Suttaman
By Sivasankari
5/5
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAndhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsKutty Rating: 0 out of 5 stars0 ratingsVimochanam Rating: 4 out of 5 stars4/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Oru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5
Related to Suttaman
Related ebooks
Shurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratings47 Natkal Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Avan Rating: 3 out of 5 stars3/5Aayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanaga... Rating: 5 out of 5 stars5/5Pachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Vegathodu… Rating: 5 out of 5 stars5/5Ivalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsVimochanam Rating: 4 out of 5 stars4/5Ariyatha Mugangal Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Please, Enakkaga... Rating: 2 out of 5 stars2/5Vaanathu Nila Rating: 5 out of 5 stars5/5Maalayil Pookkum Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsPogappoga... Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Mudhal Thoguppu Rating: 5 out of 5 stars5/5Aasai Ther Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Suttaman
1 rating0 reviews
Book preview
Suttaman - Sivasankari
http://www.pustaka.co.in
சுட்டமண்
Suttaman
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
ஓர் அறிமுகம்
எதிர்பார்க்கவில்லை.
இப்படி இரண்டு பேரும், அடுத்தடுத்து, சற்றும் முன்னறிவிப்பின்றி என்னோடு இன்று தொடர்புகொள்வார்களென்று...
அதுவும் இன்று!
நின்று நிதானமாய் உட்காரக்கூட அவகாசம் தராத தினுசில், ஒன்றின் பின் ஒன்றாய் - புதுத் தொடருக்குக் கரு தேர்ந்தெடுப்பதிலிருந்து, அப்போலோ மருத்துவமனையின் கமிட்டி மீட்டிங், பெண்கள் முன்னேற்ற திட்டக்குழு சந்திப்பு, கேரள எழுத்தாள நண்பர் எம்.டி. வாசுதேவன் நாயரின் வருகை - என்று வரிசையாய் வேலைகள், கவனத்தையும் நேரத்தையும் ஆக்ரமிக்கக் காத்திருக்கும் இன்று!
ரமணன் போன் செய்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. எங்களுக்கு அறிமுகமான பிறகு வருஷா வருஷம் ஜனவரி முதல் தேதியன்று, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், தொடர்புகொண்டு, 'புத்தாண்டு வாழ்த்துக்கள், சார்' என்று வாழ்த்துவது வழக்கம்தான் என்பதனால், இன்று அவன் பேசியது புதுசு இல்லை.
ஆனால், யமுனா தொலைபேசியில் அழைத்து, ஹாப்பி நியூ இயர், அங்கிள்!
என்று கூறியது நிச்சயம் வியக்கவேண்டிய சமாச்சாரமே!
யமுனாவா! புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறாளா! - என்கிற ரீதியில் என் புருவங்கள் உயர்ந்ததை டெல்லியிலிருந்து பார்க்கமுடிந்த மாதிரி யமுனா சிரித்தாள். பின் அந்தச் சிரிப்பு குரலில் விரவ, நம்ப முடியலியா, அங்கிள்?
என்றாள்.
எப்படி நம்புவது? அவளை நான் அறிந்த நாளாய் அவளுடைய சிந்தனைகள், நம்பிக்கைகள், கொள்கைகளையும் நன்கு அறிவேனே! அப்புறம், இது என்னடா புது மாற்றம் என்று திகைக்காமல் வேறென்ன செய்வது?
யமுனாவுக்குச் சின்ன வயசிலிருந்தே தெய்வம், மதம், ஜாதி, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்பதிலெல்லாம் சுத்தமாய் நம்பிக்கை கிடையாது. அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.
ஊர் முழுவதும் புத்தாண்டையும் பொங்கலையும் தீபாவளியையும் கொண்டாடும்போது, இவள் மட்டும் எந்தக் கேளிக்கையிலும் ஈடுபடாமல், 'அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது' என்று தனித்து நிற்பாள்.
கடவுள், மதத்துல நம்பிக்கை இல்ல, சரி, வேண்டாம்... ஆனா, பண்டிகைகளை, முக்கியமான நாள்களைக் கொண்டாடறதுல தப்பென்ன? நாலு பேர் ஒண்ணா சேந்து சந்தோஷமா, சிரிச்சு, மகிழத்தானே இப்படியொரு பழக்கத்தைப் பெரியவங்க உருவாக்கினாங்க?
என்று யாராவது அவளிடம் வாதாடினால், உதட்டைச் சுழித்து அலட்சியமாய் சிரித்து, தோளைக் குலுக்குவாள். அப்புறம், சந்தோஷமா இருக்கவும், மனசுவிட்டுச் சிரிக்கவும் ஜனவரி ஒண்ணாம் தேதி வரைக்குமோ, இல்ல தீபாவளி வரைக்குமோ ஏன் காத்திருக்கணும்? எல்லா நாளும் அப்படி இருந்தா என்ன? எப்பவுமே எல்லாருமே சிரிச்சுகிட்டே இருக்கறதைத்தான் நா விரும்பறேன்! ஸோ, ஒவ்வொரு நாளையும் பொங்கலா, கிறிஸ்மஸ் தினமா நினைச்சுகிட்டா போச்சு! என்ன நா சொல்றது?
என்பாள், உரக்க சிரித்தவாறு.
இப்படி அழுத்தம்திருத்தமாகத் தன் கருத்துக்களை வெளியிடுவதோடு நிற்காமல், வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பவள் யமுனா என்பதால், சற்றுமுன் தொலைபேசியில் அழைத்து, 'ஹாப்பி நியூ இயர்!' என்றதும், ஒரு நிமிஷம் என்ன பதில் கூறுவது என்று புரியாமல்தான்போயிற்று.
யமுனா மாறிவிட்டாளா?
நம்ப முடியவில்லையே!
எனக்கு நம்பிக்கை இல்லாட்டாலும், உங்களுக்கு இருக்கே, அங்கிள்? அதனால, உங்களைச் சந்தோஷப்படுத்தவாவது நா 'விஷ்' பண்ணலாம், இல்லியா? 'விட்டுக்குடுத்து வாழறதுதான் சந்தோஷத்தை அதிகரிக்கும்'னு சொல்லுவீங்க இல்ல, அது நினைப்புக்கு வந்தது... போன் பண்ணேன்! எப்படி இருக்கீங்க, அங்கிள்? புதுசா 'குங்கும'த்துல தொடர் எழுதப்போறீங்கன்னு விளம்பரம் பாத்தேன்... ரொம்ப சந்தோஷம்! உங்க எழுத்தப் படிச்சு ரொம்ப நாளாச்சு... ஐ மீன், புது எழுத்து! பழைய நாவல்களைத்தான் திரும்பத்திரும்ப படிச்சுகிட்டேயிருக்கேனே! விளம்பரத்துல, நீங்க எழுதப்போறதைத் தவிர மத்த விவரங்கள் எதுவும் குறிப்பிடல... என்ன தலைப்பு குடுக்கப்போறீங்க, அங்கிள்? 'கரு' என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
அதுபற்றித்தான் யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசிய நிமிஷங்களில், அவள் எதையோ என்னிடம் சொல்ல விரும்புவதையும், ஆனால் தயங்குவதையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
'என்ன விஷயம், யமுனா?' என்று நான் கேட்டு அவள் சொல்வதைவிட, அவளாகக் கூறட்டும் என்று நான் தூண்டாததில், பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றிப் பேசியபின், நீங்க எழுத உக்காந்திருக்கறப்ப நா தொந்தரவு பண்ண விரும்பல, அங்கிள்... அப்பறம் சாவகாசமா பேசறேன். டெல்லி பக்கம் வர்ற வேலை இருக்கா? வந்தா அவசியம் என்னோடதான் நீங்க தங்கணும்! உங்க கிட்ட பேச நிறைய விஷயங்கள் இருக்கு...
என்று கூறி தொடர்பைத் துண்டித்தாள்.
ரிஸீவரை வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபோது, 'சின்னச்சின்ன விஷயங்கள்ல சுபாவத்தை மாத்திக்கறதுதான் எல்லாருக்கும் நல்லதுனு புரியுது... விட்டுக்குடுத்து வாழறது சந்தோஷத்தை அதிகரிக்கும்னு நீங்கதானே சொல்வீங்க!' என்ற வார்த்தைகள் மட்டும் மீண்டும்மீண்டும் மனசில் அலைமோதின.
அவளை அறிந்த நாளாய் நான் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக்கு, அப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க முனையாதவள், இப்போது மட்டும் திடீர் ஞானோதயம் பெற்ற தினுசில் அதைக் குறிப்பிட்டுப் பேசுவது எதனால்?
'நான் மாறிவிட்டேன், அங்கிள்... எல்லாவற்றிலும்தான்!' என்று மறைமுகமாய் எனக்கு உணர்த்த முயற்சிக்கிறாளா?
'நான் மாறிவிட்டதைப் புரிந்துகொண்டு எனக்கு உதவ முடியுமா?' என்று பூடகமாகக் கேட்கிறாளா?
சிந்தனை தீவிரமாக, உட்காரப் பொருந்தாமல் எழுந்து ஜன்னலிடம் சென்று நின்று கொண்டேன்.
எனக்குப் பிடித்தமான அரளிச்செடி, ஜன்னலருகில் வெளியில் நின்று கொண்டு என் வரவுக்காகக் காத்திருந்த மாதிரி, பொல்லென்று பூத்திருந்த சிவப்பு கொத்துப் பூக்களை அசைத்து 'ஹலோ' என்று குசலம் விசாரித்தது.
கம்பிகளின் இடுக்கு வழியாகக் கையை நீட்டி, வெகு அருகாமையிலிருந்த ஒரு கொத்தைக் கிட்டத்தில் இழுத்து, முகர்ந்து பார்த்தேன்.
அரளிப் பூக்களுக்கேயுரிய அலாதி காட்டுப்பூ மணம் நாசியில் ஏறியது.
மதிய நேரத்தில் உச்சி வெயில் மேனியில் பட, தகதகக்கும் அரளிப் பூக்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான ஒரு விஷயம்.
இந்தப் பூக்களையும், தோட்டத்து இதர ஜீவராசிகளையும், நீல வானத்தையும், அடிக்கடி உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஒற்றை மேகத்தையும் ரசிப்பதற்காகவே மேஜையை ஜன்னலை நோக்கிப் போட்டிருக்கிறேன்.
எழுத உட்காரும் பல சந்தர்ப்பங்களில், 'உனக்காக நான் பூத்திருக்கிறேன்; உனக்காகவே நான் கூவுகிறேன்; உனக்காகத்தான் நான் வானத்தில் உலா வருகிறேன்' என்று மலர்களும், குயில்களும், மேகங்களும் என்னிடம் கூறுவதில், எதுவுமே எழுதத் தோன்றாமல் இந்த இயற்கைக் காட்சிகளை மட்டும் ரசித்துவிட்டு எழுந்துவிடுவதுண்டு.
மொட்டை மாடி 'டேங்க்' நிரம்பி, உபரி தண்ணீர் வழிந்து, தோட்டத்து மண்ணில் சின்னக் குளமாகத் தேங்கியிருந்ததில், நாலு தவிட்டுக் குருவிகள் மகா குதூகலத்தோடு உரக்கக் கத்தியவாறு குளித்துக்கொண்டிருந்தன.
சற்றுத் தள்ளி தனியாய் மைனா ஒன்று...
வழக்கமாக மைனாக்கள் ஜோடிஜோடியாய்த்தானே வரும்! இது மட்டும் ஏன் ஒற்றையாய் இருக்கிறது?
பார்வையைச் சுழற்றி, கொய்யா, மா மரங்களை ஏறிட்டபோது, அவற்றிலும் இரண்டாவது மைனாவை என்னால் பார்க்க முடியவில்லை.
என்னாயிற்று? ஒரு மைனா இரை தேடிப் போயிருக்கிறதோ? இருக்காதே... மைனாக்கள் எதைச் செய்தாலும் ஜதையாகத்தானே செய்யும் என்பார்கள்! அப்புறம்? ஒன்று செத்துவிட்டதோ? இல்லாவிட்டால், 'உன்னோடு வாழப் பிடிக்கவில்லை' என்று பறந்துபோய்விட்டதோ, மனிதர்கள் மாதிரி?
பிரிந்துவிட்ட மனிதர்களைப்பற்றி எண்ணம் எழுந்தபோது, மீண்டும் ரமணனும் யமுனாவும் கவனத்திற்கு வந்தார்கள்.
ரமணன் பேசியபோதும் அந்தக் குரலில் ஏதோவொரு ஆதங்கம் இழைந்தது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
லீவு போட்டுட்டு மெட்ராஸுக்கு வரலாம்னு இருக்கேன், சார்... ஊர்ல இருப்பீங்களா, இல்ல ஏதாவது கூட்டத்துல பேச வெளியூர் போறதா இருக்கீங்களா? உங்ககிட்ட பேசணும்...
'உங்ககிட்ட பேசணும்...' - யமுனா கூறிய அதே வார்த்தைகள்.
இவனும் பேசவேண்டும் என்கிறான், அவளும் சொல்ல விஷயம் இருக்கிறது என்கிறாள்...
என்ன விஷயம்?
அவளிடம் சொல்லவேண்டியவற்றை இவனும், இவளிடம் கூற விரும்புவதை அவனும், ஒருவரிடம் மற்றவர் எப்படிச் சொல்வது என்கிற தயக்கத்தில் என்னிடம் வந்திருக்கிறார்களோ?
அப்படித்தான் இருக்கும் என்பது தெளிவாக, திரும்பி நடந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டேன்.
இரண்டு பேருமே அதிபுத்திசாலிகள். அடிப்படையில் நல்லவர்கள், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். ஆனாலும், இடையிடையே ஏனோ தேவையில்லாமல் 'கண்ணாமூச்சி' ஆட்டம் ஆடுகிறார்கள். எதற்காக?
ரொம்ப நேரமாக ரமணன், யமுனா பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது ஆயாசத்தைக் கொடுக்க, அவர்களைப் பற்றின நினைவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, புதுசாய் துவங்கவேண்டிய தொடர்கதைக்கான விவரங்களை வலுக்கட்டாயமாகச் சிந்திக்க முயற்சித்தேன்.
முடியவில்லை.
பிடித்தமான இருவர், தெரிந்தோ தெரியாமலோ மன உளைச்சலோடு வாழ்வது, வேதனையாக இருந்தது.
யமுனாவை எனக்குப் பதினைந்து வருஷங்களாகத் தெரியுமென்றால், ரமணனையும் கிட்டத்தட்ட பத்து வருஷங்களாக நன்கு அறிவேன்தான்.
தனித்தனியாக எனக்கு அறிமுகமான இவ்விருவரையும் சேர்ந்து, நான் பார்க்க, பழக, துவங்கி எத்தனை வருஷங்கள் ஆகியிருக்கும்? ஆறு? இல்லை... இந்த செப்டம்பர் மாசம் வந்தால் சரியாக ஏழு!
'ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்' விருது என்னுடைய 'விழுதுகள்' புஸ்தகத்துக்குக் கிடைத்தபோது, அந்த விழாவில்தான் இரண்டு பேரும் சேர்ந்து என்னை முதன்முதலாய் சந்தித்தார்கள்.
அப்புறம்...
கிட்டத்தட்ட ஒருமணிநேரத்துக்கும் மேலாய் யமுனா ரமணனைப் பற்றின நினைவுகளில் ஆழ்ந்து, அவர்கள் பேசிய பேச்சுக்களையும், அவர்கள் வாழ்க்கையில் இதுவரையில் நடந்துவிட்ட சம்பவங்களையும் அலசினபோது, திடுமென புத்தி விழித்துக்கொண்டு 'ஹா' என்று கடிவாளம் போட்டது.
புதுக்கதைக்கு 'கரு'வாக இவர்களையே உபயோகித்தால் என்ன? இந்த இருவரைவிட சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இருக்க முடியுமா? இவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் தற்சமயம் பலரின் அனுபவமாகவும் இருக்கிறது என்பதால், இதையே தொடராக எழுதினால் என்ன?
சின்னப் பொறியாக ஜனித்தது, யோசிக்கயோசிக்க தமதமவென்று தீயாகி, ஜுவாலை விட்டு எரிய முற்பட, இதுநாழிகை பீடித்திருந்த சோர்வு மறைந்தது. முன்னால் சாய்ந்து பேனாவையும் வெள்ளைத்தாளையும் எடுத்தேன்.
யோசிக்கவே அவசியமின்றி தலைப்பு வெளிப்பட்டது...
'சுட்டமண்'.
இதை வெற்றுத்தாளில் நடுநாயகமாய் மேலே எழுதினேன்.
'சுட்டமண்' - வாண வேடிக்கைகளை, நெஞ்சைத் தொடும் உணர்ச்சி சம்பவங்களைக் கொண்ட கதையாக இருக்காது. இரண்டு நபர்களை - ஓர் ஆண், ஒரு பெண் - அவர்களின் குணங்களை, விருப்பு வெறுப்புகளை, கொள்கைகளை, பேச்சு வார்த்தைகளை, அதன் விளைவுகளை மையமாகக் கொண்டு புனையப்படும் சாதாரணக் கதையாகத்தான் - அல்ல, உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பாகத்தான் இருக்கும்... இருக்க வேண்டும்.
வழக்கமாகப் பல கதைகளில் காணப்படுவதுபோல கதாநாயகியோ அல்லது நாயகன் மட்டுமோ பிரதானமாக இருக்காமல், இக்கதையில் இருவருமே முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பவர்கள். 'சுட்டமண்'ணில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் காணப்படும் என்பதால், கதை இருவர் கோணத்திலிருந்துமே சொல்லப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும்.
ரமணன், யமுனா - நான் ஏற்கனவே குறிப்பிட்ட விதத்தில் 'ஸ்ட்ராங் மைண்டட் இன்டிவிஜுவல்ஸ்'... தம்தம் வழிகளில் சுயமாக சிந்திக்கக்கூடிய, இது வேண்டும், அது வேண்டாம் என்று கட்டம் கட்டக்கூடிய அழுத்தமான புத்தி கொண்டவர்கள். இதனாலேயே, கதையை இருவரின் தனித்தனி கண்ணோட்டத்தோடும் சொல்வது அவசியமாகிறது.
ஆக, ஒரு அத்தியாயத்தை யமுனாவின் கண்ணோட்டத்திலிருந்து சொன்னால், மற்ற அத்தியாயத்தை ரமணனின் பார்வையில் எழுத வேண்டும். அப்போதுதான் ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களிலிருந்து புரிந்துகொள்ள வசதியாய் இருக்கும். ரோஜாவை இரண்டு பேர் நோக்கும்போது, ஒருவர் மலரைப் பார்க்கிற அதே சமயத்தில் மற்றவர் முள்ளைக் காண்கிற மாதிரி - ஒரே ஜன்னல் வழியாகப் பார்த்தாலும் ஒருவர் கண்ணில் வானத்து நட்சத்திரங்கள் தென்படுகையில், மற்றவர் பார்வையில் தரையில் இருக்கும் சேறு மட்டும் தெரிகிற மாதிரி...
கதையின் உருவம் வளரவளர, நகத்தைக் கடித்துக்கொண்டு இன்னும் தீவிரமாய் யோசித்தேன்.
எதற்குமே இரண்டு கோணங்கள் மட்டும்தானா? இருவருடைய பார்வைகளைத் தவிர மூன்றாவது கண்ணோட்டம் ஒன்று இருக்க வேண்டாமா? முக்கியமாய், யமுனாவும் ரமணனும் கண்ணைக் கட்டிவிட்ட குதிரைகளாய் அவரவர் புத்தி சொல்வதே சரி என்கிற பிடிவாதத்துடன் செயல்படும்போது, 'நீங்கள் இருவர் சொல்வதும் செய்வதுமே முழுமையில்லை - நீட்டிய கையில் நீ நகங்களைப் பார்க்கிறாய், அவள் உள்ளங்கையைப் பார்க்கிறாள் - இருவருடைய பார்வையும் ஓரளவுக்குச் சரிதான் என்றாலும், முழு கையையும் உணர வேண்டுமென்றால் இப்படி வாருங்கள்... இங்கிருந்தும் அங்கிருந்தும் புரட்டிப்புரட்டிப் பார்த்து பூரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்' என்று சொல்ல மூன்றாவது நபர் இருந்தால் நன்றாக இருக்குமோ?
யமுனா ஓர் அத்தியாயம், ரமணன் இன்னொன்று... சரி. நடுநடுவில் தேவைப்படும்போது மட்டும் மூன்றாவது கோணத்தைத் தொட்டுக்காட்ட நானே வந்துபோனால்?
பேனாவைக் கீழே வைத்துவிட்டு எழுந்தேன். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு சிந்தித்தேன்.
உதட்டைக் கடித்து, புத்தியை வேறெதிலும் மேயவிடாமல் ஆக்ரோஷத்துடன் யோசனை பண்ணியபோது, சின்ன விதையாக விழுந்த கரு, முளைவிட்டு இலை படர்த்தி, செடியாகி, கம்பீரமாய் பூத்துக் குலுங்கும் ஒரு மரமாக வளர...
பரபரப்புடன் நாற்காலியில் அமர்ந்து, 'கதாபாத்திரங்கள்' என்று எழுதி அடியில் கோடிட்டுவிட்டு, குறிப்புகளை எழுதினேன்.
அடுத்து, 'அத்தியாயங்கள்' என்று இன்னொரு தாளில் எழுதி, எங்கே ஆரம்பித்து, எப்படிக் கொண்டுபோவது, எவ்வாறு முடிப்பது என்ற விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
சுட்டமண்...
முதல் அத்தியாயம் - யமுனா.
நான் எழுதத் துவங்கினேன்.
***
1
யமுனா
சினிமாக்குப் போலாமா?
அவள் கேட்டது காதில் விழாத தினுசில் ராணி கையிலிருந்த நாவல் ஒன்றில் ஆழ்ந்திருக்க, அவளருகில் அமர்ந்திருந்த வசுந்தரா தலையைத் திருப்பி வாசல்பக்கம் நின்றிருந்த யாரிடமோ தன் கவனத்தை இழந்து தனக்குத்தானே சிரிக்க,
மேஜைக்கடியில் காலை நீட்டி, வசுந்தராவின் கால்களில் லேசாக யமுனா உதைத்தாள்.
ஆ!
என்ன 'ஆ'! மனுஷி தொண்டைத் தண்ணி வத்த கேக்கறதுக்கு பதில் சொல்லக்கூட முடியாம, அங்க யாரை அப்படி வேடிக்கை பாத்து சிரிச்சுகிட்டிருக்கே?
வசுந்தரா சற்றே முன் சாய்ந்து, கண்களைச் சிமிட்டினாள்.
இல்ல, யமுனா... ரூம் வாசல்ல 'வேளை வரல' சுந்தரம் தனியா நின்னுகிட்டு எதோ யோசனை பண்ணிட்டிருந்தார்... 'ஹிஹி' ரங்கன் அவரண்ட வந்து என்னமோ சொன்னதும், அவசரமா சுந்தரம் திரும்பிப் போனார். அவர் என்ன யோசிச்சிட்டிருந்தார், இவர் என்ன சொன்னார், அவர் ஏன் அவசரமா திரும்பிப் போனார்னு கற்பனைப் பண்ணிப்பாத்தேன், சிரிப்பு வந்திடுச்சு...
உங்க சிந்தனா சக்தியோட விளைச்சல எங்ககிட்டயும் பகிர்ந்துகிட்டு எங்களையும் சிரிக்கவெக்கறது!
'வேளை வரல' சுந்தரம், சாப்பிடலாமா, இல்ல அரைமணி வேலை பாக்கலாமான்னு தயங்கியிருந்திருப்பார்... 'ஹிஹி' ரங்கன், 'சாப்பிடறதா? இப்பவா? ஹி... ஹி... அதுக்கு இன்னும் வேளை வரலியே, சார்!... ஹி... ஹி...'ன்னு தன் யூஷுவல் அவுட்டுச் சிரிப்போட ஞாபகப்படுத்தியிருப்பார்... வேளை வராதப்ப சாப்பிடறது தப்புன்னு சுந்தரம் அலறியடிச்சுகிட்டு ஓடியிருப்பார்! வேறென்ன?
யமுனா சிரித்தாள்.
'வேளை வரல' சுந்தரம்...
'ஹிஹி' ரங்கன்...
'முகமது அலி' நாயர்...
அங்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம் போவதற்குள் இப்படி அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒவ்வொருவருக்கும் பட்டப்பெயர் சூட்டின பெருமை யமுனாவையே சாரும்.
எதற்கெடுத்தாலும் 'வேளை வரல' என்று கூறி தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளும் சுந்தரம், சரியான சாம்பிராணி... சாது. 'டேய்' என்று கண்களைச் சுழற்றிக்கொண்டு குரலை உயர்த்தி யாரையும் அதட்டக்கூடத் தெரியாதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்பதோடு, 'சுந்தரம் சார், இந்த லெட்டரைக் கொஞ்சம் படிச்சு பதில் எழுதித் தரீங்களா? இந்த ஸ்டேட்மெண்டை சரிபாக்க முடியுமா? சாயங்காலமா வீடு திரும்பறப்ப இந்தப் புஸ்தகத்தை என் மாமா ஆபீஸ்ல குடுத்துடறீங்களா? போற வழிதானே...' என்று ஆளாளுக்கு வேலை வாங்கினாலும் வாயைத் திறந்து முனகாமல், முகம் சுளிக்காமல் செய்வது ஒருபக்கமென்றால், 'பஸ்ஸுல ஏன் அல்லாடறீங்க? வசதியிருக்கு... பேசாம ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்க வேண்டியதுதானே?' என்றோ, 'நேத்து கச்சேரிக்குப் போயிருந்தீங்களா? எப்படியிருந்துச்சு?' என்றோ, 'பாண்ட் துணி மலிவா வாங்கினீங்களே, தெச்சிட்டீங்களா?' என்றோ எதுகுறித்து யார் கேட்டாலும், 'ஸ்கூட்டரா? அதெல்லாம் வாங்கறதுக்கு வேளை வரல, சார்' என்றும், 'கச்சேரிக்குப் போகமுடியல, சார்... திடும்னு விருந்தாளிங்க வந்துட்டாங்க... எல்லாத்துக்கும் வேளை வரவேணாமா?' என்றும், 'கடைக்குப் போன ரெண்டு தரமும் டெய்லர் இல்ல, காஜா அடிக்கிற பையன் மட்டும் இருந்தான்... சரி, வேளை வரலன்னு திரும்பி வந்துட்டேன்' என்றோ, கொஞ்சம்கூட யோசிக்காமல் தயங்காமல் பதில் சொல்வது இன்னொரு பக்கம். இதனாலேயே வி.வி. சுந்தரம் - 'வேளை வரல' சுந்தரம் என்று யமுனா அவரைக் குறிப்பிட, மற்றவர் நடுவிலும் இதுவே பிரபலமானது.
'ஹிஹி' ரங்கன் - சரியான 'கேஸ்'. பத்து நிமிஷம் சேர்ந்த மாதிரி பேசுவதற்குள், 'ஹிஹி... என்ன செளக்கியமா? பாத்து நாளாச்சு... ஹிஹி... அன்னிக்கு மார்க்கெட்ல சந்திச்சதுதானே? கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியுது... உடம்புக்கு ஒண்ணுமில்லியே? ஹிஹி...' என்று தேவையில்லாமல் சிரித்து வெறுப்பேற்றிவிடுவதில் மன்னன். 'அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறீர்களாமே?' என்றாலும் 'ஹிஹி'... 'தக்காளி கிலோ என்ன விலை தெரியுமா? எட்டு!' என்றாலும் ஹிஹி... 'இந்த வருஷம் ஆனாலும் தண்ணிக் கஷ்டம் ரொம்ப அதிகம்தான்... தினம் ராத்திரி ரெண்டு மணிக்கும் மூணு மணிக்கும் எழுந்து லாரி வருதான்னு பக்கெட்டும் கையுமா காத்திருக்கறதுல, சரியா தூங்கி வாரக்கணக்காச்சு!' என்றாலும் ஹிஹி... துவக்க வார்த்தையாகவோ, அல்லது முத்தாய்ப்பாகவோ இருக்கத் தப்பாது! அது என்ன அடுத்தவர் மனநிலை புரியாமல் இப்படியொரு சிரிப்பு என்று அறிமுகமான புதுசில் யமுனா எரிச்சலடைந்தது உண்டுதான். ஆனால், அது அவர் சுபாவம், வழக்கமாய் மற்றவர் சிரிக்கும் நோக்கத்தில் சிரிக்கவில்லை என்பது புரிந்த பிறகு, 'ஹிஹி' ரங்கன் என்று செல்லமாகப் பேர் வைத்து, சம்பந்தாசம்பந்தமில்லாமல் அவர் சிரிப்பதை ரசித்து இவள் 'ஜோக்' அடிப்பது வாடிக்கையாயிற்று.
'முகமது அலி' நாயரும் அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் இன்னொரு சுவாரஸ்யமான காரெக்டர்!
வாயைத் திறந்தாலேயே பாதி மலையாளம், பாதி தமிழ் கலந்த மணிப்பிரவாளத்தில், 'ஓ! அது ஞான் கழிச்சு.. இது செய்தது ஞானாக்கும்!' என்று தன் வீரதீரபிரதாபங்களை மனுஷர் அலுக்காமல் சலிக்காமல் அள்ளிவீசுவார் என்பதால், 'ஐ'ம் தி கிரேட்டஸ்ட்' என்று பறைசாற்றிக்கொண்ட முகமது அலியின் பெயர் அவருக்கு அடைமொழியாயிற்று.
வசுந்தரா குறிப்பிட்ட சுந்தரம், ரங்கனைத் தொடர்ந்து நாயரின் நினைப்பு எழ, முதல்நாள் மாலை நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்தில் முட்டி, குபீரென்று சிரிக்க வைத்தது.
மேஜைமேல் இருந்த வசந்தராவின் கையைப் பிடித்துக்கொண்டவள், ஹேய் வசு... நேத்து நம்ம முகமது அலி... ஓஹ்ஹோ...ஓ... என்னாச்சு நினைவிருக்கா? ஹோஹ் ஹோ...ஓ... நாற்காலில உக்காந்திட்டு எழுந்திருக்கறப்ப, ஆணில வேஷ்டி மாட்டி, டர்ருன்னு கிழிஞ்சு, பின்னாடி 'ட' மாதிரி... அ... ஹ்... ஓ... ஹ்...
சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு முன்னால் கவிழ்ந்து யமுனா உரக்கச் சிரிக்க, வசுந்தராவும் அவளோடு சேர்ந்துகொண்டாள்.
அரைநிமிஷம் போலச் சிரித்து மகிழ்ந்து கண்களில் ததும்பிய நீரைத் துடைத்து நிமிர்ந்தபோது, இந்த அமர்க்களங்களால் பாதிக்கப்படாமல் ராணி தன் போக்கில் புஸ்தகம் படித்துக்கொண்டிருப்பது புரிய, எட்டி புஸ்தகத்தைப் பிடித்துத் தழைத்தாள்.
ராணி திடுக்கிட்ட மாதிரி விழித்தாள்.
என்னப்பா? எதுக்குப்பா புக்க இழுக்கறே? விடுப்பா... கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... பாதி அத்தியாயத்துல நிறுத்த வச்சிடாதப்பா...
இந்த ராணிக்கு யமுனா கொடுத்திருக்கும் பட்டப்பெயர் 'அப்பா ராணி'... நாலு அப்பா போடாமல் முழுசாய் ராணிக்கு ஒரு வரி பேசத் தெரியாது. மைசூரில் பிறந்து, திருமணம் ஆகும்வரை பெங்களூரில் வளர்ந்தவள் என்பதால், எதற்கெடுத்தாலும் ஒரு 'அப்பா'தான். சக பெண் ஊழியர்களிடம், 'இந்த ஸாரி நல்லாயிருக்குப்பா...'; பியூன் முருகனிடம், 'ஒரு காபி வேணும்பா...'; தெருமுனையில் நின்று மாமூலாய் பிச்சை கேட்கும் ஒற்றைக்கை ஆசாமியிடம்கூட, 'இன்னிக்குச் சில்லறை இல்லேப்பா...'தான்.
யமுனா சிரித்தாள்.
இருப்பா... பதறாதப்பா... நாங்க விழுந்துவிழுந்து சிரிக்கறதுகூட காதுல விழாம அப்படி என்னப்பா புஸ்தகத்துல சுவாரஸ்யம்? யார் எழுதினதுப்பா?
கேள்விகளைக் கேட்டவாறு புஸ்தகத்திற்குப் போடப்பட்டிருந்த பிரவுன் பேப்பர் அட்டையை - அலுவலகத்தில் படிக்கும்போது மற்றவர்கள் கதைப் புஸ்தகம் என்பதை உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டிருந்ததை - பிரித்தாள்.
அட! 'கப்பல் பறவை'... சந்திரசேகரன் அங்கிள் எழுதினது!
ராணி