Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyum Pommai Nanum Pommai
Neeyum Pommai Nanum Pommai
Neeyum Pommai Nanum Pommai
Ebook381 pages2 hours

Neeyum Pommai Nanum Pommai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Neeyum Pommai Nanum Pommai

Read more from Rajeshkumar

Related to Neeyum Pommai Nanum Pommai

Related ebooks

Related categories

Reviews for Neeyum Pommai Nanum Pommai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyum Pommai Nanum Pommai - Rajeshkumar

    27

    1

    உச்சிமலைச் சித்தர் அந்த சப்தகிரி காட்டு அருவியில் நீராடி முடித்து வேறு செங்காவி ஆடை அணிந்த போது, கதிரவன் கிழக்குத் திசையைக் கீறி சிவப்பாக்கியிருந்தான். நெருக்கியடித்து வளர்ந்திருந்த மரங்களில் பறவைகள் கூச்சலிட, சிங்கமுக குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. புற்களின் தலைகளில் இன்னமும் பனிக் கிரீடங்கள். காற்றில் இன்னமும் இரவுக் குளிர்.

    தன் குடிலை நோக்கி சித்தர் நடக்கத் துவங்க, தள்ளி பவ்யமாய் நின்றிருந்த அந்த ஐந்து சீடர்களும் நெருங்கி வந்து அவரைத் தொடர்ந்தார்கள்.

    உச்சிமலைச் சித்தர்க்கு கணிக்க முடியாத வயது. சுருக்கம் துளியும் இல்லாத முகம். பால் போன்ற வெண்மையில் பளீரென்ற தாடி. தாடியை வைத்து வயதை தீர்மானிக்கலாம் என்று நினைத்தால் வாரி முடித்த தலைமுடி கரியைப் போல் கறுப்பாய் தெரிந்தது. ஒரு முப்பது வயது இளைஞனுக்கு இருப்பது போன்ற வலிமையான தோள்கள். கழுத்தில் ஊசலாடும் தங்கத்தில் கோர்த்த ருத்திராட்சக் கொட்டைகள். கண்களில் வித்தியாசமான ஒளியோடு தீட்சண்யம் தெரிந்தது.

    நடந்து கொண்டிருந்த சீடர்களில் ஒருவர் சித்தர்க்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நடந்தபடியே சொன்னார்.

    ஸ்வாமி...!

    என்ன?

    தியான மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நீங்கள் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து இரண்டு வார்த்தைகள் பேசினால் அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். கூட்டத்தில் பாதிபேர் ராத்திரியிலிருந்தே காத்திருக்கிறார்கள். அதில் நிறைய பேர் பெண்கள்... குழந்தைகள்...

    சித்தர் புன்னகைத்தார். பல்வரிசை ஏதோ ப்ளோரஸன்ட் வெளிச்சம்போல் பிரகாசித்தது.

    யாரும் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. வாருங்கள்... முதலில் தியான மண்டபத்துக்குப் போய் விடுவோம். தியான மண்டபத்தில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?

    சுமார் ஆயிரம் பேர்...

    எல்லார்க்கும் அன்னதானம் தயாராகி விட்டதா?

    தயாராகி விட்டது ஸ்வாமி...!

    என்னைப் பார்க்க இந்த மலைக்கு வந்த யாரும் பசியோடும் தாகத்தோடும் கீழே இறங்கிப் போகக் கூடாது!

    அப்படியே ஸ்வாமி...!

    சித்தர் மூலிகைச் செடிகள் மண்டிய அந்த பாதை வழியே நடை போட்டு, பத்து நிமிஷத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட அந்த தியான மண்டப வாசலுக்கு வந்தார். கூட்டம் வாசலிலேயே முண்டியடித்துக் கொண்டு கும்பிட, சித்தர் தன் வலது கையை உயர்த்தி எல்லாரையும் ஆசீர்வதித்துக் கொண்டே தியான மண்டபத்துக்குள் நுழைந்தார்.

    மண்டபத்தில் குழுமியிருந்த ஒட்டு மொத்த மக்களும் எழுந்து நின்றார்கள். ஆண்களும், பெண்களும் ஜோடி ஜோடியாய் சித்தரின் கால்களில் விழுந்து கும்பிட்டார்கள். அவர் தலையசைப்பால் எல்லாரையும் ஆசீர்வதித்துக் கொண்டே தியான மண்டபத்தின் மையத்துக்கு வந்து, தாமரைப்பூ வடிவில் இருந்த மேடையின் மீது ஏறி நின்றார். மொத்த மண்டபமும் நிசப்தத்தில் விழுந்தது.

    சித்தர் தன் அருட்பார்வையைச் சுற்றும் முற்றும் வீசி விட்டு பேசத் துவங்கினார். உண்மையிலேயே வெண்கலக் குரல்.

    "இன்று நான் கூறப் போகும் செய்தி புதிய செய்தியல்ல. காலம் காலமாய் நான் சொல்லிக் கொண்டிருக்கிற செய்தி தான். குளிர், வெப்பம், இன்பம், துன்பம், சோகம், வருத்தம், பாசம், அன்பு, அறம், மறம்... இவையாவும் இயற்கையின் செயல்கள். இயற்கை என்பது இறைவனுடைய படைப்பு. ஆனாலும் எதுவும் நிலையானவை அல்ல. இயற்கையின் மாற்றங்களால் எவன் ஒருவன் மனம் கலங்காது பரிசுத்தமான ஆத்மாவுடன் இருக்கிறானோ அவனே உத்தமன். நிலையான - நிலையற்றப் பொருட்களைப் பற்றி எப்போதும் எந்நேரமும் ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் மனதைக் கவரும் புறப் பொருட்கள் எல்லாமே அழியும் தன்மையுடையன. எனவே உங்களுடைய முழு கவனத்தையும் இறைவனின் பால் திருப்புக!

    தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்குக! எதை அடைய வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை இப்போதே அடைய முயற்சி செய்யுங்கள். எதையுமே தள்ளிப் போடாதீர்கள். மனக்கட்டுப்பாடு இல்லாமல் பல நாட்கள் தவம் செய்வதைக் காட்டிலும் மன ஒருமைப்பாட்டோடு இரண்டு நிமிடம் கடவுளை பிரார்த்திப்பது சிறந்தது. கடவுளின் நாமத்தை இதய சுத்தியோடு சொல்ல வேண்டும். மேகத்தைக் காற்று கலைப்பது போல கடவுளின் நாமம் உலகப் பற்றாகிய மேகத்தைக் கலைத்து விடும். புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப் பல்மிருகமாகி, பறவை யாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராகி, முனிவராய், தேவராய், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!"

    சித்தர் பேசிக் கொண்டே போக, அந்த தியான மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் அப்படியே அசைவற்று நின்றார்கள்.

    மேலும் ஒரு பத்து நிமிஷங்கள் அருளுரை நிகழ்த்திய சித்தர் இரண்டு கைகளையும் உயரத் தூக்கி எல்லாரையும் ஆசீர்வதித்து விட்டு மேடையினின்றும் இறங்கினார். தியான மண்டபத்துக்குப் பின்புறம் இருந்த தன்னுடைய குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

    ஒரு இருபதடி தூரம் நடந்திருப்பார். கும்பலைத் தள்ளிக் கொண்டு ஐம்பது வயது நபர் ஒருவர் ஓடி வந்து சித்தரின் கால்களில் ஒரு துணி மூட்டையைப் போல் விழுந்தார்.

    ஸ்ஸ்வாமீ...! பெரியதொரு அலறல்.

    சித்தர் குனிந்தார். எழுந்திரு...

    அந்த நபர் எழாமல் அப்படியே கிடக்க, சித்தர் மீண்டும் குரல் கொடுத்தார். எழுந்திரு...! உன் பிரச்னை என்ன?

    அவர் எழாமல் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்து கண்களில் நீர் வழியக் கதறினார்.

    ஸ்வாமீ! என்னோட பொண்ணு உயிருக்குப் போராடிகிட்டு இருக்கா. அவளை நீங்கதான் காப்பாத்தணும். அவளை நீங்க காப்பாத்தறேன்னு எனக்கு வாக்கு கொடுத்தாத்தான் நான் எந்திரிப்பேன்!

    சித்தர் புன்னகைத்தார்.

    முதலில், நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உன்னுடைய பெண் உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பதாகச் சொன்னாய். அவளுடைய உடம்புக்கு என்ன? நோயா... நோய் என்றால் என்ன நோய்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தானே நான் உனக்கு வாக்குறுதி கொடுக்க முடியும்?

    உடம்பு நடுங்க அந்த நபர் எழுந்தார். கண்களில் வழியும் நீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் இரு கைகளையும் கூப்பியபடி சித்தரை ஏறிட்டார்.

    ஸ்வாமி...! என்னோட பெயர் ராஜலிங்கம். நான் சென்னையிலிருந்து வர்றேன். எனக்குப் பல பிசினஸ். ஏகப்பட்ட கம்பெனிகள். கடவுள் அருளால் பணம் என்கிட்டே கொட்டிக் கிடக்கு. நான் தொட்ட எல்லா பிசினசுமே வெற்றிதான். என் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எல்லா சொத்துக்களுக்கும் என்னோட ஒரே பொண்ணு லட்சணாதான் வாரிசு. லட்சணாவுக்கு இப்போ இருபத்து மூணு வயசு. அவளுக்காக ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணத்தை முடிக்க ஏற்பாடுகளைப் பண்ணிட்டு இருந்தேன். ரெண்டு நாளைக்கு முந்தி திடீர்னு அவளுக்கு மாரடைப்பு வந்தது. ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் சேர்த்தோம். டாக்டர் எம்பொண்ணை சோதனை பண்ணிப் பார்த்துட்டு மூளைக்கும் இருதயத்துக்கும் இணைப்பாய் இருக்கிற ஒரு ரத்தக் குழாய் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறதாகவும் அதை ஆபரேஷனில் சரி செய்ய முடியாதுன்னும் சொல்லிட்டார். நேத்திக்கு ராத்திரி டாக்டர் அவரோட அறைக்கு என்னை மட்டும் தனியா கூப்பிட்டு, உங்க பொண்ணை வீட்டுக்குக் கொண்டு போயிருங்க. எந்த நேரத்திலும் அவளுக்கு மரணம் வரலாம்னு சொல்லிட்டார். அதைக் கேட்டதுமே என்னோட தலையில் இடி விழுந்த மாதிரி நொறுங்கிப் போயிட்டேன் ஸ்வாமி! ஹாஸ்பிட்டல்ல இருந்த ஒருத்தர், ‘உச்சிமலைச் சித்தரைப் போய்ப் பாரு. எல்லாம் சரியாயிடும்’னு சொன்னார். அவரோட வாக்கை தெய்வ வாக்காய் எடுத்துட்டு ஓடி வந்திருக்கேன் ஸ்வாமி! நீங்கதான் எம் பொண்ணைக் காப்பாத்தணும்!

    சித்தர் சில விநாடிகள் கண்களை மூடித் திறந்தார். கண்களில் நீர் வடிய நின்றிருந்த ராஜலிங்கத்தை ஏறிட்டார்.

    உன்னுடைய மகளுக்கு என்ன வயதாகிறது என்று சொன்னாய்?

    இருபத்து மூணு ஸ்வாமி!

    அவள் பகலில் பிறந்தாளா...? இல்லை, இரவில் பிறந்தாளா...?

    பகலில்...

    நேரம் தெரியுமா?

    மத்தியானம் ரெண்டு மணியிருக்கும் ஸ்வாமி!

    சரி...! என் குடிலுக்கு வா... சித்தர் சொல்லிவிட்டு நடக்க, ராஜலிங்கம் பின் தொடர்ந்தார்.

    சித்தரின் குடில் மூலிகை வாசனையில் நிரம்பி மூச்சையடைக்கிற மாதிரி மணத்தது. பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில், அதன்மேல் விரிக்கப்பட்ட புலித்தோலின் மேல் போய் அமர்ந்தார் சித்தர். அவருடைய முகம் இப்போது ஒருவித இறுக்கத்துக்கு உட்பட்டிருந்தது. எதிரில் குனிந்து கைகட்டி நின்றிருந்த ராஜலிங்கத்தை சலனம் இல்லாத ஒரு பார்வை பார்த்தார்.

    உன்னுடைய பெண்ணின் ஜாதகக் கட்டங்களில் என்னென்ன கிரகங்கள் இருக்கிறது என்பது தெரியுமா?

    தெரியும் ஸ்வாமி!

    சித்தர் தன் பக்கத்தில் இருந்த ஒரு பல்பக்கல்லை எடுத்து ராஜலிங்கத்திடம் கொடுத்தார்.

    உன்னுடைய பெண்ணின் ஜாதகக் கட்டங்களை இந்தத் தரையில் வரைந்து காட்டு...

    ராஜலிங்கம் பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு பல்பக்கட்டியால் ஜாதகக் கட்டத்தை வரைந்து கிரகங்களின் பெயர்களை எழுதினார்.

    சித்தர் அந்தக் கட்டத்தையே உற்றுப் பார்த்தார்.

    ஒரு நிமிடம்...

    இரண்டு நிமிடம்...

    பிறகு ஒரு சிறிய புன்னகையோடு ராஜலிங்கத்தை ஏறிட்டார். உன்னுடைய பெண்ணின் ஜாதகத்தில் வக்கிராதிபதியும் ராசியாதிபதியும் நல்ல இடங்களில் உட்கார்ந்து குரு பகவானின் பார்வையைப் பெற்று இருக்கிறார்கள். எனவே உன்னுடைய பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடிய நிலைமை இப்போது இல்லை. அவளுக்குத் திருமணம் நடக்கும்.

    ராஜலிங்கம் அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போய் சித்தரின் பாதங்களில் மறுபடியும் வீழ்ந்தார்.

    எனக்கு இந்த வார்த்தைகள் போதும் ஸ்வாமி! நீங்கள் சொன்னது எனக்கு அந்த தெய்வமே வந்து சொன்னது போல...! நான் இந்த உச்சிமலை ஆஸ்ரமத்துக்கு ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன். ஆனா, என்ன பண்ணனும்னு தெரியல. ஸ்வாமிகள் தப்பா நினைக்கக் கூடாது... சொன்னவர் தன் சட்டைப் பைக்குள் கையை நுழைத்து செக் புக்கை எடுத்து ஒரு தாளைக் கிழித்தார். கையெழுத்தை மட்டும் போட்டார்.

    ஸ்வாமி! இது என் கையெழுத்து போட்ட செக். தொகையை இன்னமும் பூர்த்தி செய்யலை. உங்களுக்கு விருப்பமான தொகையைப் பூர்த்தி பண்ணிக்கலாம். அந்தத் தொகையை வெச்சு...

    ராஜலிங்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் சட்டைப் பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்... அவருடைய மனைவி வத்சலா.

    பேசுவதா? செல்போனை அணைப்பதா? என்று ராஜலிங்கம் யோசிக்க, சித்தர் கையசைத்தார்.

    பரவாயில்லை, பேசு...!

    செல்போனை காதுக்கு ஒற்றினார்.

    ஹலோ...

    என்னங்க...! நான் வத்சலா... பேசும் போதே குரல் உடைந்தது.

    சொல்லு, வத்சலா! லட்சணா எப்படியிருக்கா? நம்ம பொண்ணோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு ஸ்வாமிகள் சொல்லிட்டார். நம்ம பொண்ணோட கல்யாணம் நடக்குமாம்.

    இ... இ... இல்லீங்க...! நம்ம பொண்ணோட கல்யாணம் நடக்காது! வத்சலாவின் குரல் அழுகையில் வெடித்தது.

    வ... வ... வத்சலா...! நீ... என்ன சொல்றே...?

    லட்சணா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்க! அவ உடம்பை இப்போ நம்ம வீட்டுக்குக் கொண்டு போகப் போறோம். வத்சலாவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் உச்சத்துக்குப் போய் பிறகு ஒரு பெரிய கதறலாக மாறியது.

    2

    ராஜலிங்கம் தன் விழிகள் நிலைக்குத்த பெருங்குரலெடுத்து செல்போனில் கத்தினார்.

    வத்சலா! நீ என்ன சொல்றே...? நம்ம பொண்ணு லட்சணா இறந்துட்டாளா? நல்லாப்பாரு... லட்சணா சாகமாட்டான்னு சித்தர் ஸ்வாமிகள் இப்பத்தான் சொன்னார்... அவர் பொய் சொல்ல மாட்டார். நல்லாப் பாரு...

    மறுமுனையில் வத்சலா அழுகையில் குரல் அடைத்துக் கொள்ள - துண்டு துண்டாய் வார்த்தைகள் உடைபடப் பேசினாள்.

    பா... பா... பாக்கறதுக்கு ஒண்ணும் இல்லீங்க... லட்சணா நம்மை விட்டுட்டுப் போயிட்டா...

    பக்கத்துல நம்ம டாக்டர் இருக்காரா...?

    இருக்கார்...

    அ... அ... அவர்கிட்ட செல்போனைக் குடு.

    அரை நிமிஷ நேரத்துக்குப் பிறகு டாக்டர் பாஷ்யத்தின் குரல் கனமான கவலையில் தோய்ந்தபடி கேட்டது. ஸாரி... மிஸ்டர் ராஜலிங்கம்...! நான் ஏற்கனவே சொன்னது போல லட்சணாவைக் காப்பாத்த முடியலை. செரிபரோ வாஸ்குலார் ஆக்ஸிடென்ட். நிமிஷ நேரத்துல மரணம். ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்துப் பார்த்தோம். பிரயோஜனம் இல்லை. மனசைத் தேத்திக்குங்க ராஜலிங்கம். நம்ம கையில் எதுவும் இல்லை.

    நோ டாக்டர்...! லட்சணாவை மறுபடியும் நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்க. அவ கண்டிப்பா உயிரோடு தான் இருப்பா...!

    மிஸ்டர் ராஜலிங்கம்... என்ன பேத்தல் இது...? ஒரு உடம்புல உயிர் இருக்கா இல்லையான்னு இருபது வருஷமா டாக்டராய் இருக்கிற எனக்குத் தெரியாதா என்ன...?

    லட்சணா சாகமாட்டான்னு உச்சிமலைச் சித்தர் இப்பத்தான் சொன்னார். அவர் பெரிய மகான். பொய் சொல்ல மாட்டார் டாக்டர்!

    ராஜலிங்கம்...! நான் உங்க ஃபேமிலி டாக்டர்! இருபது வருஷமா நீங்களும் நானும் பழகிட்டு வர்றோம். உங்க பொண்ணு லட்சணா இறந்துட்டான்னு நான் சொல்றேன். ஆனா அதை நீங்க நம்ப மறுக்கறீங்க. நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கையில்லேன்னா சென்னையில் இருக்கற வேற எந்த ஒரு டாக்டர்கிட்டயாவது லட்சணாவைக் கொண்டு போய்க் காட்டி, அவ உயிரோட இருக்காளா, இல்லையான்னு டெஸ்ட் பண்ணச் சொல்லுங்க. அவ உடம்புல உயிர் இருக்குன்னு எந்த ஒரு டாக்டராவது சொல்லிட்டா நான் இந்த டாக்டர் தொழிலையே விட்டுடறேன். உங்க மனைவிகிட்ட போனைத் தர்றேன். அவங்ககிட்டயே பேசுங்க...

    ராஜலிங்கம் திகைத்துப் போய் நிற்க மறுமுனையில் மனைவி வத்சலாவின் குரல் கேட்டது.

    எ... எ... என்னங்க... உங்களுக்கு புத்தி கித்தி பிசகிப் போச்சா என்ன...? டாக்டர் சொல்றதை ஏன் நம்ப மாட்டேங்கறீங்க...? லட்சணா உயிரோடு இருந்தா நம்ம ரெண்டு பேரைக் காட்டிலும் அவர்தான் சந்தோஷப்படுவார். நம்ம பொண்ணு இப்போ உயிரோடு இல்லீங்க... எனக்கு முன்னாடிதான் அவளைப் படுக்கப் போட்டிருக்காங்க. சித்தர் சொன்னாரு... சாமியார் சொன்னார்னு பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா சென்னைக்குப் புறப்பட்டு வாங்க. நீங்க வந்துதான் எல்லாக் காரியமும் பண்ணனும்.

    செல்போன் இணைப்பு அறுந்துபோக ராஜலிங்கம் தன்னுடைய செல்போனைக் கையில் வைத்துக் கொண்டு ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தார். பிறகு சுய உணர்வுக்கு மீண்டவராய் உச்சிமலைச் சித்தரைப் பார்த்தார்.

    அவர் கண்கள் மூடி தியானத்தில் இருந்தார்.

    ஒரு நிமிஷம்...

    இரண்டு நிமிஷம்...

    மூன்று... நான்கு... ஐந்து...

    பிறகு தியானம் கலைந்து எதிரில் கண்ணீரோடு பவ்யமாய் கைகட்டி நின்றிருந்த ராஜலிங்கத்தை ஏறிட்டபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

    உன்னுடைய மகள் லட்சணா இறந்து விட்டாள் என்கிற செய்தி சென்னையிலிருந்து உனக்கு வந்துள்ளது. அவள் இறந்து விட்டாள் என்பது மறுக்க முடியாத சத்தியமான உண்மை. ஆனால், அவள் ஆயுள் முடிந்துதான் இறந்து போயிருக்கிறாளா என்பதில் எனக்கு ஒரு சந்தேகம். இந்த சந்தேகத்தை நான் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்றால் உன் மகள் லட்சணாவின் உடலை இன்றைய சூரிய அஸ்தமனம் நிகழ்வதற்குள் இங்கே கொண்டுவர வேண்டும். ஒருவேளை அவளுடைய ஆயுள் முடிந்திருக்காவிட்டால் அவளை உயிர்ப்பிக்க என்னால் முடியும்.

    ராஜலிங்கம் பதற்றமாய் குறுக்கிட்டார்.

    ஸ்வாமி! எம் பொண்ணோட உடம்பை இப்பவே கொண்டுவர ஏற்பாடு பண்றேன். அவளை எனக்கு உயிரோடு குடுங்க ஸ்வாமி!

    Enjoying the preview?
    Page 1 of 1