Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirukathaigal-II
Sirukathaigal-II
Sirukathaigal-II
Ebook308 pages2 hours

Sirukathaigal-II

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sirukathaigal-II

Read more from Rajeshkumar

Related to Sirukathaigal-II

Related ebooks

Reviews for Sirukathaigal-II

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirukathaigal-II - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1. வைகறைப் பறவை

    கண்களில் கணிசமான தூக்கம் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருந்தாலும் அலாரம் டைம்பீஸ் அலற ஆரம்பித்ததுமே, போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்துத் தெரு மாகாளியம்மன் கோயிலிலிருந்து ‘மாலே மணிவண்ணா’ திருப்பாவையை ஒலிபெருக்கி பாடிக் கொண்டிருந்தது.

    கண்களில் மிளகாயை வைத்துத் தேய்த்தாற்போல எரிச்சல். பொருட்படுத்தாமல் வாஷ்பேசினுக்கு போய் முகம் கழுவிக் கொண்டேன். பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த அறை நண்பன் தியாகு போர்வையை விலக்கிக் கொண்டு என்னை ஒரு துர்வாசப் பார்வை பார்த்தான். கோபம் வார்த்தைகளில் தெரிந்தது.

    பாவி..! தினம் தினம் உன்கூட இதே ரோதனையா போச்சு. எதிர்வீட்டு அகிலாவை நீ ரசிச்சு முடிக்கறதுக்குள்ளே நான் தூக்கம் இல்லாமே செத்துடுவேன் போலிருக்கு...

    கொஞ்சம் பொறுத்துக்கடா தியாகு! இந்த விடியற்காலை நேரத்துலதான் அந்த அகிலா தெரு பைப்பிலிருந்து வீட்டுக்குத் தண்ணி எடுக்கிறா, அஞ்சு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அவ தண்ணி எடுக்கிற அழகை ரசிக்கலாம். நீயும் எந்திரிச்சு வாடா... அந்த ஜன்னலுக்குப் பக்கத்துல நாற்காலியைப் போட்டுக்கிட்டு உட்காரலாம்!

    நீ பண்ணிட்டிருக்கிற தப்புக்கு என்னையும் பார்ட்னர் ஆக்கப் பார்க்கறியா? எனக்கு இதெல்லாம் பிடிக்காது...

    எல்லாமே ஒரு ஜாலிதாண்டா...

    எதுடா ஜாலி? பக்கத்து வீட்டுப் பெண்ணை அவளுக்குத் தெரியாமே அவளோட அங்க அசைவுகளை வக்ரப் பார்வை பார்க்கிறதுக்குப் பேரு ஜாலியா? உனக்கும் கல்யாணமாகி ஊர்ல பெண்டாட்டி இருக்கா. எனக்கும் வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் ஊரை விட்டு வந்து ஒரு கெளரவமான கம்பெனில வேலை பார்த்துட்டு இருக்கோம். நல்ல ஏரியாவில், அருமையான மாடி போர்ஷன் வாடகைக்குக் கிடைச்சிருக்கு. பேசாமே நல்ல பிள்ளைகளா இருந்துட்டுப் போயிடலாம். அக்கம் பக்கத்துப் பெண்களை கெட்ட பார்வை பார்த்து சீண்ட ஆரம்பிச்சா அது வம்புல போய்த்தான் முடியும்?

    ஒரு வம்பும் வராது.... அகிலா அப்சரஸ் மாதிரி அழகா இருக்கா. அதான் ரசிக்கிறேன். எந்த பெண்கிட்டேயும் இப்பேர்பட்ட உடம்பு கிடையாது. ஒரு ரெண்டு நிமிஷம் ஜன்னலுக்குப் பக்கத்துல வந்து நின்னு அவளைப் பாரு. அதுக்கப்புறம் நீயும் நாளையிலிருந்து அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சு எழுந்து உட்கார்ந்துடுவே...!

    என்னைப் பொறுத்தவரை அழகான பெண்களில் அகிலாவும் ஒருத்தி... அவ்வளவுதான்!

    அவ இடுப்போட சைஸ் என்ன இருக்கும்னு நினைக்கிறே தியாகு..?

    அவ அம்மாகிட்டே போய்க் கேளு. மூலையில சாத்தி வெச்சிருக்கிறதை கையில் எடுத்துக்கிட்டு கரெக்ட்டான சைஸ் சொல்லுவா... - தியாகு சொல்லிவிட்டு மறுபடியும் போர்வைக்குள் நுழைந்து கொண்டான்.

    அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்டா நீ! நான் திட்டிக் கொண்டே ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்றேன்.

    வெளியே வைகறை இருட்டு. கீழே எதிர்ச்சாலையில் அகிலாவின் வீட்டு முற்றம் டியூப் லைட் வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்தது. நான் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.

    அகிலா தன் பாவாடையையும் சேலையையும் ஒரு சேரத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு, தண்ணீர் குடத்தைச் சுமந்தபடி தெரு பைப்புக்கும் வீட்டுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள். அகிலாவின் அம்மாக்காரி அவளுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். பளீரென்ற குழல் விளக்கு வெளிச்சத்தில் அகிலாவின் சதைப் பிடிப்பான வெளிர் தொடையும் கணுக்கால் திரட்சியும் என்னுடைய கண்களை போதையோடு வருடியது.

    அகிலாவின் இந்த அழகு தரிசனம் தினசரி காலை ஐந்து மணிக்கு எனக்கு வஞ்சமில்லாமல் கிடைக்கும். அந்த விடியற்காலையில், ஆண்கள் யாரும் இல்லாத அந்த ஒண்டிப் போர்ஷனில், யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தின் காரணமாக போட்டுக் கொண்டு இருக்கும் மாராப்பையும் பொருட்படுத்த மாட்டாள் அகிலா. ஆறு மணி வரைக்கும் நான் ஜன்னலை விட்டு நகர மாட்டேன்.

    அகிலாவுக்கு மீறிப்போனால் இருபது வயது தான் இருக்கும். அம்மா மட்டுமே. அப்பா எப்பவோ காலமாகி விட்டிருந்தார். கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. எது நடந்தாலும் தட்டிக் கேட்க ஆண் பிள்ளை இல்லாத வீடு என்பதால் எனக்குள் ஒரு இளக்காரம். சமய சந்தர்ப்பம் வாய்த்தால் அகிலாவை அடைந்து விடுவது என்ற தீர்மானத்திலும் இருந்தேன். ஆனால், சமயம்தான் வாய்க்கவில்லை. அம்மாக்காரி எப்பவுமே அகிலாவோடு இருந்தாள்.

    வைகறை இருட்டு லேசாக சாயம் போய்க் கொண்டிருக்க, பக்கத்து வேப்ப மரத்தில் பறவைகள் இரைந்துக் கொண்டிருந்தன.

    அகிலா தண்ணீரையும் அழகையும் சிந்த விட்டுக் கொண்டு குடத்தோடு நடக்கும் அழகை கண் சிமிட்டாமல் பார்த்தபடி ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தேன். அண்டை வீடுகள் அரையிருட்டில் மூழ்கியிருந்தன.

    அகிலா...! - அம்மாக்காரி கூப்பிட்டாள்.

    என்னம்மா...?

    நான் பால் பூத்துக்கு போய்ட்டு வந்துடட்டுமா?

    நீ ஏம்மா போறே...! இதோ... இன்னும் ரெண்டு குடம்தான்... நானே போறேன்...

    நான் சும்மாத்தானே இருக்கேன். இப்ப போனா கூட்டம் இருக்காது. சட்டுன்னு வாங்கிட்டு வந்துடுவேன்...

    ராத்திரியே இருமிட்டிருந்தே..! இந்தப் பனியில் போய்ட்டு வந்தா அப்புறம் டாக்டர்கிட்டே போக வேண்டியதுதான்...

    இந்தப் பனி ஒண்ணும் பண்ணாது அகிலா. நான் பூத்துக்குப் போயிட்டு வர்றதுக்குள்ளே நீ வாசல் தெளிச்சுக் கோலம் போட்டுடு...

    என்னமோ பண்ணு... நான் சொன்னா நீ கேட்கவா போறே... - அகிலா சொல்லிக் கொண்டே காலி குடத்தோடு தெருவுக்குப் போக, அம்மாக்காரி பால் கூப்பனோடும் ஒரு பையோடும் முற்றத்துப் படியிறங்கினாள்.

    அப்போதுதான் அந்த விபரீதம் நேர்ந்தது.

    படியிறங்கிக் கொண்டிருந்த அகிலாவின் அம்மா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஸ்லோ மோஷனில் சரிய, பிடிப்பிழந்த கால்கள் உடலின் எடையைச் சமாளிக்க முடியாமல் புரட்டிவிட, அந்த ஈரமான சிமெண்ட் தரையின் பரப்பில் மல்லாந்து விழுந்தாள். அ... அ... அகிலா...! என்று ஒரு அலறல்.

    அகிலா தெருவிலிருந்து பதற்றமாக ஓடி வர, நான் விருட்டென எழுந்தேன். ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை மாட்டிக் கொண்டு அகிலாவின் வீட்டை நோக்கி ஓடினேன்.

    முப்பதாவது விநாடி அவர்கள் வீட்டு முற்றத்தில் இருந்தேன்.

    அகிலா, அம்மா... அம்மா... என்று அரற்றிக் கொண்டிருக்க நான் குனிந்து சோதித்தேன். அகிலாவின் அம்மா நினைவு தப்பியிருந்தாள். முகத்தில் தண்ணீர் அடித்துப் பார்த்தேன். சலனம் இல்லை. நான் அகிலாவை ஏறிட்டேன். அருகே பார்க்கும்போது இன்னமும் அழகாக இருந்தாள். அந்தச் சூழ்நிலையிலும் என் உடம்பு சூடேறியது.

    பக்கத்துல பாலாஜி நர்சிங் ஹோம் இருக்கு... அங்கே கொண்டு போயிடலாமா?

    அகிலா அழுகையோடு தலையாட்டினாள். நான் ஓடினேன். தெருமுனையில் பேக்கரி டீ ஸ்டால் அருகே எப்போதும் நான்கைந்து ஆட்டோக்கள் நின்றிருக்கும். ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி வியர்க்க ஓடினேன். மனசுக்குள் ஒரு குருவி கத்தியது.

    அகிலாவோடு நெருங்கிப் பழக இது ஒரு நல்ல வாய்ப்பு. உபயோகப்படுத்திக்க...

    பின்னே... விடுவேனா?

    இந்த உதவி செய்ததை சாக்காக வைத்துக் கொண்டு இனி அடிக்கடி அகிலா வீட்டுக்குப் போகலாம். ஒரு சரியான சந்தர்ப்பம் பார்த்து சாய்த்து விடலாம்...

    ஆட்டோ ஸ்டாண்ட் வந்தது.

    நல்லவேளை... ஒரு ஆட்டோ இருந்தது. டிரைவரிடம் விபரத்தைச் சொல்லி, ஆட்டோவை கூட்டி வந்து, அகிலாவின் அம்மாவை இரு கைகளாலும் வாரித் தூக்கி ஆட்டோவில் கிடத்தினேன். அகிலா வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏறி என்னருகே உட்கார்ந்தாள். கண்களில் நீர் கொப்பளித்து விட்டது.

    அழும்போது கூட அவள் அழகா இருக்காளே...

    ஆட்டோ புறப்பட்டு நர்சிங்ஹோமை நோக்கி விரைந்தது. ஆட்டோ பள்ளத்தில் இறங்கும் போதெல்லாம் அகிலா ஒரு பூச்செண்டு போல என் தோள்பட்டையின் மீது மோதினாள். வெல்வெட் மெத்தையில் புரண்ட தினுசில் ஒரு சுகம்.

    ஸார்... - அகிலா அழுகையோடு கூப்பிட்டாள்.

    என்ன அகிலா..? - அவளை பெயர் சொல்லி அழைக்கும் உரிமையை நானே எடுத்துக் கொண்டேன்.

    அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதே...?

    பயப்படாதே அகிலா... அம்மாவுக்கு மயக்கம்தான். ஒரு இஞ்செக்ஷன் போட்டா போதும்... எந்திரிச்சு உட்கார்ந்துடுவாங்க...

    ஆட்டோ ஒரு ஸ்பீட் பிரேக்கருக்காக வேகத்தை சட்டெனக் குறைத்தபோது அகிலாவின் ஐம்பது பர்ஸன்ட் உடம்பு என் உடம்போடு ஒட்டி இழைத்தது. பிரிய மனம் இல்லாமல் பிரிந்தது. ஆஹா..! நாள் பூராவும் இப்படியே ஆட்டோவில் போய்க் கொண்டு இருக்கலாம் போலிருக்கிறதே...

    பாலாஜி நர்ஸிங் ஹோம்.

    அகிலாவின் அம்மாவை டாக்டர் உள்ளே சோதித்துக் கொண்டிருக்க, நானும் அகிலாவும் வெளியே வெள்ளை பெயின்ட் அடித்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். அகிலா சேலைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டிருந்தாள். அடிக்கடி மூக்கை உறிஞ்சினாள். அதுகூட அழகாக இருந்தது.

    ஸார்... அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதே..! எனக்கு எல்லாமே என்னோட அம்மாதான்...

    தைரியமா இரு அகிலா... அம்மா கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு வருவாங்க பாரு..! - ஆறுதல் சொல்வது போல வேண்டுமென்றே அவளுடைய தோளைத் தொட்டுப் பேசினேன்.

    நர்ஸ் அறையிலிருந்து வெளிப்பட்டாள். என்னை நோக்கி வந்தாள். டாக்டர் உங்களைக் கூப்பிடறார்... போங்க ஸார்!

    நான் எழுந்தேன்... வா அகிலா...

    நர்ஸ் குறுக்கிட்டாள்.

    ஒரு நிமிஷம் ஸார்...

    என்ன?

    டாக்டர் உங்களை மட்டும்தான் உள்ளே வரச் சொன்னார்...

    அகிலா தயக்கத்தோடு மறுபடியும் பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள, நான் டோர் க்ளோஷரை தள்ளிக் கொண்டு உள்ளே போனேன். அகிலாவின் அம்மா கட்டிலில் கண் மூடிப் படுத்திருக்க, டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தாளில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் நிமிர்ந்தார். லேசாகப் புன்னகைத்தார்.

    வாங்க... உங்க மதர்க்கு மைல்ட் ஹார்ட் அட்டாக். பட்... சரியான நேரத்துக்குக் கொண்டு வந்துட்டீங்க. ஒரு இஞ்செக்ஷன் போட்டிருக்கேன். அரை மணி நேரத்துல சரியாயிடும். இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் ஐ.சி.யூ.வில் இருக்கிறது பெட்டர். அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்னு வெளியே இருக்கிற உங்க தங்கைகிட்டே சொல்லிடாதீங்க. அந்தப் பொண்ணு பயந்துடும்...

    டா... டாக்டர்...!

    ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க..?

    அது வந்து... டாக்டர்...! இவங்க என்னோட அம்மா கிடையாது. அந்தப் பொண்ணும் என்னோட சிஸ்டர் கிடையாது. நான் குடியிருக்கிற வீட்டுக்குப் பக்கத்து வீட்ல இவங்க இருக்காங்க...

    டாக்டர் தன்னுடைய கண்களில் வியப்பைக் காட்டினார். ஈஸிட்... ரியலி...! இந்த அம்மாவோட ஜாடை உங்க முகத்துல தெரிஞ்சதால, நீங்கதான் மகனா இருக்கணும்னு நினைச்சுட்டேன். அதுவுமில்லாமே அந்தப் பெண்ணை உரிமையோடு தொட்டுப் பேசிட்டு இருந்ததால், உங்க சிஸ்டர்னு நினைச்சுட்டேன். ஸாரி...! இனிமே எதைப் பேசறதா இருந்தாலும் அந்தப் பொண்ணுகிட்டேயே பேசிக்கிறேன்... வெரி ஸாரி!

    டாக்டரின் பேச்சு என்னை ஒரு சாட்டையடியாகப் புரட்டிப் போட நான் துடித்துப் போய் நிமிர்ந்தேன்.

    வேண்டாம் டாக்டர்... கூடப் பிறந்தால்தான் சிஸ்டரா..? நீங்க எதைப் பேசறதா இருந்தாலும் என்கிட்டேயே பேசலாம். நானும் இந்த அம்மாவுக்கு ஒரு மகன் மாதிரிதான்...

    வெல் செட்..! - டாக்டர் எழுந்து வந்து என் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

    போன நிமிஷம் வரைக்கும் என் மனசுக்குள் இருந்த அந்த அழுக்கு, இந்த நிமிஷத்திலிருந்து கரைய ஆரம்பித்தது.

    இரண்டு நாட்கள் கழித்து...

    அலாரம் அடிக்காமலேயே தூக்கம் கலைந்து கண் விழித்தேன். மணி 5.45. அறை நண்பன் தியாகு அயர்ந்த தூக்கத்தில் இருக்க, நான் எழுந்து போய் ஜன்னல் கதவைத் திறந்து வைத்தேன். பார்வையை அகிலா வீட்டுக்குத் துரத்தினேன்.

    அகிலா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். என்னுடைய பார்வைக்கு இப்போது கோலம் மட்டுமே சிக்கியது.

    அடேங்கப்பா... எவ்வளவு பெரிய கோலம்!

    2. நொண்டிக் குதிரை

    638111 இந்த பின்கோடு நம்பர்க்குச் சொந்தமான வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையத்தில் ஒரு ஏப்ரல் மாதத்தின் அனல் தெறிக்கும் மத்தியான நேரம். ‘பேருந்து நிற்குமிடம்’ என்ற போர்டு தெரிந்த பஸ் ஸ்டாண்ட் புழுதிப் பறப்போடு இருந்தது.

    ரொம்பவும் சிதிலமான பஸ் ஸ்டாண்ட். ஊர் எவ்வளவோ முன்னேறிவிட்ட போதிலும் - பஸ் ஸ்டாண்ட் மட்டும் வீட்டில் பழைய நினைப்புகளோடு உட்கார்ந்திருக்கும் ஒரு கிழம் மாதிரித் தெரிந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1