Saathaga Paravai
()
About this ebook
அரச காலத்தில் மாதம் மும்மாரி பெய்ததோ இல்லையோ - அனுவின் எண்ண மேகம் - மாதம் மும்மாரிக்கு மேல் பெய்ததன் பலன்தான் இந்த நெடுங்கதைகளும், குறு நாவல்களும்...
ஆஹா, மழை கொட்டு கொட்டென்று கொட்டப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் போது, வெறும் மேக மூட்டத்தோடு கலைந்து விடுவது போன்ற கதைகளும் உண்டு.
ஒரு குடை கூட எடுத்து வராமல் காலாற நடந்து போகும் போது, எதிர்பாராமல் வானமே பொத்துக் கொண்டாற்போலக் கொட்டித் தீர்க்குமே... அது போன்ற கதைகளும் உண்டு.
மாவுக் கேற்ற பணியாரம்...
மனம் போல மாங்கல்யம்...
அதுபோல, எண்ணத்துக்கேற்ப எழுத்து...
இத்தொகுப்பில் ஏழு கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்டத்தில் சேகரித்த மழைத் துளிகள்...
Read more from Anuradha Ramanan
Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsMoga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsAnna Rating: 5 out of 5 stars5/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Mundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Poisugam Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Saathaga Paravai
Related ebooks
Mannil Neendhum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal - Collection 3 Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Kathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Malukutti Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsMaaruthalukku Oru Hemalatha Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramanan Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Naal Muzhukka Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsMom From India Rating: 0 out of 5 stars0 ratingsYaaradhu? Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Manasu Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Kaalathu Salanangal Rating: 3 out of 5 stars3/5Imsaigal Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsSaatharana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsVelli Kanavu Rating: 5 out of 5 stars5/5Indha Ithazhil Arambamagirathu Rating: 0 out of 5 stars0 ratingsVeliyorathil Oru Vellai Poo Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Saathaga Paravai
0 ratings0 reviews
Book preview
Saathaga Paravai - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
சாதகப் பறவை
(குறு நாவல்கள்)
Saathaga Paravai
(kuru Naavalkal)
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சாதகப் பறவை
அம்மா சந்தித்த மனுஷி
தொப்புள் கொடி
கிழம்
மேகத்திலே மெத்தையிடு
பதினோராவது அவதாரம்
ஒரு முற்றுப்புள்ளி 'கமா'வாகிறது,,,
முன்னுரை
அன்பான வாசகர்களுக்கு,
வணக்கம். நலம்... நலம் தானே...
மேகங்கள் சூல் கொள்கிற போது மழையை எதிர்பார்க்கிறோம். எண்ணங்கள் சூல் கொண்டால்... எழுத்துக்கள்... தூறலும், சாரலும், ஆலங்கட்டி மழையும், அடைமழையும், 'இதோ - அதோ' என்று பாய்ச்சல் காட்டுகிற சிலுசிலுத்த மழையும்...
'என்னங்க நீங்க... மழையப் பார்த்தே எவ்வளவு காலமாயிடுச்சு... ஏன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க,
- இப்படிக் கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை: வான் மழைப் பொய்த்தாலும், அள்ளித் தருகிற கருணை மழையான வள்ளல்கள்...
அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட நேச மழை பொழியும் தாயுள்ளங்கள்...
ஆனந்தமாய், ஆன்மாவை வருடிக் கொடுக்கிற மாதிரியாக இசை மழை பொழியும் சங்கீத சிரோன் மணிகள் -
இப்படி மழை பலவித பேதங்களில் இருக்க... எழுத்து மழையையும் இதில் சேர்த்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது...
ஆண்டு தோறும் மும்மாரி பெய்ய வேண்டும்... அந்த நாளில், ராஜாக்கள், சிம்மாசனம் ஏறி உட்கார்ந்தவுடன் மந்திரியைப் பார்த்துக் கேட்கிற முதல் கேள்வி இதுதான்:
'மந்திரியாரே... மாதம் மும்மாரிப் பொழிகிறதா...'
பாருங்கள் ஆண்டொன்றுக்கு மும்மாரி இல்லை; மாதத்துக்கு மும்மாரி... அதுவும் அரசனுக்குத் தெரியாமல்...
அரசனும் அதே நாட்டில்தானே இருக்கிறான்... மழை பொழிவதும், வெயில் 110° அடிப்பதும் அவனுக்குத் தெரியாதா...
ஏதோ கேட்கிறான். மந்திரியாரும், அரசனை எதிர்த்துப் பேசும் தைரியமின்றி 'ஆம் அரசே' என்கிறார்...
அது சரி... இந்த மழைக் கதையெல்லாம் முன்னுரையில் எதற்கு? ஒரு முன்னுரை - 'நறுக்குத் தெறித்தாற் போல', 'கொட்டைப் பாக்கை வெட்டினாற் போல', 'பட்டுக் கத்தரித்தாற் போல' - சொல்லத் தெரியாதா - என்பவர்களுக்கெல்லாம் என் தாழ்ந்த, மிகப் பணிவான பதில்:
அரச காலத்தில் மாதம் மும்மாரி பெய்ததோ இல்லையோ - அனுவின் எண்ண மேகம் - மாதம் மும்மாரிக்கு மேல் பெய்ததன் பலன்தான் இந்த நெடுங்கதைகளும், குறு நாவல்களும்...
ஆஹா, மழை கொட்டு கொட்டென்று கொட்டப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் போது, வெறும் மேக மூட்டத்தோடு கலைந்து விடுவது போன்ற கதைகளும் உண்டு
ஒரு குடை கூட எடுத்து வராமல் காலாற நடந்து போகும் போது, எதிர்பாராமல் வானமே பொத்துக் கொண்டாற்போலக் கொட்டித் தீர்க்குமே... அது போன்ற கதைகளும் உண்டு.
மாவுக் கேற்ற பணியாரம்...
மனம் போல மாங்கல்யம்...
அதுபோல, எண்ணத்துக்கேற்ப எழுத்து...
இத்தொகுப்பில் ஏழு கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்டத்தில் சேகரித்த மழைத் துளிகள்...
சாதகப் பறவை... இருபது வருடங்களுக்கு முன் எழுதியது... கதையின் நாயகி, என் பாட்டி தலைமுறையைச் சேர்ந்தவள். இந்த நாளில் எந்தப் பொண்ணும் இப்படி இருக்க மாட்டாள். இருக்கவும் கூடாது... பொறுமையும், சகிப்புத் தன்மையுமாய் - வாய் திறந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதக் கணவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து... கணவனின் விரல் நுனி கூட தன் மீதும் படாமலேயே வாழ்ந்து விட்ட பாத்திரம். கடைசியில் காலொடிந்து விழுந்த போது - கணவரின் ஸ்பரிசம்... ஆயுசுக்கும் இதுவே போதும் என அவள் நினைப்பது... மழையில்லை... மேக மூட்டமும் தூறலும் தான்.
'அம்மா சந்தித்த மனுஷி' - பெண்ணைப் பெற்ற எந்த வீட்டில்தான் இல்லை இந்த பிரச்சினை... ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு, வீடு வீடாய், கோயில் கோயிலாய் அலைவதும், பையனைப் பெற்ற ஒரே காரணத்தினாலேயே பிள்ளையைப் பெற்றவள், உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு பேரம் பேசுவதும்... ஒரு பெண்ணைப் பெற்ற தாய், தன் மகளின் திருமணத்துக்காக, வரன் தேடி அலைந்ததும்... எத்தனையோ அவமானங்களுக்கிடையே, ஒரு வரனின் தமக்கை பரிவாய் பேசியதும்... கோடைக் காலத்தின் குற்றாலச் சாரல்தான் அந்த அம்மாவுக்கு. ஏன், நமக்கும் தான்.
'தொப்புள் கொடி' - என் கொள்ளுப் பாட்டிதான் இக்கதையின் கதாநாயகி. அந்த நாளில், மருத்துவ வசதி அதிகமில்லாத கிராமத்தில், யார் வீட்டில் இடுப்பு வலி எடுத்தாலும் உடனேயே செய்தி வரும் என் கொள்ளுப் பாட்டிக்கு... மழையோ, வெயிலோ, நடுநிசியோ... ஒரு சிறிய சூரிக்கத்தியை இடுப்பில் செருகிக் கொண்டு கிளம்பி விடுவாள். பிரசவத்தை நல்லபடியாக முடித்தபின், வீடு திரும்பி, கிணற்றடியில் ஸ்நானம் செய்த பிறகுதான் பச்சைத் தண்ணீர் கூட அருந்துவாள். என் கொள்ளுத்தாத்தா - கதையின் நாயகர் போல அல்ல... பாட்டியின் இந்த சேவையில் எவ்விதக் குறுக்கீட்டையும் செய்யமாட்டார். இத்தனைக்கும் ஆசார சீலர். தினமும் இராமாயணம் படிக்காமல், அக்னி ஹோத்ரம் செய்யாமல் உணவருந்த மாட்டார்.
பெற்றால் தான் - அல்லது வயிற்றில் பிறந்தவள் தான் குழந்தையா... இப்படியொரு புண்ணியவதியின் கையினால், மண்ணில் உதித்த சிசுக்களும் நம் குழந்தைகள்தானே... வலியெடுத்து ஒரு பெண் கத்தும் போது அய்யராவது, நாடாராவது, கிறிஸ்துவராவது... 'தொப்புள் கொடி' - என் எழுத்துக் காட்டில் அடைமழை.
‘கிழம்’ - அ...ப்...பா... என்ன படுத்தல்? மங்கையர் மலரில் இக்கதை வெளிவந்த போது - பாராட்டுக்கள் ஒருபுறம் என்றால் - இப்படிக் கூட கொடுமையான மாமியார் இருப்பாளா என்கிற கேள்வியும் ஒருபுறம்!
இருப்பாள்... இருக்கிறாள்... இன்னும் கூட. இந்த நிஜக் கிழவி செய்கிற கொடுமை - இதை விடவும் அதிகம். இது... என் மனசில் புயலையே உண்டாக்கியது என்றால் மிகையில்லை .
'மேகத்திலே மெத்தையிடு' - தம்பதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். என் வரையில் இவர்கள்தான் ஆதர்ச தம்பதி. இத்தனை நெருக்கமும், பாசமும், காதலும் உண்டானால் குழந்தை பிறந்தால்தான் என்ன... பிறக்காவிட்டால்தான் என்ன... அது ஒரு பெரிய குறையா... இவனுக்காக அவளும், அவளுக்காக இவனும் எத்தனை விட்டுக் கொடுக்கிறார்கள்... எது வரையில் தியாகம் செய்யத் துணிகிறார்கள்... 'ஐயோ, இப்படியொரு காதல் வாழ்க்கையில் கிடைத்தால் வேறு என்னதான் வேண்டும்...' - இப்படித்தான் நான் நினைத்து எழுதினேன்... படித்து விட்டு நீங்களும் அப்படியே நினைப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த ஏக்கம், தாபம் இருக்கும். நிச்சயமாக!
மேகத்திலே மெத்தையிடு... சுகமானப் புரட்டாசி மழை! அதாவது - காலையில் வெயில்... மாலையில் சடபடவெனத் தூறலுடன் ஆரம்பித்து, நவராத்திரி சமயத்தில் - பட்டுப் பாவாடை கட்டிய சிறுமிகளை விரட்டி விரட்டி ஓடச் செய்யுமே... அப்படிப்பட்டது.
'பதினோராவது அவதாரம்' - பெரிய கதை... நிறைய கதாபாத்திரங்கள். மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர்... முதல் மனைவியை ஒதுக்கிய பின் அவளுக்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து - அக்குழந்தை தன்னுடையதே இல்லை என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்ய... அந்தப் பெண்ணின் நிலை என்ன? உலகத்தை உருப்படச் செய்ய, திருமால் பத்து அவதாரம் எடுத்தார் - என்னால்... இதோ இது போன்ற மனிதர்களைத் திருத்த - பதினோராவது அவதாரமாக ஒரு பெண் வரக்கூடாதா?
அப்படி அவள் வந்த கதைதான் இது... சில சமயங்களில் வருணபகவானுக்கு குஷி பிறந்து விடும்... ஒருநாள்... இரண்டு நாள் இல்லை... பத்து பதினைந்து நாட்களுக்குக் கொட்டித் தீர்த்து விடுவார். சூரியனைக் கண்ணால் பார்த்தே பல நாட்களாகியிருக்கும். தெருவெல்லாம் வெள்ளக்காடு. ஆங்காங்கு இடி விழுந்து கட்டிடம்... ஏன் உயிர் பலியுமே நேர்ந்திருக்கும்... மின்சாரம், பால் எதுவும் இருக்காது.
'சனியன் பிடிச்ச மழை... நின்னு தொலைக்காதா?'
ஒரு காலத்தில் நாம் சொன்னதில்லையா?
இக்கதையும் அப்படித்தான்... விடாத மழை. அடை மழை. நின்றால் போதும் என்பது போல்... என்ன செய்வது... பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற வெறியில் என் பேனா கூட ஊழித் தாண்டவமாடி விடுகிறது.
கடைசியாக - 'ஒரு முற்றுப்புள்ளி 'கமா’வாகிறது...' இது கூட, முந்தையக் கதையின் ஜாதிதான். ஒரே மாதிரியான இரு கதைகள் அடுத்தடுத்து சேர்ந்திருக்க வேண்டாம்தான். சேர்ந்து விட்டது... 'அப்பாடா' என்று ஈரத்துணிகளைக் கொண்டு போய், ஊமை வெயிலில் காயப் போடும் போது - மறுபடியும் வானம் இருட்டிக் குமைந்தால்... கவலையாக இருக்காதா... அப்படித்தான் இதுவும்.
ஆனாலும் இதில் வரும் பெண்கள் - நிஜ வாழ்வில் அற்புதமானச் சாதனை புரிந்தவர்கள்.
என் வரையில் பெண்களின் வாழ்க்கையில் பல சோகங்கள் இருக்கலாம். ஆனாலும் புத்திசாலித் தனத்தினாலும், அன்பினாலும் எத்தனை இக்கட்டுகள் நேர்ந்தாலும் மீண்டு வந்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
இந்த என் கதைகள் - வறண்ட மனங்களுக்கு ஒரு சில மழைத்துளிகளாய் இருக்குமானால்...
அதையே பெரிய விஷயமாக நினைப்பேன். படியுங்கள். இது பற்றிய தங்களது கருத்து எதுவாக இருப்பினும் எழுதுங்கள். நன்றி.
இப்படிக்கு
என்றென்றும் அன்புடன்,
அனுராதா ரமணன்
***
சாதகப் பறவை
1
எதை வார்த்தைகளால் விளக்க முடியாதோ, ஆனால், வார்த்தைகள் எதனால் விளக்கப்பெறுமோ அதுவே பிரம்மம் என்று அறிந்துகொள், எதை பிரம்மம் என்று உபதேசிக்கிறார்களோ - அது பிரம்மம் இல்லை...
எதை ஒருவன் மனத்தால் உணருவதில்லையோ, ஆனால், மனம் எதனால் உணரப்பெறும் என்று கூறுகிறார்களோ அது பிரம்மம் இல்லை...
- கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்தபடி பஞ்சாமி, தமது சிஷ்யர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாப்பாட்டுக் கூடத்திலிருந்து தக்காளி ரசத்தின் வாசனை நாசியைத் துளைக்கிறது. சிஷ்யப் பசங்கள் பிரம்மத்தை அறிந்து கொள்வதை விடவும் பஞ்சாமி வீட்டில் இன்று என்ன சமையலாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வதிலேயே நாட்டம் மிகுந்தவர்களாய்...
ஏண்டா அம்பி... ஜானு மாமி ராத்திரிக்கு வெந்தயக் குழம்பு வைத்திருப்பாளோ
இருக்காது. சாயந்திரம் தேங்காய்த் துவையல் அரைச்சிண்டிருந்தா, நான் பார்த்தேனே...
சாப்பாட்டுக் கூடத்தில் வரிசையாய் இலை போட்டு - ஓடி ஓடி ஒண்டியாய்ப் பரிமாறிக் கொண்டிருந்தாள் ஜானு
டில்லியிலிருந்து கோடை விடுமுறைக்காக சகோதரன் வீட்டுக்கு வந்திருந்த சகோதரிகள்; அவர்களது கணவன்மார்கள்; குழந்தைகள் - கல்லூரியில் படிக்கும் பெண் முதல் நாலாவது படிக்கும் சிறுவன் வரை - இது தவிர சென்னையிலிருந்து வந்திருக்கும் பஞ்சாமியின் தம்பி குடும்பம்...
மன்னி, எங்காத்துக்காரருக்குப் பச்சைத் தண்ணி ஒத்துக்காது. சித்த வெதவெதன்னு வெந்நீர் கொண்டு வந்துதாங்கோ
இதோம்மா
- ஜானு குடுகுடுவென் சமையலறைக்கு ஓடுகிறாள். இதற்குள் இரண்டாவது நாத்தனாரின் கடைசிப் பையன், 'மாமி அப்படியே மாவடு கொண்டாங்கோ' என்று குரல் கொடுக்கிறான். -
பஞ்சாமியின் தாயார் பார்வதி - மாப்பிள்ளைக்கு எதிரில் வரக் கூச்சப்பட்டுக் கொண்டு சமையலறையின் கதவோரத்தில் சாய்ந்தபடி மருமகள் எல்லாரையும் கவனித்துப் பரிமாறுகிறாளா எனமேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
ஜானு, பெரிய மாப்பிள்ளைக்கு இன்னொரு அப்பளம் கொண்டு வந்து போடுடி... அவருக்கு நான் இட்ட அப்பளம்னா பிடிக்கும்...
ரமேஷ் குட்டிக்கு ரசம் சாதத்துக்குக் கொஞ்சம் நெய் விடு. நேத்து ராத்திரி குழந்தை இருமிண்டேயிருந்தது. ரயில்லே வந்தது உஷ்ணத்தைக் கிளப்பி விட்டிருக்கு
சுசீ அகத்துக்காராருக்கு என்ன வேணும் பாரு, இத்தனை வயசாகிறது இன்னும் ஒழுங்கா பரிமாறத் தெரியலையே, எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தாத்தான் உண்டு, தனக்கா ஒண்ணும் தெரியாது. பிரம்மம் பரப்பிரம்மம்...
பார்வதி நாசூக்காய்த் தலையில் அடித்துக் கொள்கிறாள்
மாமா அவாளுக்குப் பிரம்மம்னு எதுன்னு சொல்லித் தந்துண்டிருக்கார்... பாட்டியானா ஜானு மாமிதான் பிரம்மம்னு சொல்றா. மாமி, ஒடிப்போய், நான்தான் பிரம்மம்னு மாமாகிட்ட சொல்லுங்கோ, போங்கோ...
பன்னிரெண்டு வயசுப் பொடிசு ஒன்று அதிகப்பிரசங்கித்தனமாய்ப் பேச கல்லூரி இரட்டைப்பின்னல் புரையேறி சிரிக்கிறது. கூடவே பெரியவர்களும் சிரிப்பில் பங்கேற்கிறார்கள்.
ஜானகியும் அசட்டுச் சிரிப்பொன்றை இறைக்கிறாள்.
என்ன செய்வது, சில சமயங்களில் மனசில் பலத்த அடிபட்டாலும் சிரித்து மழுப்பவேண்டிய சூழ்நிலை.
இந்த பந்தி முடிந்து, பஞ்சாமியும் அவரது தாய் பார்வதியும் சாப்பிட்டு முடித்த பின் ஜானு சாப்பிடுகையில் இரவு பத்து மணி.
வடித்த சாதத்தில் ஒருபிடி அளவுதான் மிச்சம். ரசத்தில் - அடி கரைசலாய் வெறும் கருவேப்பிலை ஈர்க்குச்சிகள்...துவையல் காலி!
ஜானகிக்கு அதெல்லாம் வேண்டுமென்கிற அவசியமும் இல்லை.
மிஞ்சிய சாதத்தில் நீர்த்த மோரை விட்டுக் கரைக்கிறாள். கருவேப்பிலையை எடுத்தெறிந்துவிட்டு வண்டல் ரசத்தைக் கரைத்த சாதத்தில் விட்டுக் கொள்கிறாள். 'கடகட' வெனக் குடித்து முடிக்கிறாள்.
இதோ - அவள் சமையலறையைத் தேய்த்து அலம்பிவிடும் சத்தம். வறட்டு வறட்டென்று அந்தத் துடைப்பத்தின் வறட்டொலியில் ஒரு சோககீதம்... ‘இதுதான் என் வாழ்க்கை ‘இதுதான் என் வாழ்க்கை - என்கிற ஓலம்; 'இதுக்குத்தான் நான் பிறந்தேன்' என்கிற அலுப்பு; 'இந்த தேகம் இன்னும் எத்தனை நாளைக்கு இருந்து தொலைக்கும்' என்கிற எரிச்சல்; சில சமயங்களில் 'ஐயோ பாழும் பிராணன் 'பட்'டுன்னு போகாதா' என்கிற கதறல்.
அத்தனையும் இரவு நேர நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு - துடைப்பத்தின் வறட்டு அலறலாக ஒலிக்கும்.
எத்தனை நேரம்தான் அந்தச் சமயலறையைத் தேய்ச்சுண்டிருப்பா மன்னி. தினம் தேய்க்க அங்க என்ன அழுக்கு இருக்கு, துடைப்பம் தேயறதுதான் மிச்சம்...
- கூடத்தில் படுத்திருந்த சுசி தன் அம்மாவிடம் சொல்கிறாள்.
நான் சொல்லிச் சொல்லி அலுத்துட்டேன். அவ கேட்டாத்தானே... இந்தாடா ரமேஷ். உங்க மாமி கிட்டப் போய் 'போதும் அலம்பினதுன்னு பாட்டி சொன்னான்னு சொல்லு போ. கூடத்துல அப்பா, அம்மா எல்லாரும் தூங்கணுமாம். துடைப்பச் சத்தம் நாராசமா இருக்காம்னு சொல்லிட்டு வா, போ
- பார்வதி பேரனை எழுப்பி அனுப்புகிறாள், அடுத்த நிமிடம் சத்தம் நிற்கிறது.
ஏம்மா, அண்ணா இன்னமும் மன்னிகிட்ட முந்தி மாதிரியே தான் இருக்கானா... படுக்கையெல்லாம் இப்பவும் தனித் தனியே தானா-
பெரியவள் மீனா - தாயின் காதருகில் ரகசியமாய்க் கேட்க - அம்மாவின் அந்தப் பக்கம் படுத்திருந்த சுசி, அவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேட்க ஆவலாய் நெருங்கி வந்து படுக்கிறாள்.
பஞ்சமியைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவன் வைராக்கியம் வச்சான்னா வச்சதுதான். அப்படியே உங்க அப்பா குணத்தைக் கொண்டு பிறந்தவனாச்சே. சாந்தி கல்யாண அறையிலேருந்து வெளியில் வந்தவனோட கோபம் பதினைஞ்சு வருஷமாகியும் தணியவில்லை. நியாயமான கோபம் தானே. இவனை இளிச்சயவாயன்னு நினைச்சுண்டு அவர் ஏமாத்தப் பார்த்தார், நடக்கலை. இப்போ தண்டனையைப் பொண்ணு அனுபவிக்கறா...
இப்படியே விட்டுட முடியுமாம்மா? அந்தக் காலத்துல வைரத்தோடு போடாமல் சாதாரண வெள்ளைத் தோட்டைப் போட்டு ஏமாத்திட்டான்னு இவன் குதிச்சான், சரி. அதுக்காக இவ என்ன பாவத்தைப் பண்ணினா... இப்ப பாரு, என் பொண்ணு வளர்ந்து நிக்கறா. எங்களாலே வைரத்தோடு போட முடியாது. அதுக்காக உன் பேத்தி வாழாவெட்டியா நின்னா எப்படி இருக்கும்?
சீ, அசந்து அந்த மாதிரியெல்லாம் பேச்சுக்குகூடச் சொல்லாதே. என் பேத்தி ஜாம் ஜாம்னு குடித்தனம் பண்ணுவா. இதுகூட அவளைச் சேர்த்து நினைக்கறதே பாவம். பாரேன். இந்த நிலைமையலில் இருக்கிறச்சேயே இதுக்கு என்ன திமிருங்கறே. சில சமயம் நாம கூப்பிட்டாக்கூட என்னனு கேட்க மாட்டா. அமுங்குனு உட்கார்ந்திருப்பா 'பார்த்தா பசு மாதிரி இருக்காளே தவிர நம்ப முடியாது. இத்தனை நேரம் தூங்கியிருப்பான்னு நினைக்கிறாயா. கொல்லைத் தாழ்வாரத்துக்குப் போய்ப் பாரு. லைட்டைப் போட்டுண்டு பிறந்தகத்துக்கு லெட்டர் எழுதிண்டிருப்பா. அது என்னமாத்தான் ஒரு இன்லண்ட் லெட்டர்லே நுணுக்கி நுணுக்கி எழுதுவாளோ... அப்படி என்னதான் விஷயம் இருக்குமோ...
பார்வதி அலுத்துக் கொள்கிறாள். தன் மகனைப் பற்றிச் சொல்லும்போது குரலில் லேசாகப் பெருமை இழையோடுகிறது.
'இவன் படித்தவன். வேதமும் உபநிஷத்தும் இவன் நாவில் நர்த்தனமிடும். இவனிடம் அத்யயனம் செய்தவன் என்பதே சிஷ்யர்களுக்குப் பெருமை. அந்த அறிவும் சாமர்த்தியமும் யாருக்கும் அத்தனை சுலபத்தில் வராது. அதற்கென்ன அறிவு அதிகமிருந்தால் கர்வம் இருக்காதா? அந்தக் கர்வம் நியாயமானதுதான்...
'இப்பேர்ப்பட்ட மனிதனை மாப்பிள்ளையாய் அடைய கொடுத்து வைச்சிருக்க வேண்டாமோ? இது தெரியாமல், ஜானகியைப் பெற்றவர் ஏமாற்றினால் கோபம் வராதா?
'அந்த கோபத்தின் பலனை இப்போது இவள் அனுபவிக்கிறாள். அனுபவிக்கட்டும். நன்றாக உணரட்டும்'
பார்வதி தன் மகனின் ரோஷத்தைச் சிலாகித்தாள், மனசுக்குள் பூரித்தாள்.
'பிள்ளைன்னா இவன்தான் பிள்ளை! ஒவ்வொருத்தன், கல்யாணம் ஆன அடுத்த நிமிஷமே பெண்டாட்டி முந்தானையைப் பிடிச்சுண்டு அலைவானே; அது மாதிரி இல்லை என் பிள்ளை. என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பவன். அம்மா மதிக்காதவாளை தூக்கி வாசல்லே எறிஞ்சுடுவான். முதல்லே அம்மா, அப்புறம் தான் மத்த மனுஷா எல்லாரும். தேகசுகம் அவனுக்கு அற்பம். கல்யாணமே வேண்டாம்னு சொன்னவனை நான் தான் வற்புறுத்தி மணவறையில் உட்கார்த்தி வச்சேன். இவனே ஞானியாகப் போக வேண்டியவன். இல்லைன்னா - வீட்டுக்குள்ளேயே இவன் எதிர்த்தாற்போலவே தாலி கட்டின பெண்டாட்டி வளைய வர்றப்ப, மனசை அலைய விடாமக் கட்டி நிறுத்த முடியுமோ...
இப்படி நினைக்கிறவள் ஜானகியின் நிலைமையைக் கொஞ்சமாவது உணர்ந்திருக்கலாம். ஆனால் அவளைப் பற்றி நினைக்கும்போதோ - சம்பந்தி மனிதர் செய்த பொய்ப்புரட்டும், கல்யாணத்தன்று நடந்த அவமரியாதைகளும் நெஞ்சுக்குள் அலையாய் எழுந்து ஆர்ப்பரித்து நிஷ்டூரமாய் நினைக்க வைக்கிறதே...
பார்வதிக்கு இரண்டு பெண்: இரண்டு பிள்ளைகள். மூத்தவளுக்குப் பதினைந்து வயசில் கல்யாணம். பார்வதியின் கணவர் இருந்தார். அப்போது, எல்லாமே நிரக்க நடந்தது. மூன்று நாள் கல்யாணம். கச்சேரி, வாண வேடிக்கை யெல்லாம்.
அடுத்தாற்போல் பஞ்சாமி, அப்பா செத்துப் போகும்போது பதினெட்டு வயது இளைஞன். வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார்... தங்கைக்குக் கல்யாணம் செய்வதற்காக அவர் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அப்பா சேர்த்து வைத்திருந்த சொத்தே ஏழு தலைமுறைக்குக் காணும். சுசீலாவின் கல்யாணத்தை விமரிசையாகச் செய்தார். தம்பியைப் பட்டினம் அனுப்பிப் படிக்க வைத்தார்.
இப்பேர்ப்பட்டவர் - 'நமக்குத்தான் வேண்டிய சொத்து இருக்கிறதே, பெண்டாட்டி கொண்டுவந்தா ஆகப் போகிறது' - எனப் பெருந்தன்மையாய்ப் போயிருக்கலாம்.
ஜானகியின் பிறந்தவீடு - பெருங்காயம் வைத்த பாண்டம். ஜானகியின் பெற்றவரால் - சம்பந்தியம்மா தந்த லிஸ்டில் உள்ள அத்தனை நகைகளையும் செய்ய முடியவில்லை. முக்கியமாக மூன்று காரட்டில் வைரத்தோடு.
அதை அவரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. கல்யாணச் செலவே ஏகத்துக்கு இழுத்துக் கொண்டு போய்விடும் போலிருந்தது.
***
2
இது ஒரு பெரிய விஷயமா... பிள்ளையைப் பெத்தவா அப்படித்தான் கேட்பா... அதுக்காக அவர் கேட்டதெல்லாத்தையும் பண்ணிப் போட்டிண்டிருக்க முடியுமா... சுப்பு, நான் சொல்றேன் கேளு. இப்ப, ஜானாவுக்கு எத்தனை பவுன் நகை போட்டிருக்கே?...
பதினெட்டுப் பவுன், திருமாங்கல்யத்தையும் சேர்த்து.
"ரொம்ப சரி. காதுக்கு வெறும் வெள்ளைக் கல் தோடு போடு.