக்கலாமோ என்று இதை எழுதி முடித்த பிறகு நினைத்தேன். இதுதான் இதற்கான முன்னுரை. இனி கதையைத் தொடருங்கள்!

    27.11.2016

    மதுரை

    அன்புடன்

    இந்திரா செளந்தர்ராஜன்

    ***

    சரணாகதி

    அத்தியாயம் - 1

    காலிங்பெல் சப்தம் கேட்டு கதவைத் திறக்கவும், ரஞ்சனிக்குச் சற்று திகைப்பாக இருந்தது.

    கதவுக்கு அப்பால் அவளது மாஜி மாமனார் சுந்தரேசன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவும் திகைப்போடு வெறித்தவள் எதுவும் பேசாமல் அதே சமயம் அவரை அழைக்கவும் பிரியப்படாமல் உள்பக்கமாய்த் திரும்பினாள்.

    பெல் சப்தம் ரஞ்சனியின் அப்பா சோமசுந்தரத்தையும், அம்மா மனோகரியையும் கூட ஹால் பக்கம் வரவழைத்திருந்தது.

    அவர்களும் சுந்தரேசனைப் பார்த்தனர்.

    ஏனோ அவர்களும் விக்கிப்போடு மெளனமாகவே நின்றனர். அவரும் அவர்களை எல்லாம் ஊடுருவினார். பின் சற்றுத் தயங்கினாலும் உள்நுழைந்தவராக ஹாலில் கிடந்த சோபாவில் அமரவும் செய்தார்.

    கடைசியாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீட்டுக்கு வந்து போனதாய் ஞாபகம். அப்போது அவர் வெளியே டாக்ஸியில் இறங்கும் போதிலிருந்தே ‘வாங்க சம்பந்தி’ என்று அவரைத் தாங்கு தாங்கு என்று தாங்கி வரவேற்றவர்தான் இந்த சோமசுந்தரம்!

    இப்போது எல்லாமே தலைகீழ்...!

    உறவே தேவையில்லை என்று ஆகிவிட்டால் அது இப்படித் தானே எதிரொலிக்க முடியும் இருந்தும் சுந்தரேசன் நிதானமானவர். வார்த்தைகளைத் தங்கத் தராசில் எடை போடுவதுபோல எடை போட்டு பேசுபவர். எப்போதும் பளிச்சென்று நெற்றியில் விபூதி, குங்குமம் இருக்கும். தாடையில் முடிகளை எல்லாம் பார்க்கவே முடியாது. இதனால் அவருக்கென்று ஒரு கம்பீரம் இருக்கவே செய்தது. அதில் இப்போது பாதி கூட அவரிடம் இல்லை.

    விபூதி குங்குமம் கூட திருத்தமாக இல்லாமல் சற்று கோணலாக இருந்தது. இதெல்லாம் அவரை எங்கு வந்தீர்கள்? இங்கு உங்களுக்கு என்ன வேலை? என்று கோபமாக ரஞ்சனியைக் கேட்க விடாதபடி செய்து விட்டது.

    ஒரு கனமான பெரிய பாறை போன்ற மெளனம் அங்கே… அதை யார் உடைப்பது என்கிற மெல்லிய தவிப்புக்கு இடையே சுந்தரேசனே ஆரம்பித்தார்.

    "என்னை நீங்க எதிர்பார்க்கலங்கறது உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. நான் கூட இனி போய் பேசறதால எதுவும் ஆயிடப் போறதில்லங்கற மாதிரிதான் நினைச்சேன். ஆனா பாஸ்கரோட பர்சுல பிருந்தாவோட போட்டோவை யதார்த்தமா பார்க்கவும் எனக்குள்ள ஒரு சிறு நம்பிக்கை. கூடவே ரஞ்சனி போட்டோவும் இருந்ததுதான் ஆச்சர்யம். அது மட்டுமில்ல, கொஞ்சநாளா அவன் ஒரு ட்ராப் கூட குடிக்கல.

    எனக்கு எல்லாமே ஆச்சர்யமாதான் இருந்தது. அவன் மாறத் தொடங்கிட்ட மாதிரிதான் தெரியுது… அப்படியே..."

    அவர் தன் மகன் பாஸ்கர் பற்றிச் சொல்லியபடியே அவர்களை எல்லாம் திரும்ப ஊடுருவினார். அப்போது வாசலில் ஸ்கூல் பஸ் வந்து நின்று பிருந்தா என்கிற ஒரு எட்டு வயதுப் பெண் முதுகுசுமையோடு கையில் வயர் கூடையில் டிபன் கேரியர் வாட்டர்பாட்டிலுடன் சற்றே கலைந்த இரட்டைப் பின்னலோடு உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்க்கவும் சுந்தரேசனிடம் ஒரு சிலிர்ப்பு. அவளும் தாத்தா என்று சற்று பலமான குரலில் ஆரம்பித்து பின் காற்றுக் குரலில் ஈனசுரத்தில் முடித்தவளாக ரஞ்சனியைப் பார்த்தாள்.

    போ... போய் கைகால் கழுவிட்டு உன் ரூம்ல போய் ஹோம்வொர்க் செய்யற வழியப் பார். அம்மா பூஸ்ட் கலந்து கொண்டு வரேன் - என்று அவளை விரட்டாமல் விரட்ட முயன்றாள் ரஞ்சனி. அவள் பார்வையோ சுந்தரேசன் மேல் ஒருமுறையும் ரஞ்சனி மேல் ஒருமுறையுமாக மாறி மாறி அலைந்தது.

    "உள்ள போன்னு சொன்னேன்ல...? - ரஞ்சனி அதட்டவும் தன் சுமைகளோடு உள்ளே செல்ல முயன்றவளை எழுந்து சென்று இழுத்து அணைத்துக் கொண்டார் சுந்தரேசன்.

    பிருந்தாக்குட்டி… நல்லா இருக்கியா கண்ணு! பாடம்லாம் நல்லா படிக்கிறியா?

    அவளும் அவர் பிடிக்குள் நெகிழ்ந்தாள். ரஞ்சனியை அவர் செயல் கலவரப்படுத்திற்று.

    "விடுங்க... அவ போகட்டும். அவ இப்பத்தான் கொஞ்சம் படிக்கத் தொடங்கியிருக்கா. அதைக் கெடுத்துட வேண்டாம்.'

    என்னம்மா சொல்றே... பிருந்தா என் வாரிசும்மா. நான் செத்தா தீப்பந்தம் பிடிக்கற உரிமை உடையவ. அவளை நான் கட்டிப் பிடிச்சா அது தப்பா?

    இந்த மாதிரி நிறையவே பேசிட்டோம். நீங்க வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்பற வழிய பாருங்க. அதான் ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு கோர்ட்லயே தீர்ப்பாயாச்சே?

    ரஞ்சனி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல பேசினாள்.

    "வாஸ்தவம்தாம்மா... கோர்ட்ல தீர்ப்பு சொல்லிட்டாங்கதான். நீயும் சளைக்காம போராடி என் பையன்கிட்ட இருந்து விவாகரத்துங்கற விடுதலையை வாங்கிட்டே. அவனுக்கும் வேணும். பெண்டாட்டி பிள்ளை குட்டியை விட டாஸ்மாக் புட்டியைபெருசா நினைச்சதுக்குத் தண்டனை வேண்டாமா? ஆனா இதனால எல்லாம் பிருந்தா எங்க வாரிசு இல்லன்னு ஆயிடுமா என்ன?

    கோர்ட் தீர்ப்புல கூட என் மகன் பாஸ்கர் தன் மகளைப் பார்க்க விரும்பும்போது தாராளமாபோய் பாக்கலாம்னு சொல்லப் பட்டிருப்பதை நீ மறந்துருக்க மாட்டே அவனுக்கான அந்த உரிமையைப் பயன்படுத்தித் தாம்மாநான் வந்துருக்கேன்."

    உங்களுக்கு அப்படிப் பயன்படுத்த உரிமை கிடையாது. உங்க பிள்ளைக்கு உரிமை இருக்கலாம். ஆனா தகுதி கொஞ்சம் கூட கிடையாது.

    இதெல்லாம் தெரிஞ்ச விஷயம்தாம்மா. நான் சண்டை போட வரலம்மா. உரிமை யாருக்குன்னு விவாதிக்கவும் வரலை.

    பின்ன எதுக்காக வந்து எங்க அனுமதியில்லாமலே சோபாவுல உக்காந்துகிட்டும் இருக்கீங்க. போங்க இங்க இருந்து முதல்ல…

    "வேண்டாம் ரஞ்சனி வார்த்தைகளை விடாதே. திரும்ப அள்ள முடியாது. நான் என் பிள்ளைக்கு வக்காலத்து வாங்கவோ இல்ல அவன் திருந்திட்டான்னு சொல்லி அறுந்த உறவை புதுப்பிக்கவோல்லாம் வரலைம்மா. எனக்கு என் பிள்ளை மேல இருந்த பாசமெல்லாம் ஆவியாப் போய் ரொம்பக் காலமாச்சு.

    நானும் என் மனைவியும் எப்ப எமன் வந்து கூட்டிப் போவான்னு மேல பார்த்தபடிதாம்மா உக்காந்திருக்கோம். இதுக்கு நடுவுல பாஸ்கர் கிட்ட நாங்க எதிர்பார்த்த மாற்றத்தை விட ஒரு பெரிய மாற்றம் இப்ப ஏற்பட்டுருக்கறதுதான் ஒரு எதிர்பாராத திருப்பம்.

    இது எப்படி எதனால நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்படுவீங்க. உச்சபட்சமா ஒரு விஷயம் நடந்தது. அதனாலதான் நான் இப்ப இங்க வந்துருக்கேன்."

    சுந்தரேசன் மிக நிதானமாக நிறுத்திப் பேசியவராக சோமசுந்தரத்தையும் மனோகரியையும் பார்த்தார்.

    அவர்களிடம் ஓர் எதிர்பார்ப்பு புருவமேட்டில் தெரிந்தது. ஒரு மென்மையான அமைதியும் நிலவியது. ஆனால் ரஞ்சனியிடம் அவர் பேச்சைக் கேட்கும் விருப்பம் துளியுமில்லை.

    நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இப்பதான் நான் எல்லாத் தையும் மறந்து வாழ ஆரம்பிச்சிருக்கேன். இப்ப எதையாவது சொல்லி என் மனசை அலைபாய வெச்சுடாம பேசாம கிளம்புங்க…

    ரஞ்சனி நான் சொல்றத கொஞ்சம் கேளு…

    நீங்க என் பேச்சைக் கேளுங்க. உங்க யாரையும் நான் நினைக்கக் கூடத் தயாரா இல்லை. போதும் நான்பட்டதெல்லாம். போதும் நான் அனுபவிச்சதும்… எனக்கு இப்ப தேவை ஞாபகமறதி வேற எதுவுமில்லை. தயவுசெய்து கிளம்புங்க…

    அவள் டப்பென்று சப்தம் வரும்படி இரு கைகளை சேர்த்துக் குவித்தவளாய் உடம்பெல்லாம் நடுங்க காதோரம் வியர்வை நீரின் வளைகோடு நெளிய கண்களை மூடினாள்.

    அவர் மெளனமாய் அதே சமயம் கண்களில் துளிர்த்த கண்ணீரோடு புறப்படத் தொடங்கினார்.அவர் சென்று பல நொடிகள் வரை ரஞ்சனி அப்படியேதான் இருந்தாள். அவளைக் கலைப்பது போல ஒலித்தது அவளது கைபேசி, அதற்குக் காதைக் கொடுத்தாள்.

    ரஞ்சனி மேடமா?

    யெஸ்... நீங்க?

    நாங்க சரணாகதி முதியோர் இல்லத்துல இருந்து பேசறோம். நாளைக்கு நீங்க உங்க பத்திரிகை பேட்டிக்காக வரப்போறீங்க தானே?

    ஆமாமா... என்ன விஷயம் ?

    "உங்களைக் காலை 9 மணிக்கு வரச் சொன்னார் எங்க ஹோமோட டைரக்டர்.

    சரி… நான் அப்படியே வர்றேன் - ரஞ்சனி பேசி முடித்தவளாகத் திரும்பினாள். அப்பாவும், அம்மாவும் அவளை ஊடுருவிப் பார்த்த வண்ணம் இருந்தனர்.

    எதுக்காக இப்ப இந்த ஊடுருவல் பார்வை. ?

    சம்பந்திகிட்ட நீ அவ்வளவு கடுமையாப் பேசினது சரியில்லன்னு தோணுதும்மா.

    சம்பந்தியா… நான் மறந்தாலும் அந்த உறவை நீங்க மறக்கமாட்டீங்களா?

    மாப்ளதானேம்மா நம் வரைல வில்லன். சம்பந்தி எப்பவும் தப்பா நடந்துகிட்டவரில்லையேம்மா…

    திரும்பத் திரும்பச் சம்பந்திங்காதீங்க. அதான் எல்லாத்தையும் தலைமுழுகியாச்சே.

    கத்தாதே... அவர் ஏதோ நல்ல விஷயம் சொல்ல வந்த மாதிரி தெரியுது. நீ அவரைப் பேசவிட்டிருக்கணும்.

    ஒரு மண்ணாங் கட்டியும் இல்லை. அவன் இப்ப திருந்திட்டான்னு சொன்னாரே கேக்கலையா?

    ஏம்மா அது உண்மையா இருக்கக்கூடாது?

    இப்படித்தான் எல்லாம் ஆரம்பமாகும். நான் இருந்த வரை அவரையும் அவர் பொண்டாட்டியையும் தாங்குதாங்குன்னு தாங்கினேன். இப்ப நான் இல்ல. என்ன மாதிரி இன்னொருத்தி இனி கிடைக்கவும் போறதில்ல. அதனால நாக்கு செத்துப் போய்க் கிடக்கறார். அதான் உறவைப் புதுப்பிக்க முடியுமான்னு நூல் விட்டுப் பாக்க வந்திருக்காரு. இது உங்க மரமண்டைக்குப் புரியலையா?

    ரஞ்சனியின் அதிர்வான பேச்சு அவர்களை அடுத்து எதுவும் பேசவிடவில்லை. இருவரும் தங்களுக்குள் மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டனர்.

    பிருந்தாவும் புரியாமல் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.

    ***

    அத்தியாயம் - 2

    சரணாகதி முதியோர் இல்லம் கிட்டத்தட்ட ஒரு மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் ஓங்கி உயர்ந்த மரக் கூட்டங்களுக்கு நடுவில் மிகவே திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது.

    ஜிலுஜிலுவென்ற சூழல்! பன்னிர்ப்பூக்களின் மகரந்த வாசம், கண்களை வருடும் காகிதப்பூ மரங்கள் என்று பார்வைக்கு இதமாய் இருந்தது.

    அங்கங்கே சிமென்ட் பெஞ்சுகள் - சின்னச்சின்னதாய் மண்டபங்கள். அதன் நடுவில் கிருஷ்ணன், ராமன், சிவலிங்கம் என்று வண்ணம் பூசிய விக்கிரகங்கள்.

    சிமென்ட் பெஞ்சுகளில் அங்கும் இங்குமாய் வயதான சிலர் அமர்ந்திருந்தனர். ஒரு டாக்ஸியில் வந்து இறங்கிய ரஞ்சனி அந்தச் சூழலைக் கூர்ந்து பார்த்தவளாக காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

    அந்த முதியோர் இல்ல அலுவலகத்தின் கட்டடம் எதிரே தெரிந்தது. அதன் வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார் அந்த முதியோர் இல்லத்தின் உதவியாளர் ராமசாமி.

    நீங்கதான் ரஞ்சனியா?

    நானேதான். எங்க பத்திரிகை சார்பா பேட்டிக்காகப் பேசினதும் நானேதான்.

    வெல்கம்… வெல்கம்... - அவர் ரஞ்சனியை அழைத்துக் கொண்டு டைரக்டர் ராமகிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தார்.

    மிதமான ஏ.சி.யும், லாவண்டர் வாசமுமாய் அந்த அறை இதமான குளிரோடு இருந்தது. எதிரில் பளபளப்பான தேக்கு நாற்காலியில் ராமகிருஷ்ணா! அவர் தோற்றத்தில் ஒரு புனிதம் கலந்த வசீகரம்.

    நமஸ்காரம் சார்...

    'நமஸ்காரம்மா… வாங்க… உக்காருங்க..." - அவளும் எதிரில் இருந்த குஷன் நாற்காலியில் அமர்ந்தாள்.

    சொல்லுங்க... ஏதோ பேட்டி காணணும்னு சொன்னீங்களாமே?

    "ஆமாம் சார்... எங்க மாதப் பத்திரிகையோட வரப் போற இதழ் முதியோர்களுக்கான சிறப்பிதழ். அதனால முதியோர் தொடர்பான செய்திகளால அந்தச் சிறப்பிதழை சிறப்பா கொண்டு வரத் தீர்மானிச்சிருக்கோம்

    முதியோர்களோட அனுபவம், அவங்க மன ஆரோக்கியம், அவங்க உடல் ஆரோக்கியம்னு எல்லா கோணங்கள்லயும் செய்திகளைச் சேகரிச்சு கட்டுரை எழுதவும் முதியோர்களைப் பேட்டி கண்டு அவங்க -உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தவும்தான் நான் வந்திருக்கேன்."

    நல்ல விஷயம்தான். இதை நிர்வகிக்கறவன் நான் என்கிட்ட நீங்க கேட்க ஏதாவது இருக்கா?

    நிறைய இருக்கு சார் இந்த முதியோர் இல்லம் பத்தி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். காற்றோட்டமான இயற்கையான சூழல்ல ஊருக்கு வெளிய ரொம்பவே அமைதியா இருக்கு. இந்த இடத்துல நீங்க ஒரு லாட்ஜோ இல்லை ஒரு ஷாப்பிங்மாலோ கூட கட்டியிருக்கலாம். இல்லேன்னா ஒரு தொழிற்சாலை கூட உருவாக்கியிருக்கலாம். ஆனால் முதியோர் இல்லம் நடத்தற காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா?

    நல்ல கேள்விம்மா. அவசியம் நான் இதற்குப் பதில் சொல்றேன். அதுக்கு முன்னால நீங்க உள்ளே போய் எல்லாரையும் பார்த்து உங்க பேட்டியை முடிச்சிட்டு வந்துடுங்களேன்…

    ஏன் சார். இப்ப நீங்க என் கேள்விக்குப் பதில் சொல்லக் கூடாதா?

    எப்ப வேணா சொல்லலாம்மா. ஆனா நீங்க இங்க இருக்கற முதியோர்களைப் பாத்துட்டு வந்த பிறகு நான் சொல்லப் போறதைக் கேட்டா பொருத்தமாவும் உங்க கட்டுரைக்கான ஸ்ட்ரக்சர் ரொம்ப சரியாவும் அமையும்னு நான் நினைக்கறேன். அவ்வளவு ஏன் கேட்கத் தேவையில்லைன்னு கூட ஒரு முடிவுக்கு நீங்க வரலாம்...

    -ராமகிருஷ்ணா மிக ஸ்பஷ்டமாகத் தேர்ந்த வார்த்தைகளில் கம்பீரமாய்ப் பேசினார். ரஞ்சனியும் புன்னகையோடு தலையை அசைத்தாள். அப்போது மூலிகைத் தேநீர் அவள் குடிப்பதற்காக வந்தது. கூடவே நான்கு பருமனான பிஸ்கட்டுகள்.

    சாப்டுங்க. இந்த டீயும் பிஸ்கட்டும் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டி. குறிப்பா சுகர் பேஷண்டுகளுக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இதை நாங்க தர்றோம்.

    - அவர் சொன்ன தகவலோடு டீயைக் குடித்தாள். நல்ல சூட்டோடு மிக வாசமாய் சற்றே உவர்ப்புச் சுவையோடு இருந்தது. அதன் நடுவே பிஸ்கட்டை சாப்பிடவும் அதன் அரை இனிப்பு ஒரு புதிய சுவையை அவளுக்கு உணர்த்திற்று.

    வித்தியாசமா இருக்கு…

    பிடிச்சிருக்கா?

    நிச்சயமா… இந்த காம்பினேஷன் எனக்குப் புதுசு!

    இப்படி நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியாததாலேயே புதுசா இருக்கும்மா. ஆனா நிஜத்துல புதுசுன்னு ஒண்ணு கிடையாது. இந்தப் பூமில கால காலமா இருக்கற வஸ்துக்கள்தான் இதெல்லாம்.

    ஒரு டீயையும், பிஸ்கட்டையும் வைத்து அவர் சொன்ன பதிலில் சன்னமாய் மெல்லிசாய் ஒரு தத்துவம். அந்தப் பதிலே அவர் மிக ஆழமானவர் என்கிற ஓர் உணர்வை ரஞ்சனிக்குள் உருவாக்கியது.

    "உங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க. எப்படி இருக்காங்க...’ - அவர், அவள் எதிர்பார்க்காத கேள்வி ஒன்றைக் கேட்டார். ரஞ்சனி சற்று திகைத்தாலும் வேகமாக பதில் கூறத் தொடங்கினாள்.

    நல்லா இருக்காங்க சார் என் கூடதான் இருக்காங்க.? அதே சமயம், நீங்க என் அப்பா மாதிரி. சும்மா, ‘வா போன்னே கூப்பிடுங்க… ப்ளிஸ்...

    "ஓ... உன் கூடப்

    Enjoying the preview?
    Page 1 of 1