Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellam Poi and Karuppu Thamarai
Ellam Poi and Karuppu Thamarai
Ellam Poi and Karuppu Thamarai
Ebook459 pages2 hours

Ellam Poi and Karuppu Thamarai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ellam Poi and Karuppu Thamarai

Read more from Rajeshkumar

Related to Ellam Poi and Karuppu Thamarai

Related ebooks

Related categories

Reviews for Ellam Poi and Karuppu Thamarai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellam Poi and Karuppu Thamarai - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    எந்த ஒரு விநாடியிலும் சூரியனைப் பிரசவிக்கத் தயாராய் இருந்தது கிழக்கு திசை. காற்றில் குளிர் பரவியிருக்க, ஒலிபெருக்கியில் ‘கந்த சஷ்டி’ கவசம் வழிந்தது. ‘ஆறுமுகம் படைத்த அய்யா வருக, நீரிடும் வேலவன் சீக்கிரம் வருக, சரவணபவனார் சடுதியில் வருக.’

    ஆனந்த், முருகனை தரிசனம் செய்துவிட்டு கோவிலின் உட்பிரகாரத்தையும், வெளிப்பிரகாரத்தையும் சுற்றி முடித்து கோவிலின் அலுவலக அறைக்கு வந்தபோது செயல் அலுவலர் பவ்வியமாய் அவனை நெருங்கினார்.

    தம்பி...! கோவில்ல இப்ப கூட்டம் இருக்கு. அன்னதானம் குடுத்துடலாமா?

    அந்த அழகான இருபத்தேழு வயது இளைஞன் ஆனந்த், தன் மணிக்கட்டை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 6.11.

    சரியாய் 6.26-க்கு அன்னதானத்தை தொடங்கிவிடலாம்.

    தம்பி தப்பாய் நினைக்கக்கூடாது... சர்க்கரைப் பொங்கல் ஐநூறு பொட்டலம், புளியோதரை ஐநூறு பொட்டலம் ‘ஆர்டர்’ குடுத்து வரவழைச்சுட்டோம். இன்னிக்கு சஷ்டி நாள். கோவில்ல கூட்டம் இருக்கும். இருந்தாலும் இன்னும் ஒரு பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே இதுல பாதி கூட்டம் காணாமே போயிடும். அதுக்கப்புறமாய் கூட்டம் சாயந்தரம்தான் வரும்.. அதனால அன்னதானத்தை இப்பவே கொடுக்க ஆரம்பிச்சா, பொட்டலங்கள் மீதம் இருக்காது!

    ஆனந்த் அவரை ஒரு சின்னப் புன்னகையில் நனைத்துவிட்டு சொன்னான். சார்! நீங்க சொல்றது சரிதான்... இருந்தாலும் சரியாய் 6.26-க்கு அன்னதானத்தை ஆரம்பிச்சா, என்னோட மனசுக்கு சந்தோஷமாய் இருக்கும்.

    சரி தம்பி! உங்க விருப்பப்படியே 6.26 - க்கு ஆரம்பிச்சுடலாம். இன்னும் பதினைஞ்சு நிமிஷம் இருக்கு... உள்ளே வந்து உட்காருங்க. காபி சொல்லட்டுமா?

    வேண்டாம்... நான் விரதம். ஒரு தம்ளர் பால், ஒரு மலைப்பழம்... இதுதான் இன்னிக்கு என்னோட உணவுப் பட்டியல்.

    விரதம் இருந்து அன்னதானம் பண்ற அளவுக்கு இன்னிக்கு என்ன விசேஷம் தம்பி? அதுவும் சரியாய் 6.26-க்குத்தான் பண்ணனும்னு சொல்றீங்க... ஏதாவது வேண்டுதலா?

    அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இன்னிக்கு அந்த நேரத்துக்கு அன்னதானம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான்...! - ஆனந்த் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, அவன் கட்டியிருந்த பட்டு வேட்டியின் இடுப்பு மறைவில் இருந்த செல்போன் தன் ‘ரிங்டோனை’ வெளியிட்டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான்.

    அவனுடைய அப்பா சங்கரநாராயணன்.

    ஹலோ அப்பா... குட்மார்னிங்.

    உன்னோட குட்மார்னிங்கை அப்புறமாய் வாங்கிக்கறேன். மொதல்ல நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு. பட்டு வேட்டியைக் கட்டிக்கிட்டு, பட்டுத்துண்டை போர்த்திக்கிட்டு காலையில் அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பி கார்ல புறப்பட்டுட்டியாமே! எங்கே போனே?

    கோவிலுக்கு.

    திடீர்னு என்ன கோவிலுக்கு! இன்னிக்கு உன்னோட பிறந்த நாள் கூட இல்லையே?

    பிறந்த நாளைக்குத்தான் கோவிலுக்குப் போகணுமா? இன்னிக்குப் போகணும்னு தோணிச்சு... போனேன்.

    சரி.. எந்தக் கோவில்?

    ஆர்.எஸ். புரத்தில் இருக்கிற பாலதண்டாயுதபாணி கோவில்.

    கோவிலில் இருந்து வீடு திரும்ப எவ்வளவு நேரமாகும்?

    ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடுவேன்.

    வந்ததும் என்னை வந்து பாரு... ஒரு முக்கியமான விஷயம்.

    என்ன?

    நீ இன்னிக்கு மத்தியானம் விமானத்துல டெல்லிக்குப் புறப்பட்டுப் போகணும். மத்திய அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ‘ஃபேக்ஸ்’ கொடுத்து இருக்காங்க. நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அமைச்சரின் தலைமைச் செயலாளரோடு உனக்கு ‘அப்பாயிண்ட்மெண்ட்’. நாம புதுசா தொடங்கப்போற ‘சோலார் எனர்ஜி’ திட்டம் சம்பந்தமாய் அவர் உன்கிட்டே சில விளக்கங்களை கேட்க இருக்கிறார்.

    என்னப்பா... திடீர்னு?

    இதோ பாரு! இது நான் முடிவு செய்த அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. அமைச்சரோட தலைமைச் செயலாளர் முடிவு செய்தது. ஏன், இன்னிக்கு உனக்கு வேற முக்கியமான வேலை ஏதாவது இருக்கா?

    அது... வந்து... - ஆனந்த் குரலை இழுக்க... மறுமுனையில் சங்கரநாராயணன் படபடத்தார்.

    ஆனந்த்! இன்னிக்கு உனக்கு என்ன முக்கியமான வேலை இருந்தாலும் சரி.. அதை ரத்து செய்துவிட்டு டெல்லிக்குப் புறப்படத் தயாரா இரு. இந்த டெல்லி ‘அப்பாயிண்ட்மெண்ட்’டை வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு உனக்கே தெரியும்.

    சரிப்பா! நான் புறப்படறேன். விமான டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.

    பண்ணிட்டேன்... - சங்கரநாராயணன் செல்போனை அணைத்துவிட, ஆனந்த் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தான்.

    ‘சே! இன்னிக்குப் பார்த்து டெல்லிக்குப் புறப்படும்படியாய் ஆகிவிட்டதே!’ நெற்றியைத் தேய்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தான்.

    எவ்வளவு நேரம்?

    தெரியவில்லை!

    தம்பி! என்ற குரல் கேட்டு சட்டென்று கலைந்தான். எதிரே கோவிலின் செயல் அலுவலர்.

    தம்பி! நேரம் இப்போ 6.25. நீங்க சொன்ன 6.26 - க்கு இன்னும் ஒரு நிமிஷம்தான் பாக்கி இருக்கு. அன்னதானத்தை ஆரம்பிச்சுடலாமா?

    ஆனந்த் எழுந்தான்.

    ம்... வாங்க... - சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான். அறை வாசலில் இரண்டு பெரிய கூடைகள் நிறைய உணவுப் பொட்டலங்கள் தெரிய, வெளிப்பிரகாரம் வரைக்கும் ஒரு வரிசை நீண்டு இருந்தது. ஆனந்த் தன் மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தை மறுபடி பார்த்தான்.

    சரியாய் 6.26 ஆனதும் உணவுப் பொட்டலங்களை எடுத்து விநியோகிக்க ஆரம்பித்தான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று நிரம்பி இருந்த வரிசை கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரம்பித்தது.

    ஒரு பெரியவருக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பின்னால் வந்த அந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் திகைப்புக்குள் விழுந்தான்.

    சாதுர்யா!

    அந்த அழகான 21 வயது பெண், அவன் அருகே குனிந்து மெல்லிய கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

    என்ன... இதெல்லாம்?

    எது?

    இப்படி... ஒரேடியாய் பக்திப் பழமாய் மாறி அன்னதானமெல்லாம் பண்ணிக்கிட்டு?

    ஆனந்த், செயல் அலுவலரிடம் திரும்பினான். சார்! இந்த அன்னதானத்தை நீங்க தொடர்ந்து நடத்துங்க.. நான் இப்ப வந்திடறேன்.

    பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, சாதுர்யாவோடு நடந்து ஒரு மரத்துக்குக் கீழே ஒதுங்கினான் ஆனந்த்.

    நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லை சாதுர்யா.

    என்னோட தோழி புனிதா, தினமும் காலையில் இந்தக் கோவிலுக்கு வருவா. நீங்க கோவிலில் இருக்கிறதா அவதான் எனக்கு போன் பண்ணி, ‘உன்னோட ஆனந்த், பாலதண்டாயுதபாணி கோவில்ல பக்தி பரவசத்தோடு அன்னதானம் பண்ணிக்கிட்டு இருக்கார். போய்ப் பாரு’ன்னு சொன்னா! நல்ல வேளையாய் குளிச்சிட்டு தயாராய் இருந்ததால, உடனே புறப்பட்டு வர முடிந்தது. ஆமா... என்ன இதெல்லாம்? இப்படியொரு பட்டு வேட்டி, மேல் துண்டு பாணியில இந்த ஒரு வருட காலத்துல உங்களை ஒரு தடவைகூட பார்த்தது இல்லையே?

    அது.. வந்து...

    ம்... சொல்லுங்க.

    இன்னிக்கு தேதி என்ன?

    மார்ச் 23.

    போன வருடம் இதே தேதியில் என்ன நடந்தது?

    சாதுர்யா யோசித்துவிட்டு தலையாட்டினாள். உதட்டை அழகாய் பிதுக்கினாள்.

    தெரியலையே!... என்ன நடந்தது?

    பார்த்தியா... நீ மறந்துட்டே! ஆனா நான் மறக்கலை. என்ன நடந்ததுன்னு நான் சொல்லட்டுமா?

    சொல்லுங்க.

    போன வருடம் இதே மாதம், இதே தேதியில் காலை மணி 6.26-க்கு சாதுர்யா என்கிற ஒரு தேவதையை இந்தக் கோவிலில்தான் சந்திச்சேன். அந்த மகோன்னதமான வைபவத்தைக் கொண்டாடத்தான் இப்படியொரு அன்னதானம்.

    அவளின் கடல்நிறக் கண்கள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் விரிந்தன. அட... ஆமாம். இதை நான் எப்படி மறந்தேன்? - தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்.

    ஆனந்த் தொடர்ந்து பேசினான்.

    ஒவ்வொருத்தர் தன்னோட பிறந்த நாளைக்கு கோவில்ல போய் அன்னதானம் பண்ணுவாங்க. ஆனா, நான் என்னோட காதல் பிறந்த தினத்துக்காக அன்னதானம் பண்ணிட்டு இருக்கேன்.

    ஆனந்த்! உங்களுக்கே இது கொஞ்சம் ‘ஓவரா’ தெரியலையா?

    கொஞ்சம் ‘ஓவர்’தான்... எனக்கே தெரியுது. அதனால்தான் வெளியே யார்கிட்டேயும் சொல்லாம, எனக்குப் பிடிச்ச இந்த வேலையைப் பண்ணிட்டிருக்கேன்.

    சாதுர்யா, கோவில் என்றுகூடப் பார்க்காமல் ஆனந்தின் கைகளைப் பற்றிக் கொண்டாள். நீங்க என் மேல வெச்சிருக்கற காதலோட ஆழத்தைக் காட்டிட்டீங்க.. எனக்கு எப்படிக் காட்டறதுன்னு தெரியலை.

    அதை நீ ஏற்கெனவே காட்டிட்டே சாதுர்யா.

    எப்படி?

    நாம ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சு இன்னியோட ஒரு வருடம் முடியப் போகுது. கடந்த 365 நாட்களில் ஒரு நாள்கூட நீ என்னைப் பார்க்காமே இருந்ததில்லை.

    அப்படியா?

    என்ன அப்படியா...? வேணும்னா என்னோட டைரியைக் கொண்டு வந்து காட்டுறேன். நாம ஒவ்வொரு நாளும் எங்கே சந்திச்சோம்... என்ன பேசிக்கிட்டோம்.... என்ன சாப்பிட்டோம்ங்கிற விவரங்கள் அதில் இருக்கு.

    இந்த வருடமும் நாம அதே மாதிரி இருக்கணும்.

    அது முடியாது போலிருக்கே!

    என்ன சொல்றீங்க?

    நான் இன்னிக்கு மத்தியானம் டெல்லி போறேன். மத்திய அமைச்சரின் செயலாளரோடு ஒரு சந்திப்பு.

    முடிச்சிட்டு எப்ப வருவீங்க?

    எப்படியும் ரெண்டு அல்லது மூணு நாள் ஆகிடும்.

    நோ! நீங்க போகக்கூடாது. உங்க கம்பெனியில இருந்து வேற யாரையாவது அனுப்பினா என்ன?

    அப்பா என்னைத்தான் போகச் சொல்றார். அது ஒரு முக்கியமான - தொழில் சம்பந்தமான பயணம். நான்தான் போய் ஆகணும். வேற வழி இல்லை.

    நாளைக்கே டெல்லியில் இருந்து திரும்ப முடியாதா?

    வாய்ப்பு இல்லை சாதுர்யா... ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ. மூணாவது நாள் நிச்சயம் திரும்பிடறேன்.

    சரி! அப்படீன்னா நான் இப்ப சொல்றபடி கேட்கணும்.

    என்ன?

    கோவிலில் இருந்து நேரா என்னோட வீட்டுக்குப் போறோம்....

    என்னது! உன்னோட வீட்டுக்கா?

    ஆமா...

    எதுக்கு சாதுர்யா?

    என்னோட அம்மாவும், அப்பாவும் அவங்களோட வருங்கால மருமகனைப் பார்க்க வேண்டாமா?

    ஏய்... என்ன உளர்றே? நம்ம காதலை நான் இன்னும் எங்க அப்பாகிட்டே சொல்லலை.

    நான் என் வீட்ல சொல்லிட்டேன் ஆனந்த்! உங்க ‘போட்டோ’வையும் காட்டினேன். பார்த்துட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டாங்க. ஒரு நாளைக்கு கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தறதாய் சொன்னேன். அந்த ஒரு நாள் இன்னிக்கே இருக்கட்டுமே! ப்ளீஸ் ஆனந்த். நீங்க மறுப்பு சொல்லாம வரணும். இந்த பட்டு வேட்டியில் உங்களைப் பார்த்தா அவங்க அப்படியே பூரிச்சுப் போயிடுவாங்க.

    இன்னிக்கு வேண்டாமே? நான் டெல்லியில் இருந்து வந்ததும், அப்பாகிட்டே விஷயத்தைச் சொல்லி கூட்டிகிட்டு வர்றேனே?

    இல்ல! இன்னிக்கு நீங்க வரணும். யாருக்கும் தெரியாமே ஒரு வருடமா நாம காதலிக்கிறோம். இன்னிக்கு அதை வெளி உலகத்துக்கு ‘டிக்ளேர்’ பண்ணுவோம். ம்... கிளம்புங்க.

    இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தார்கள்.

    பொழுது பளீரென்று விடிந்திருக்க, சாலையில் போக்குவரத்து ஆரம்பமாகி இருந்தது. ஆனந்த் பதற்றத்தோடு இருப்பதைப் பார்த்துவிட்டு சாதுர்யா சிரித்தாள்.

    ஆனந்த்! என்னோட அம்மாவும், அப்பாவும் நம்ம காதலுக்கு ‘ஓ.கே.’ சொல்லிட்டாங்க. நீங்க டென்ஷனே இல்லாமே வந்து ஒரு ‘ஹலோ’ சொல்லிட்டு அவங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வந்துடலாம். நான் என்னோட கார்ல முன்னாடி போறேன். நீங்க என் பின்னாடியே உங்க கார்ல வந்துடுங்க.

    சரி... தலையாட்டிவிட்டு ஆனந்த் தன் காரை நோக்கி நடந்தான். நூறு மீட்டர் தள்ளி சாலை ஓரமாய் நிறுத்தி இருந்த தன்னுடைய காரை நோக்கி நெருங்கி கதவைத் திறக்க முயன்றபோது, பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது.

    ஆனந்த்.. ஒரு நிமிஷம்!

    அவன் திரும்பிப் பார்த்தான்.

    நடுத்தர வயதில் ஒரு பெண். கைத்தறி சேலை கட்டிக் கொண்டு, நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டோடு தனிமையாய் தெரிந்தாள்.

    ஆனந்த் திகைப்போடு கேட்டான். யார் நீங்க?

    நான் ஒரு வக்கீல்! பேரு வள்ளி. உங்ககிட்டே ஒரு பத்து நிமிஷம் பேசணும்.

    என்ன விஷயமாய்?

    லட்சணா என்கிற பெண்ணைப் பற்றி!

    லட்சணாவா...? யாரது?

    லட்சணாவை உங்களுக்குத் தெரியாது?

    தெரியாது.

    சரி... வாங்க! கார்ல போய்கிட்டே பேசுவோம். - அந்தப் பெண் சொல்லிக்கொண்டே காரின் கதவைத் தொட்டாள். ஆனந்த் அவளுடைய கையைத் தட்டி விட்டான். ஏய்... யார் நீ? என்ன, கலாட்டா பண்ண வந்தியா? நீ எதுக்காக என் கார்ல வரணும்?

    அவள் தன் வலது கையின் சுட்டு விரலை உயர்த்தினாள். இதோ பாரு... மரியாதையா என்னை கார்ல ஏத்திக்கோ... இல்லேன்னா உன்னோட மானம் மரியாதையெல்லாம் நடுத்தெருவுக்கு வந்து சிரிப்பாய் சிரிச்சுடும்.

    ஆனந்த் வெகுண்டான். என்னடி மிரட்டுறே... நீ யாருன்னே எனக்குத் தெரியாது. இரு.. போலீசுக்கு போன் பண்றேன் - தன் மடியில் இருந்த செல்போனை எடுத்து ‘டயல்’ செய்ய முயல - அவள் அதைத் தட்டினாள்.

    ஆனந்த், உடம்பு முழுவதும் தீப்பற்றிக் கொண்ட மாதிரியான ஒரு ஆத்திரம் குபீரென்று பரவ... அவளுடைய கழுத்தைப் பிடித்தான்.

    இரும்புப் பிடி!

    அப்படியே அவளைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு மரத்தின் அடித்தண்டில் வைத்து ‘நெக்’கென்று மோதினான். பின்னந்தலை பிளந்துகொள்ள - ரத்தத் துளிகள் சூடாய் தெறித்து விழுந்தன.

    ஆனந்த் தன் கோபத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குக் திரும்பிக் கொண்டு இருக்கும்போதே, அந்தப் பெண் நிலைத்த விழிகளோடு செத்துப் போயிருந்தாள்.

    அவன் இதயத் துடிப்பு எகிறியது!

    2

    ஆனந்த் சர்வாங்கமும் அதிர்ந்து போனவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தக் காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல், சாலை வெறிச்சோடிப் போயிருக்க... கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த டீக்கடையில் மட்டும் நான்கைந்து பேர் உட்கார்ந்து அன்றைய காலைப் பத்திரிகையைப் புரட்டியபடி கைகளில் டீ தம்ளர்களோடு தெரிந்தார்கள். நடந்த சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை என்பதில் சின்னதாய் சந்தோஷப்பட்டுக் கொண்ட ஆனந்த், மரத்தில் சாய்ந்தபடி இறந்து போயிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

    தலையில் அடிபட்டு பெருகிய ரத்தம் அவளுடைய முகத்தில் வழிந்து, சிவப்புக் கோடுகளைப் போட்டுக் கொண்டு இருந்தது. அவளுடைய நிலைத்த விழிகள், உடம்பில் உயிர் இல்லை என்று தீர்மானமாய் சொல்ல, ஆனந்த் அந்த இடத்தை விட்டு மெதுவாய் நழுவி தன்னுடைய கறுப்பு காரில் ஏறிக் கொண்டான். பதற்றம் இல்லாமல் ‘இக்னிஷியனை’ உசுப்பி காரை நகர்த்தினான்.

    யாரும் சந்தேகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நிதானமான வேகத்தில் காரை விரட்டி, ஆர்.எஸ்.புரம் எல்லையைக் கடந்தான்.

    ‘யாராவது பார்த்து இருப்பார்களோ?’ - மூளையில் ஒரு கரப்பான் பூச்சி ஓடியது.

    ‘இல்லை... பார்த்திருக்க வாய்ப்பில்லை... எல்லாம் ஒரு நிமிட நேரத்துக்குள் நடந்து முடிந்து விட்டது. காருக்கு மறைவாய் சம்பவம் நடந்ததால், யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்’ - இதயத்தின் ஓர் ஓரத்தில் இருந்து ஆறுதல் குரல் கேட்டது.

    காரின் வேகத்தை இப்போது அதிகரித்தான்.

    பயத்தில் நெற்றி வியர்த்து இருப்பதை உணர முடிந்தது. மூளைக்குள் நிறைய கரப்பான் பூச்சிகள்.

    ‘யார் அந்தப் பெண்?’

    ‘வக்கீல் என்று சொன்னாள்! பெயர் வள்ளி.’

    ‘என்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாள். என்ன பேச வந்தாள்?’

    ஆனந்த் யோசித்தபடி - சற்று முன் அவள் தன்னிடம் பேசியதை மனசுக்குள் ‘ரீவைண்ட்’ செய்து பார்த்தான்.

    மனத்திரையில் அந்தக் காட்சி ஓடியது.

    நான் ஒரு வக்கீல். பேர் வள்ளி. உங்ககிட்டே ஒரு பத்து நிமிஷம் பேசணும்.

    என்ன விஷயமாய்?

    லட்சணா என்கிற பெண்ணைப் பற்றி.

    லட்சணாவா? யாரது?

    லட்சணாவை உங்களுக்குத் தெரியாது?

    தெரியாது.

    ஆனந்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் திடும்மென்று விழித்துக் கொண்டு, ‘ரிங்டோனை’ வெளியிட - எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான்.

    சாதுர்யா!

    செல்போனை காதுக்கு ஒற்றினான்.

    மறுமுனையில் சாதுர்யாவின் குரல் கோபத்தில் ஒலித்தது.

    என்ன.. காரையே காணோம்?

    வந்துட்டிருக்கேன்.

    என்னோட பார்வைக்குத் தட்டுப்படலையே!

    அதுக்குள்ளே ஒரு நண்பன் - ‘வாக்கிங்’ போயிட்டு இருந்தவன் வழியில பார்த்துட்டான். ஒரு ரெண்டு நிமிஷம் நின்று பேச வேண்டியதாயிடுச்சு...

    ஆனந்த்.

    என்ன?

    ஏன் உங்க குரல் இப்படி இருக்கு?

    எப்படி?

    கொஞ்சம் பதற்றமா!

    அப்படி ஏதும் இல்லையே!

    எனக்கு அப்படி தோணுது... கோவில்ல நீங்க பேசின போது இருந்த ஒரு துள்ளலும், உற்சாகமும் இப்ப நீங்க பேசின பேச்சில் சுத்தமா ‘மிஸ்ஸிங்’...

    நோ... நோ... ஐ யாம் ஆல் ரைட்.

    ஆனந்த்! நம்ம கல்யாண விஷயமாய் என்னோட அப்பாவையும், அம்மாவையும் பார்த்துப் பேச பயப்படுறீங்களா?

    அப்படியெல்லாம் இல்லை.

    ஒருவேளை பயமா இருந்தா, அது தேவையே இல்லை. ஏன்னா, நான் முன்னாடியே உங்களைப் பத்தி சொல்லி வெச்சுட்டேன்... நீங்க தைரியமாய் வந்து, என்னோட அப்பாவைப் பார்த்து ‘குட்மார்னிங்’ சொல்லிட்டுப் புறப்படுறீங்க... அவ்வளவுதான்.

    ம்...ம்...

    என்ன... ம்...ம்! பேச்சில் சுரத்தே இல்லை. உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு. நேர்ல வாங்க... பேசிக்கிறேன் - மறுமுனையில் சாதுர்யா இணைப்பை துண்டித்துவிட, ஆனந்தும் செல்போனை அணைத்தான்.

    முகத்தில் இப்போது வியர்வையின் சதவிகிதம் அதிகரித்து இருந்தது. கார் வட கோவை மேம்பாலத்தின் மேல் ஏறியது. மறுபடியும் வக்கீல் வள்ளியின் முகம் மனத்திரையில் உற்பத்தியாயிற்று.

    ‘இந்நேரம் யாராவது பார்த்து இருப்பார்கள். கூட்டம் கூடியிருக்கும். போலீசுக்கும் தகவல் போயிருக்கலாம்.’

    ‘போலீஸ் என்னை மோப்பம் பிடிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?’

    யோசித்துக்கொண்டே காரை விரட்டினான். ஆனந்த். கார், டாடாபாத் பகுதிக்குள் நுழைந்து - ஏழாவது தெருவில் இருந்த சாதுர்யாவின் பங்களா முன் நின்றபோது - கோவையின் கிழக்குத் திசையில் சூரியன் ஒரு சிம்லா ஆப்பிளாய் மாறி இருந்தான்.

    பங்களா வாசலிலேயே சாதுர்யா நின்றிருந்தாள்.

    ஆனந்த் காரைவிட்டு இறங்கி வர, அவள் கேலியாய் சிரித்து தலையைச் சாய்த்து, இந்த வீட்டின் வருங்கால மருமகன் அவர்களே வருக... வருக என்று சொல்லி வரவேற்றாள்.

    ஆனந்த் செயற்கையாய் சிரித்தான்.

    ‘போர்டிகோ’ படிகளில் ஏறும்போது சாதுர்யாவின் அப்பா பட்டாபிராமன், அம்மா வேதா இருவரும் புன்னகை முகங்களோடு உள்ளே இருந்து வெளிப்பட்டார்கள்.

    பட்டாபிராமன், வங்கி ஒன்றில் தனி அதிகாரியாய் பணியாற்றுபவர்; அம்மா வேதா, கோவையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரிக்கு முதல்வர். சாதுர்யா அவர்களுக்கு ஒரே மகள்.

    ஐம்பது வயது பட்டாபிராமன் அந்த காலை நேரத்தில் ‘ஜாக்கிங்’ உடையில் சற்று இளமையாய் காட்சி அளித்தார். அம்மா வேதாவும் தலைக்கு ‘டை’ அடித்து, தன்னை இளமையாகக் காட்ட முயற்சித்து அதில்

    Enjoying the preview?
    Page 1 of 1