Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pon Magal Vanthal
Pon Magal Vanthal
Pon Magal Vanthal
Ebook459 pages4 hours

Pon Magal Vanthal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352858897
Pon Magal Vanthal

Read more from Indira Soundarajan

Related to Pon Magal Vanthal

Related ebooks

Related categories

Reviews for Pon Magal Vanthal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pon Magal Vanthal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    பொன் மகள் வந்தாள்!

    Pon Magal Vandhal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொன் மகள்

    வந்தாள்!

    இந்திரா செளந்தர்ராஜன்

    என்னுரை

    இது ஒரு வித்யாசமான நாவல்!

    பழமையும் புதுமையும் கைகுலுக்கிக் கொள்ளும் ஒரு மாறுபட்ட களத்தில் அமைந்த நாவல்.

    படிப்பவர்கள் குறைந்து போய் பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நான் எழுத்தாளனாக உலாவிக் கொண்டிருப்பதால் இருக்கின்ற படிப்பவர்களை தக்கவைத்துக் கொள்ள மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. அப்படி மெனக்கெட்டு எழுதிய ஒரு நாவல் இது என்றும் சொல்லலாம்.

    நீங்கள் மெனக்கெடாமல் உங்கள் விருப்பத்திற்கான கற்பனைகளை எழுத்தாக்கினால் அது எவ்வளவு தூரம் வாசக உலகினை சென்றடையும் என்று சொல்லுவதற்கில்லை.

    சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாசிப்பவர்களை பற்றி கவலையே கிடையாது. தான் எழுதுவதே எழுத்து அதை நாலே நாலு பேர் படித்தால் கூட தனக்கு அது போதும் என்று எழுதும் அவர்களைப் போல் என்னால் எண்ண முடியவில்லை.

    இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

    எக்காரணம் கொண்டும் ஒரு எழுத்தாளன் வாசகனுக்காக என்று இறங்கிப் போய் எழுதிவிடக் கூடாது. புரிகிறது புரியவில்லை என்பதை பற்றியும் கவலைப்பட கூடாது என்பது இவர்கள் கருத்து.

    குறிப்பாக வெகுஜனங்களுக்காக எழுதும் எழுத்தாளர்கள் என்றால் அவர்கள் 22 காரட் தங்கம் போன்றவர்கள். அப்படி எழுதாதவர்கள் தான் 24 காரட் தங்கம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் நான் எந்த ரகம் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் வெகுஜனத்துக்கான எழுத்தாளன். அதை மட்டும் உறுதிபட கூறிக் கொள்கிறேன்.

    அந்த வெகுஜனத்தை கவரவும் சிந்திக்க வைக்கவும் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். ஒன்றை என்னால் உறுதியாக கூற முடியும். என்னை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. நான் பலவிதங்களில் பல கோணங்களில் தனித்து நிற்கிறேன்.

    இது பலமா பலவீனமா என்பதை எல்லாம் காலம்தான் கூறவேண்டும். இப்படி எனக்கான தனித்தன்மையோடு நான் எழுதியது தான் இந்த ‘பொன்மகள் வந்தாள்’ நாவல்.

    இதில் ஒரு 300 வருடத்துக்கு முந்தைய சரித்திரச் சம்பவங்களும் கொஞ்சம் கதையாகவும் கொஞ்சம் கருத்தாகவும் ஒரு கட்டுரை வடிவில் வெளிப்பட்டுள்ளது.

    தெற்கு பகுதியில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றாலம் போன்ற ஊர்களுக்கு பல காரணங்களுக்காக போய் வரும்போது காதில் விழுகின்ற வித்யாசமான விஷயங்கள் மனதில் கருக்கொண்டு சமயங்களில் நாவலாகி விடுகின்றன.

    ஐந்து வழி மூன்று வாசல், பொற்காசு தோட்டம், கூட்டுக்குள் புகுந்த உயிர் என்று பலநாவல்கள் அப்படித் தோன்றியவைதான். இவைகளிலும் சரித்திரத்துக்கு ஒரு இடம் அளித்திருந்தேன். அதே சரித்திரத்தை அடித்தளமாக கொண்டு இந்த பொன்மகள் வந்தாளை உருவாக்கினேன். இந்த கதைக்குள் ஆவி சம்மந்தமான விஷயங்களும் உண்டு. ஆவி என்று வந்துவிட்டாலே ‘அது ஒரு பொய் - ஏமாற்று ரகம் - மட்டமான கற்பனை’ என்கிற மாதிரி எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் அமானுஷ்யம் மற்றும் ஆவி சமாச்சாரங்களை விழுந்து விழுந்து படிக்கிற வாசகர்களும் ஒரு பக்கம் லட்சக்கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    இந்த வாசகர்கள் எல்லாம் மிக மலிவானவர்கள் என்பது இதை நம்ப மறுக்கும் சில பகுத்தறிவாளர்கள் கருத்து. ஐந்து விரல்களும் எப்படி ஒன்றுபோல் இருப்பதில்லையோ அப்படி மனிதர்களிலும் அவர்கள் ரசனைகளிலும் பலவிதமான பிரிவுகள்!

    ஆனால் ஒரு எழுத்தாளன் எல்லோருக்காகவும் தான் எழுதுகிறான். இதையும் நான் அப்படியே எழுதினேன். நான் வாழ்வை மிக ஆச்சரியமாக பார்க்கும் ஒரு மனிதன். பல நேரங்களில் நான் என்னையே மிக ஆச்சரியமாக பார்த்துக் கொள்வேன். கை விரல் நகங்கள், தேயாத பாதங்கள், இமைகளின் முடி இதெல்லாமே கூட என் வரையில் மிக வியப்பூட்டும் விஷயங்கள்.

    ஒவ்வொரு மனிதனுமே ஒரு பொறி இயல் கூடத்துக்கு இணையானவர்கள் என்றும் கருதுவேன். திராட்சைபழம் அளவுள்ள கண்களால் இந்த உலகை பார்க்க முடிவதை எண்ணி வியப்பேன். எனவே இந்த வாழ்வின் பின்னால் உள்ள சகலத்தையும் ஆராய்வதும் அவை அத்தனையையும் புரிந்து கொள்ள முற்படுவதும் எப்போதும் என்னிடம் இருந்து வந்துள்ளது.

    இப்படி வாழ்க்கையை ஆராய்வு நோக்கோடு பார்க்கும்போது நம் உயிரும் அது சார்ந்த புதிர்களும் தான் பெரும் சவாலாக உள்ளன. பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும். சாவே காணாத ஒரு உயிரைக் கூட இந்த உலகம் இதுவரை பார்க்கவேயில்லை. செத்துப் போனவர்களை பிழைக்க வைத்துவிட்ட பல சித்தர்களும் முனிவர்களும் கூட ஒரு நாள் போய்விட்டனர் என்பதே உலகில் மனித உயிருக்கான வரலாறாக உள்ளது.

    அப்படி இறந்த பின் என்னாகிறோம் என்னும் கேள்விக்கான பதில்கள் அவ்வளவுமே யூகமாயும், அனுமானமாயும் சொல்லப்பட்டவைகளாகவே உள்ளது. ஒரு இறந்து போனவராவது நேரில் வந்து சொன்னாலன்றி அதைப் பற்றி நாம் உறுதியான ஒரு முடிவுக்கு வரவும் முடியாது. இதுதான் நிலைப்பாடு. இந்த தொடரிலும் ஆவி ஒன்றின் செயல்பாடு வருகிறது. பின் அது எவ்வாறு மாறுகிறது என்பதை எல்லாம் நாவலை நீங்கள் படிக்கும்போது உணரலாம்.

    ஆவி வருவதால் இதன்மேல் ஆவிக்கதை என்னும் முத்திரை விழுவதை நான் விரும்பவில்லை. இது ஒரு பரபரப்பான மர்மக்கதை என்பதே சரி. என் கதைகள் குறித்து சிலரிடம் சில சமயங்களில் நான் தவறான அனுமானங்களை பார்த்திருக்கிறேன்.

    என் கதையை துளியும் படிக்காமல் அரைகுறையாக சிலர் சொன்னதை கேட்டுவிட்டு ‘உங்க கதையை படிக்கறதுன்னாலே எனக்கு பயம். அதனால நான் படிக்கல’ என்று சொன்னவர்கள் உண்டு. என் கதை என்றாலே அதனுள் அமானுஷ்யம் இருக்கும் என்று தாங்களாக நினைத்துக்கொள்ளுகிறவர்களும் உண்டு.

    அமானுஷ்யமே ஒரு கப்சா விஷயம்... அதைப்போய் படித்துக்கொண்டு என்று அலட்சியமாக கடந்தவர்கள் உண்டு. ஆனால் என் நாவல்களில் ஒன்றே ஒன்றையாவது முழுமையாக வாசித்துவிட்ட எவரும் அதன்பின் என் மற்ற நாவல்களை தேடாமல் இருந்ததே இல்லை. படிப்பதற்கு முன் பல மாதிரி நினைத்திருந்தவர்கள் கூட படித்த பின் தலைகீழாக மாறிப் போனார்கள் என்பதே உண்மை. அதேபோல எனக்கு இருக்கும் வாசகர்கள் போல ஒரு தீவிரமும் தேடலும் கொண்ட வாசகர்களையும் நான் பார்த்ததில்லை. அதிலும் இன்ட்நெட் எனும் வலைதளத்தில் எனது புத்தகங்களை வாசித்துவிட்டு என்னோடு தொடர்பு கொள்ள விரும்பும் பல்லாயிரம் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் தேடலை அதே வலைதளத்தில் பல முகவரிகளில் வெளிப்படுத்தி அதை நான் காண நேர்ந்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன்.

    மலேசியாவில் இருந்து ஒரு பேராசிரியர் மலேசிய பல்கலைகழகத்தின் செலவில் மதுரையில் இருக்கும் என்னைச் சந்தித்து பேட்டி கண்டு விட்டு சென்றதெல்லாமும் வாழ்வை ஆய்வு நோக்கோடு பார்த்து கேள்விகள் கேட்டு நான் எழுதிய படைப்புகளால்தான்.

    இப்படி நான் எழுதும்போது ஒரு சன்னமான செருக்கு தோன்றுவதாக யாராவது கருதினால் மன்னியுங்கள். எந்த ஒரு எழுத்தாளர் படைப்பையும் நான் மலிவாகவோ குறைவாகவோ மதிப்பிட்டதே கிடையாது. எழுதுவதன் பின் உள்ள முயற்சியும் கஷ்டமும் தெரிந்தவர்கள் சக எழுத்தாளர்களை மட்டமாக நினைக்கவும் மாட்டார்கள்.

    என் எழுத்து மிக மாறுபட்டது. அதை முழுமையாக வாசிக்காமல் விமர்சிக்காதீர்கள் என்று கூற விரும்பியும், அப்படியே இந்த பொன்மகள் வந்தாளும் உங்களுக்கு பல அரிய தகவல்களை தரும் என்று கூற விரும்பியுமே நான் இப்படி சில கருத்துக்களையும் கூறியுள்ளேன். இது குமுதம் சினேகிதியில் 42 வாரங்கள் தொடராக வெளியானது. முன்னதாக ரங்கநதி என்றொரு சமூகத் தொடரை எழுதி அதன் அமோக வெற்றியை தொடர்ந்து நான் இதை எழுதினேன். ரங்கநதி ஒரு கலாசாரபூர்வமான சமூகப்புதினம்.

    எனவே உடனேயே அடுத்த நாவலை தொடர விரும்பியபோது மாறுபட விரும்பியே மர்மத் தொடராக இதை வடிவமைத்துக் கொண்டேன்.

    இதன் வெற்றி, ஹாட்ரிக்காக மூன்றாவது தொடரையும் நான் குமுதம் சினேகிதியில் தொடர்ந்து எழுத வழி செய்துவிட்டது. இந்த தொடர் வாய்ப்பினுக்கு நான் குமுதம் சினேகிதி ஆசிரியர் திருமதி லோக நாயகிக்கும், குமுதம் நிர்வாகத்துக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    இந்த பொன்மகளை இனி நீங்கள் காணச் செல்லுங்கள். இவள் இன்றைய நவயுகப் பெண்தான்! இவளையும் நீங்கள் மிகவே விரும்புவீர்கள்.

    நன்றி.

    பணிவன்புடன்,

    இந்திரா செளந்தர்ராஜன்

    18-5-2013

    மதுரை-3

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    ஒரு புதையலை மையமாகக் கொண்ட

    அமானுஷ்யம் நிறைந்த மர்மத் தொடர்!

    1

    ‘இன்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாய் இந்த மண்ணில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுவதோடு, பெரும் அதிர்ச்சியும்கூட ஏற்படுகிறது!

    வியப்புக்குக் காரணம் அவர்கள் புத்தியைப் பயன்படுத்திய விதம்... அதிர்ச்சிக்குக் காரணம் அப்படி அவர்கள் பயன்படுத்திய புத்தியில் கால்பங்கைக்கூட இன்று நாம் பயன்படுத்தாதவர்களாக மழுங்கடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான்!

    ஒருவரது தொலைபேசி எண்கூட நம் நினைவில் இன்று பளிச்சென்று இல்லை. நம் கைபேசிகளில் அவர்கள் பெயர்தான் இருக்கிறது. நல்லவேளை, உரியவர்களின் பெயராவது நம் நினைவில் இருக்கிறது.

    நம் புதிய தலைமுறையும் கம்ப்யூட்டர், கால்குலேட்டர் என்று கருவிகளை தங்களது மூளைகளாக நினைத்தே வளர்ந்து வருகிறது. இவைகள் ஒருநாள் இயங்காது போனால் அல்லது இல்லாது போனால் நாம் எந்த அளவு ஸ்தம்பிப்போம் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

    நாம் உண்மையில் வளரவில்லை. வளர்ந்திருப்பதாகக் கருதுவது மாயை. இதை என்னால் ராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள சங்கராபுரத்தை வைத்தே உறுதிபடக்கூற முடியும்...!

    - ஆனந்தரங்கனின் ஆய்வுக்கட்டுரையிலிருந்து...

    சென்னை கபாலீஸ்வரர் கோயில்!

    முகப்பு பூக்கடையில் பூ வாங்கியபடி இருந்தாள் ஐஸ்வர்யா. வாசமுள்ள மல்லிகைப்பூ... விலையாக நூறு ரூபாயை நீட்டிய போது பூக்காரியிடம் லேசான திகைப்பு...

    சில்லரை இல்லையே கண்ணு...

    அடடா என்கிட்டேயும் இல்லையே...

    இப்ப என்ன பண்ணலாம். நீயே சொல்லு...

    அப்ப இந்தா பூ... பணத்தக் கொடு - வேற என்ன பண்றது?

    ‘ஐயோ கண்ணு... நீதான் முதல் போணி. கைநீட்டி வாங்குனதை திருப்பித் தரியே...?"

    அப்ப சரி... இந்த நூறு ரூபாயை நீயே வெச்சுக்கோ. நான் எப்பப்பல்லாம் கோயிலுக்கு வர்றேனோ அப்பல்லாம் பூ வாங்கிக் கழிச்சிக்கறேன். சரியா?

    அட பளிச்சினு ஒரு வழியை சொல்லிட்டியே... அப்படியே செய் கண்ணு... உன்னையும் நான் மறக்காம ஞாபகம் வெச்சுக்கறேன்.

    - பூக்காரி ரசனையோடு பேசி பூவைப் போலவே மலர்ச்சியோடு சிரித்தாள்.

    ஐஸ்வர்யாவும் பூவுடன் கோயிலுக்குள் நுழையத் தொடங்கினாள். அம்மாவுடன் ஏற்பட்ட பழக்கம் அது.

    கோயிலுக்கும் சரி, பெரிய வங்கள பார்க்கப் போகும் போதும் சரி வெறும் கையோட போகக்கூடாது. ஒரு கிள்ளு பூவாவது கைல இருக்கணும். அதுலயும் அம்பாளைப் பாக்கப் போகும்போது கைநிறைய பூவோட போய் அவ காலடில போட்டு சரணம் சொல்லணும். அப்படிச் செய்யறவங்களுக்கு அவ கண் நிறைஞ்ச அசலான புருஷனைத் தருவா. இல்லேன்னா பொடி போடறதும், சிகரெட் பிடிக்கறதும் வாய்ச்சு நாமதான் சீரழியணும் - என்று ஆனந்தமாகவும் அர்த்தப்பொதியோடும் பேசிய அவள் அம்மா சரஸ்வதியின் பேச்சு அவளுக்குள் அப்போது ஒருமுறை எதிரொலித்து அடங்கியது.

    நேராக நர்த்தன கணபதி!

    சற்றே அபூர்வமான சன்னதி... அங்கே நின்று மென்மையாக கன்னத்தில் போட்டுக் கொண்டவள் அப்படியே இடது புறம் சென்று முருகன் சன்னதியை வணங்கிவிட்டு கபாலீஸ்வரரை தரிசிக்க நடந்தாள்.

    அவ்வளவாகக் கூட்டமில்லை.

    மைக்கில் தேவாரப் பாடல் ஒலித்தபடி இருந்தது. போனால் போகிறதென்று பெய்த ஒரு ஐந்து நிமிட மழையில் கருங்கல் தரைப்பாகங்களில் அங்கங்கே ஈரத்திட்டுகள். அதில் கால் பதித்து நடக்கும்போது ஜில்லென்றிருந்தது.

    சில சுகங்கள், மிக மலிவானவை. ஆனால் அற்புதமானவை. அதில் ஒன்று மழைத்தரை! ஐஸ்வர்யாவுக்கு சற்று ஏகாந்தமாக இருந்தது. அப்படியே கபாலீஸ்வரர் சன்னதிக்குள் நுழைந்தபோது நாகாபரணம் தரித்த கபாலீஸ்வர லிங்கம் கம்பீரமாக அவள் தரிசனக் கண்களில் நிரம்பி வழிந்தது. குருக்கள் அவளிடம் இருந்த பூவை வாங்கிக் கொண்டபோது சரிபாதியை கற்பகாம்பாளுக்காகக் கேட்டு வாங்கிக் கொண்டாள்.

    அர்ச்சனை பண்ணணுமாம்மா?

    ஆமாம்...

    பேர், நட்சத்திரம், கோத்ரம் சொல்...

    அப்பாவுக்கு இன்னிக்கு பிறந்தநாள். பேர் ஆனந்தரங்கன். நட்சத்திரம் திருவாதிரை. சிவகோத்ரம் - குருக்கள் அந்தப் பெயர் நட்சத்திரத்தோடு மந்திரத் தொடர்பு கொடுத்தவராக சன்னதிக்குள் நுழைந்தார்.

    ஐஸ்வர்யா தந்த பூவை லிங்கம் மேல் சாற்றிவிட்டு அர்ச்சனை முடித்து கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு வந்தார். தட்டில் ஒரு நூறு ரூபாயைப் போடவும் அவர் முகத்தில் ஒரு குபீர் மலர்ச்சி.

    அவர் கடவுளுக்குப் பக்கத்திலேயே இருந்தாலும் கரன்சிக்கும் ஒரு சக்தி இருப்பதை அந்த நொடியில் அவளது விஸ்காம் படித்த மூளை ரசனையோடு குறித்துக் கொண்டது.

    விபூதியை வாங்கி நெற்றியில் ஒரு கீறலை உருவாக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தவளை ஒரு குரல் தடுத்தது.

    அம்மாடி...!

    - திரும்பினாள்.

    நீ ஆர்கியாலஜிஸ்ட் ஆனந்தரங்கனோட பொண்ணு தானே?

    எக்ஸாக்ட்லி... நீங்க?

    நான் உன் அப்பாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட். வைத்யநாதன் என் பேர். ஒரு இங்கிலீஷ் டெய்லில சீஃப் சப் எடிட்டரா இருக்கேன். ஆமா உன் அப்பா எப்படி இருக்காரும்மா...?

    ஃபைன்... நல்லாருக்கார். இன்னிக்கு அவருக்கு பர்த் டே... அதான் அர்ச்சனை பண்ணிட்டுப் போக வந்தேன்.

    உன் அப்பாவுக்கு எனக்கு தெரிஞ்சு பெருசா கடவுள் நம்பிக்கை கிடையாதேம்மா...

    அதனால என்ன?

    இல்ல கேட்டேன்... ஆமா அப்பா இப்ப இந்த சென்னைல தான் இருக்காரா?

    இல்ல அங்கிள். அப்பா ஊர்லதான் இருக்கார். வி.ஆர்.எஸ். வாங்கிட்டு இப்ப எங்க ஊர் பத்தின ஆராய்ச்சில இருக்காரு...

    மை குட்நெஸ்... அப்பா உங்க ஊர் பத்தின ஆராய்ச்சியில இறங்கியிருக்கார்னா அப்ப நிச்சயம் அங்க பெருசா ஏதோ இருக்கணும். பை த பை நீ என்னம்மா பண்றே?

    நான் விஸ்காம் முடிச்சிட்டு டைரக்டர் சூர்ய பிரபாகர்கிட்ட அசிஸ்டெண்டா இருக்கேன்.

    ஓ... சினிமாத் துறையா? எப்படி உங்கப்பா அனுமதிச்சார்?

    நான் அனுமதிக்க வெச்சேன் அங்கிள்.

    எந்த நம்பிக்கைலம்மா நீ சினிமா இண்டஸ்டரி பக்கம் வந்தே? ரஜினி படமே ஒரு மாசம்கூட ஓட மாட்டேங்குது...

    - அதற்குப் பதில் சொல்லாமல் ஒரு மென் சிரிப்பு சிரித்தாள் ஐஸ்வர்யா.

    உன்கிட்ட நான் ஒரு நல்ல மெச்சூரிட்டிய பாக்கறேன். என் கேள்விக்கு நீ சிரிச்ச சிரிப்புல பல அர்த்தங்கள் தெரியுது. ஆமா நீ எங்க தங்கி இருக்கே?

    என் மாமா வீடு இங்க அபிராமபுரத்துல இருக்கு அங்கிள்.

    "நல்லவேளை...

    ஹாஸ்டல்ன்னு நீ சொல்லல. இது செல்போன் யுகம்! போட்டோ கிராபி, ஸ்க்ரீன் பிரிண்டிங்ணு எல்லாமே மலிஞ்சு ஒண்ணுமில்லாம போச்சு. அழகான பெண்களுக்கு இதனால ஆதரவை விட ஆபத்துதான் அதிகம்."

    உண்மைதான் அங்கிள். ஆனா நான் ஜாக்கிரதையா இருக்கேன்...

    - மெல்ல நடந்தபடியே பதில் சொன்னாள் ஐஸ்வர்யா. அவரும் நடந்தார். பேச்சை விடவில்லை.

    உன் மாதிரி பெண்கள் கோயிலுக்கு வரதே அபூர்வம். அதுலயும் அப்பா பிறந்த நாளுக்காக நீ அர்ச்சனை பண்ணே பாரு - உன்னை ரொம்ப பாராட்டணும் நான்... ஒரு ஆறு மாசத்துக்கு முந்தி சீனா போயிருந்தேன். அங்க இருக்கற உன் வயசு பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி கடவுள்ங்கற வார்த்தையே தெரியல. யார் கடவுள்? அவர் எங்க இருக்கார்? அவரை வணங்கறதுன்னா எப்படி? ஏன் வணங்கணும்?னு எவ்வளவு கேள்வி கேட்டாங்க தெரியுமா... திகைச்சு போயிட்டேன். ஆனா இங்க அப்படி ஒரு நிலை எந்தக் காலத்துலயும் வராது. உன் வயசு பெண்கள் கோயிலுக்கு வரலேன்னாலும் பக்தி இல்லாம இல்லை. ஆம் ஐ கரெக்ட்?

    - அவர் ஐஸ்வர்யாவிடம் மிக சரளமானார். வயதாகிவிட்டாலே கொஞ்சம் இப்படிதான்... மனதில் படுவதை எல்லாம் காதில் கொட்டி விடுவோம் என்பது போலவும் இருந்தது அவர் பேச்சு.

    கற்பகாம்பாள் சன்னதியும் வந்தது.

    முகப்பு படி ஏறும்போதே அம்பாள் பளிச்சென்று தெரிந்தாள். அது ஒரு இணை சொல்ல முடியாத கம்பீரம். மனதை நிறைக்கும் அற்புதம்.

    மொத்த உடம்பெங்கும் பரவி சிலிர்க்க வைக்கும் ஒரு பக்தி மின்வெட்டு, ஐஸ்வர்யா அந்தக் காட்சியில் தன்னை மறந்தாள். குருக்கள் குங்குமம் கொடுக்கவும் அதை மட்டும் நிகழ்கால இளம்பெண்கள் போல மிக மெலிதாக இட்டுக் கொண்டாள்.

    அவர் அதை கவனித்தார்.

    நீ அந்த காலம் கொஞ்சம், இந்த காலம் கொஞ்சமா டூ இன் ஒன்னா இருக்கே... - என்று விமர்சித்து சிரித்தார். அப்போது அவர் செல்போன் ஒலிக்கவும் எடுத்துக் கொண்டு ஓரமாய் ஒதுங்கினார். விஞ்ஞான அத்து மீறல். ஆலயமாவது ஒண்ணாவது...? ஐஸ்வர்யா அவரிடம் சொல்லிக் கொண்டு விடைபெற சிறிது நேரம் நின்று பார்த்தாள்.

    அவரோ ஐஸ்வர்யாவுக்கு பதிலாக புதிதாய் ஒருவரைப் பிடித்துவிட்டது போல தெரிந்தது.

    சரி, இனி அவருக்கு நாம் தேவைப்பட மாட்டோம் என்று அவளுக்கும் தோன்றியது. ஓசைப்படாமல் விலகி நடந்தாள். சன்னதிக்கு வெளியே வந்து திறந்த வெளியில் நடந்தபோது புன்னைவன நாதர் சன்னதி அருகே ஒரு சடை பிடித்த தலையோடு கூடிய அழுக்கு மனிதர். பைத்தியம் என்று தாராளமாய் சொல்லலாம் தான்... ஆனால் அப்படிச் சொல்ல முடியாதபடி அந்த மனிதரின் கண்களில் ஒரு கழுவிவிட்டது போன்ற தூய்மை. அவரிடம் சிலர் விபூதி வாங்கி பக்தியோடு இட்டுக் கொண்டனர். ஐஸ்வர்யா அவரைக் கடக்கும்போது அவள் பார்வை அவள் மேல் பதிந்து அருகில் அழைத்தது. அவளும் நெருங்கினாள்.

    கைய நீட்டு...

    அவளும் நீட்டினாள். விபூதியை அளிக்க அவரும் கையை நீட்டியபடியே அவளது உள்ளங்கையைப் பார்த்தார். விபூதியை மளமளவென்று தனது நெற்றியில் பூசிக் கொண்டு நீண்ட அவள் கரத்தின் ரேகைகளைப் பார்த்தார். அவர் முகத்தில் ஆச்சரிய வரிகள் பிறந்தன.

    என்ன சாமி?

    தங்கக் கைம்மா உனக்கு...?

    தங்கக் கையா...? சிரித்தாள் சொன்னபடியே...

    உன்பேர்ல கூட ஐஸ்வர்யம் இருக்கணுமே?

    - அந்தக் கேள்வி நிஜமாலுமே அவளை திகைக்கவிட்டது.

    இந்த உலகத்தை மேப்ல பார்த்து தெரிஞ்சுக்கற மாதிரி உன்னை நான் இந்த ரேகைகளை வெச்சு தெரிஞ்சுக்கிறேன். ஆமாம் அப்பாவுக்காக அர்ச்சனை பண்ணினியா?

    அ... அ... ஆமாம் சாமி - எப்படி இப்படி பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க?

    எல்லாத்தையும் விட்டுட்டா நீ கூட சொல்லாம்மா. இதுவா விஷயம்? இனி நான் சொல்லப்போறத நல்லா கேட்டுக்கோ...

    சொ... சொல்லுங்க சாமி...

    உன் அப்பாவுக்காக நீ இந்த கபாலிகிட்டயும், கற்பகம் கிட்டயும் என்ன கேட்டே?

    அப்பா நூறு வருஷம் நல்லா இருக்கணும். அவரை நான் சந்தோஷமா இந்த சென்னையிலே கொண்டு வந்து வெச்சிக்கணும். நான் படத்தை டைரக்ட் பண்ணும்போது அதை அப்பா பக்கத்துல இருந்து பாக்கணும்னும்...

    - அவள் சொல்லச் சொல்ல அவர் முகம் கோணிக் கொண்டது. கண்களையும் இழுத்து மூடிக்கொண்டார்.

    சாமி...

    உம்...

    ஏன் உங்க முகம் ஒரு மாதிரி ஆகுது...?

    ஆமா, நீ கைல ஒரு டப்பா மாதிரி எல்லாரும் வெச்சிருக்கறத வெச்சிருக்கலையா?

    நீங்க செல்போனை சொல்றீங்களா... அது வீட்ல இருக்கு. கோயிலுக்கு வரும்போது நான் கொண்டு வர்றதில்ல...

    "சரி போ... போய் அதைப் பார். அதுல உனக்கு ஒரு செய்தி காத்திருக்கு... ஆமா கொஞ்சம் முந்தி நீ என்ன சொன்னே - நீ எதையோ டைரக்ட் பண்ணணும்னு சொன்ன மாதிரி காதுல விழுந்துச்சே?’

    சினிமா சாமி...

    சினிமால்லாம் இனிமே உனக்கு சும்மா... போ - ஒரு பெரிய விஷயம் உனக்குக் காத்திருக்கு...

    ஐஸ்வர்யா அவரை வெறிக்கப் பார்த்தாள். அவர் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. உளறுகிறாரா... இல்லை, அவ்வளவும் அனுமானிக்க முடியாத அமானுஷ்யமான எதாவது ஒன்றா?

    கேள்விகளோடு திரும்பி நடந்தாள்.

    செல்போனை அவர் பார்க்கச் சொன்னதுதான் முட்டிக் கொண்டிருந்தது.

    ஆட்டோ பிடித்து மாமாவின் வீட்டு வாசலை அடைந்த போது மாமாவிடம் ஒரு ஆயத்த நிலை. அவரும் அவர் மனைவியும் ஒரு லெதர் பேக்குடன் புறப்பட தயாராக இருந்தனர்.

    மாமா... எங்க கிளம்பிட்டீங்க?

    உங்க ஊருக்குத் தாண்டா - நீயும் புறப்படு.

    என்ன மாமா திடீர்னு...

    நீ செல்போனை எடுத்துகிட்டு போகலையா?

    ஊஹூம்...

    எடுத்துப் பார்...

    - அவளும் ஓடிப்போய் எடுத்துப் பார்த்தாள். ‘Appa Expired - Start Immediately’ என்றிருந்தது.

    அப்பா....! -

    அவள் மனதுக்குள் ஒரு உச்சபட்ச அலறல்.

    ***

    2

    ‘சங்கராபுரம்!

    எனக்கு எல்லா வகையிலும் ஆச்சரியத்தை அள்ளித்தந்த ஊராக விளங்கி வருகிறது. ஆய்வு நிமித்தம் இந்த ஊருக்கு சென்றிருந்தேன். இந்த ஊரின் தென்பகுதியில் குறிப்பாக தென்மேற்கு பாகத்தில் ஒரு சிறுமலை இருக்கிறது. இருநூறு மீட்டர் உயரம் இருந்தால் அதிகம். பார்க்க பழனிமலை போல் இருக்கிறது. இதன் உச்சியில் வெள்ளை யன் கோட்டை என்று ஒரு கோட்டை இருந்து, இன்று அது சிதைந்து போய் அந்த பாகமே ஒரு குறுங்காடாக உள்ளது. அங்கே சென்று கீழே ஊரைப் பார்த்தபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது.

    ஆம்., ஊரின் பெரும்பாலான வீடுகள் வடக்குப் பார்த்து வாசல் வைத்து கட்டப்பட்டிருந்தன. ஊரும் சச்சதுரமாக இருந்தது. அவ்வளவு வீடுகளுமே அந்தக் கால வீடுகள். சுண்ணாம்பு, நெல்லிச்சாறு, கொழிஞ்சிக்காய், முட்டைக் கரு, மண்டைவெல்லம் என்று இயற்கைப் பொருட்களை கலந்து அரைத்து கட்டப்பட்ட வீடுகள். குறிப்பாக ஒவ்வொரு வீட்டுக் கூரையும் பிரம்மஸ்தானம் என்னும் மையத் திறப்போடு இருந்தது. அவ்வளவு பேரும் கிழக்கிலும் வடக்கிலும் நிறைய இடம் விட்டிருந்தனர். தென்மேற்கு பாகத்தின் மாடிப் பகுதியில் அறைகளை கட்டியிருந்தனர். ஊருக்கும் தென்மேற்கில் வெள்ளையன் கோட்டை உள்ள கரடு.

    அந்த இடிந்த கோட்டையில் நின்று நான் சங்கராபுரத்தை புகைப்படம் எடுத்த போது அது ஒரு வாஸ்து பலம் உள்ள ஊர் என்பது எனக்குப் புரிந்தது. அப்போது ஒரு மாடு மேய்க்கும் இளஞ்சிறுவன் ‘இங்க ஒரு சாமியார் சமாதி இருக்குது...’ - என்று சற்று தள்ளி அங்கு பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு வில்வ மரத்துக்கு கீழ் உள்ள சமாதி ஒன்றை காட்டினான். அந்த சமாதியில் விளக்கு ஒன்றும் எரிந்து கொண்டிருந்தது. அதுவே அந்த சமாதியை சிலர் வணங்கி வருகிறார்கள் என்பதை உணர்த்தி விட்டது. அப்போது ஒரு வயதான பெரியவர் கையில் மலர்களோடு சமாதிக்கு வழிபாடு புரிய வந்தார். நான் செருப்புக் கால்களோடு நிற்பதைப் பார்த்துவிட்டு இது பவித்ரமான இடம்... இங்கே செருப்புக் காலோடு நிற்பது தவறு... தூரப் போங்கள்’ என்றார். நானும் அவருக்காக செருப்பைக் கழற்றி விட்டு வந்து அவரிடம் அந்த சமாதி பற்றிய விவரங்களை கேட்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்வி களுக்கு பதில் சொல்லச் சொல்ல நான் ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கத் தொடங்கிவிட்டேன்!"

    - ஆனந்தரங்கனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

    செல்போனில் இருந்த அந்த எஸ்.எம்.எஸ். செய்தி ஐஸ்வர்யாவை நொறுக்கிவிட்டது. இடிந்து போய் ‘அப்பாாா!’ என்கிற மனக்கதறலோடு விழப் போனவளை அவள் மாமா ராமநாதன் தாங்கி பிடித்துக் கொண்டார்.

    மாமா...

    தெரியுதும்மா... நீ இப்ப நின்னு பேசறதே எங்க வரைல ஆச்சரியம்...

    எப்... எப்... எப்படி மாமா இப்படி ஆச்சு?

    போன் போட்டுக் கேட்டோம்மா... யாரும் ஒழுங்கா ஒரு விசயம்சொல்ல மாட்டேங்கறாங்க...?

    அப்படின்னா...?

    எப்படிம்மா சொல்றது...? உன் அப்பா சங்கராபுரம் பக்கத்துல உள்ள கள்ளர் கட்டுப் பக்கம் போயிருந்துருக்காருன்னு மட்டும் தெரியுது. அங்க அவரை பாம்பு கடிச்சிருக்கும்போல... காப்பாத்த போராடியிருக்காங்க. ஆனா கடைசில உயிர் போயிடிச்சாம்... எது உண்மைன்னு போனாத்தான் தெரியும்.

    கள்ளர் கட்டுப் பக்கமா... அது எங்க இருக்கு? அப்பா அங்க எதுக்குப் போனார்...? பாம்பு கடிக்கற அளவுக்கு அப்பா ஒண்ணும் கேர்லெஸ்ஸானவர் கிடையாது மாமா.

    ஐஸ்வர்யா... கள்ளர் கட்டு காடுங்கறது ஒரு ரெஸ்ட்ரிக்டட் ஏரியா மாதிரிம்மா. வருஷத்துக்கு ஒரு நாள் சிவராத்திரி அன்னிக்கு மட்டும் அந்த காட்டுக்குள்ள போவாங்க. அங்க காளிங்கன் கோவில்னு ஒரு கோவில் இருக்கு...! சின்ன கோவில் தான் - உள்ள ஒரு பாம்பு புத்துதான் அங்க சாமி. அதுக்கு பூஜை பண்ணி கும்பிட்டுட்டு வந்துடுவாங்க. மத்த நாள்ல தப்பித் தவறிக் கூட போக மாட்டாங்க. மீறி போனா அப்படிப் போனவங்க படுத்த படுக்கையா ஆயிடுவாங்க. இல்லேன்னா, காளிங்க நாகம் தீண்டி போய்ச் சேர வேண்டியதுதான். இதெல்லாம் நான் சின்னப் புள்ளையா இருக்கும் போதே கேள்விப்பட்ட விஷயம்...

    ஆனா நான் இப்ப நீங்க சொல்லித்தான் கேள்விப்பட்றேன் மாமா...

    "ஆமாம்மா... என் பசங்களுக்கு கூட இந்த விஷயம்லாம் தெரியாது. முதல்ல நம்ம குடும்பங்கள் நம்ம சொந்த ஊர்ல இருந்தால்ல?

    அதான் படிப்பு, வேலைன்னு நாம பட்டணம் பக்கம் வந்து பல வருஷம் ஆச்சே?"

    - மாமாவின் பதில் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தியது போல் தெரியவில்லை. நெற்றியில் சுருக்கம் விழ யோசிக்கத் தொடங்கி விட்டாள். கண்களிலும் சரசரவென்று கண்ணீரின் போக்கு...

    ஐஸ்வர்யா... புறப்படும்மா - கார் ரெடியா இருக்கு பார்...

    அவளும் கண்ணீரைத் துடைத்தபடியே புறப்பட்டாள். துணிமணியை எடுத்து வைத்துக்கொள்ளக் கூட தோன்றவில்லை. அவளது அத்தை லட்சுமி தோராயமாக எடுத்துக் கொண்டாள்!

    காரும் புறப்பட்டது!

    ஐஸ்வர்யாவிடம் ஒரு ஸ்தம்பித்த அமைதி. கார் தாம்பரத்தை தாண்டியபோது அவளது செல்போனில் அழைப்பொலி. டைரக்டர் முகுந்தன் என்பவர் பேசினார்.

    ஐஸ்வர்யா... நாளைக்கு டிஸ்கஷனுக்கு நீ எங்க கூட கொழும்புவரே தானே?

    நோ சார்... சாரி சார்...

    ஏம்மா...?

    என் அப்பா இறந்துட்டார் சார், நான் இப்ப ராஜபாளையம் போய்க்கிட்டிருக்கேன்.

    ஓ... ஐ ஆம் வெரி சாரி ஐஷ்... ஆமா அப்பாவுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா?

    நோ... பாம்பு கடிச்சிட்டதா சொல்றாங்க.

    ஓ. பெக்கூலியர்... எதாவது காட்டுப்பக்கம் போனாரா?

    "அப்படித்தான் கேள்விப்பட்டேன். ஊருக்குப் போனால் தான் மத்த

    Enjoying the preview?
    Page 1 of 1