Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal
5/5
()
About this ebook
இந்த நூலில் நூறு விதமான நகைச்சுவை ததும்பும் படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்... இந்த நூறு படைப்புகளும் வெறும் கற்பனையிலிருந்து வடித்தெடுத்தவை என்று சொல்லிவிட முடியாது. அவர்தம் அனுபவங்களை இணைத்துச் சொல்லியிருக்கிறார்.
அவருடைய பாணியில் சொல்லியிருப்பதால் அத்தனையும் நகைச்சுவையாய்ப் பரிணமித்துள்ளன. இல்லையென்றால் அவர்பட்ட சிரமங்கள், துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், எல்லாமும் நகைச்சுவையாய் நமக்குக் கிடைத்திருக்குமா?
என்ன அழகான முரண்பாடுகள்!
தாம் பெற்ற துன்பங்களை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, அவற்றை எழுத்துக்களாகவும் வடிப்பதற்குத் தனியொரு திறன் வேண்டுமல்லவா?
அத்தகு தனித் திறனோடு பிறந்தவர் பாக்கியம் ராமசாமி அவர்கள் என்றால் அது மிகையல்ல.
அவரும் அவருடன் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களும் அமரர் திரு. புனிதன் அவர்களும் சேர்ந்திருந்த 'கூட்டு இருக்கிறதே... அதுவும் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்களின் மேற்காட்டுதலோடு அவர்கள் பணியாற்றிய காலம் இருக்கிறதே, அது ‘குமுத’த்திற்கான பொற்காலம்!
கிருஷ்ண தேவராயருக்கு ஒரு தெனாலிராமன் மாதிரி, அக்பருக்கு ஒரு பீர்பால் மாதிரி, எஸ்.ஏ.பி, அவர்களுக்கு திரு. பாக்கியம் ராமசாமி என்பேன் நான்!
சிரிக்கச் சிரிக்க எழுதும் இவரை பாக்கியம் ராமசாமி என்பதை விட 'பாக்கியம் சிரிப்புச்சாமி’ என்றே அழைக்கலாம்.
'கார் என்று பேர் படைத்தாய்' என்று தொடங்கும் முதல் கதை முதல், 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி' என்கிற நூறாவது படைப்பு வரை பொங்கி வழிவது நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவையே!
சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க தோய்விட்டுப் போவது மட்டும் இல்லீங்க; நமது ஆயுளும் வளரும்...
வாசக நண்பர்களே! படிங்க, படிங்க; இந்த நூலைப் படிச்சுக்கிட்டே இருங்க; படிச்சதை நினைச்சுச் சிரிச்சுக்கிட்டே இருங்க! உங்க ஆயுளும் வளரும்... தீர்க்காயுசா இருங்க!
வணக்கம்.
அதிகமான அன்புடன்
- அமுதபாரதி
Read more from Bakkiyam Ramasamy
Come on Appusamy Come on Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Virumbiya Arputha Kattalaigal Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Aakasavaniyil Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Africa Azhagiyum Rating: 5 out of 5 stars5/5Appusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings'Ink'eetham Therinthavara Neegal? Rating: 0 out of 5 stars0 ratingsSirippum Sinthanaiyum Rating: 0 out of 5 stars0 ratingsAndha 37 Varudangal Rating: 0 out of 5 stars0 ratingsAayirathoru Appusamy Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyum Hipnotisa Poonaiyum Rating: 0 out of 5 stars0 ratingsAadhaar Attaiyum Appusamiyum Rating: 0 out of 5 stars0 ratingsKurunkatturaigal Moolam En Vaazhkai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsNaanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsSeethapattiyin Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal
Related ebooks
Kadakadanu padinga.. kalakalanu siringa.. Rating: 0 out of 5 stars0 ratings23-vathu Jannal Rating: 0 out of 5 stars0 ratingsAppusami Thairiyasami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsSirippum Sinthanaiyum Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsAppusamikkul Kuppusami Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratings47 Natkal Rating: 4 out of 5 stars4/5Appusamy Padam Edukkirar Rating: 0 out of 5 stars0 ratingsKannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Natpudan... Rating: 4 out of 5 stars4/5Sirikka Sindhikka 100 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNalladhaga Naalu Vaarthai Rating: 0 out of 5 stars0 ratingsOru abathu kan simittugirathu Rating: 4 out of 5 stars4/5Manathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Divorce Ketkirar Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsSattapadi Kutramillai! Rating: 0 out of 5 stars0 ratingsCurrency Vettai Rating: 5 out of 5 stars5/5Kadathal Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsPokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsS.S.66 Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal
1 rating0 reviews
Book preview
Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal - Bakkiyam Ramasamy
http://www.pustaka.co.in
பாக்கியம் ராமசாமியின் 100 சுவையான நகைச்சுவைக் கதைகள்
Bakkiyam Ramasamyin 100 Suvaiyana Nagaichuvai Kathaigal
Author:
பாக்கியம் ராமசாமி
Bakkiyam Ramasamy
For more books
http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
சிரிப்புச்சாமி!
ஓவியக்கவிஞர் அமுதபாரதி
என்ன செய்யறது போங்கோ? 'எனக்கு அறுபத்து நாலு பற்கள் இல்லாமெப் போச்சே'ன்னு வருத்தப்படுறேன்!
ஆமாம் திரு. பாகியம் ராமசாமி அவர்களின் கதைகளைப் படிக்கறப்போ வயிறு குலுங்க, கண்கள் கலங்க, வாய்விரிய சிரிக்காமல் இருக்க முடியலியே...
பெரிசா சிரிக்கவேணும்னா வாய் பெரிசா இருக்கணும்; வாய் பெரிசா இருக்கணும்னா முப்பத்திரண்டு பற்களுக்குப் பதிலா, அறுபத்து நாலு பற்கள் இருந்தாத்தானே முடியும்? அதனால்தான் முதல்லே குறிச்சதை எழுத வேண்டியதாப் போச்சு!
அதற்காக நான் ஒண்ணு செஞ்சேன்... என் மனைவியையும் பக்கத்திலே வச்சிக்கிட்டு இந்நூலின் கதைகளையும் மற்ற படைப்புகளையும் படிச்சேன்! படிக்கப் படிக்க அவளும் நானும் சிரிச்சதிலே என் பல் கவலை தீர்ந்து போச்சு!
ஆமாங்க, எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து பற்கள் அறுபத்து நாலாயிருச்சுல! (வயசு காரணமா ஒண்ணு ரெண்டு விழுந்திருந்தாலும் அறுபத்து நாலுண்ணு சொல்லிக்கலாமே!)
ச்சே! என்னமா எழுதியிருக்கிறார் பாக்கியம் ராமசாமி அவர்கள்! இப்படி எழுதுவதற்கு பாக்கியம் செய்திருக்கணும்... அவர் செய்திருக்கிறார்!
கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பிருந்தே 'குமுதம்' இதழில், பாக்கியம் ராமசாமி என்கிற திரு. ஜ.ரா. சுந்தரேசன் அவர்கள் எனக்குப் பரிச்சயம்.
இவர் எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் நகைச்சுவை இழைந்திருக்கும்; இழைந்திருக்கிறது!
இவரின் சிரஞ்சீவிப் படைப்பான 'அப்புசாமி-சீதாப்பாட்டி' கதைகளை யாரால் மறக்க முடியும்?
இது, இதற்கென்று சிலர் பிறக்கிறார்கள்... நகைச்சுவைக்கென்றே பிறந்தவர் பாக்கியம் ராமசாமி அவர்கள்.
எதை எழுதினாலும் நகைச்சுவை என்பது அவருக்கு என்னமாய் எழுத வருகிறது! வலிந்து தேடிப் பிடித்து அவர் எழுதுவதில்லை; தானாய் வருகிறது அவருக்கு நகைச்சுவை! நமது விரல்களில் தானாய் வளர்கிற நகங்களைப் போல!
நீர் ஊற்றி வளர்ப்பதில்லை நகத்தை
என்று உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் பாடினாரே, அப்படி!
இந்த நூலில் நூறு விதமான நகைச்சுவை ததும்பும் படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்... இந்த நூறு படைப்புகளும் வெறும் கற்பனையிலிருந்து வடித்தெடுத்தவை என்று சொல்லிவிட முடியாது. அவர்தம் அனுபவங்களை இணைத்துச் சொல்லியிருக்கிறார்.
அவருடைய பாணியில் சொல்லியிருப்பதால் அத்தனையும் நகைச்சுவையாய்ப் பரிணமித்துள்ளன. இல்லையென்றால் அவர்பட்ட சிரமங்கள், துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், எல்லாமும் நகைச்சுவையாய் நமக்குக் கிடைத்திருக்குமா?
என்ன அழகான முரண்பாடுகள்!
தாம் பெற்ற துன்பங்களை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, அவற்றை எழுத்துக்களாகவும் வடிப்பதற்குத் தனியொரு திறன் வேண்டுமல்லவா?
அத்தகு தனித் திறனோடு பிறந்தவர் பாக்கியம் ராமசாமி அவர்கள் என்றால் அது மிகையல்ல.
அவரும் அவருடன் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களும் அமரர் திரு. புனிதன் அவர்களும் சேர்ந்திருந்த 'கூட்டு இருக்கிறதே... அதுவும் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்களின் மேற்காட்டுதலோடு அவர்கள் பணியாற்றிய காலம் இருக்கிறதே, அது 'குமுத'த்திற்கான பொற்காலம்!
கிருஷ்ண தேவராயருக்கு ஒரு தெனாலிராமன் மாதிரி, அக்பருக்கு ஒரு பீர்பால் மாதிரி, எஸ்.ஏ.பி, அவர்களுக்கு திரு. பாக்கியம் ராமசாமி என்பேன் நான்!
சிரிக்கச் சிரிக்க எழுதும் இவரை பாக்கியம் ராமசாமி என்பதை விட 'பாக்கியம் சிரிப்புச்சாமி' என்றே அழைக்கலாம்.
'கார் என்று பேர் படைத்தாய்' என்று தொடங்கும் முதல் கதை முதல், 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி' என்கிற நூறாவது படைப்பு வரை பொங்கி வழிவது நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவையே!
சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க தோய்விட்டுப் போவது மட்டும் இல்லீங்க; நமது ஆயுளும் வளரும்...
வாசக நண்பர்களே! படிங்க, படிங்க; இந்த நூலைப் படிச்சுக்கிட்டே இருங்க; படிச்சதை நினைச்சுச் சிரிச்சுக்கிட்டே இருங்க! உங்க ஆயுளும் வளரும்... தீர்க்காயுசா இருங்க!
வணக்கம்.
அதிகமான அன்புடன்
- அமுதபாரதி
அணிந்துரை
மாமல்லபுரம்!...
ஆயிரம் ஆண்டுகளை அனாயாசமாய் தாண்டி விட்டது! இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளை அதே அனாயாசத்துடன் தாண்டிடும் அந்த அதிசயம்!...
கல்லைக் குடைந்து கலைவண்ணம் காட்டினான்! மலை விழுந்தது! சிலை எழுந்தது!
பாக்கியம் ராமசாமிபுரம்!...
நூற்றாண்டுகள் பலவற்றை அனாயாசமாய் தாண்டி நிற்கும்! இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பழமையையும் பண்பாட்டையும் ஒதிநிற்கும் சொல்லோவியம்!
சொல்லைக் கடைந்து வெண்ணெய் எடுத்தார்! குலை குலுங்கியது! சிரிப்பு மலை எழுந்தது!
அரை நூற்றாண்டுகளாய் தமிழ் ஏடுகளில் சிலாகித்துத் திரியும் 'சிரிப்புச் சித்தர்' பாக்கியம் ராமசாமி! படித்தவர்க்கும் பாமரர்க்கும் சிரிப்பை அருள்பாலிக்கும் சிறப்புச் சித்தரும் கூட!
கனத்த தொகுதியாக இது என் கையமர்ந்த வேளையே, இதன் 'கனம்' புரிந்துவிட்டது. மனம் இதனோடு ஒன்றியும் விட்டது! இரண்டு இரவுகள் இத்தொகுதி என் தலைமாட்டில் இருந்ததில், தலையணை ஆனது! தலைக்குள் போனது!
அந்த இரண்டு இரவுகளும் கனவுலகில் சஞ்சாரம் செய்ததில், ஆழ்ந்த உறக்கத்தையும் மீறி வெடிச் சிரிப்புக்களோடு என்னுடல் குலுங்கியதை உணர முடிந்தது! பாக்கியம் ராமசாமி ஒரு பவர்ஃபுல் ஆசாமி!
அணிந்துரை என்றால் உள்ளே இருப்பதைத் தொட்டுக் காட்டி அணிசெய்ய வேண்டும்! இத்தொகுதியுள்ளே இருப்பதைத் தொட்டுக் காட்ட வேண்டுமென்றால், ஒவ்வொரு கட்டுரைக்குமே 'தனியுரை' எழுத வேண்டும்! தகுமா? அணிந்துரை அதற்கு இடம் தருமா? தகாது! இடம் தராது!
இருப்பினும் தேன் எடுத்தவன் புறங்கை சுவைத்திடும் நிலைப்பாட்டுடன், இத்தேன் தொகுப்பினைப் பார்க்கிறேன். பட்டியலிடுகிறேன்!
எடுத்த எடுப்பிலேயே 'சிக்ஸர்' தூக்கும் பேட்ஸ்மேனாக, முதல் கட்டுரையிலேயே 'ஃபன்டாஸ்டிக் ஐடியா'வில் அள்ளுகிறார் பாக்கியம் ராமசாமி! 'கார் என்று பேர் படைத்தாய்!' கட்டுரை படித்தபின், 'கார்' வைத்திருப்பவர்களின் 'தடபுடல்களை'விட, அவர்களது 'கடமுடாக்கள்' தான் நினைவுக்கு வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறது.
'சங்கீதமா சந்தேகமா?' கட்டுரையில் வரிக்கு வரி இழைகிற பொன்னெழுத்துக்களில் பொலிகிறார் ராமசாமி! மழப்பாடி மகாலிங்கத்துடன் இவர் செல்கிற சங்கீத கச்சேரியும், இவரது சந்தேகங்களும் 'ஸரிகமபதநி' என்று நம்மை ராகம்போட்டு சிரிக்க வைக்கும் சங்கதிகள்!
'சில நேரங்களில் சில ஊர்கள்' ஊர் ஊராகக் கூட்டிச் சென்று உரக்கச் சிரிக்க வைக்கிறார். நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இதைப் படிக்காவிட்டால், ஊர் நம்மைப் பார்த்துச் சிரித்துவிடும்! அப்படியொரு சிரிப்புச் சந்தை விரிக்கிறார். கோனே நீர்வீழ்ச்சி, குற்றால நீர்வீழ்ச்சி சீஸன் தவறிப் போய் இருக்கலாம்! அடேயப்பா, நம் கண்களில் ஆனந்த நீர்வீழ்ச்சி பெருக்கெடுக்க வைக்கிறார்! பாக்கியம் நீர் வீழ்ச்சி
க்கு எப்போதும் 'நான்ஸ்டாப்' சீஸன்தான்.
'பிச்சை விருந்தா?...' எனக் கேள்வியுடன் உள் நுழைந்தால் 'பஃபே' முறையில் சிரிப்பு பதார்த்தங்களை நம் மனத்தட்டில் பரிமாறுகிறார். இந்தச் சுவை என்றென்றும் தீராச் சுவை!
'பயங்கர ஊகங்கள்' சிறியதாக இருந்தாலும் சிரிப்போடு சேர்த்து வாழ்வின் புதிர்முடிச்சுக்களில் மனிதமனம் சிக்கிச் சிதறுவதை தத்துவார்த்தமாய் முடிச்சவிழ்க்கிறது.
'ஐந்துபேர் கெடுத்த அற்புதக் கதை' மூலம், இலக்கிய ஆவர்த்தனம் செய்யும் எல்லோரையும் ஒரே பாய்ச்சலில் தாண்டி, தனி ஆவர்த்தனம் செய்கிறார் தனித்தன்மைமிக்க இந்தச் சிரிப்புச் சித்தர்! கைதேர்ந்த சிலம்ப வீரனைப் போன்ற நேர்த்தியுடன், இவரது எழுதுகோல் சுழன்றடிப்பதில் பெரும் பிரமிப்பு ஆட்டுவிக்கிறது!
இத்தொகுதியெங்கும் புனைவு - அபுனைவு, எதார்த்தம் - ஏகநர்த்தம் என்று ஏகத்துக்கும் சிரிப்பு மருந்தினை மலை மாலையாகக் குவித்திருக்கிறார். அதைச் சொல்லச் சொல்ல என்பக்கம் கூடுமென்பதால் அஞ்சித் தவிர்க்கிறேன்!
வழக்காடு மன்றத்தையே தன் எழுத்துக்களால் சிரிப்பாடு மன்றமாக மாற்றிவிடும் மகாவித்தைக்காரரான பாக்கியம் ராமசாமி அவர்கள், முதல் கட்டுரைத் தொடங்கி நாறாவது கட்டுரை வரை திகட்டவே திகட்டாத சிரிப்புப் பலகாரங்களை சில்லரையாகவும் மொத்தமாகவும் கடைவிரித்திருக்கிறார். பெற்றுக்கொள்வது அவரவர் வயிற்றளவு; மனத்தளவு!
இவருக்குக் கிடைக்கிற 'தலைப்புகள்' நமக்கு தலை கிறுகிறுக்க வைக்கின்றன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் 'டைட்டில்' தேவைப்பட்டால், பாக்கியம் ஐயா அவர்களை அணுகுங்கள்! படங்கள் 'தலைப்பிலேயே' பாக்கியம் பெற்றுவிடும்!
'பொன்னியின் செல்வன்' போன்ற புதினங்கள் நிலைப்பது போல, பாக்கியம் ராமசாமி அவர்களின் எழுத்தோவியங்கள் தமிழ்ப்பரப்பில் தன் இருப்பை சிரிப்பாய், சிறப்பாய் இருத்திக்கொண்டு நிலைத்திருக்கும் என்பதில் எள் முனையளவு கூட எனக்கு ஐயமில்லை!
பாக்கியம் தமிழுக்குக் கிடைத்த பாக்கியம்! - அவரது
வாக்கியம் தமிழில் என்றும் செளபாக்கியம்!
அன்பன்
- கொற்றவன்
முன்னுரை
வரப்புயர என்றாள் ஒளவைப்பாட்டி!
சிரிப்புயர என்றாள் சீதாப்பாட்டி!
எனக்கு நகைச்சுவை உணர்வை ஊட்டியவர்களுக்கும், அவற்றைக் கதை கட்டுரைகளில் நான் மாட்டியதற்கு உதவினவர்களுக்கும் எனது நன்றியை நூறு முறை தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகளை எழுதத் தொடங்கு முன்னரே என் கிடங்கில் நகைச்சுவை இருந்தது. அவ்வப் பொழுது அந்த உணர்வு வெளிப்பட குமுதம் ஆசிரியர் தெய்வத்திரு எஸ்.ஏ.பி. அவர்கள் பெரிதும் என்னை ஆற்றுப்படுத்தி அப்புசாமி சீதாப்பாட்டி என்ற பாத்திரங்களைக் கையில் கொடுத்து 'வரப்புயர' என்று ஒளவை வாழ்த்தியதைப் போல 'சிரிப்புயர' என்று ஆசீர்வதித்தார்.
அவரது நம்பிக்கை பொய்க்கலாகாது என்று பெரும்பாலும் நகைச்சுவைக் கதை, கட்டுரைகளே எழுதும்படி நேர்ந்தது.
ஆகவே இந்த 100 நகைச்சுவைக் கதை கட்டுரைகள் அடங்கிய தொகுப்பையும் என் பெருமதிப்புக்குரிய எனது ஆசான் தெய்வத்திரு எஸ்.ஏ.பி. அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
ஒரிஜினல் ஜ.ரா. சுந்தரேசனுக்குக் கிட்டாத பாராட்டுக்கள் பாக்கியம் ராமசாமிக்குப் பல சமயம் கிடைத்திருக்கிறது.
குழந்தைப் பத்திரிகை ஆசிரியர் அமரர் திரு. நெ.சி. தெய்வ சிகாமணி அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர். அவரது பல்லாயிரக்கணக்கான அன்புத் தம்பிகளில் நானும் ஒருத்தன்.
பாலர் கதைகள் எழுதுவதிலிருந்து பெரியவர்களுக்கான கதை எழுதும் வாய்ப்பு குமுதத்தில் நான் பணியாற்றத் தொடங்கியதும் கிடைத்தது.
உதவி ஆசிரியராகவும் அணைத்துக்கொள்ளப்பட்டேன்.
திரு. தெய்வசிகாமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறுவர் இலக்கியக் கூட்டத்துக்கு என்னையும் சிறப்புப் பேச்சாளராகக் கூப்பிட்டிருந்தார்.
கைக்குக் கிடைத்த பெரிய அறிவிப்புப் பலகையில் கொட்டை எழுத்துக்களில் 'ஜ.ரா. சுந்தரேசன் பேசுகிறார்' என்று ஆசை தீர எழுதி வைத்தார் திரு. நெ.சி.தெ.
போக்குவரத்து நெரிசலினால் நான் பத்து நிமிடம் கூட்டத்துக்கு தாமதமாகச் செல்ல வேண்டியதாகிவிட்டது.
எப்படியோ இந்த வரையில் தாமதமாகவாவது சென்றோமே என்று கூட்டம் நடைபெறும் ஹாலுக்குச் சென்றபோது திக் என்றது.
தலைவர் திரு. நெ.சி.தெ.யும் இன்னும் இரண்டு பேரும் மட்டுமே இருந்தனர்.
இவ்வளவு சீக்கிரம் கூட்டம் முடிந்துவிட்டதா என்று பேராச்சரியத்துடனும் ஏமாற்றத்துடனும் தலைவரை விசாரித்தேன்.
கூட்டம் இன்னும் ஆரம்பமே ஆகவில்லை சார். வாங்க உட்காருங்க. இன்னும் ஒரு கால் மணி பொறுத்துப் பார்த்து விட்டுக் கூட்டத்தை ஆரம்பித்து விடலாம். காரில்தானே வந்தீர்கள்?
என்றார்.
ஆமாம்
என்றேன்.
அப்படியானால் டிரைவரைப் பிடிச்சு வையுங்க, போயிடப் போறார்
என்றார். அப்புறம் என் நட்பைப் பெரிதும் மதிப்பவரும் எனக்கு பற்பல உபகாரம் செய்தவருமான கவிஞர் தம்பி சீனிவாசன், தான் கூட்டம் முடியும் வரை இருப்பதாக உறுதி அளித்தார். அவர் பேச வேண்டிய பேச்சாளர். ஆகவே இருந்தாகவேண்டும். ஆனாலும் பேசிவிட்டு இன்னொரு இடம் போகவேண்டும் என்று சொன்னதால் அவரை கூட்டம் முடியுமுன் விட்டு விடக் கூடாது என்பதால் உறுதிமொழி வாங்கிக்கொண்டு தக்கவைத்தேன்.
டிரைவர், நான், நெ.சி.தெ, தம்பி சீனிவாசன் ஆகிய நாலுபேர் இருந்தோம். ஏதோ நாலு பேராவது கூடியிருக்கிறோமே என்று கூட்டம் மேலும் கலைந்துவிடாமலிருக்க அவசரமாக மீட்டிங்கைப் பேசி முடித்துவிட்டோம்.
மறுதினம் நண்பர் நெ.சி.தெ. என்னிடம் சொன்ன ஒரு செய்தி தான் என்மீது எனக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.
நெ.சி.தெ. யாரிடமோ காலையில் கூறினாராம். நேற்று நடைபெற்ற கூட்டத்துக்கு நீங்கள் ஏன் வரவில்லை? பாக்கியம் ராமசாமி கூட வந்திருந்தாரே. அவரைப் பார்க்க வேண்டுமென்று நீங்கள் கூட ஆசைப்படுவதாகக் கூறிக் கொண்டிருந்தீர்களே?
என்றாராம்.
அதற்கு அவர், ஆச்சரியத்துடன் நேற்று பாக்கியம் ராமசாமி வந்திருந்தாரா? யாரோ ஐ.ரா. சுந்தரேசனோ, மந்தரேசனோ என்றல்லவா எழுதிப் போட்டிருந்தீர்கள்!
என்றாராம்.
இப்படியாக எனக்கு நானே எதிரி ஆகிவிட்டேன்.
கீதையில் பகவான் சொல்கிறாரல்லவா? 'நீயே உனக்கு நண்பன். நீயே உனக்குப் பகைவன்' என்று.
அது என் விஷயத்தில் ரொம்பவே சரியாயிருக்கிறது.
கிடக்கட்டும், எல்லாவற்றிலும் ஒரு நல்லது இருக்கத்தான் இருக்கிறது.
அந்த சம்பவத்துக்குப் பிறகு என் அசல் பெயரை யார் எங்கு உபயோகித்தாலும், கூடவே அடைப்புக் குறியில் புனைப்பெயரையும் போடச் சொல்லிக் கேட்டுக்கொள்வேன்.
இந்த சுயபுராணத்தை ஏன் சொல்லுகிறேனென்றால், நகைச்சுவையைக் கட்டிக்கொண்டு நான் ஏன் சிரிக்கிறேனென்றால் (அழுகிறேன் என்று சொல்லக்கூடாதல்லவா?) என்னைப் பொறுத்தவரை மற்ற வகைக் கதைகளைவிட நகைச்சுவைக் கதைகளுக்கே அதிக ஓட்டுகள் விழுகின்றன.
ஆகவே சிரிப்பே சிறப்பு!
வானதியாரின் பேரன் திரு. சரவணன் அக்கறையுடன் இந்தக் கதைகளைத் தொகுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
நண்பர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி மிக அற்புதமான வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். நண்பர் கொற்றவன் அருமையானதொரு அணிந்துரை அளித்துள்ளார். இவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.
இந்நாலை சிறந்த முறையில் வெளியிட்டுள்ள வானதி பதிப்பக உரிமையாளரும் புத்தக வித்தகருமான திரு. வானதி திருநாவுக்கரசு அய்யா அவர்களுக்கும், அவர்களின் திருக்குமாரன் வானதி திரு. ராமநாதன் அவர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்களும் நன்றிகளும் உரியதாகின்றன.
இந்நூலுக்குக் கணினி அச்சு வார்த்த பரமேஸ்வரி மணி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
குமுதமும் சகோதரப் பத்திரிகைகளும் இந்தக் கதைகளைப் பிரசுரம் செய்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் நன்றி.
இவற்றை வீட்டில் உட்கார்ந்து எழுத வற்றாத வசதி செய்து தந்துள்ளார் மனைவி திருமதி விஜயலஷ்மி.
கொட்டமடித்து கும்மாளமிட்டு எழுதும்போது என்னை உற்சாகப்படுத்தி எழுத ஒட்டாமல் செய்ய முயன்ற என் மூன்று 'பசங்க'ளுக்கும் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன்.
இங்ஙனம்
பாக்கியம் ராமசாமி
(ஜ.ரா. சுந்தரேசன்)
47, ஹாரிங்டன் சாலை
சேத்துப்பட்டு, சென்னை - 600 031
தொ.பே: 044-28363873
தேதி: 8-12-2011
திரு. பாக்கியம் ராமசாமி அவர்களின்
வாழ்க்கைக் குறிப்பு
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்று அறிமுகத்தைவிட, அப்புசாமி-சீதாப்பாட்டி நககைச்சுவை பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும். தாயார் பெயரையும், தந்தை பெயரையும் இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற புனைப்பெயர் தரித்துக் கொண்டிருக்கும் இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலகண்டபுரம். (பிறந்த தேதி: 1-6-1932)
1. அவர் சிருஷ்டித்த அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களுக்கு வயது 48. (நாற்பத்தெட்டு வருடங்களாக கதாபாத்திரங்களைக் கையாண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதி வருகிறார். முதல் அப்புசாமி கதை குமுதத்தில் வெளிவந்த ஆண்டு 1963.)
2. ஸ்கூல் ஃபைனலை முடித்துக் கொண்டு தனது 16-வது வயதில் பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்.
3. 37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சிறந்த நகைச்சுவைப் பிரியர். இவர் எழுதிய அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை நாவல்களில் 'அப்பு சாமியும் ஆப்ரிக்க அழகியும்,' 'மாணவர் தலைவர் அப்புசாமி,' 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' ஆகியவை பிரபலமானவை. நகைச்சுவைச் சிறுகதைகளைவிட நகைச்சுவைத் தொடர்கதை எழுதுவது கடினமான முயற்சி
என்ற கருத்துள்ளவர்.
4. எஸ்.வி.வி, கல்கி, தேவன், துமிலன், கொனஷ்டை, நாடோடி, பரதன், புனிதன் மற்றும் ரா.கி. ரங்கராஜன் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளால் சிறுவயது முதலே ஈர்க்கப்பட்டவர்.
5. ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். 'பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள்' போன்ற நாவல்களுக்கு வாசகர் வட்டாரங்களில் பெரிதும் வரவேற்பு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நகைச்சுவை கட்டுரைகளும் (hurmourous articles) எழுதியுள்ளார். ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்களில் வுட்ஹவுஸ், ஜெரோம் கே ஜெரோம், டான் காமிலோ புகழ் கிவானி காரெஷ் ஆகியோரின் எழுத்துக்களில் இவருக்கு ஈடுபாடு உண்டு.
5. இவரது புனைப்பெயர்கள் அநேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப்பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, சிவதணல், ஜ்வாலா மாலினி.
7. சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்று பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கியக் கூட்டங்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவைகள் பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி', 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களை பெற்றவர். நகைச்சுவையாளர் என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்க்ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போன்ற பாணியில் 'பாமரகீதை' என்னும் சிறு நூலை, பகவத் கீதையின் கருத்துக்களையடக்கி 'ஜராசு' என்ற பெயரில் எழுதியுள்ளார். தனது ஆன்மீக அனுபவங்களை 'தேடினால் தெரியும்' என்ற சுயசரிதத்தில் சுவையாகத் தெரிவித்துள்ளார்.
8. சிறுவர்களுக்காக வால்ட் டிஸ்னி தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் கார்ட்டூன் படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியுள்ளார்.
9. நகைச்சுவையை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் 'அப்புசாமி டாட் காம்' என்ற வலைத்தள பத்திரிகை நடத்தி வருகிறார்.
10. நலிவுற்ற நகைச்சுவை எழுத்தாளர்களின் மேம்பாட்டுக்கும், அனைவரது நகைச்சுவையையும் தொகுக்கும் பணிக்காகவும் 'அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' என்ற அமைப்பையும், அனைத்து எழுத்தாளர்களையும் வாசக ரசிகர்களையும், பொது வாழ்வில் பிரமுகர்களாக இருப்பவர்களையும் அறிமுகப்படுத்தும் 'அக்கறை' என்ற அமைப்பையும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். மனைவி பெயர்: எஸ். விஜயலட்சுமி. மூன்று மகன்கள், படித்துத் திருமணமாகி உத்தியோகங்களில் உள்ளனர்.
11. வாழ்க்கையில் இசை என்பது இனிமையையும், ஒருங்கிணைப்பையும் செய்யவல்லது என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. சிறந்த இசைக் கலைஞர்களைக் கொண்டு 'அப்புசாமி சீதாப்பாட்டி இசைக் கூடல்' என்ற அமைப்பை சமீபத்தில் துவங்கி நடத்தி வருகிறார்.
12. தனது எழுத்துத் துறைக்கும், இலக்கியப் பணிக்கும் ஆசானாக குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அண்ணாமலை அய்யா அவர்களையும் ஆன்மீக குருவாக பூஜ்யஸ்ரீ சுவாமி சின்மயானந்தாவையும் போற்றுகிறவர்.
பொருளடக்கம்
1. கார் என்று பேர் படைத்தாய்!
2. துக்கத்துக்கு டாட்டா!
3. எலி வளைகளில் நான்!
4. பீரோவின் பின்னால்...
5. எங்க வீட்டு யந்திரங்கள்!
6. கந்தர் 'சிஸ்ட' கவசம்!
7. மலிவாய்ப் போய்விட்ட வீட்டுக் குறிப்புகள்!
8. பச்சை மிளகாய் பஜ்ஜி!
9. கணவனின் மூக்கு மனைவிக்கே!
10. சங்கீதமா... சந்தேகமா...
11. பூனைக் கூட்டமும் நானும்...
12. மனிதனுக்கு எத்தனை கண்கள்?
13. யாரோ பாக்கியம் ராமசாமியாம்!
14. தலிபானும் ஒரு டெலிபோனும்!
15. ஜலகண்ட புராணம்!
16. என் ஓட்டு வாழைப்பழத்துக்கே!
17. நாம் பணக்காரங்க ஆயிட்டோம்!
18. அக்(மார்க்) ஞானியுடன் ஒரு சந்திப்பு!
19. பை அரவுப் பாட்டியின் புடவைகள்!
20. சில நேரங்களில் சில ஊர்கள்...
21. ஆயுசில் சாப்பிட்டிருக்க மாட்டீங்க!
22. தையல் இலை ஜோசியர்!
23. எல்லாரும் இந்நாட்டு மன்னர்!
24. ஐயோ பாவம் பாண்டு!
25. ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?
26. எழுதாத காவியம்!
27. புருஷன்
28. கொசுவிடமிருந்து தப்பிப்பது எப்படி?
29. ஆனியன் ரவாவும் மெனுதர்ம சாத்திரமும்...
30. கவலை நிருபர் கற்பூரசாமியும் ஒரு கோடி ரூபாயும்!
31. திருமணப் பரிசைத் திணறாமல் அளிப்பது எப்படி?
32. கஞ்சிராவும் நரசிம்மராவும்!
33. 'விமு' யாரை விட்டது?
34. நான் - நாய்க்குட்டி - மாமனார்!
35. மகாவிஷ்ணு செய்தது சரியா?
36. ஹாரிங்டன் ரோடில் ஆயாக்கள் சங்கம்!
37. புஷ்பாவின் அக்டோபர் போராட்டம்!
38. மாமா, மாமாதான்; அங்க்கிள், அங்க்கிள்தான்!
39. ஹல்வா ஊழல்!
40. டி.வி.யில் பார்லிமெண்ட் காட்சிகள்!
41. எத்தனை கோடி நம்பர் வைத்தாய் இறைவா...
42. காட்டுக்குப் போகாத ராமன்!
43. படுக்கை நோயாளிக்கான பன்னிரண்டு லட்சணங்கள்!
44. ஒரு பஞ்சுத்திரியும் பத்தினியும்!
45. பரபரப்பு!
46. கவலை பூஷண்
47. பிச்சை விருந்தா? இச்சை விருந்தா?
48. கான்டீன் கிராஜுவேட்!
49. பயங்கர ஊகங்கள்!
50. பேப்பர் படிக்கும் எறும்பு!
51. லொல்லிலோ தீவில் கிளித் தேர்தல்!
52. சாந்தராமனின் தேள்!
53. ரங்கனுடன் மூன்று நிமிஷம்!
54. சில நேரங்களில் சில கேள்விகள்!
55. விவாத ரத்து! விவாகரத்து அல்ல!
56. முப்பதே நாளில் நீங்கள் டான்ஸ் மாஸ்டர் ஆகலாம்!
57. தூக்கத்துக்கு கால் இல்லை!
58. பெரியவர்கள் என்றொரு இனமுண்டு!
59. பல்லாண்டு வாழ்க!
60. ஒரு கறார் மாமியின் கதை!
61. ஆச்சரியம் தரும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு!
62. வளர்ப்பு!
63. ஐந்து பேர் கெடுத்த அற்புதக் கதை!
64. ப்ளஸ் டூ தியாகிகள்!
65. பர்த்டே பைத்தியம்!
66. ஒரு இங்கிலீஷ் கதை!
67. அத்தைக்கு பக்தி வந்தால்...
68. ஊட்டி ஜாக்கிரதை!
69. உஷார்!
70. பிலாக்கண சுந்தரி!
71. காதல் பிரயாணம்!
72. ஒரு 'மூ'விங் ஸ்டோரி!
73. கனவு ரசிகை!
74. தாத்தாக்கள் பலவிதம்!
75. இயற்கை உணவாம்...
ஹி ஹி ஹி ஹ் ஹீ...!
76. பெயர் வைப்பது எப்படி?
77. பார்த்து, பார்த்து, பார்த்து...
78. நடுநிசிப் பாடகர்!
79. காப்பியாகவே கறக்கிற பசு மாடு!
80. கடம்பா, என் மகளே!
81. சௌ சௌ சௌமி!
82. மரங்களோடு ஒரு யுத்தம்!
83. மச்சினனுங்க மாறிட்டானுக!
84. விரதம் ஸ்பெஷல்!
85. மிஸ்டர் மிகையை ஒப்புக்கொள்ளுங்கள்!
86. பசியால் வாடிய நரியொன்று...
87. குடிகார குதிரையும்
சதிகார மாப்பிள்ளையும்!
88. தே.வ.
89. ஐம்பது சானல் வைத்தாய் இறைவா...
என் இறைவா...
90. அம்மையே அப்பப்பா!
91. அடேய், பரசுராமா!
92. கலெக்டர் ககனமணி
Vs
அழகி அனுராதா!
93. கணவனே கல்கண்ட தெய்வம்!
94. அம்ப்ரல்லா அஃபேர்!
95. கணவன் இருக்க வேண்டிய இடம்!
96. சின்னத்திரை -
'நடிப்புப் புயல் அழகி'
ரம்யசுந்தரியின் பேட்டி!
97. விளக்குமாறா, வாக்கும் க்ளீனரா?
எது பெட்டர்?
98. கண்கட்டு வித்தை
99. எலிதல்ல அம்மா!
100. பலகாரத் திருவிழாவில் அப்புசாமி!
1. கார் என்று பேர் படைத்தாய்!
'கார் என்று பேர் படைத்தாய்' என்று கவி காளமேகம் எங்க வீட்டுக் காரைப் பார்க்காமலே பாடியிருப்பதால் அவர் சத்தியமாக ஒரு தெய்வீகப் புலவர்தான்.
'குடுகுடுன்னு போனானாம் குடுமியைச் சிரைத்து வந்தானாம்' என்ற பழமொழி என்னுடைய குமாரனுக்கே ஏற்பட்டது. அவனுக்குக் குடுமி இல்லையே தவிர குடுகுடு உண்டு.
தடால் தடால் என்று எதையாவது வாங்கி வந்து நிற்பான். ஆனால் எதை, எந்த நிலையில், எப்படி வாங்குவது என்பதற்கெல்லாம் அதிக சிந்தனை செய்ய அவனுக்கு அவகாசம் கிடையாது. அவ்வளவு பிஸி.
அவனது ஆபீசர் (மாருதிக்குத் தாவி விட்டார்) அவன் தலையில் ஒரு நாள் ஐஸ் வைத்துத் தன் பழைய 72-ம் வருட மாடல் அம்பாசிடரைக் கட்டி விட்டார். 'மிஸ்டர் ஷிவா... என் அம்பாஸிடரை டிஸ்போஸ் பண்ணப் போறேன். அருமையான வெஹிகிள். இப்படி சிங்கிள் ஓனர் வண்டி கிடைக்கவே கிடைக்காது. உனக்கு வேணும்னா சொல்லு, ஏன்னா, நீ அதை நன்றாக வைச்சுப்பாய். அதை என் செல்லக் குழந்தை மாதிரி வளர்த்துட்டேன்!' என்றார். மற்றவர்களுக்குத் தர்றதைவிட ஐயாயிரம் உனக்குக் குறைவா வேணுமானால் தர்றேன்
என்றதும் அதே ஸ்பாட்டில், நின்ற நிலையிலேயே ஓகே. சார். டன்!
என்று முப்பதாயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு வந்துட்டான்.
மத்தியானம் இரண்டரை மணிக்கு 'ரோடு எஞ்சின்காரன் இப்படிச் சத்தம் போட்டுக் கழுத்தை அறுக்கிறானே கொஞ்சமும் தூங்க விடாமல்' என்று எரிச்சலோடு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால் ஒரு அம்பாசிடர் நிற்கிறது. ஈராக் - அமெரிக்கா யுத்த களத்தில் இரு தரப்பிடமும் செமை உதை பட்டு ஓடிவந்த அகதி மாதிரி கை, கால், பக்கவாட்டு என்று எல்லாப் பக்கமும் அறுந்து தொங்க, சாயம் போய், புழுதியும், சேறும், சகதியுமாய் நின்று கொண்டிருந்தது.
சார்! சார்!
என்றான் ஓட்டிவந்த டிரைவர். ஷிவா சார் அனுப்பிச்சார். வண்டியைக் கொண்டு விட்டுட்டு வாடான்னார். ஃபர்ஸ்ட் க்ளாஸ் வண்டி சார். எங்க மானேஜர் கோகல் சார் வண்டி. யாராரோ கேட்டுட்டாங்க. ஷிவாவுக்குத்தான் தந்தார். அதுவும் முப்பதாயிரத்துக்கு! இஞ்சின் பிரமாதம். பாடி கொஞ்சம் டச் அப் பண்ணிட்டா போதும். ஏழு தரம்கூடத் திருப்பதி ஏறி இறங்கலாம்.
அவன் கடமையைச் செய்துவிட்டுப் போய்விட்டான்.
பையன் பிரியமாக அன்பளிப்பு செய்ததை இகழக்கூடாது என்று அவனுக்கு போன் செய்து, தாங்க்ஸுடா கண்ணா! ரியலி எ பிக் ஸர்ப்ரைஸ்
என்றேன்.
அம்மாகிட்டே போனைக் குடு. ம்மா! ஏதோ என்னோட இன்ன ப்ரசெண்ட்... இனிமேலும் நீயும் அப்பாவும் இதுலே தான் கோவிலுக்குப் போகணும்
என்றான்.
சாயந்தரம் வரும்போது இரண்டு ஆசாமிகளுடன் வந்தான் மகன். ஜெயா கராஜ் வொர்க்ஸிலே வண்டியை விட்டு நீட்டா டிங்க்கரிங் - பெயிண்டிங் பண்ணிடறேன். வண்டியை இப்படியே யூஸ் பண்ணினால் நல்லாயிருக்காது
என்றான்.
மாருதி ப்ளு... அசல் மாருதி ப்ளூவே... ஃபன்டாஸ்டிக்காக இருக்கும்...
முதலில் அவன் இந்த ஃபன்டாஸ்டிக் என்கிற வார்த்தையை விட்டால்தான் உருப்படுவான் என்று நினைத்துக் கொண்டேன்.
ஸீட்டுகூட மேலேயிருந்து பார்த்தால் ஸ்பிரிங் ஸ்பிரிங்காத் தெரியறது?
என்றேன்.
பின்னே? அதைப் பார்க்காமலா? புத்தம் புதுசு மாதிரி பண்ணிண்டு வந்துருவான்... என்ன முனுசாமி, நான் சொல்றது சரிதானே?
அப்படியே கையோடு கொஞ்சம் அண்டர் காரேஜையும் பார்த்துட்டா நல்லதுல்லை
என்றான் கராஜ் முனுசாமி.
செய்துடு. உன் எஸ்டிமேட்டைக் குடுத்துடு.
வொர்க் ஷாப் போய் டைப் பண்ணிக்கிட்டு வந்து அப்பாவண்டை குடுத்துடறேன் சார்... நீங்க இல்லாட்டி கூட.
மறுநாள் காலை பதினொண்ணரை மணிக்கு ராமன் வெளியே போன நேரத்தில் வந்த ராவண சன்னியாசி மாதிரி முனுசாமி கையில் ஒரு நீளக் காகிதத்துடன் வந்தான்.
மொத்தம் செலவு என்ன என்று டோட்டலை மட்டும் பார்த்தேன். ஏழாயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்று ரூபாய் பதினைந்து பைசா போட்டிருந்தது.
என்னப்பா, ரொம்ப இருக்கும் போலிருக்கே.
நான் பெயிண்டிங் மட்டும் போட்டிருக்கேன் சார்... நீங்களே பெயிண்ட் வாங்கித் தந்துட்டாலும் சரி, இல்லே என் பேரிலே செக் குடுத்தீங்கன்னா நானே வாங்கிட்டு வந்திடறேன், டிங்க்கரிங் சார்ஜ் தனி.
பெயிண்ட்டுக்கு மட்டுமா இவ்வளவு?
ஒரிஜினல் ப்ளூவாச்சுங்களே... ஹீட் பண்ணி ஸ்பிரே பண்றதாச்சே. ஜன்னலுக்கு பெயிண்ட் அடிக்கற மாதிரி சமாசாரமில்லீங்களே.
பையன் வந்தவுடன் பேசிக்கோ.
சாயந்திரம் வந்ததும் ஷிவா சொன்னான். வண்டின்னா முதலிலே கொஞ்சம் செலவு பண்ணினாத்தாம்பா வண்டி. புது அம்பாஸிடர் ரெண்டரை லட்சம் தெரியுமோ உனக்கு?
பெயிண்ட்டிங்குக்கு செக்கைக் கொடுத்துட்டேன். டிங்க்கரிங் ஒரு நாலாயிரம் ஆகுமாம். தொலையாது. அண்டர் காரேஜ் கட்டாயம் சரிபண்ணியே ஆகணுமாம். ஸீட்டெல்லாம் அதுலதானே உட்கார்ந்திருக்கு. அது ஸ்டிராங்கா இருந்துட்டா வண்டியிலே பத்து வருஷத்துக்குக் கையை வைக்க வேண்டியதில்லை. புது ஸீட்டே போட்டுடறானாம். எட்டாயிரம் சொன்னான். ஏழாயிரத்துக்கு மேலே பைசா தர முடியாதுன்னுட்டேன். பயல் சரின்னுட்டான். நம்ம ஆபீஸ் வேலையெல்லாம் தர்றோமில்லையா?
ஸீட்டெல்லாம் நன்னாப் போட்டுடுவானில்லையா? குஷன் நல்லதாப் போடச் சொல்லு.
அது குஷன்காரன் வேலை. ஐ மீன் அப்ஹோல்ஸ்ட்ரி. ஸீட்டு, கவர், இன்ஸைட், டாப்... எல்லாம் தனியா பண்ணிக்கணும். அதுக்கு ஒரு ஆள் வெச்சிருக்கேன். ராஜா அப்ஹோல் ஸ்ட்ரியிலே பொமரேனியன் சடை மாதிரி வெள்ளை வெளுக்க ஒரு ஸீட் கவர், எல்லாம் ரெடிமேட் காட்டினான் பாருங்க... ஃபன்டாஸ்டிக்... ஃப்ரண்ட் ஷீட்... ரியர் ஸீட்... டாப் எல்லாமா சேர்த்துப் பத்தாயிரத்தைந்நூறு. கம்ப்ளீட் புதுசு... ஸ்பிரிங்கெல்லாம் ப்ராஸ். ஸ்பாஞ்ச் ஏ க்ளாஸ்... கலிஃபோர்னியன் ஃபோம்...
ரொம்ப அகலக் காலை வைக்காதே...
இது செஞ்சாச்சுன்னா அப்புறம் வண்டியிலே கையே வைக்க வேண்டாமே...
ஏண்டா, முப்பதாயிரத்துக்கு வாங்கி இப்பவே முப்பதாயிரம், நாற்பதாயிரம்னு செலவு வந்துட்டுதே...
நீங்க எய்ட்டி கொடுத்தாக் கூட இப்படி ஒரு வண்டி கிடைக்காது. எல்லாம் ரெடியானாவுட்டுப் பாருங்க. இஞ்சின் குழந்தை மாதிரி.
வந்தன்றைக்கு அது கோட்டான் மாதிரி அலறியதே தவிர குவா குவா என்று கூவவில்லை என்று நான் சொல்லி அவன் மனஸ்தாபத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை
ஒன்றரை மாசம் கழித்து நீல நிறத்தில் அழகாக வந்து நின்றது. முன் விண்டோ கண்ணாடியில் ஒரு முருகன், அதற்கு ஒரு விளக்கு. பக்கத்திலே ஒரு தொங்கும் நாய்க்குட்டி பொம்மை. கார் கதவைத் திறந்ததும் கும்மென்று பெயிண்ட் வாசனை. ஸீட் மொசுமொசுவென்று வெள்ளைப் பூனைக்குட்டி உடம்பு. அங்கங்கே கைப்பிடி. கிழடு கட்டைகள் பயணம் செய்கிறதுக்குத் தோதாகப் பிடித்துக் கொள்ளலாம்.
முனுசாமிக்கு ரொம்பக் கலையழகு!
என்றான் பையன். முருகனைக் கவனிச்சீங்களா? வெளியிலிருந்து பார்த்தாலும் முருகன் முன் உருவம். உள்ளேயிருந்து பார்த்தாலும் முருகன் முன் உருவம்...
ரெண்டு பீஸ் வாங்கி ஒட்டி... அது கொஞ்சம் ஸ்பெஷல் வேலைங்க...
முனுசாமி இளித்தான்.
விளக்கு வேறு, சபாஷ்!
ஹார்ன்தான் கொஞ்சம் வீக்குங்க... பாட்டரி சார்ஜ் பண்ணிட்டால் போதும்.
என்னாகும்?
என்ன ஒரு பதினஞ்சு ரூபாய்.
பதினஞ்சாயிரமா?
என்றேன்.
கோர்ட்டில் ஒரே சிரிப்பு போல கேட்டில் ஒரே சிரிப்பு. முனுசாமி கேட் அருகே இருந்தான். வெறும் பதினஞ்சு ரூபாயுங்க... நல்ல தமாசுங்க. பாட்டரி சார்ஜுக்குப் பதினஞ்சாயிரம்... நல்ல டமாஸ்... ஐயோ... ஐயோ... சிரிச்சு சிரிச்சு வவுறு அறுந்து போகுதுங்க...
மறுநாள் பாட்டரி சார்ஜ் பண்ணப் போனவன், சைக்கிள் காரியரில் பன்றியைக் கட்டிப்போவது போல பாட்டரியைக் கட்டிக் கொண்டுவந்தான். உதட்டைப் பிதுக்கினான்.
புரோசனமேயில்லீங்க... காண்டில் மாத்தியாகணும்னுட்டான்...
மாத்திடறதுதானே?
நீங்க ஒண்ணு. அதுக்குப் புதுசே வாங்கிடலாங்க. ஒரு வருஷம் கியாரண்டி தருவான். ராத்திரியிலே வண்டி ஓடணும்னா தகராறு ஆயிடுமே...
சரி... மாற்றிடு. எத்தனையோ செலவு... இது ஒண்ணும் பெரிசில்லே. பழைய பாட்டரியைக் கொண்டு வந்தாகணும்.
கண்டித்தேன்.
நமக்கெதுக்குங்க அது? காலி பண்ணி கிளீனாத் தர்றேன். வூட்டுலே வெச்சு ரெண்டு குரோட்டன் செடி போடுங்க
என்றவன், புது பாட்டரியோடு வந்தான். அதைப் பொருத்தியதும் ஹார்ன் அடித்தால் அடுத்த தெருவுக்குக் கேட்டது. விளக்கு கண்ணைப் பறித்தது.
ராத்திரி கபாலி கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் தரிசனம் பண்ணிவிட்டு, நகைக் கடை வாசலிலிருந்த வண்டியில் ஏறி ஸ்டார்ட் பண்ணினால் உறுமுகிறதே தவிர கிளம்பவில்லை.
புத்தம் புதுப் பாட்டரியாச்சே...
அருகிலிருந்த ஒரு மெக்கானிக் வந்து பார்த்துவிட்டு, ஸ்டார்ட்டிங் டிரபிள்... கொஞ்சம் தள்ளினால் ஸ்டார்ட் ஆயிடுங்க... ஹெட்டை நல்லாப் பார்த்துடுங்க... டெல்கோ, ஒரிஜினல் இல்லே... ஏதோ ஜீப்புலே கழற்றினது.
வண்டியை நாலு பேர் ஏறக்குறைய லஸ் முனை வரைக்கும் தள்ள, ஸ்டார்ட் ஆயிற்று. கல்யாண ஊர்வலம் கெட்டது. தள்ளு கூலி தலா ரெண்டு ரூபாய்.
என் மனைவி: எல்லாம் திருஷ்டி.
நான்: உன் முகரக்கட்டை.
பையன்: கொஞ்சம் வாயை மூடிண்டு வர்றீங்களா? போனில் கராஜ்காரனுக்குச் சமாசாரம் சொன்னதும், அவன் காலையில் வருவதாகச் சொல்லி அப்படியே வந்தான்.
ஹெட்டை மாத்தணும். டெல்கோ முக்கியம். எல்லாம் கம்பெனியிலே ஒரிஜினல் சரக்கா வாங்கிடுங்க. இல்லாட்டி டிரபிள்தான். மேனி நல்லாயிருக்கு. ஒடம்புலே ஆயிரம் வியாதி இருக்குதே...
முன்னாலேயே நீ சொல்லக் கூடாதா?
நான் பார்த்திருந்தாச் சொல்லியிருப்பேன். இஞ்சின்லே இத்தனை திரிசமம் இருக்குதே... சுத்தமா ஏமாந்துட்டீங்க சார்...
சரி. ஆகிற காரியத்தைச் சொல்லு.
ஹெட்டுக்கு இவ்வளவு, டெல்கோவுக்கு இத்தனை என்று அவன் கணக்குச் சொல்ல, நான் கேட்கச் சகிக்காமல் படுக்கையறைக்குப் போய்ப் படுத்து விட்டேன்.
நாலு நாளைக்குப் பையனுடன் பேச்சு வார்த்தையில்லை.
அப்புறம் கோபம் தணிந்து, என்னடாப்பா அந்தக் கொள்ளைக்காரன் சொல்றான்
என்று கேட்டேன்.
டெல்கோ, ஹெட் எல்லாம் ஒரிஜினலே வாங்கிக் குடுத்துட்டேன். இனிமேல் வண்டி ஃபன்டாஸ்டிக்... நீங்க இனிமேல் உலகம் பூரா வேணும்னாலும் சுத்தலாம்!
காலையிலே ஒரு கல்யாணத்துக்குப் போக வண்டியைக் கிளப்பினான்.
இஞ்சினுக்குக் கீழே சிறிய தண்ணீர்க் குளம். ரேடியேட்டர் லீக்.
தண்ணீரைச் செம்பு செம்பாக ஊற்றினால் நேராகக் கீழே வந்து நமக்கு நாமே பாத பூஜை செய்து கொள்வதாக இருக்கிறது.
மெக்கானிக் முனுசாமி வந்தான். நான் அப்பவே சொல்ல நினைச்சேன். இப்போதைக்கு சோப்பு கீப்பு வெச்சு அடைச்சுடலாம். என்னங்க இது ரேடியேட்டர்? தொட்டாலே பொடிப் பொடியா உதிருதே, நீங்க புதுசு மாத்திடறதுதான் நல்லது. லாங் டூர் போனா நம்ப முடியாது.
புது ரேடியேட்டர் ஆறாயிரம் ரூபாய் சொச்சம். அதையும் பிள்ளையாண்டான் ஏற்பாடு பண்ணி விட்டான்.
இனிமேல் மாற்றணும்னா வண்டியையே மாற்ற வேண்டியதுதான்
என்று அவனே அலுத்து விட்டான்.
அடுத்து ஒரு பஞ்சர் ஆனபோது புரிந்தது, நாலு டயரும் மொட்டை. டயரையும் அடுத்த சில நாட்களில் புதுப்பித்தாயிற்று.
அதற்கு அடுத்த வாரத்தில் ஒருநாள் பையன் ஆபீஸ் போகும்போது பின்னாலிருந்து ஒரு பல்லவன் அதை இடித்து விட்டது. எல்லாம் பட்ட காலிலே படும் என்று தெரியாமலா பழமொழி சொன்னார்கள். டிக்கி அப்பளமாக நொறுங்கி விட்டது. நல்லவேளை, பையனுக்கு ஒன்றும் சேதாரமில்லை.
இன்ஷ்யூரன்ஸ் கிளைய்ம் பண்ணலாமில்லையா?
என்றேன்.
அதை யார் கட்டினது?
என்றான்.
போலீஸில் கேஸ் எழுதிக் கொண்டார்கள்.
முதல் கேள்வி: லைசென்ஸ் இருக்கா? லைசென்ஸ் இருந்தது. ஆனால், எக்ஸ்பயரி ஆகி இரண்டு நாளாகி விட்டது.
உங்ககிட்டேயே வீக்னஸை வெச்சுக்கிட்டிருக்கீங்க. கேஸ் எழுதினாலும் உங்களுக்குத் தொல்லைதான்
என்றார் போலீஸ் அதிகாரி கருணையுடன்.
கேரேஜுக்கு வண்டியை எடுத்துப் போனான் முனுசாமி.
வண்டியின் நலிந்த பின்பகுதியைச் சரிசெய்ய ஏழாயிரத்துத் தொள்ளாயிரம் ரூபாய் ஈவிரக்கமில்லாமல் வசூலித்து விட்டான்.
மனைவி: ஏண்டாப்பா, இந்த வண்டிக்குச் செலவு செய்ததற்கு ஒரு வீடே வாங்கியிருக்கலாமே?
நான்: வீடு வாங்கியிருந்தால் அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகருமா? கோவிலுக்கு, கல்யாணத்துக்கு எல்லாம் ஜம்பமாய்ப் போனியே...
பையன்: என்னை ஆதரிச்சு ரெண்டு வார்த்தை நறுக்குனனு சொன்னேளே, ரொம்ப தாங்க்ஸுப்பா. வண்டியை டிஸ்போஸ் பண்ணினால் நாளைக்கே வாங்கிக்க ஆள் தயார். ட்வென்ட்டிக்குக் கேட்கறாங்க. தள்ளி விடட்டுமா? 72 மாடலுக்கு அது ஃபன்ட்டாஸ்டிக் பிரைஸ்! எதுன்னாலும் ஒரு வார்த்தை அப்பாவைக் கேட்டுண்டு சொல்றேன்னுட்டு வந்திருக்கேன். வாட் டு யு ஸே?
என்றான்.
நான், ஃபன்ட்டாஸ்டிக் ஐடியா... நாளைக்கே குடுத்துடு...
என்றேன்.
ஆனால் பாவம், இன்ஸ்ட்டால்மெண்டிலேதான் தருவானாம். அட்வான்ஸா நாளைக்கு நீ தெளஸண்ட் தர்றான்... பாக்கி எயிட்டின் தெளஸண்ட்ஸை மன்த்லி ஃபைவ் ஹண்ட்ரட்ஸாத் தந்துடறானாம்.
ஃபன்டாஸ்டிக் ஐடியா! கொடுத்துடு முதலிலே... நாம வேணுமானாலும் வாங்கறவனுக்கு மாசம் ஐநாறு கொடுத்துடவாம்
என்றாள் மனைவி.
2. துக்கத்துக்கு டாட்டா!
காலம் ரொம்பவே மாறிவிட்டது. முன்பெல்லாம் துக்கம் விசாரிக்கப் போவது என்று ஒரு சம்பிரதாயம் இருந்தது. அது இப்போது வேகமாகக் குறைந்து வருகிறது.
ஓர் அனுதாபத் தந்தியை - போனோகிராம் மூலம் கொடுத்துவிட்டு அக்கடா என்று இருந்து விடுகிறார்கள் - லோக்கலாக இருந்தாலும்கூட.
சரி... துக்கம் விசாரிக்க நிறையப் பேர் வரவில்லையே என்றாவது குறிப்பிட்ட துக்க வீட்டினர் துக்கப்படுகிறார்களா என்றால் அதுவும் குறைந்து விட்டது.
வழியில் ஓர் அம்மாளை நீண்ட நாள் கழித்துப் பார்த்து, சௌக்கியமா?
என்று நலம் விசாரித்தேன். அந்த அம்மாள் சௌக்கியமாக தெரிந்தாலும் அப்படிக் கேட்பதுதானே முறை.
எல்லாம் சௌக்யம். எவ்ரி திங் ஓகே.
என்றாள் சிரிப்புடன், ஒரே வார்த்தை பேசிவிட்டுப் போவது பண்பாகாது என்று, வீட்டுக்காரர் சௌக்கியமா?
என்று கேட்டேன்.
அந்த அம்மாள் அதே சிரிப்பு மாறாமல் சற்றுக் கீழ் ஸ்தாயியில், ஆங்கிலத்தில், அவர் பத்து மாசத்துக்கு முன்னாலேயே இறந்துபோய் விட்டாரே
என்றாள். அம்மையாருக்கு அறுபத்தைந்து வயது என்று ஞாபகம். நெற்றியிலே அகலக் குங்குமம், நகைகள், தோடுகள், பட்டுப்புடவை, புஷ்பம் என்று எல்லா லட்சணங்களும் மாமூலாக இருந்ததால், நான் அவருக்குக் கணவனை இழந்த துக்கம் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
ஆனால், ஒருத்தர் இறந்துவிட்டார். அதுவும் கணவர் இறந்துவிட்டார் என்றால், ஓகோ அப்படியா?
என்று சொல்லிவிட்டு அடுத்த டாபிக்குக்கு நாம் சென்றுவிட முடியுமா ஆகவே, என்னாச்சு... நன்றாகத்தானே இருந்தார். வாக்கிங்கெல்லாம் போவாரே?
என்று சாதாரணமாகக் கேட்டேன். முகத்தைக் கூடுமான வரை துக்கம் இல்லாமல் வைத்துக்கொண்டு கேட்க எனக்குச் சிரமமாக இருந்தது.
நான் ரொம்ப அதிர்ச்சியோ, துக்கமோ அடைந்தது போலக் காட்டிக்கொண்டால் அந்த அம்மையார், இந்த ஆள் என்ன சுத்த கேனனாயிருக்கிறார். எதுக்கு இவர் இப்படி அழற மாதிரி முகத்தை வைத்துக்கொள்கிறார்?
என்று சங்கடப்படக் கூடும். ஆகவே சர்வ சாதாரணமாகவே கேட்டேன்.
அந்த அம்மாள் திருவள்ளுவரின் பரம்பரையில் வந்த யாரிடமோ பாடம் கேட்டவர் போல் மகா சுருக்கமாக, டயாபடிஸ், ஹார்ட் அட்டாக்கும் சேர்ந்தது. தட்ஸ் ஆல்
என்று 'சென்றேன், பார்த்தேன், வென்றேன்' பாணியில் கணவரின் மரண வரலாற்றை முடித்துவிட்டு, மாமியெல்லாம் செளக்கியம்தானே?
என்று என் வீட்டைப் பற்றி ஆவலுடன் விசாரித்தார். டி.நகர்லே ஏதோ இடம் வாங்கி இருப்பதாக மாமி சொன்னாளே...
நான் ஏதோ சொல்லிவிட்டு என் வாக்கிங்கைத் தொடர்ந்தேன்.
பழைய காலமாக இருந்தால் எவ்வளவு துக்கம் செலவாகும்? யோசனை பண்ணிப் பாருங்கள்.
இறந்தவுடனே ஓர் உறவினர் - ரொம்பப் பொறுப்புள்ள காரியம் செய்வதாக நினைத்துக்கொண்டு தன் சொந்த வீட்டுப் போன் மூலமாகவோ - போன் இல்லாவிட்டால் அக்கம் பக்கத்து வீட்டுப் போன் மூலமாகவோ சுழற்ற ஆரம்பித்து விடுவார். (அநேகமாக ஓசி!) வீடு ஜேஜேவென்று துக்கக் கூட்டத்தினரால் நிரம்பி வழியும். சில சமயம் மாஜி கதாநாயகனாகிவிட்ட 'பாடி'க்கே இடம் கிடைக்காமல் போவதும் உண்டு. (மறதிக்கார உறவினர் ஒரு சமயம், எல்லாம் நகருங்கோ... இப்படிக் கூட்டம் போட்டுண்டால் எப்படி அவர் மூச்சு விடுவார்?
என்று சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.)
கணவரை இழந்த அம்மையார் எங்காவது சோர்ந்து விழுந்துவிடப் போகிறார் என்பதற்காக அவரைச் சுற்றி கருப்புப் பூனைப் படை மாதிரி சில பெண்மணிகள் உஷார் நிலையில் இருப்பார்கள்.
சில சமயம் காபி நீட்டுவார்கள். சில அம்மையார்கள் துளி குடித்துவிட்டு (நன்றாயிருந்தால் முழுசும் குடித்திருப்பார்கள்!) வேண்டாமென்று விடுவார்கள்.
இதற்குள் அடுத்த வீட்டுக்காரர் தன் மனைவியுடன் வந்து கவலையுடன் ஒரு சர்வே எடுப்பார்.
ஆசாமி இறந்ததில் எல்லாரையும்விட அதிகக் கவலை அடுத்த வீட்டுக்காரர்களுக்குத்தான். (அந்தக் கால சம்பிரதாயத்தைச் சொல்கிறேன்.)
துக்கம் நடந்த வீட்டுக்குக் காப்பி, பலகாரம், சாப்பாடு தயாரித்துக் கொண்டு வந்து தரவேண்டியது அவர்கள் பொறுப்பு.
அண்டா குண்டான்னு அடிக்கடி அடுத்த வீட்டிலிருந்து ஏதாவது வந்து கொண்டிருக்கும். மர்மமாகச் சிலர் மர்மமான ஒரு பிரதேசத்துக்குச் சென்று மர்மமான முறையில் தங்கள் மட்டும் சாப்பிட்டு வந்துவிடுவார்கள்.
குழந்தைகள் கபடு சூது தெரியாமல் கையில் ஒரு வடையையோ இட்லியையோ கவ்விக்கொண்டு வந்து எல்லாருக்கும் நடுவில், இட்லி, வடை வந்து இறங்கியுள்ள விஷயத்தை லீக் செய்து விடுவார்கள்.
முக்கியமான உறவினர்களும், முன் ஜாக்கிரதையான உறவினர்களும் சென்று பலகாரங்களைக் காலி செய்துவிடுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரருக்கு பகீர் என்றாகும். அவர் வீட்டில் டயலாக்: ராத்திரியே எடுத்துச்சுன்னா ராத்திரி சாப்பாட்டோடு ஒழியும்
னு பார்த்தா, காலையிலே எடுக்கறாளாமே."
சரி, கத்தாதேள். என்ன இழவோ, உங்கம்மா செத்ததுக்கு அவள் பண்ணிக்கொண்டு வெச்சாளோன்னோ. பழிக்குப் பழி.
அது சரி... அப்போ ஒரு இருபது பேருக்கு பண்ணியிருப்பா, நாம இருநூறு பேருக்குன்னா படைக்கணுமாயிருக்கு.
எலெக்ட்ரிக் விளக்கு இருந்தாலும் இரவு பெட்ரோமாக்ஸ் விளக்குக்கும் ஏற்பாடாகும்.
கணவரை இழந்த அம்மையார் மிகுந்த களைப்பு மேலீட்டால் இதற்குள் இரண்டு மூன்று தரம் மயக்கடைந்திருப்பார். (துக்கம்தாம். தக்க சமயத்தில் அதற்கு 'மயக்கம்' என்று பெயர்.)
சில பேர் ஆறுதல் சொல்லிக் காப்பிக்கு மேல் காப்பியாக மேற்படி அம்மையாருக்கு ஊற்றிக்கொண்டே இருப்பார்கள்.
சில் அம்மையார்கள், சூடே இல்லையே...
, டிகாக்க்ஷன் கொஞ்சம் வேணும்!
, சர்க்கரை தித்திச்சி வழியறது
என்று நித்த மசோதா! சடங்கைச் செய்யும் புரோகிதர் எனப்பட்டவர் எந்தக் கோடீஸ்வரன் செத்தாலும் லேட்டாகத்தான் வருவார். அவரை ஸ்பெஷலாக ஏழு உலகத்திலும் தேடி ஸ்கூட்டர் பின்னால் உட்கார வைத்து அழைத்துக்கொண்டு வரவேண்டும்.
எல்லாருக்கும் ஏதோ முக்கிய தலைவரே வந்துவிட்டது போன்ற மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்பட்டுவிடும். இனிமேல் காரியங்கள் விறுவிறுவென்று நடந்துவிடும்.
பாடி கிளம்பினதும் தங்கள் வீட்டுக்குப் புறப்பட, விட்ட இடத்தில் தங்கள் செருப்புகள் பத்திரமாக இருக்கிறதா என்று செருப்புக் குவியல் பக்கமாகச் சென்று வருவார்கள்.
பெண்கள் பகுதியில் இருக்கும் தத்தமது மனைவிகளுக்கு சிக்னல் கொடுப்பார்கள்.
துக்க வீட்டில் சொல்லிக் கொண்டு போகக்கூடாது
என்று ஒரு சம்பிரதாயம். (அது எப்படி வந்தது என்றால், எல்லாரும் நைஸாக நழுவிப் போவதைப் பார்த்து மனம் வெறுத்து யாரோ ஒருத்தர் பகிரங்கமாக அதை ஒரு சம்பிரதாயப்படுத்தி இருக்க வேண்டும். கல்யாண சமயத்தில் 'திருட்டுப் பாத்திரம்' என்று சம்பந்தி எதையாவது திருடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று சம்பிரதாயம், சில இடங்களில் இருக்கிறதல்லவா, அதுபோல!) அந்த பாடி அந்தப் பக்கம் போயாச்சு என்றால் இந்த பாடி (அம்மையார்) சர்வ சுதந்திர புருஷியாகி (ஒரு பத்து இருபது நாளைக்குள்) வீட்டு எஜமானியாகி மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பி விடுவாள்.
உடனிருக்கும் உறவினர்கள் அவளை விசேஷமாகக் கவனிப்பார்கள். அம்மா சாப்பிட்டாச்சா...
, அம்மாவைக் கவனி
அப்படி இப்படி என்று மகன்களும், மகள்களும் பேரர்களும், பேத்திகளும் கொண்டாடுகிற கொண்டாட்டத்தில் - இரண்டே மாசத்தில் பத்து கிலோ வெயிட் ஏறிவிடும்.
அப்புறம் பொட்டு, பூ தவிர (சில பேர் கறுப்பு சாந்து அணிவர்) மற்றபடி பழைய அம்மையாராகவே மாறிவிடுவார். பழைய காலத்திலேயே இப்படி... இப்போ காலம் முன்னேறியிருப்பதால் பொட்டும் பூவும் சேர்ந்து கொண்டு பூரணமான பொலிவுடன் செளக்கியமாக அம்மையார்கள் இருக்கிறார்கள்.
தைரியமான சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகள். அவர்கள் கணவனை இழந்ததே போதாதா... மற்றவற்றையும் இழக்கச் சொல்ல நான் மூடன் அல்ல. கணவருடைய போட்டோவைச் சிலர் ஹாலில் மாட்டி வைக்கிறார்கள். அந்தச் சட்டத்துக்குள் திருதிருவென்று முழித்துக் கொண்டு அந்த ஆள் தவிக்க வேண்டாம் என்று சில வீடுகளில் புகைப்படமும் மாட்டுவதில்லை. ஒரு அம்மாளிடம் நான் கேட்டேன், எங்கே உங்க வீட்டுக்காரர் படம் எதுவுமே காணோம்?
அந்த அம்மாள் முகத்தில் ஒரு புன்னகை. கையால் தன் நெஞ்சை லேசாகத் தொட்டுக் காட்டினார். மனசிலே இருக்கிறாராம். இதையெல்லாம் ஆராய கமிட்டியா போட முடியும்? ஆகவே யாரும் அநாவசியமாகத் துக்கப்பட வேண்டாம்.
3. எலி வளைகளில் நான்!
'எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டுது' என்று ஒரு பழமொழி உண்டு.
எனக்குக் கல்யாணமானதும் - அப்போது நான் ஓர் எலியாக இல்லாவிட்டாலும் - தனி வளை தேடும் துர்ப்பாக்கியம் எனக்கு ஏற்பட்டது.
என் அண்ணாக்களெல்லாம் வேறு வேறு ஊரில் இருந்தார்கள்.
என் உத்தியோகமோ சென்னையில் குமுதம் ஆபீசில்.
என் பிரம்மச்சரிய வாழ்க்கை பூரா ரூம் வாழ்க்கையாகப் போய்விட்டது.
அக்காலத்தில் எந்த வீட்டிலாவது முன் அறை என்று ஒன்று இருந்து வீட்டுக்காரருக்கும் மனசு இருந்தால் அதை நல்லவனான பிரம்மச்சாரிப் பையனுக்கு வாடகைக்கு விடுவது உண்டு. எனக்கு அப்போது லாட்ஜில் தங்கிக் கொண்டு மெஸ்ஸில் சாப்பிடுகிற அளவுக்கு வசதி இல்லை. ஆகவே ஏழெட்டு குடித்தனக்காரர்களுள்ள ஒரு வீட்டின் முன்பக்கச் சிறிய அறையில் குடியேறினேன். தூரமானாள் ரூம் என்று அக்காலத்தில் கட்டி வைப்பார்கள். நான் அந்த ரூமுக்குக் குடியேறி அதன் அவப்பெயரை மாற்றினேன்.
குடித்தன வீட்டு ரூமில் பல சௌகர்யம். 'ஐயோ பாவம், பிரம்மச்சாரிப் பிள்ளை தனியா இருக்கு!' என்று பண்டிகை சமயங்களில் பலகாரங்கள் வரும்.
ஜூரம் அது இது என்று வந்தால் கஞ்சி கிஞ்சிகூடப் போட்டுத் தருவார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகள் நான் இருந்த ரூமுக்குள் வந்து 'மாமா' என்று தங்கள் பிரியத்தைக் கொட்டுவார்கள். வாண்டுகள் என்னை 'தூரமானாள் ரூம் மாமா' என்று கூப்பிட்டதுதான் கஷ்டமாயிருந்தது. கல்யாணமானதும் வீடு தேட சோம்பல்பட்டுக் கொண்டு அதே ஒற்றை ரூமில் மனைவியுடன் குடித்தனம் செய்ய முடியுமா என்றுகூட ஒரு கணம் முட்டாள்தனமாக நினைத்தேன்.
அப்புறம்தான் குடித்தனம் என்று வைத்தால் குறைந்த பட்சம், சமையலறை, குளியலறை இதுகள் வேண்டுமாயிருக்கும் என்றார்கள்.
ஒட்டுக் குடித்தன வீடு ஒன்றில் ஒரு போர்ஷன் கிடைத்தது.
முன் போர்ஷனில் எனக்கு மிகவும் நண்பரான பாட்டு வாத்தியார் ஒருத்தர் குடி இருந்தார்.
தங்கம் என்றால் டவுன் நகைக் கடைக்கோ, மயிலாப்பூர், தி.நகர் ஜூவல்லரி ஷாப்புகளுக்கோ போய் சொக்கத் தங்கம் கிடைக்குமா என்று தேட வேண்டாம். என் பாட்டு வாத்தியார்தான் சுத்தத் தங்கம். என் மீது மகா பிரியம். அவருடைய சிஷ்யனல்லவா. கொஞ்ச காலம் அவரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன்.
என் போர்ஷன் அலமாரி கிலமாரியில்லாத பிளெய்ன் சுவர் கொண்டது. ஒரு சுவர் மற்ற மூன்று சுவர்களிடமிருந்து கோபித்துக் கொண்டது போலச் சற்று நெளிந்து சிணுங்கி விலகினாற் போன்ற தோற்றம்.
'அதைப் பற்றிக் கவலைப்படாதீர். விழுந்தாக் கூட, அடுத்த வீட்டுப் பக்கமாகத்தான் விழும். நம்ம பக்கம் விழாது' என்று பாட்டு வாத்தியார் தைரியம் சொன்னார்.
மனைவியோ ரொம்ப வசதியான ஒரு பங்களாவில் வசித்தவள்.
தியாஸபிகல் சொஸைடி என்ற பிரம்மாண்டமான காம்பவுண்டில் 'சந்திர விலாசம்' என்ற பங்களாவில் என் மாமனார் புரொபசர் விசுவநாத ஐயர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பின் கலாட்சேத்திராவுக்காக உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தின் க்யூரேட்டராக இருந்து வந்தார்.
அவருக்கு தியாஸாபிகல் சொஸைடிக்குள்ளேயே ஒரு பழைய பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. பழசானாலும் பங்களா பெரிசு, பல அறைகள், தாழ்வாரங்கள், முற்றங்கள், புழக்கடை, சமையல்கட்டு, சாப்பாட்டு ஹால் என்று நீள நெடுக இருந்தது.
மாமனார் வீட்டுக்கு நான் மனைவியைப் பார்க்கப் போனால் அவள் சமையல்கட்டில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பாள்.
நான் வந்திருக்கேன் என்று தெரிந்து கையைத் துடைத்துக்கொண்டு வாசல் ஹாலுக்கு வந்து என்னைப் பார்க்க ஐந்து நிமிஷம் ஆகும்.
அத்தனை பெரிய வீட்டிலிருந்தவளை, யானையைப் பானைக்குள் அடைப்பதுபோல (பழமொழிக்காக சொன்னது. மனைவியார் அப்போது மகா மகா ஓல்லி, ஆடிக்காற்றடித்தால் ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொள்வாள்.) எப்படி என் மனைவியை இத்தனூண்டு போர்ஷனுக்குக் கூட்டி வந்து குடித்தனம் போடுவது என்று ரொம்ப நொந்து போனேன்.
சரி... நாமே மாமனார் வீட்டில் போய் டிகானா போட்டு விடலாம் என்றால் அதுவும் சாத்தியமில்லை.
அவர் பங்களா அடையாறில். என் ஆபீஸோ புரசைவாக்கம்.
பத்திரிகை ஆபீஸாதலால் இரவு, பகல் பேதமில்லாமல் வேலை நடக்கும்.
நடு ராத்திரியில் புருஃப் பார்க்கணும்னா அடையாறிலிருந்து வர முடியுமா? அல்லது ஆபீஸ் பையன்கள்தான் அத்தனை தூரம் கொண்டு வருவார்களா?
சரி, மனைவி என்ன சொல்கிறாள் பார்ப்போம் என்று அவளைக் கூட்டி வந்து இதுதான் நம்ம போர்ஷன். உன்னாலே காலம் தள்ள முடியுமா? இல்லே வேறு வீடு பார்க்கலாமா?
என்றேன்.
அவளுக்கு எப்படியோ என் கையாலாகாத்தனம் தெரிந்திருக்கிறது.
'நாம ரெண்டே பேர்தானே? தாராளமாகப் போதும். ஒரு ஷெல்ஃப் அடிச்சுட்டால் போதும், பாத்திரம் கீத்திரம் கவுக்க' என்றாள். 'பக்கத்திலேயே ஒத்தாசைக்கு பாட்டு வாத்தியார் குடும்பமும் இருக்கிறது. பயமில்லாமல் கச்சிதமாக இருக்கு' என்றாள்.
'அடையாறுக் காட்டில் விதவிதமான பாம்பு, நட்டுவாக்கிளியெல்லாம் வரும். பங்களா பெரிசே தவிர மழை பேஞ்சா ஹாலிலிருந்து ரூமுக்குப் போக முடியாது. சமையல் ரூம் சுவரெல்லாம் ஒழுகும். கடப்பக்கல் தரை வழுக்கும்.' தன் பிறந்த வீட்டை எனக்காகப் பழித்துச் சொல்லிக் கொண்டு எனது இருபத்தெட்டு ரூபாய் மாளிகையைப் புகழ்ந்தாள்.
'கட்டில், நாற்காலி, பீரோ அது இது என்று எதுவும் உள்ளே நுழையக் கூடாது' என்று நான் கடும் உத்தரவு போட்டுவிட்டதால் அந்தச் சீர் சாமான்களெல்லாம் மாமனார் வீட்டிலேயே இருந்தன.
அறையின் நட்ட நடுவில் மெத்தை. படுக்கை போட்டாச்சு என்றால், சாட்சாத் கடவுளே வந்தாலும் கதவைத் திறக்க முடியாது. சற்றுப் பெரிய பரப்பளவில் டபுள் மெத்தையாக மாமனார் தைத்து விட்டார்.
கதவில் போய் மெத்தை முட்டிக் கொண்டு சுவருக்கும் கதவுக்கும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்.
மழை பெய்யாதவரை சரியாயிருந்தது.
ஆனால், நாட்டில் யாராவது ஒரு நல்லவர் எப்பவாவது ஒரு நல்ல காரியம் செய்யாமல் இருப்பார்களா?
'அவர் பொருட்டெல்லார்க்கும் பெய்யுமழை' என் போர்ஷன் மீதும், முக்கியமாக அந்தக் கோணல் சுவர் மீதும் பெய்து அறையெங்கும் ஜலப் பிரளயம்.
புதுப் பட்டு மெத்தையெல்லாம் க்ளோஸ். தண்ணீர் வெளியே போக வழியில்லாததால் டபராவிலும் பேஸினாலும் வாரி வாரி வெளியேற்றினோம்.
இந்த வீடு உதவாது என்று தோன்றிவிட்டது.
வீட்டுச் சொந்தக்காரி என்று சொல்லப்பட்ட கிழவி