Pani Puyal
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsPali Malar Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theevu Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKollimalai Kiss Rating: 0 out of 5 stars0 ratingsSonnathu Neethaney? Rating: 0 out of 5 stars0 ratingsThevatha Rating: 0 out of 5 stars0 ratingsNila Sirikkirathu! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pani Puyal
Related ebooks
Kaadhal Brahma Rating: 4 out of 5 stars4/5Kaanal Nathigal Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Kanavugal Kathirukindrana Rating: 0 out of 5 stars0 ratingsSorkathin Kaladikalil Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Iranthana Rating: 2 out of 5 stars2/5Then Sindhum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsThapithey Theeruven Rating: 0 out of 5 stars0 ratingsYandhra Mandhra Thandhra Rating: 0 out of 5 stars0 ratingsMalaikkum Kolai Kangal Rating: 0 out of 5 stars0 ratingsMithavai Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsNattupura Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsAayul Sirai Rating: 0 out of 5 stars0 ratingsSolladi Sivasakthi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsEn Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsIlakkanam Meeriya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsSayangala Megangal Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pani Puyal
0 ratings0 reviews
Book preview
Pani Puyal - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
பனிப் புயல்
Pani Puyal
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
பனிப் புயல்
முன்னுரை
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்...
ஜனிக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. குற்றவாளிகள் தங்கள் சுற்றுச் சூழல்களால் உருவாக்கப்படுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை, இவன் திருடன், இவன் கற்பழித்தவன், இவன் கொலைகாரன் இவனுக்கு நேர்மையாய் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைத்து விட்டதா எனப் பார்க்கிறோம். அப்படி கிடைத்துவிட்டால் நீதி பிழைத்தது சட்டம் சாகவில்லை என்றெண்ணி அதனை அப்போதே மறந்து விடுகிறோம்.
குற்றவாளி... இந்த மண்ணில் ஜனிக்கும் போதே இந்தப் பெயருடன் பிறக்காத மனிதன், அவனும் நம்மைப் போல ஒரு மனிதன்தான். அவனுக்கும் வாழ சிந்திக்க, தன் வாழ்வைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. நடைமுறையில் அவனை அதுவும் சிறைக் கம்பிகளிடமிருந்து மீண்டு வந்தவனை நாம் மனிதனாகவே மதிக்கத் தயராய் இல்லை. துரதிருஷ்டவசமாக அவன் ஏழையானால் அவனுக்கு வாழ்க்கை மட்டுமல்ல; வயிற்றுப் பசி கூட மறுக்கப்படுகிறது. இதனால் அவன் திரும்பவும் அதே பாதையில் பயணப்பட்டு அதே சிறைக்கம்பிகளிடம் தஞ்சம் அடைகிறான்.
தண்டனைக் கொடுப்பதும் தண்டனையை நிறை தேற்றுவதும் மட்டுமா இந்த சமூகத்தின் கடமை? அந்த தண்டனைக்குறியவன் மறுபடி குற்றம் செய்யாமல் அவனை வாழ வைப்பதும் இந்த சமூகத்தின் கடமையல்லவா.
உணர்ச்சிகளின் உந்துதலில், கோபத்தின் கொந்தளிப்பில்தானே நீதிமானாகவும் மரணத் தண்டனை அளிப்பவனாகவும் விநாடியில் மாறிவிடுகிற-மன நோய் கொண்ட- பரிதாபத்திற்குரிய அந்த ஜீவனை... நாம் காவலர் என்றும் வழக்கறிஞர் என்றும் சட்டமன்றம் என்றும் இழுத்து வந்து அவன் செய்த அதே குற்றத்தை ஏழெட்டுப்பேர் கூடி நின்று வேடிக்கைப் பார்த்து, கசாப்புக் கடை ஆடாக பலியிடுவது எங்ஙனம் நியாயம். இதுவா நீதி; இதுவா நேர்மை, அறியாமையின் காரணமாய் அவன் செய்ய, அறிந்தே இந்த சமூகம் மீண்டும் அதைச் செய்வதா?
சமூகத்தின்-விஞ்ஞானத்தின் நோக்கம் மனிதனை மனிதனாக வாழ வைப்பதா, அன்றி விலங்காக்கி அவன் கையில் விலங்குப் பூட்டி அவன் முகத்திற்குக் கருந்திரையிட்டு கழுத்தில் கயிற்றை மாட்டுவதா? போதுமே இந்த அநாகரிகம்.
மனிதனை மனிதன் கொல்வது அநீதி. அநியாயம். அறியாமை. அராஜகம். தேசத்திற்குத் தேசம் போரிட்டு கூட்டம் கூட்டமாய் கொடு நோய் கண்டவர்களாக செத்து மடிவது எங்ஙனம் சரியாகும். அரசியல் ஆசனவாதிகள்- பதவி பித்தர்கள் - கருத்து வேற்றுமைக் காரணமாய் எங்கோ மூலைமுடுக்குகளில் ஏதுமே அறியாத அப்பாவிகள் குண்டுவீச்சற்குள்ளாகி மூச்சை மறப்பதும் நொண்டி முடமாவதும் எங்ஙனம் நியாயமாகும்?
இந்த சமூகம் குற்றவாளி என்று முத்திரைக் குத்திவிட்ட ஒருவனின் மன உணர்வு, வாழ்க்கைப் போராட்டமே இந்த 'பனிப் புயல்',
இதில் வரும் மக்கள் என் எழுதுகோலிலிருந்து ஜனித்தவர்கள் என்பதை மறந்து, என் எழுதுகோலில் ஆசனமிட்டு அமர்ந்து தங்கள் கண்ணீர்த் துளிகளால் என் எழுதுகோலை நிரப்பி எழுதிக் கொண்டார்கள் என்பதே சத்திய வாக்கு.
நாகரிகப் பூச்சுக் காணாமல் இன்னமும் நம் இந்திய கிராமங்கள் குடிநீருக்கும் மின் இணைப்புக்கும் மட்டும் ஏங்கி இருளில் தவிக்கவில்லை. வளமான வாழ்விற்கும் தரமான கல்விக்கும் அந்த சேற்றுக்கால்கள் பெருமூச்சுடன் கிராமத்து புழுதி வெய்யிலிலும் ஒட்டிய வயிறுமாய் வானம் பார்த்து நடை போடுகின்றன. நம் நாட்டிற்கு சுதந்திரம் வந்து விட்டதாக தேசீய கீதம் சொல்கிறது.
ஆயின் இந்த குக்கிராம மக்களின் ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இன்னும் ஒரு சுதந்திர விடியல் விடியவில்லை.
என்று விடியும் அந்த புது விடியல்...
'ஜனனி வில்லா' சென்னை-19
என்றும் அன்புடன்,
ஹம்சா தனகோபால்
பனிப் புயல்
1
மோகனூர் பஸ்ஸிலிருந்து அவன் மட்டும் ஒற்ற ஆளாய் இறங்கினபோது மேலைச் சூரியன் வன்மத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். இராசிப் பாளையத்திற்கு அழகையும் அந்தஸ்தையும் கொடுக்கிற காந்தமலை முருகன் கோவிலுக்குச் சிறுக சிறுக கூட்டம் போய்க் கொண்டிருக்கிறது. ஓ... இன்று அமாவாசையா... அதுவும் தை அமாவாசை.
ஆங்காங்கே வண்டிக் கட்டி வந்தவர்களின், புகையும் அடுப்புக்கள் முதன் முதலாக மழித்துக் கொண்ட சிறு தலைகள் மூக்கில் ஒழுக காது குத்தலுக்காக சிணுங்கிக் கொண்டிருக்கின்றன.
அவனுக்கு இதையெல்லாம் பார்கையில் ஓர் ஏக்கமும் அதே சமயத்தில் தன்னை யாரும் இனம் காணவில்லை என்கிற நிம்மதியும் எழ, பஸ்ஸிற்காக ஓடி ஏறும்-கட்கத்தில் இடுக்கிய பையும் ஊதாச் சட்டையும் வெள்ளை வேட்டியுமாக-அந்த நடுத்தர வயது மனிதனைப் பார்க்ககையில்... இவன்... இவன்...
அத்தனாரி இல்லை... ஆமாம் அதே அத்தனாரிதான். சின்ன வயசில நான் பிடிச்சு கீழே தள்ளினதால ஏற்பட்ட காயம் நெத்திப் பொட்டில இன்னும் பெரிய தழும்பா இருக்கே. உம்... அந்த வழக்கில் இவன் முதல் சாட்சி. இவன் மட்டும் கொஞ்சம் மாத்தி சொல்லியிருந்தா... கிடைச்ச தண்டனை குறைச்சிருக்குமோ.
நினைவுகளின் சுமையில் அவன் கையில் வைத்திருந்த பையில் இனிப்பும் காரமும் பூவும்... அதுவே பெரிய சுமையாகிப் போக... இந்த இராசிப் பாளையத்திலிருந்து மணியம் காளிப்பட்டிக்கு மூன்று பர்லாங்கு இருக்குமா.
மூன்று பர்லாங்கு மூன்னுாறு மைல்களாக தோன்றி மிரட்டுகின்றன. எத்தனை வருடங்கள்... எத்தனை இரவுகள் எத்தனை பகல்கள், அவனைப் பொறுத்தவரை எல்லாம் இரவுகளே.
அவன் நெஞ்சுக்கினிய இதயக்கிளி கண்ணம்மாவைப் பார்த்து விட்டால்... இறும்பாக கனக்கும் இந்த நெஞ்சம் பூவாக மலர்ந்து விடும். இத்தனை நாட்கள் தனிமை இருளில் தவித்த தவிப்பெல்லாம் கனவுகளாகிவிடும். கண்ணம்மா... அவள் மடிக்குழந்தையாகி... அவன் காத்திருந்த காலத்திற்குப் பலன் கிடைத்து விடும்.
கண்ணம்மா... அவன் கண்ணம்மா... அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இத்தனை வருடங்களில் காலம் அவள் உடலில் தன் கைவரிசையைக் காட்டியிருக்குமோ. முடியாது. அவனைக் கேட்காமல் அவள் உடலைத் தொட எந்த காலத்தாலும் முடியாது.
உம்... இராசிப்பாளையமும் அதன் வழியும் கூட அப்படி ஒன்றும் காலக்கரங்களில் மாறிவிட வில்லை.
சாலையோரத்தில் நான்கு கால்களும் கட்டப்பட்ட நிலையில் மூச்சுத் திணறி விழித்து பரிதாபமாக பார்க்கும் மாட்டிற்கு லாடம் அடித்துக் கொண்டிருக்கும் கிழப்பக்கிரி, வாயில் புகையும் பீடியை எடுத்து விட்டு கண்ணுக்குச் சாரங்கட்டி எதிர்வரும் இவனைப் பார்க்கிறார்.
யாரு நம்ம முத்துப் பயலா. அம்மாசிக் கவுண்டர் மவன் முத்துக்குமரனா... நீ.
தலையிலும் இமைகளிலும் புருவங்களிலும் மீசையிலும் பஞ்சு ஒட்ட வைத்ததைப் போல நரைத்து வளைந்து சிறுத்து நிற்கும் கிழவனைப் பார்க்கிறான். வயசு தொண்ணுாறு இருக்குமா. இல்லை நூற்றுக்கு மேலேயா. எப்படி இனம் கண்டு கொண்டது கிழம்.
அவன் தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்டுகிறான்.
செளக்கியமா முத்து... உட்டுட்டாங்களா. இல்ல தப்பிச்சு ஓடியாந்தியா.
அவன் மறுப்பாக தலையாட்டுகிறான்.
ஒன்னை தூக்கிலே போட்டுடுவாங்கன்னு ஊரே பேசுச்சு. இந்த மட்டும் பொழச்சு வந்துட்ட. இனி புத்தியா பொழ.
முத்துக்குமரனுக்கு எரிச்சலும் கோபமும் வேதனையும் எழ கிழவனிடம் தலையாட்டி விடைப்பெற்று மேலே நடக்கிறான். கண்ணம்மாவைப் பற்றி கிழவனிடம் கேட்டிருக்கலாமோ, வேண்டாம் அதற்கு வயது அதிகமாகி விட்டது. புத்தி ஸ்வாதீனத்தில் இருக்காது. ஏதாவது உளரலாம்.
அவன் வேட்டியை மடித்துக் கொண்டு வேகமாக நடக்கிறான். என்னோடு போட்டியா என்று கதிரவன் கோபத்துடன் பார்க்கிறான். சாலையின் இருமருங்கும் நெற்பயிர் காற்றில் ஒரே சீராக அலை அலையாக சாய்ந்து நிமிர்கின்றன. எங்கோ ஓடுகின்ற பம்ப் செட் இவன் காதுகளில் சுதந்திரத்தைச் சொல்கின்றன.
கண்ணம்மா... கடைசியாக அவனை வந்து பார்த்து ஐந்து வருடம் இருக்குமா, இல்லை இந்த மாசி வந்தால் ஆறு வருடம். உம்... அவளைக் குற்றம் சொல்ல முடியாது. வயற்காட்டைப் பார்ப்பாளா. வீட்டைப் பார்ப்பாளா. ஒற்றை மனுஷியாய் பஸ்ஸுக்கும் இரயிலுக்குமாக அலைவாளா. துணையில்லாமல் இந்த சேலம் மணியம் காளிப் பட்டியிலிருந்து வேலூர் அதுவும் ஆற்காடு வேலூர் வருவது என்பது சுலபமா.
கிளி மாதிரி இருக்கும் பெண் செய்யக் கூடிய காரியமா அது. அதுவும் காலம் இருக்கிற இருப்பில்.
ஊரை நெருங்க நெருங்க அவன் இதயம் பருந்தாக அடித்துக் கொள்கிறது. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், உறவினவர்கள் நடுவில்... அவன் அப்படி ஓர் காரியம் செய்திருக்கக் கூடாதே. அதுசரி. பார்த்துக் கொண்டு சும்மாவா நிற்க முடியும். அவன் ஒரு ஆண் பிள்ளையல்லவா.
அவன் பார்வை வயலில் படிகின்றது. அங்கொன்றும் இன்கொன்றுமாக காட்டு கொட்டகைகள் அதிகரித்துள்ளன கண்ணில் படும் ஒவ்வொரு பம்ப் செட்டும் கிராமத்தின் முன்னேற்றத்தைச் சொல்கின்றன.
மண் சாலையை அதர அடித்து ஓடும் கரும்பு லாரிக்காக அவன் ஒதுங்கிக் கொள்கிறான். அதைத் தொடர்ந்து இரட்டை மாட்டு வண்டிகள் ஜல்லென்று புழுதியைக் கிளப்புகின்றன. காந்தமலை முருகன் கோவிலுக்குப் போகும் வண்டிகள். அதிலுள்ள குழந்தை குட்டிகள், ஆடவர், பெண்டீர் அனைவரும் அவனையே உற்றுப் பார்ப்பதாக அவனுக்கு உள்ளுணர்வு.
அவனை யாருக்கு, அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து நினைவிருக்கும்.
பாதையோரத்தில் பெரிதாக அரச மரத்திற்கு வந்தவுடன் அவன் பார்வை பாதங்களை முந்துகின்றன. அங்கே கொஞ்சம் தொலைவில் அவன் இளமையின் காட்சியாய் சுவையாய் நின்ற காட்டு கொட்டகை...
அவனால் நம்ப முடியவில்லை. பாதங்களை இழுத்து வயல் வரப்பில் ஓடாத குறையாக நடக்கிறான். இரண்டு வேப்ப மரங்களின் நடுவே அந்த கொட்டகை அவன் வாழ்ந்த இல்லறத்தைச் சொல்லி இடிந்து போன மண்சுவரும் சரிந்து இற்று கறுத்த கூரையுமாய் நிற்க, வெளி முற்றத்தில் புல் பூண்டு முளைத்து, ஓரத்தில் உடைந்து போன அரைக்குழவி அம்மி, ஒருபுறம் பிளந்த உரல்... அவன் இதயம் துடிப்பை மறந்து ஒரு கணம் திணற...
கண்ணம்மா... அவன் கண்ணம்மா... அவள் எங்கே, அடித்து அலை புரண்டு கரைபுரட்டி ஓடிவரும் காவிரி கொண்டு வரும் வருடா வருட காலராவில்... முடியாது... அவனைக் கேட்காமல் எந்த வியாதியும் எதுவும் அவன் கண்ணம்மாவை ஒன்றும் செய்ய முடியாது.
காலையில் தான் வெட்டிக் கொண்ட கிராப்பு மயிரை சிலுப்பிக் கொள்கிறான்.
அடுத்த வயலில் சேற்றில் இறங்கி உழும் இளைஞன் பெரிதாக முன்புறம் தொங்கும் கோவணத்தை இறுக்கிக் கொண்டே காளைகளின் கயிற்றை விட்டு இவனைப் பார்க்கிறான்.
அவன் கறிய மேனியில் பல இடங்களில் சேற்று சந்தனம்.
தம்பி இங்கே இருக்கிற கண்ணம்மா எங்கே.
கண்ணம்மாவா... நான் மோகனூருங்க கூலி வேலைக்கு வந்திருக்கேன். ஊருக்குள்ளே கேட்டுப் பாருங்க.
அவனை யாரோ கீழே பிடித்து தள்ளி விட்டார்களா. முத்து ஒரு கணம் சமாளித்துக் கொண்டு, உழாமல் வேடிக்கைப் பார்க்கும் அந்த கரிய வெற்று உடம்பான இளைஞனைப் பார்த்து விட்டு வரப்பில் வேகமாக நடக்கிறான்.
கண்ணம்மா எங்கே போய் விட்டாள். மனம் பரபரக்கிறது.
கொஞ்சம் நின்று நிதானிச்சி யோசியேன். அவ தனியா இம்புட்டு பெரிய காட்ல எப்படி குடியிருப்பா. அத நெனச்சுப் பார்த்தியா.
அவன் பையிலிருந்து எழும் பட்சண வாசனையில் மூக்கை இழுத்து சுவாசித்து விட்டு மண்சாலையில் நடக்கிறான். இவன் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்த அந்த கோவண கறிய இளைஞன் காளைகளை விரட்ட ஆரம்பிக்கிறான். அவன் காலடியில் சேறு புரண்டு புரண்டு எழுகிறது. சேற்றின் நிறத்திற்கும் அவன் காலிற்கும் பேதம் தெரியவில்லை.
அவன் ஊருக்குள் காலடி எடுத்து வைக்கும் போது மேலைச்சூரியன் களைத்துப்போய் மலை இடுக்கில் ஒளிந்து பார்க்கலானான். தினம் தினம் பார்க்கும் என்னைக் கேட்காமல் யார் யாரையோ கேட்கிறாயே என்கிற கோபம் அவன் உக்கிரத்தில் தெரிகிறது.
அவன் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. ஊருக்குள் நடுநாயகமாக விளங்கும் ஆள மரத்தைச் சுற்றிக்கொண்டு இடப்புறம் போய் ஒரு பெரிய வில்லை ஓடுகள் வேய்ந்த வீட்டின் முன் நிற்கிறான். வீட்டை அடுத்த மாட்டுக் கொட்டிலில் குத்துக் காலிட்டு பால் கறக்கும் கிழவி, இவனைத் திரும்பிப் பார்த்து விட்டு விலுக்கென தோளில் முகவாயை இடித்துக் கொள்கிறாள்.
சோளி போடாத தன் தொங்கிப் போன வெற்று மார்பை, சேலைத் தலைப்பால் மூடியபடி முணுமுணுக்கிறாள். வீட்டின் உள்ளேயிருந்து வைக்கோலை எடுத்து வரும் கிழவன் இவனைப் பார்த்ததும் நின்று விடுகிறார்.
யார்... முத்துவா... நீயா
கண்ணம்மா எங்கே. எங்கே மாமா கண்ணம்மா.
கிழவர் பதில் சொல்லும் முன் கிழவி முந்திக் கொள்கிறாள்.
"தே... அங்கிட்டென்ன பேச்சு செயிலுக்குப் போயிட்டு ஊருக்குள்ள வரதா. மானம் ரோசம் இருந்தா தானே தூத்தெறி.
அவன் முதுகில் சூட்டுக்கோலால் இழுத்துவிட்டார்களா.
கண்ணம்மா இங்கே இல்லை. இருந்தால் இவன் குரல் கேட்டதும் தாயின் அழைப்பில் ஓடிவரும் கன்றாக தண்டைகள் சப்திக்க பெரிய மார்பகம் குலுங்க ஓடி வந்திருப்பாளே.
அவன் அந்த ஆலமரத்தைச் சுற்றிக்கொண்டு நடக்கிறான். தெருவில் அவனுக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் போகிறார்கள். அவன் இல்லாத இடைவெளியில் அறுவடையானவைகள் புழுதியில் திளைத்து விளையாடுகின்றன.
மணியம்காளிப்பட்டி அவன் இருந்திருக்காத இத்தனை ஆண்டுகளில் அப்படி ஒன்றும் அதிகம் முன்னேறி விடவில்லை. அரண்டு மூன்று மளிகைக் கடைகளும் தெருவோரத்தில் ஒரு சைக்கிள் கடை. இங்கே சைக்கிள் வாடகைக்கு விடப்படும் என்கிற போர்டு. கடையில் ஒரு சிறுவன் மூக்கில் ஒழுக கரும்பைக் கடித்து துப்புகிறான். இரண்டு மூன்று சைக்கிள்கள் பரிதாபமாக பார்க்கின்றன. அந்த கடைக்கு அடுத்த குடிசையின் முன்பு ஒரு பெண்மணி முதுகைக் காட்டியபடி குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கிறாள்.
சைக்கிள் கடைக்கு எதிர்த்தாற்போல இருக்கும் வில்லை வீட்டின் பெரிய திண்ணையில் ஒரு-கயிற்றுக் கட்டில். அதில் படித்திருக்கும் உருவம் இருமுகிறது.
யக்கா... யக்கா... நீயா யக்கா கண்ணம்மா எங்கே...
யாரு முத்துவா... டேய் எந்தம்பி, உடன் பொறப்பு முத்துக்குமரனா... ஐயோ பாளுந் தெய்வம் என்ன இப்படி படுக்கையில் கெடத்திடுச்சே. அந்த தம்பிய எந்திரிச்சுப் பார்க்க முயலியே.
செல்லம்மா பாதி அழுகையும் பாதி ஒப்பாரியுமாக பேசுகிறாள். மூங்கில் குச்சிகளை கம்பிகளாக கொண்ட திண்ணைச் சுவர் ஜன்னலில் தெரியும் இரு விழி மின்னல் அவனை ஆவலோடு பார்க்கின்றன.
ஐயோ யக்கா... என் நிலம தெரியாம பேசறியே. எங்கே கண்ணம்மா. என் கண்ணம்மா எங்கே சொல்லு சொல்லு யக்கா.
கண்ணம்மாவா. நான் என்னத்த சொல்லட்டும்.
"மச்சான் கேக்குதில்ல சொல்லேன்மா.