1990’il Veliyana Aazhamana Sirukathaigal
()
About this ebook
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.
37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.
இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.
சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
Read more from Ja. Ra. Sundaresan
Veli Thaandiya Velladugal Rating: 0 out of 5 stars0 ratingsThullal Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Thedinal Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Ezhuthathey! Rating: 0 out of 5 stars0 ratingsPaasangu Rating: 0 out of 5 stars0 ratingsOru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Ellam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsPennendral... Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Rating: 0 out of 5 stars0 ratingsMullin Kadhal Rating: 0 out of 5 stars0 ratingsPonnin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKadhambavin Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsNerungi Nerungi Varugiral Rating: 0 out of 5 stars0 ratingsPamara Geethai Rating: 0 out of 5 stars0 ratings
Related to 1990’il Veliyana Aazhamana Sirukathaigal
Related ebooks
Anamikavuku Anjali Rating: 5 out of 5 stars5/5Kanavey Kanivey... Rating: 5 out of 5 stars5/5Nandhanin Anuragam..! Rating: 4 out of 5 stars4/5Ivala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsTharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsThedal Rating: 0 out of 5 stars0 ratingsMaavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5Rajesh Kumarin Arputha Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuyirey Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Mayangukirean Rating: 5 out of 5 stars5/5Adutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsGangai Ingey Thirumbugirathu! Rating: 0 out of 5 stars0 ratingsKangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Purakkal Rating: 0 out of 5 stars0 ratingsகையில் கிடைத்த வைரம்... Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Arugey Vaa Anamika Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsVadakke Oru Santhippu Rating: 0 out of 5 stars0 ratingsKanna Mango Thinna Asaiya Rating: 0 out of 5 stars0 ratingsIndriravu Rating: 5 out of 5 stars5/5Iraval Vasantham Rating: 3 out of 5 stars3/5Kaththirukka Neramillai Karuna Rating: 0 out of 5 stars0 ratingsPuyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! Rating: 0 out of 5 stars0 ratingsIthuvarai… Rating: 0 out of 5 stars0 ratingsPoothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsKathavillatha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Vanam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for 1990’il Veliyana Aazhamana Sirukathaigal
0 ratings0 reviews
Book preview
1990’il Veliyana Aazhamana Sirukathaigal - Ja. Ra. Sundaresan
http://www.pustaka.co.in
1990'ல் வெளியான ஆழமான சிறுகதைகள்
1990'il Veliyana Aazhamana Sirukathaigal
Author:
ஜ.ரா.சுந்தரேசன்
Ja. Ra. Sundaresan
For more books
http://www.pustaka.co.in/home/author/jarasu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. ஆஸ்பத்திரியில் ஒரு தேவதை
2. அல்ப மானிடன்
3. அப்பாவை திட்டுகிற வியாதி
4. இதுல ஒண்ணு அதுல ஒண்ணு!
5. அவள் இட்ட குங்குமம்
6. ஹை வேல்யூ செக்
7. இறந்தாலும் எதிரிதான்!
8. கடைசி ஸீன்
9. கடவுளின் எடை
10. என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!
11. கண்ணு ரொம்ப அழகு
12. கெட்டிக்காரன் புளுகு
13. கொத்தவால்சாவடி கொலை
14. குங்குமப் பூவின் கவலை!
15. மனித ரத்னம் யார்?
16. மனிதன் ஒரு TEDDY
17. மாட்ச் ஃபிக்ஸிங்
18. மெட்டி ஒலி
19. முட்டுச்சீலை
20. நாய்
21. நடுவில் ஒரு தடுப்பு
22. ஒரே ஒரு ரூம்
23. ஒரு துளி சந்தோஷம்
24. பாத்திரங்கள் விழவில்லை
25. பதிவிரதையின் சாம்பல்!
26. பேசவே மாட்டான்
27. பிடரி
28. பிளாட்பார சித்தர்
29. பொலி எருது ஆட்டம்
30. புரொஃபசர் மிஸ்டர் பொறாமை
31. சாவகாசமாக படிக்கவேண்டிய சாதாரண கதை!
32. சாராயக் கடை சுண்டல்
33. சில நேரங்களில் சில கடிதங்கள்
34. சிவ மாமாவும் ஒரு வில்வக் கன்றும்
35. சொர்க்கத்துக்கு வா!
36. வீட்டுடமை ஆக்கப்பட்ட ஸ்வெட்டர்
37. திடீர் சாமியார்!
38. டிரான்ஸிஸ்டர் பாட்டி
39. உல்ஃப்மேன்
40. வாடா!
41. அந்த வாழைப் பழக் கடை
42. வாயஸ பிண்டம்
43. வீசி அடித்த நீர்...
44. வெளிச்சத்தில் பாய்ந்த இருட்டு!
45. வுல்ஃப்
46. ழ
1. ஆஸ்பத்திரியில் ஒரு தேவதை
முதல் நாள் வெகு உபசாரம் செய்து அவனை நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தார்கள். முழு உலகமும் அவன் பிழைத்து எழ வேண்டும் என்று விரும்புவதாகச் சில நாட்களுக்கு அவனுள் நெகிழ்ச்சி தோன்ற, ஆண்டவனிடம் தானும் கண்ணீர் மல்கப் பல பிரார்த்தனைகளை, செலவு மிகுந்த பிரார்த்தனைகளை மடமடவென்று செய்து கொண்டான்.
ஒரு வாரத்துக்கு மேல் நர்ஸிங்ஹோமில் இருந்தான். அவனது நோயில் தெரியாத மாறுதல்களும், முன்னேற்றமும் மருத்துவர்களிடம் தெரிந்தது. முதல் நாளில் இருந்த பரபரப்போ, அக்கறையோ அவர்களிடம் காணவில்லை.
அவனுடைய அறை இரண்டு கட்டில்கள் கொண்டது.
அடுத்த கட்டிலுக்கு ஒரு புது நோயாளியைக் கொண்டு வந்து கிடத்தினர். பட்டாளமாக டாக்டர்களும், நர்ஸுகளும், உதவியாளர்களும் வந்து அந்த நோயாளிக்கு உபசாரங்கள் செய்தனர். ஒரு நர்ஸ் க்ளுகோஸ் ஸ்டாண்ட்டைத் தூக்கி வர, ஒரு டாக்டர் இருதயத்தைச் சோதிக்க, இன்னொரு உதவி டாக்டர் நோய்க் குறிப்புகளை எழுத, படுக்கை விரிப்பில் தூசி இல்லாமல் ஒரு வார்டுபாய் துடைத்து விட, மானிட்டர் கருவியை இன்னொரு நர்ஸ் நகர்த்திச் சரி செய்ய, பெரிய டாக்டர் புன்னகையுடன் அங்கே வந்து நோயாளிக்கு ஆறுதல் கூறிவிட்டுச் செல்ல -
இதே உபசாரங்கள் எல்லாம் எனக்கும் தானப்பா நடந்தது. இரண்டாம் நாளிலிருந்து உன்னை உன் வீட்டவர்கள் கவனித்தால்தான் உண்டு. ஆஸ்பத்திரி பில் ஏறுமே தவிர, நீ அனாதை ஆக்கப்படுவாய்
என்று அடுத்த கட்டில்காரனிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.
இருதய நோயாளிக்கு மருத்துவம் பட்டினிதான் என்பது பெரும்பாலான டாக்டர்களின் அபிப்பிராயம். இதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் உண்டு. ஆஸ்பத்திரியில் குறிப்பாக அந்த இருதய நோயாளியின் கட்டிலருகே ஈ எறும்பு வராது.
உணவுப் பண்டம் ஏதாவது இருந்தாலல்லவா அவை வரும்? வெறும் காற்றை மொய்ப்பதற்காக அவை சிரமம் பாராட்டாது. அங்கே வரவேண்டிய கட்டாயமில்லை அல்லவா?
மூன்றாம் நாள் வேதகணபதி தன் மனைவியிடம் சொன்னான். டாக்டரிடம் சொல்லிக் கொண்டு நாம் கிளம்பிவிடலாமென்று தோன்றுகிறது. மருந்து என்று எதுவும் தருவதில்லை. வெறும் பட்டினி கிடப்பதை நான் வீட்டிலிருந்து கொண்டே அனுபவிக்கிறேனே.
அவன் மனைவி லீலாவதிக்கு நாலு இடம் வெளியில் போய் வந்த பழக்கமே கிடையாது.
நகரத்தில் இருக்கிறாளே தவிர டி.வி.யின் ராமாயணம், மகாபாரதம்தான் தெரியும்.
கணவனது இதயக் கோளாறு சாக்கில் தினமும் பஸ்ஸில் வர முடிகிறது. இவ்வளவு பெரிய நர்ஸிங்ஹோமைப் பார்க்க முடிகிறது. இங்கே சில பெண் பிள்ளைகள் அவளுக்கு அறிமுகமானார்கள்.
லீலாவதி நல்ல நிறம். வயது முப்பதானாலும் பார்க்கிறவர்கள் மறு தரம் கண் வீசும்படியான வளப்பமான உடம்பு. நாலு பேர் அவளைப் பார்க்கும்போது அவளுக்குச் கூச்சமாயிருந்தது. பெருமையாயிருந்தது என்றும் சொல்லலாம்.
அவளிடம் சிரித்த முகத்துடன் டாக்டர்கள் பேசினார்கள். அவள் படித்தவளாயிருப்பாள் என எண்ணிச் சில டாக்டர்கள் அவளது கணவன் உடல்நிலை பற்றி, மருத்துவ பாஷையிலேயே பேசினார்கள்.
அந்த வார்த்தைகளுக்கெல்லாம் அவளுக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும், புரிந்தது போல புன்னகையுடன் கேட்டுக் கொள்வாள். பணம் இல்லாதவர்களை விட இருப்பவர்களுக்குத்தான் அதனுடைய அருமை தெரியும் என்பதில் உண்மை இருக்கிறது.
லீலாவதியின் கணவருக்குச் சீக்கிரம் படுக்கையைக் காலி செய்துவிட வேண்டும் என்று தோன்றியது - அடுத்த கட்டிலுக்கு வந்தவர்கூட மறுநாள் புறப்படுவதாகக் கூறினார்.
இவர்களெல்லம் பணம் பறிக்க இப்படி ஏதாவது கருவிகளை வைத்துப் பயமுறுத்துகிறார்கள். அரைக் கிண்ணம் காரட் சாறு நாம் சாப்பிட இவர்கள் ஐம்பது ரூபாய் சார்ஜ் செய்கிறார்கள். படுக்கைக்கு ஒரு நாளைக்கு எண்ணூற்று ஐம்பது ரூபாய். வருகிற டாக்டரின் விசிட்டுக்கு இதே நர்ஸிங்ஹோமில் சதா காலமும் கீழே அறைக்குள் உட்கார்ந்து கிடப்பவன் - மேலே வந்து பார்த்தால் - இருநூறு ரூபாயாம்.
இப்போதுதான் அசலாக இருதயம் வலிப்பது போலிருந்தது வேதகணபதிக்கு.
மனைவியிடம் பிடிவாதமாக சொல்லி, அன்றே டிஸ்சார்ஜுக்கு ஏற்பாடு பண்ணினான்.
உன் நகையை விற்கிறாற்போல ஆகிவிடும். இந்த ஏழு நாளைக்குமே முப்பதாயிரமாம்,
என்றதும் அவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
வீட்டுக்கு வந்த பிறகு அவனது வியாதி பூர்ணமாக குணமாகி விட்டது போன்ற குதூகலம் அவனுக்கு ஏற்பட்டது.
லீலாவதிக்குத்தான் நெஞ்சில் சுருக் சுருக்கென்ற வலி உண்டாவது போலிருந்தது.
ஒரு வாரம் பிஸியாக பஸ்ஸில் போவதும், லிஃப்டில் ஏறி மேலே ஸ்பெஷல் வார்டில் கணவனருகே உட்கார்ந்து, செல்லக் கொட்டாவிகளுடன் கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதோ, வருகிற நர்சுகளில் சிலர் அவளது பட்டுப் புடவை பற்றி விசாரிப்பதும் இப்போது இல்லை.
இந்த அம்மாள் மகாலட்சுமி மாதிரி இல்லே...
கே.ஆர்.விஜயா செவப்பா இருந்தால் இப்படியேதான் இருப்பாங்க...
ஊஹும்... அதற்கும் மேலே...
இப்படிப்பட்ட புகழுரைகளெல்லாம் இனி அவளுக்கு எங்கே கிடைக்கப் போகின்றன.
உடல் தேறிய கணவனை வெறுப்புடன் அவள் கண்கள் நோக்கின. இன்னும் ஒரு பத்து நாளாவது அவன் நர்ஸிங்ஹோமில் படுத்திருக்கலாம்.
காலையில் எவ்வளவு சீக்கிரம் அவள் குளித்துவிட்டு, டிரஸ் செய்து கொண்டு மருத்துவனைக்குப் புறப்படுவாள். இப்போது குளிக்கவே பிடிக்காமல் அமர்ந்திருந்தாள்.
வேதகணபதி, உனக்கு என்ன ஆச்சு? எனக்கு காப்பி உண்டா இல்லையா?
என்றான்.
அவள் சொன்னாள் : மனுஷாளுக்கு ஏன்தான் இப்படிப் பணத்தாசையோ... சாகறப்போ அந்தப் பணமா கூட வரப் போறது.
அது தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தை என்று புரிந்துகொள்ளாத வேதகணபதி, ஆமாம், ஆமாம். அந்த டாக்டர்கள் சரியான பணம் பிடுங்கிகள்
என்றான்.
2. அல்ப மானிடன்
நல்லது ஞாபகத்தில் தங்குவதில்லை. பொல்லாததுகளை நினைவிலிருந்து அகற்ற முடிவதில்லை.
அறப்பளீசுவரன் தனது இருபத்தைந்தாவது வயதில் ஒரு பெண்ணுடன் சில நாள் தொடர்புகொண்டிருந்தார். சூழ்நிலை அவருக்கு சாதகமாக இருந்தது.
கெட்டுப் போவதற்குக் கடவுள் அனுக்கிரகம் செய்கிறாரே என்று அவருக்கு நன்றி செலுத்துவார். அபிஷேகம் அர்ச்சனை செய்வார்.
அப்புறம் அந்தப் பொண்ணு கல்யாணம் ஆகி ஏதோ ஒரு விசேஷத்திலே பார்த்தார் - இடுப்பு உசரத்துக்கு ஒரு இளைச்ச குட்டியுடனும் இடுப்பிலே ஒரு சவலையுடனும் வயித்திலே நாலஞ்சு மாசமாகவும் - கைலே பெரீய சணல் பையுடனும் எதற்கோ காத்திருந்தாள்.
அந்த சஷ்டியப்த பூர்த்தி நிகழ்ச்சியில் தலைமைப் புரோகிதர் காசி சாஸ்திரீகளின் பார்யா அவள் என்பது தெரிந்தது. இத்தயெல்லாம் பத்திரமாக ஆத்துக்கு எடுத்துண்டு போ. நான் இதை முடிச்சிண்டு, வக்கீல் சுந்தரம் ஆத்து ஜானவாசத்தை எட்டிப் பார்த்துட்டு டாண்ணு நவார்த்தம் வந்துடுவேன். அதுக்குள்ளே சேதுவோ மாதுவோ வந்தான்னா உட்கார்த்திவை,
என்று அவரது பங்குக்குக் கிடைத்த பத்தாறு, அரிசி, பருப்பு, கிருப்புகளை பழங்களை கட்டை சணல் பையில் கொட்டறப்பதான் அறப்பளி இத்தனை அழகா பத்து வருஷத்துக்கு முன் இருந்த தங்கமா இப்படி உருக்குலைஞ்சிட்டான்னு பகீர்னுது.
அவள் ஒரு சத்தியம் பண்ணியிருந்தாள். அப்புறம்கூட நீ கவனிக்கணும்னு அவன் வம்பு பண்ணினப்போ, 'சரி சரி. சரி'ன்னாள். சத்தியம் பண்ணின்னான். பண்ணினாள்.
அவளுக்கு நிச்சயம் ஆயிடுத்துன்னதுக்குப் பெறகு அந்தக் கூத்து.
இப்ப இந்தக் கோலத்திலே நிற்கிறதா. 'பல்லு வரிசைக்கு என் சொத்து பூரா எழுதி வெச்சுடலாம்னு இருக்கு' என்று அவளுக்கு எயிறுகளைக் கடிக்காத குறையாக அழுத்தி முத்தம் கொடுத்தபோது சொன்னான்.
இந்தப் பத்து வருஷத்திலே அந்தப் பல் வரிசை தடம் புரண்ட ரயில் பெட்டியாட்டம் காரே பூரேன்னு எப்படி ஆயிட்டது. கறுப்பு கறுப்பா சொத்தை வேற.
புருஷன்கார சாஸ்திரி டூத் பேஸ்ட் பிரஷ் வாங்கித் தரமாட்டான் போலிருக்கு.
பத்து வருஷத்துக்கு முன் அவள் அதரங்களுக்குள் புகுந்து அவள் எச்சலுக்குத் தனி மணம் உண்டான்னு ருசி பார்த்த அவன் நாக்கு இப்போ அவள் வாயைப் பார்த்து நடுங்கியது.
வைட்டமின் ஸி குறைஞ்சா இப்படி வாய்க்கு இரண்டு ஓரமும் கரிச்சாம்பலே இருக்கும்னுவா.
மொத்தத்திலே தங்கம் தங்கமா இல்லை. தரகமா நின்னாள்.
எப்படி இருக்கே. தங்கம்தானே?
என்றான்.
அவள் தலையைக் கொஞ்சம் குனிஞ்சு, கண்ணை மட்டும் ஒசத்தி அவனைப் பாரத்தாள். அதற்குள் பக்கத்திலிருந்தது, வாம்மா போகலாம். அப்பாகிட்ட சொல்லிடுவேன்,
என்றது.
உங்களோடு பேசணும். ஆத்துக்கு வாங்கோ அப்புறம். காசி சாஸ்திரிகள் வீடுன்னா எல்லாரும் சொல்லுவா.
யாரும்மா அந்த தங்க மாமா.
சனியனே... புடவையைப் புடிச்சி அப்படி இழுக்கணுமா?
எனக்கு மூச்சா வந்துட்டுதும்மா.
சமர்த்துதான். சரி. சரி.
ஒரு தரம் திரும்பிப் பார்த்துட்டுப் அவள் புறப்பட்டாயிற்று - அந்தப் பழைய ஞாபகம்.
வரச்சொன்னாளேன்னு தங்கத்தைப் போய்ப் பார்க்கிறதா? சிதம்பரம் போயாகணும். போறதுக்கு நிறைய பஸ் இருக்கு. காலையிலேகூட சிதம்பரத்துக்கு போகலாம்.
தங்கத்தைப் பார்க்கணுமா? என்ன சொல்லுவா? ஏதானும் சொல்லிக்கட்டும்.
காசி சாஸ்திரிகள் வசதியானவர்தான். ஆனால் இவளைப் பார்த்தால் சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கிறவலாட்டம் இருக்கு. ஏதேதோ வியாதி பிடுங்கிற மாதிரி இருக்கா? சுகப்படறவளா தெரியலை. என்னத்துக்கு வரச் சொன்னாலோ. நான் வசதியாய் இருக்கிறது பளிச்சின்னு தெரியறது இல்லையா?
பழசை சொல்லிண்டு அழுவளோ என்னவோ.
யார் தலையெழுத்தை யாரால் மாத்த முடியும்.
போய் ஒரு எட்டு பார்த்துட்டு ஒரு ஐந்நூறு ரூபாய் அவள் கையிலே கொடுத்துட்டு வர்றதுன்னு உறுதிப் பண்ணிக்கொண்டான்.
பழசையெல்லாம் மறக்கறது ஒண்ணாம் நம்பர் நன்றிக் கெட்டத் தனம்.
சிதம்பரம் நாளைக்குத்தான். ராத்திரி ஏதானும் லாட்ஜுலே படுத்துனுட்டு காலையிலே போனால் ஏழரைக்கெல்லாம் கல்யாண வீட்டுக்குப் போயிடலாம்.
எந்த லாட்ஜ்?
யோசித்துக் கொண்டிருக்கிறப்ப காசி சாஸ்திரிகள் வேகமாக வந்தார். ஓய்! நீதானே சங்கரன். ஹெட்மாஸ்டர் பிள்ளை அறப்பளிதானே?
ஆமாம்.
திருவையாறு.
ஆமாம். ஆமாம்.
உம்மை என் ஆத்துக்காரி கையோட அழைச்சிண்டு வரச்சொன்னா.
ஒரே குழப்பம். இது என்னக் கூத்து. ஆத்துக்காரர்கிட்டேயே சொல்லி அனுப்பியிருக்கா. பார்க்க ஏப்பை சாப்பையாய் இருந்தாலும் அதிகாரம் உள்ளவள் போல்தான் இருக்கு.
சாஸ்திரி வீடு வசதியாக இருந்தது. ஒரு ரூம்ல ஏ.சி.கூட ஓடிண்டிருந்தது. அங்கேதான் ஊஞ்சள் பலகையும்.
டிபன் பண்ணிண்டுருக்கா. இதோ ஆயிடும்.
நான் லாட்ஜிலேயே சாப்பிட்டுட்டேன்.
தங்கம் வெளியிலே வந்தாள் - கையிலே உப்புமா கிளறிண்டிருந்த கறண்டியுடன்.
அறப்பளி! ஒரு வாய் சாப்பிட்டுத்தான் போகணும். பத்து வருஷம் கழித்துப் பார்க்கிறேன்.
அறப்பளி நெளிந்தார். தங்கம் கரண்டியும் கையுமாய் வாசற்படிகிட்டே நின்று கூறினாள்.
உங்க அம்மா வத்தக் குழம்பு சாதம் உருட்டி உருட்டி போடுவாள். நீயும் நானும் போட்டிப் போட்டுண்டு சாப்பிடுவோம். என்னாலேயே அதெல்லாம் மறந்துடவே முடியாது. அதையெல்லாம் மாமாகிட்டே சொன்னேன். முதல்ல அவரைக் கூப்பிட்டு ஒரு வாய் சாதம் நம்ம ஆத்திலே போடணும்னுட்டார். சாப்பாடு பண்ண டைம் ஆயிடும். அவர் அவசரப்படுவாரோ என்னவோன்னேன். அப்போ ஒரு உப்புமாவாவது கிளறுன்னு உத்தரவு போட்டுட்டார்.
புறப்படறப்போ காசி சாஸ்திரிகள் கேட்டார். எங்கே தங்கியிருக்கேள்?
சுபா லாட்ஜ்.
சே! சே! அசிங்கம்னா அது. பேசாம இங்கே வந்துடும். காலைலே காப்பி கீப்பி சாப்டிண்டு நீர் புறப்படலாம். தங்கத்துக்கிட்டே பேசிக்கொண்டிருங்கோ. நான் ஒரு ஜான வாசத்தை எட்டிப் பார்த்துட்டு வந்துடறேன்.
காசி மாமா புறப்பட்டு போய்விட்டார்.
தங்கத்து குழந்தைகளிலே பெரியவள் ஊஞ்சள் சங்கலியை ஓசைப் படுத்தினாள்.
மாமா! உப்புமா ரெடி. கொண்டு வரலாமாங்கறா அம்மா.
ஊம்
என்றார் அறப்பளி.
தங்கம் உப்புமா தட்டுடன் வந்தாள். உடம்பு எத்தனை திராபையா இருக்கு.
பத்து வருஷத்துக்கு முன்னாலே கன்னத்தை கிள்ளித் தான் சொன்னது அறப்பளியின் ஞாபகத்துக்கு வந்தது.
'லேசா கிள்ளினதுக்கே இப்படி சிவந்துடறது. கொழுக்கு முழுக்குன்னு... கடிச்சிடட்டுமா ஒரு கடி வெடுக்குன்னு.'
'ஆசையைப் பார்க்கலை'ன்னு? தன்னை விடுவித்துக்கொண்டு ஓடிப்போனதையும் நினைத்துக் கொண்டார்.
இப்போதுகூட அந்தக் கன்னம் அவருக்கு வெகு அருகாமையில்தான் இருக்கிறது. அவளது மூச்சுக் காற்றுக்கூட அவர்மீது தயங்கித் தடுமாறி விழுந்தது போலிருந்தது. அந்தக் கன்னத்தைச் செல்லமாக ஒரு கிள்ளுக் கிள்ளி அவளுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தலாமா?
ஆசைக் கண் ஒரு விநாடி திறந்து மூடியது. விரல் விளிம்பு வரை அந்த ஆசை வந்துவிட்டது. பில்வ மங்களுடையதைப் போன்று சரீர விழைவு.
அவள் மிகுந்த ஜாக்கிரதையானவள். சட்டென்று பின்னுக்குச் சாய்ந்து கொள்ளாமலிருந்தால் நிச்சயம் அறப்பளியின் விரல்கள் அவள் கன்னத்தை ஸ்பரிசித்திருக்கும்.
அவளுடைய அந்த நொடியின் ஜாக்கிரதை அவனுக்குப் பாடிக் காட்டியது. அவன் படித்த பாட்டுத்தான். பழைய பாட்டுத்தான். ஆனால் என்றும் புதிதாக இருக்கும் பாடல் :
'ஏதன் மர்மச வசாதி விகாரம்
மனசவிசிந்தய வாரம் வாரம்'
சரியாச் சொன்னார் சங்கரர்.
உப்புமா ருசியாயிருந்தது. ஆனால் அறப்பளிக்கு ருசியாய் இல்லை.
ராத்திரி பத்தரைக்கு ஒரு பஸ் இருந்தது - சிதம்பரம் போக.
அறப்பளி அந்த பஸ்ஸில் அப்போதே கிளம்பிவிட்டார். கடலூரில் ராத்திரி அவரால் தங்க முடியாது - இல்லை - தாங்க முடியாது.
3. அப்பாவை திட்டுகிற வியாதி
அடிக்கடி கோபம் வந்துடுதுங்க டாக்டர்.
சின்ன வயசில்லையா? அப்படித்தான் வரும். ஸிட்டெளன்.
பெத்த அப்பாவையே மரியாதை குறைவாகப் பல சமயம் பேசிடறேன்.
அப்புறம் வருத்தப்படுவீங்களாக்கும்.
ஆமாம். ஆனால் அப்பா மனசு கஷ்டப்பட்டுப் போவுது. நான் திரும்பவும் நல்லதனமாப் பேசினாக் கூடச் சமாதானம் ஆகமாட்டேன்கிறார். அதுவும் எனக்குக் கஷ்டமாக இருக்குது.
திட்டணும்னு ஏன் தோணுது?
ஒண்ணையே ஒன்பது தரம் சொல்லுவாரு. எதையும் நான் சரியாச் செய்ய மாட்டேனோன்னு பயப்படுவாரு. ஒவ்வொண்ணுலேயும் தன் மூக்கை நீட்டித் திருத்தம் பண்ணுவாறு. வீட்டுக்குத் தலைவன் அவருதான்னு சர்வாதிகாரத்தனமாயப் பேசுவார். என் சம்சாரத்தையும் ரொம்ப மிரட்டுவாரு.
மருமகளை?
"ஆமாம். அவள் வெளியார் வீட்டுப் பொண்ணுன்னு பார்க்காமல் அதிகாரமாப் பேசுவார். 'ஏன் எழுந்திருக்க லேட்டு?'ன்னு சத்தம் போடுவாரு. அதுக்கு உடம்பு சீக்குன்னு நான் சொன்னால் 'நீ ஒண்ணும் பரிஞ்சுகிட்டு வரவேண்டாம். உன் பொண்டாட்டியை நான் திட்டலை. நல்லதுக்குச் சொன்னே'ன்னு கத்துவாரு. 'நான் உன் அப்பன்..' என்பார்.
அவரு உங்க அப்பாதானே?
அப்பான்னா என்ன, தலையிலே கொம்பு முளைச்சிருக்குதா?'ன்னு ரெண்டு நாளைக்கு முன்னே அவர்கிட்டே பதிலுக்குக் கத்திட்டேன்.
இப்ப வருத்தப்படறீங்க.
ஆமாம். இது மாதிரி அடிக்கடி அப்பாகூட சண்டை வருது.
தனிக்குடித்தனம் போறதுதானே?
அப்பாவுக்கு வயசாச்சு. அவருக்கு ஒரே பையன் நான். தனியா விட்டுட்டுப் போக மனசாகலை. அது பாவம்.
இது புரியது. ஆனால் கோபப்படாமல் இருக்க முடியலே. அப்படித்தானே?
அதுக்குத்தான் டாக்டர் உங்ககிட்டே சிகிச்சைக்கு வந்திருக்கேன்.
உங்க குடும்பத்துலே பி.பி. உண்டா?
எல்லாருக்கும் உண்டு. அப்பாவுக்கும் உண்டு. எனக்கும்.
இது மனக் கோளாறு இல்லே. உடல் கோளாறு. தினமும் யோகா பண்ணுங்க. காலையிலே ஆபீஸ் புறப்படறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலே, ஒரு துளசி இலையைப் பறித்து ஒரு டம்ளர் தண்ணியிலே அதை ஊற வையுங்க. இரண்டு நிமிஷம் ஊறினாப் போதும். அந்தத் தண்ணியை வாயிலே ஊத்திக்குங்க, ஆனால் குடிச்சிடாம வாயிலேயே ஒரு மணி நேரம் வெச்சுக்குங்க. இது மாதிரி பதினைஞ்சு நாள் பண்ணுங்க சரியாயிடும்.
என் அப்பாவுக்கும் இதே வைத்தியம் சொல்லலாமா டாக்டர்? அவரையும் வாயிலே தண்ணி வெச்சுக்கச் சொல்லவா?
ஏண்டா, கிண்டலாடா பண்றே? போனாப் போகுதுன்னு கன்ஸல்ட்டேஷனுக்கு ஒப்புக் கொண்டேன். கிண்டல் அடிக்கிறயா? கெட்அவுட்.
டிங்ங். அடுத்த பேஷண்ட்டை மணி அடித்துக் கூப்பிட்டார் மனோதத்துவ டாக்டர் ஆனந்தராஜ்.
உங்களை மதிச்சு கன்சல்டேஷனுக்கு வந்தேன் பாருங்க. என் புத்தியை ஜோட்டாலே அடிச்சுக்கணும். ஆனால் இந்த பாழாய் போன ஊரிலே மனோதத்துவ டாக்டர்னு நீங்க ஒருத்தர்தானே இருக்கீங்க. அப்பனா நீங்க? சே!
4. இதுல ஒண்ணு அதுல ஒண்ணு!
அடியே பாவி, தலையிலே இடியைப் போட்டுட்டியேடி!
என்ன இடியைப் போட்டேன். நீங்க கருகிச் சாகாமல் என்கிட்டே பேசிகிட்டுத்தானே இருக்கீங்க?
நீ சொன்ன சமாசாரம் கேட்ட பின்னே குளுகுளுன்னு இருக்க முடியுமா? சாயந்தரமே லேடி டாக்டர்கிட்டே போய்க் கலைச்சிகிட்டு வந்துடு.
நான் தனியாப் போனால், நீங்க நம்ப மாட்டீங்க. நீங்களும் கூட வாங்க.
வந்து தொலைக்கறேன்.
..........லேடி டாக்டரின் நர்ஸிங் ஹோம்.
நீங்க ஏன் அபார்ஷன் பண்ணிக்க நினைக்கறீங்க. உங்களுக்கு ஏற்கனவே நிறையக் குழந்தைங்க இருக்காங்களா?
இல்லை டாக்டர். ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கு.
"பத்மநாபகாரு! அப்ப ஏன் பதறுறீங்க?