Sila Nerangalil Sila Manithargal
By Jayakanthan
3.5/5
()
About this ebook
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இப்போது இருக்கிறது.
சொல்கிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லிவிட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டுகொண்டுவிட்டேன்.
கதிரில் தொடர்கதையாக இது வந்தபொழுதும், வந்து முடிந்த பிறகும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிவந்து முடிந்த பிறகு வாசகர் கடிதங்களை அடுக்கித் தொடர் கதைக்குப் 'புண்ணியாக வாசனம்' நடைபெறாத முதல் தொடர்கதை இதுதானென்று நான் நினைக்கிறேன். வந்த கடிதங்களையெல்லாம் கதிர் அலுவலகத்திலிருந்து நான் வாரிக்கொண்டு வந்து விட்டேன். இதற்கு வந்த வாசகர் கடிதங்களைப் பிரசுரிக்கக் கூடாது என்கிற நோக்கமெதுவும் எனக்குக் கிடையாது.
இந்த நாவல் இன்னொரு மாதிரியான ஆட்டம். எப்படிக் காய்களின் தன்மை மாறுவதில்லையோ அதுபோல் இங்கே பாத்திரங்களின் தன்மை மாறவில்லை. இந்த ரகசியம் தெரியாமல் பலபேர் சதுரங்கக் காய்களை வைத்துக்கொண்டு சொக்கட்டான் விளையாடினார்கள். எனவே தான் நான் இரண்டாவது ஆட்டம் ஆடினேன்.
கங்காவினுடைய பாத்திர இயல்புகளைக் கூர்ந்து படித்த வாசகர்கள் அவளுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்படப்போவதை முன்கூட்டியே உணர்ந்திருப்பார்கள். பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்கவருணனை நடத்திவிடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும். இதிலே என் விருப்பம், உங்கள் விருப்பம் ஆகிய விவகாரங்கள் புகுந்து அந்த 'இசைவை'க் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் படைப்பாளிக்கு இருக்கிற பெரிய கடமை.
அதனை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.
கதை படிக்கிறவர்களுக்குத்தான் அது ஆரம்பித்துத் தொடர்ந்து முடிகிறது. எழுதுகிறவனைப் பொறுத்தவரை 'முடிந்து' போன ஒன்றைப் பற்றித்தான் அவன் எழுதுகிறான் என்று புரிந்து கொண்டால், 'ஐயோ! என்ன இப்படி முடித்துவிட்டீர்களே!' என்று அவனிடம் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரலாம்.
ஒரு நாவலின் முடிவைக் குறித்துத் தாங்கள் மிகவும் வருந்தி, துயருற்றுக் கண்ணீர் விட்டதாக எழுதுகின்ற வாசகர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன்: 'உங்களைவிட அதிகமாக வருந்தி, துயருற்று, கண்ணீர் உகுத்துத்தான் அந்த ஆசிரியன் அந்த முடிவை எழுதி இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.' இராமன் சரயூ நதியிலே மூழ்கி மாள வேண்டுமென்று யார்தான் ஆசைப்படுவார்கள்?
சீதையைப் பூமி பிளந்து விழுங்கியதில் யாருக்கு சம்மதம்?
டெஸ்டிமோனாவைச் சந்தேகித்து ஓதெல்லோ அவள் கழுத்தை நெறித்துக் கொன்றது யாருக்கு உடன்பாடு?
அம்பிகாபதிக்குக் கொலைத் தண்டனையைச் சிபாரிசு செய்ததில் யாருக்கு மகிழ்ச்சி?
பாலை மணலில் அந்தக் காயலில் பைத்தியமாகத் திரிவதில் யாருக்குத் திருப்தி?
இந்த முடிவுகளை அறிந்தே அந்தக் கதைகளை அவர்கள் படைத்தார்கள். 'வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வின் மோகத்தை மறந்து திரிகிறீர்களே, இதையும் பாருங்கள்' என்று காட்டுவதற்காகவே அவர்கள் அவற்றைப் படைத்தார்கள்.
நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது. அதற்காகத் தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்துகொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்த நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.
ஆனால் நம்மவர்கள் ரொம்ப நல்லவர்கள். இராம கதையைப் பட்டாபிஷேகத்தோடு நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இந்தக் கதையின் முடிவு பிடிக்காதவர்கள் அந்த மாதிரித் தங்களுக்கு வசதியான ஓர் இடத்தில் தான் நின்று நிறுத்திகொள்வதுதான் நல்லது!
இந்த நாவலைப் பொறுத்தவரைக்கும் இதைப் பற்றிச் சொல்லப்பட வேண்டிய விஷயங்களெல்லாம் இதன் ஊடாகவே உணர்ந்துகொள்ளப்பட வேண்டியவை என்பதனால் இதன் நயங்களை எடுத்து நான் பொழிப்புரையாற்றப் போவதில்லை.
ஒரு முன்கூட்டியே திட்டத்துடன் ஒரு நியதியின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. பொதுவாக வழக்கத்திலிருக்கின்ற பத்திரிகை நிர்ப்பந்தங்களையெல்லாம் என் பொருட்டுத் தளர்த்தித் தினமணி கதிரில் இதனை எழுத வைத்த எனது நண்பர் 'சாவி' அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பலபேரால் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி, 'காலங்கள் மாறும்' என்று இருந்த தலைப்பு ஏன் இவ்விதம் மாற்றப்பட்டது, என்பது. அதைவிட இந்தத் தலைப்பு பொருத்தமாக இருப்பதாக நான் நினைத்ததைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.
சென்னை - 04.06.70
- த. ஜெயகாந்தன்
Read more from Jayakanthan
Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Sirukathaigal Thoguppu - 2 Rating: 4 out of 5 stars4/5Yaarukkaga Azhuthan? Rating: 4 out of 5 stars4/5Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Oru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsInnum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Ayudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Karu Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsIllathavargal Rating: 5 out of 5 stars5/5Kathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Kai Vilangu Rating: 4 out of 5 stars4/5Sundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsCinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Pagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsAndha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Jayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sila Nerangalil Sila Manithargal
Related ebooks
Oru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Oru Puliyamarathin Kathai Rating: 5 out of 5 stars5/5Aindhu Vazhi Moondru Vaasal Rating: 3 out of 5 stars3/5Swarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Gurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Oru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsDhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Pon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Manaamiyangal Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Kannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Karpu... Karpariya Aaval! Rating: 5 out of 5 stars5/5Kuruthipunal Rating: 4 out of 5 stars4/5Parthiban Kanavu Anaithu Pagangal Rating: 5 out of 5 stars5/5Mathorubagan Rating: 5 out of 5 stars5/5JJ Sila Kuripugal Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 2 Rating: 5 out of 5 stars5/5Vaadivaasal Rating: 4 out of 5 stars4/5Gopalla Gramam Rating: 1 out of 5 stars1/5Sivakamiyin Sabatham Anaithu Pagangal Rating: 5 out of 5 stars5/5Pudhumaipithan Short Stories - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Illathavargal Rating: 5 out of 5 stars5/5ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5Enna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sila Nerangalil Sila Manithargal
7 ratings0 reviews
Book preview
Sila Nerangalil Sila Manithargal - Jayakanthan
http://www.pustaka.co.in
சில நேரங்களில் சில மனிதர்கள்
Sila Nerangalil Sila Manithargal
Author:
ஜெயகாந்தன்
Jayakanthan
For more books
http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
இந்தக் கதை ஒரு வகையில் சோதனைக் கதைதான்! புதிது புதிதாக உருவங்களையும் பாத்திர அமைப்புகளையும் மாற்றி மாற்றிப் புதிய கருத்துகளை, நோக்கங்களைப் பிரவாகம் மாதிரி பெருக்கெடுக்கச் செய்யும் ஆர்வத்தில்தான் நான் இக்கதையை எழுதுகிறேன் இதை நிதானமாகவும் அவசரமில்லாமலும் நான் எழுதுகிறேன்.
இந்தக் கதையைப் பொறுத்தவரை - என் எல்லாக் கதைகளையுமே - எல்லாருக்கும் இணக்கமாகவும் இருக்கும்படி எழுதுவதுதான் எனது நோக்கம், சில சமயங்களில் அந்த நோக்கம், நிறைவேறாதபோது நான் உங்களை அறிகிறேன்.
இது 'காம்ப்ரமைஸ்' அல்ல; இது ஓர் உத்தியே ஆகும்.
எழுதுபவனுக்கு எவ்வளவு நிதானமும் ஆழ்ந்த அமைதியும் வேண்டுமோ அதே அளவு நிதான ரசனையும் ஆழ்ந்த ஈடுபாடும் உள்ளதுதான் சிறந்த ரசனையாகும்.
ஜெயகாந்தன்
*****
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன் (பி. 1934 - 2015)
த. ஜெயகாந்தன் தென்னாற்காடு மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 1934இல் பிறந்தார். தொடக்கப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவர், சுயமாகக் கற்று 1950 முதல் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை வசனங்கள், நேர்காணல்கள் என எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. கவிதைகளும் எழுதியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகளின் முழுத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள், நாவல்கள் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நாளிதழ், இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். சில திரைப் படங்களை இயக்கியுள்ளார்.
ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி விருது, ராஜராஜன் விருது பெற்றுள்ளார்.
இவர் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது (1964) பெற்றது.
ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் காலமானார்.
*****
ஒரு பெண்ணின் உளவியல்
பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளின் பக்கங்களை எடுத்து, அவற்றை பைண்டு செய்து வைக்கும் பழக்கம் என் அண்ணிக்கு இருந்தது. தினமணி கதிரில் வெளிவந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை அவ்வாறு பைண்டு செய்த புத்தகத்திலிருந்துதான் முதன்முறையாகப் படித்தேன். தினமணி கதிர் அளவில் பெரியது. அதில் கோபுலுவின் படங்களோடு அந்த நாவலைப் படித்தது நினைவில் நிற்கிறது. அந்நாவலின் பெயர் 'காலங்கள் மாறும்' என்று விளம்பரப்படுத்தப்பட்டு, பிரசுரமாகும்போது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று தலைப்பு மாற்றப்பட்டது.
கிளாஸிக் வரிசையில் இந்த நாவல் வருவதாகத் தெரிவிக்கப்பட்டபோது கோபுலுவின் படங்களோடு இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் படங்களோடு வருவதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்தேன். ஜெயகாந்தன் எழுதிய நாவல்களிலேயே வெகுஜனரீதியாகப் பெரிதும் படிக்கப்பட்டு, பிரபலமான நாவல் இது. ஜனரஞ்சக வாசிப்பாளர்களுக்குத் தேவை சுவாரஸ்யம். இந்த நாவலில் கதைக்களன் சார்ந்து சுவாரஸ்யம் உள்ளது. ஆனால் நாவல் சுவாரஸ்யத்தை நம்பியில்லை. ஜெயகாந்தனின் எழுத்துத் திறமை வெறும் சுவாரஸ்யத்தை இலக்காகக் கொண்டதில்லை. பின்புலமாக ஒரு கருத்து, கதாபாத்திரங்களாக, சம்பவங்களாக விஸ்தரிக்கப்பட்டிருக்கும் நாவல் இது. வாசிப்பவர்களுக்கு அவரவர்களின் தகுதி சார்ந்து, இந்நாவல் பல்வேறு காரணங்களுக்காகப் பிடித்திருக்கலாம். பிரபலமானதினாலேயே ஒரு நாவல் மழுங்கிவிட்டது என்று நினைக்கலாகாது. இது நமது சூழலின் பிரச்சினை.
அந்தக் காலத்தில் படித்ததற்குப் பின்னர், நான் இந்த நாவலைப் படிக்கவில்லை. தற்போது முன்னுரை எழுதும்பொருட்டு படித்தேன்.
ஒரு பெண்ணின் துயரக் கதை இது. 'அக்கினிப் பிரவேசம்' என்ற சிறுகதையின் நீட்சியே 'சில நேரங்களில் சில மனிதர்கள்.' இதனுடைய நீட்சி 'கங்கை எங்கே போகிறாள்' மற்றும் 'சுந்தரகாண்டம்.' பிந்தைய இரண்டு நாவல்களையும் நான் படிக்கவில்லை. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் அதனளவில் முழுமையானது.
'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையில் தன்னை இழந்து வீட்டுக்கு வரும் ஒரு பெண் (குழந்தை மாதிரி) தன் தாயிடம் அதைக் கூற, அவள் அப்பெண்ணைக் கண்டித்து, வெளியே யாரிடமும் சொல்லாதே என்று கூறித் தண்ணீரை (நெருப்பு) ஊற்றி அவளின் கறையைப் போக்குகிறாள். இது பொறுக்குமா நமது சநாதனவாதிகளுக்கு, கலாச்சாரக் காவலர்களுக்கு. பொங்கி எழுகிறார்கள். 'எனது மகளாக அவளை நினைத்து எழுதினேன். நீங்கள் உங்கள் மனைவியாக அவளை நினைக்கிறீர்களே' என்று ஜெயகாந்தன் பதில் கூறியிருக்கிறார்.
இந்த சர்ச்சை விதை மண்ணில் விழுந்து விருட்சமாகிவிட்டது. அப்பெண்ணின் தாய் 'அக்கினிப் பிரவேசம்' கதையில் வரும் தாய்போல் அல்லாமல் ஊரைக் கூட்டிவிடுகிறாள். ஊருக்குத் தெரிந்துவிடுகிறது. அப்பெண் (கங்கா) தன் அண்ணனால் பிரஷ்டம் செய்யப்படுகிறாள். மாமா படிக்கவைக்க, பின்னர் அவள் நல்ல வேலையிலும் அமர்ந்துவிடுகிறாள். மாமாவுக்கு கங்கா மேல் சபலம். ஆனால் ஓர் அளவுக்கு மேல் உடல் ரீதியாக கங்காவை அவர் நெருங்குவதில்லை. மாமா ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய வாசகங்களை மனத்தில் வைத்து அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அவன் - பிரபு - கனவானாக, மக்காக, வாழ்க்கையின் முன் தத்தளிப்பவனாக, குடிப்பவனாக, இரவில் பெண்களுடன் பொழுதைக் கழிப்பவனாக, நல்லவனாக, ஏமாளியாக இருக்கிறான். இத்தகைய ஒரு கதாபாத்திரத்தைச் சித்திரிப்பது கடினம். பிரபு மட்டுமல்லாமல் கங்கா, அவள் தாய் கனகம், மாமா வெங்கட்ராமய்யர், கங்காவின் அண்ணன் கணேசன், பிரபுவின் மனைவி பத்மா, பிரபுவின் மகள் மஞ்சு ஆகியோரும் தத்தம் குணங்களோடு சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறரின் எண்ண ஓட்டங்கள் கதையில் வரவில்லை. கங்காவின் எண்ண ஓட்டங்களின்படியே அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பிரபுவின் மனைவி பத்மாவின் சித்திரிப்பு கச்சிதமாக இருக்கிறது. அவள் பெரும்பாலான நேரங்களில் டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறாள். உரையாடலின் போதுகூடக் குறைந்த ஸ்தாயியில் வைத்துக் கேட்கிறாள். பொறுப்பற்றுத் திரியும் கணவனுக்கு எதிராகக் கண்டிப்பானவளாக, கணவனின் மீது மதிப்பற்றவளாக இருக்கிறாள்.
கங்காவின் அண்ணன் கணேசன், அவனுக்கேயுரிய குணத்தோடு பிரபுவைச் சந்தித்தபின் பிரபுவின் மனம் மாறுகிறது. கங்காவின் எதிர்கால் மண வாழ்க்கைக்குத் (?) தான் ஒரு பிரச்சினையாக இருப்பதை உணர்கிறான். கங்காவைச் சந்திக்க மறுத்து 'குட் பை' சொல்லிவிடுகிறான். பிரபுவினுடைய நட்பு, அவனுடனான உரையாடல் இல்லாத வாழ்க்கையை கங்காவால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவள் மனக்குழப்பத்தில், கொந்தளிப்பில், உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்
என்று பிதற்றுகிறாள். அவனோ 'ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்' என்று ஃபோனை வைத்துவிடுகிறான். உறவு முறிந்துவிடுகிறது. 'பின்கதை' என்று குறிப்பிடப்பட்ட இறுதி அத்தியாயத்தில் அவள் குடித்து, சிகரெட் புகைத்து, வலுச்சண்டைக்குச் செல்பவளாக மாறி தன்னைத் தானே அழித்துக் கொள்கிறாள்.
இந்தியச் சமூகத்தில் ஒரு பெண்ணின் 'துயரக் கதை' சமூகத்தின் கவனத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு கவனம் கொள்கிறவர்கள் எல்லாம் பெண்கள் மீதான பரிவு உள்ளவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாது. பெண் கொடுமை நடக்கும் சமூகத்தில் பெண் தெய்வ வழிபாடு பிரமாதமாக நடப்பதுபோல், பெண்கள் மீதான பிற்போக்கு மனோநிலை உள்ளவர்களுக்கும் பெண்களின் துயரக் கதை கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். சீதை, கண்ணகி, பாஞ்சாலி என்று சமூக மனத்தில் இடம்பெற்றிருக்கும் துயரக் கதைகளின் தொடர்ச்சியான சமூக மனோநிலை இது.
'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையில் வரும் அம்மன் சிலை மாதிரி இருக்கும் சிறுமியைக் காரில் வருபவன் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவன், அவளைப் பலவந்தப்படுத்தவில்லை. அவள் இணங்கவில்லை; ஆனால் இணங்குகிறாள். விரும்பவில்லை; ஆனால் போராடவில்லை. வசப்பட்டுவிட்டாள் என்று கூறலாமா? அந்தத் தருணத்தை, அவளுடைய மனநிலையை, புதிராகவே கதாசிரியர் வைத்திருக்கிறார். அவள் போராட, அவன் பலவந்தப்படுத்திக் கற்பழிப்பதாகக் கதையை அமைத்திருக்கலாம். ஆனால் கதை சரிந்திருக்கும். கதையின் வலுவான அம்சமே இத்தகைய சித்திரிப்பில்தான் இருக்கிறது.
உன் பொண்ணுக்கும் சமத்து இருந்தால் அவனையே தேடிப்பிடிச்சு இழுத்துண்டு வந்து, இவன்தான் என் புருஷன், இவனோட தான் வாழப் போறேன்னு சொன்னால் நாம் வாண்டாம்னா சொல்லப்போறோம்? முடிஞ்சா அதைச் செய்யச் சொல்லேன் பார்ப்போம்
என்று மாமா, தன் தாய் கனகத்திடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட பிறகு, கங்காவிற்கு அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. கங்காவின் மனத்தில் ‘இருந்ததைத்’ தூண்டிய ஒரு சந்தர்ப்பம் இது என்று நினைக்கிறேன்.
பிரபுவும் கங்காவும் சந்திக்கும் சம்பவமும் சமத்காரமாகக் கையாளப்பட்டுள்ளது. அவன், அவளின் தோளைத் தொடும்போது அவள் சீறுகிறாள். சீறாமல் இருந்திருந்தால் உறவு வேறுமாதிரி அமைந்திருக்குமோ என்று பின்னால் யோசிக்கிறாள். நாவலின் வழி கங்காவின் உளவியலுக்குள் சென்று பார்ப்போம்.
1. கங்காவிற்கு ஆண் பிள்ளைகளை நினைத்தால் ஒரு அருவருப்பான பயம். கரப்பான் பூச்சியைப் பார்த்தால் வருகிறதே அந்த மாதிரி, கரப்பான் பூச்சி பயம்.
2. கங்காவிற்குத் தன்னிடம் ஒரு சீப்னஸ் இருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. கையைப் பிடித்து இழுத்தால் வந்துவிடக்கூடியவள் என்று நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
3. 'மனைவியா இருக்கறதுக்கு இல்லை. ஆசைநாயகியாகக் கூட இல்லை. ஆசைநாயகிங்கிற பேரை எனக்குத் தரணும்' என்று கூறுகிறாள்.
4. பிரபுவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஓர் ஆண்பிள்ளையோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் கங்காவிற்கு இல்லை. அவரைவிடப் பல மடங்கு பலம் உடையவள் என்று நினைத்துக்கொள்கிறாள்.
5. 'இப்போதே இது (பிரபு) இப்படி இருக்கிறது என்றால் பன்னிரெண்டு வருடத்திற்கு முன்னால் எப்பேர்ப்பட்ட அசடா இருந்திருக்கும். அந்த அசடுக்குப் பயந்து பலி கொடுத்தேனே. அப்போது, தான் எப்படிப்பட்ட அசடு' என்று யோசிக்கிறாள்.
6. கங்காவிற்கு யாராவது தன்னை 'ரேப்' பண்ணி விடுவார்களோ என்ற பயம் ஏற்படுகிறது. யாராவது பலாத்காரமாகக் கெடுக்க வந்தால் பணிந்துவிடுவோம் என்று பயப்படுகிறாள். 'அந்த இன்னொருத்தர் எவனாகவோ இருக்க வேண்டாம். நீங்களாகவே இருந்து விடட்டும் என்றுதான் உங்களைத் தேடி வந்தேன்' என்று பிரபுவிடம் கூறுகிறாள்.
7. நான் மட்டும் வேறு மாதிரி அயோக்கியனா இருந்தால் உன் பலவீனத்திலே அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு இப்பவும் மிஸ்பிஹேவ் பண்ண மாட்டேனா
என்கிறான் பிரபு. 'அட அசடே, நான் உன்ட்டே சொல்றதே இந்த வீக்னஸ்லே நீ அட்வான்டேஜ் எடுத்துக்கோங்கிறதுக்குத்தானே இது புரியலையா' என்று கங்கா நினைத்துக்கொள்கிறாள்.
8. இறுதியில் 'ஐ வில் மேரி யூ'ன்னு ஃபோனில் கத்துகிறாள். 'ஐ வில் ஷேர் மை பெட் வித் யூ'ன்னு காதோடு காதாக ரகசியம் பேசற மாதிரி சொல்கிறாள். அவள் கண்களில் நீர் கொட்டிக் கொண்டிருக்கிறது.
கங்காவின் இத்தகைய உளவியல் போக்கிற்கு அடக்கப்பட்ட பாலியல் உணர்வுகள் தான் காரணம் என்று ஃபிராய்டிய நோக்கில் சிந்திக்கலாம். அத்தகைய உணர்வுகளும் காரணமாக இருக்கலாம். கங்காவிற்குப் பிடித்துக்கொள்ள ஒரே கொழுகொம்பு பிரபுதான். பிரபு மீது அவளுக்கு ஆசை இருக்கிறதா? இருக்கிறது என்று சொல்லலாம். இருக்கிறது என்பது பாவனை என்றும் சொல்லலாம். உடல் ரீதியாக அவன் விலகியிருப்பதால் கங்கா அதை விரும்புகிறாளா? அவன் உடல் ரீதியாக நெருங்கினால் அவள் விலகிப்போவாளா? உடல் ரீதியான பிணைப்பினால், தன்னைவிட்டு விலகாமல் அவனை வைத்திருக்கலாம் என்று அவள் மனம் நினைக்கிறதா? இப்படிக் குழப்பமாகத்தான் அல்லது புதிராகத்தான் கங்காவின் உளவியலை ஜெயகாந்தன் உருவாக்கியிருக்கிறார்.
வெகுஜனப் பத்திரிகைகளில் வித்தியாசமான எழுத்துக்களை உருவாக்கி நிலைபெற்றிருக்கிறார் ஜெயகாந்தன். பெரும்பாலானோர் ஜெயகாந்தன் எழுத்துக்கள் மூலமாக நவீனத் தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்திருந்திருக்கிறார்கள். அவருக்கு எனது வணக்கங்கள்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலில் ஜெயகாந்தன் கங்காவின் உளவியலைக் கதையாக ஆக்கியிருக்கிறார். கற்பு, அது பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றைக் கதைப்புலமாகக் கொண்டு தமிழர்களின் கெட்டிதட்டிப் போன சமூக மனத்தோடு அவர் உரையாடியிருக்கிறார்.
மதுரை
27.10.14
சுரேஷ்குமார இந்திரஜித்
*****
முன்னுரை
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு இப்போது இருக்கிறது.
சொல்கிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லிவிட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டுகொண்டுவிட்டேன்.
கதிரில் தொடர்கதையாக இது வந்தபொழுதும், வந்து முடிந்த பிறகும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிவந்து முடிந்த பிறகு வாசகர் கடிதங்களை அடுக்கித் தொடர் கதைக்குப் 'புண்ணியாக வாசனம்' நடைபெறாத முதல் தொடர்கதை இதுதானென்று நான் நினைக்கிறேன். வந்த கடிதங்களையெல்லாம் கதிர் அலுவலகத்திலிருந்து நான் வாரிக்கொண்டு வந்து விட்டேன். இதற்கு வந்த வாசகர் கடிதங்களைப் பிரசுரிக்கக் கூடாது என்கிற நோக்கமெதுவும் எனக்குக் கிடையாது. ஆனால், பிரசுரிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் எழுதிய சில 'ஒரு வரி விமர்சன’க் கடிதங்களை விலக்கி உண்மையான இலக்கிய அல்லது கதை படிக்கிற ஆர்வத்தோடு எழுதப்பட்ட கடிதங்களை மட்டும் பொருட்படுத்தி ஒரு கட்டுரையை எழுதவேண்டுமென்ற நோக்கத்தினால் தான் நான் அவற்றை எடுத்துக்கொண்டு வந்தேன். அதற்கிடையில் இது புத்தக வடிவில் வெளிவரவே, இந்த முன்னுரையின் மூலம் அந்த வாசக நண்பர்களின் சந்தேகம் போக்கும் ஒன்றிலிருந்து ஒன்று முழுக்க முழுக்க மாறியே இருக்கிறது.
அதுமாதிரி 'அக்கினி பிரவேசம்' என்று விளையாடியது ஓர் ஆட்டம்.
இந்த நாவல் இன்னொரு மாதிரியான ஆட்டம். எப்படிக் காய்களின் தன்மை மாறுவதில்லையோ அதுபோல் இங்கே பாத்திரங்களின் தன்மை மாறவில்லை.
இந்த ரகசியம் தெரியாமல் பலபேர் சதுரங்கக் காய்களை வைத்துக்கொண்டு சொக்கட்டான் விளையாடினார்கள். எனவே தான் நான் இரண்டாவது ஆட்டம் ஆடினேன்.
கங்காவினுடைய பாத்திர இயல்புகளைக் கூர்ந்து படித்த வாசகர்கள் அவளுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்படப்போவதை முன்கூட்டியே உணர்ந்திருப்பார்கள்.
பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்கவருணனை நடத்திவிடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்.
இதிலே என் விருப்பம், உங்கள் விருப்பம் ஆகிய விவகாரங்கள் புகுந்து அந்த 'இசைவை'க் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் படைப்பாளிக்கு இருக்கிற பெரிய கடமை.
அதனை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.
கதை படிக்கிறவர்களுக்குத்தான் அது ஆரம்பித்துத் தொடர்ந்து முடிகிறது. எழுதுகிறவனைப் பொறுத்தவரை 'முடிந்து' போன ஒன்றைப் பற்றித்தான் அவன் எழுதுகிறான் என்று புரிந்து கொண்டால், 'ஐயோ! என்ன இப்படி முடித்துவிட்டீர்களே!' என்று அவனிடம் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரலாம்.
ஆனால் நம் வாசகர்களில் பெரும்பாலானோர் பொழுது போக்குக்காகக் கதை படிப்பவர்கள் என்பதால் அவர்கள் பாத்திரத்தோடு ஒன்றாமல் தங்கள் மனம் போன கற்பனைகளில் இலயித்து விடுகிறார்கள். அதன் விளைவாக, இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பான விருப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு ஏற்ப அந்த ஆசிரியன் எழுதுகிறானா என்று கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள்.
தாங்கள் படிக்கின்ற நாவலை ஒரு பிரச்சினையாக வைத்துத் தங்களுடைய சமத்காரங்களை நிரூபிப்பதற்காக இந்த நாவலின்மீது 'மேற்பந்தயம்' கட்டுகிறார்கள். பத்திரிக்கைக்காரர்களுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான வியாபாரம். இந்த வாசகர்களின் சமத்காரங்களுக்கு ஏற்ப கதைகளை வளைத்து வளைத்து எழுதுகிறார்கள் பெரும்பாலான தொடர்கதை ஆசிரியர்கள்.
ஆனால் ஒரு நாவலை அப்படி எழுத முடியாது. எழுதுபவன் என்பவன் எல்லோரையும் மகிழ்விக்கிற கழைக் கூத்தாடி அல்ல. வாசகருடைய விருப்பமோ அல்லது எழுதுகிறவனுடைய விருப்பமோகூட ஒரு நாவலின் போக்கை, கதியை மாற்றிவிட முடியாது.
ஒரு நாவலின் முடிவைக் குறித்துத் தாங்கள் மிகவும் வருந்தி, துயருற்றுக் கண்ணீர் விட்டதாக எழுதுகின்ற வாசகர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன்: 'உங்களைவிட அதிகமாக வருந்தி, துயருற்று, கண்ணீர் உகுத்துத்தான் அந்த ஆசிரியன் அந்த முடிவை எழுதி இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.'
இராமன் சரயூ நதியிலே மூழ்கி மாள வேண்டுமென்று யார்தான் ஆசைப்படுவார்கள்?
சீதையைப் பூமி பிளந்து விழுங்கியதில் யாருக்கு சம்மதம்?
டெஸ்டிமோனாவைச் சந்தேகித்து ஓதெல்லோ அவள் கழுத்தை நெறித்துக் கொன்றது யாருக்கு உடன்பாடு?
அம்பிகாபதிக்குக் கொலைத் தண்டனையைச் சிபாரிசு செய்ததில் யாருக்கு மகிழ்ச்சி?
பாலை மணலில் அந்தக் காயலில் பைத்தியமாகத் திரிவதில் யாருக்குத் திருப்தி?
இந்த முடிவுகளை அறிந்தே அந்தக் கதைகளை அவர்கள் படைத்தார்கள். 'வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வின் மோகத்தை மறந்து திரிகிறீர்களே, இதையும் பாருங்கள்' என்று காட்டுவதற்காகவே அவர்கள் அவற்றைப் படைத்தார்கள்.
நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது. அதற்காகத் தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்துகொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை, அந்த நிகழ்ச்சிகளைச் சந்திக்கும்போது மனம் விசாலமுறும்.
ஆனால் நம்மவர்கள் ரொம்ப நல்லவர்கள். இராம கதையைப் பட்டாபிஷேகத்தோடு நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இந்தக் கதையின் முடிவு பிடிக்காதவர்கள் அந்த மாதிரித் தங்களுக்கு வசதியான ஓர் இடத்தில் தான் நின்று நிறுத்திகொள்வதுதான் நல்லது!
வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.
இந்த நாவலைப் பொறுத்தவரைக்கும் இதைப் பற்றிச் சொல்லப்பட வேண்டிய விஷயங்களெல்லாம் இதன் ஊடாகவே உணர்ந்துகொள்ளப்பட வேண்டியவை என்பதனால் இதன் நயங்களை எடுத்து நான் பொழிப்புரையாற்றப் போவதில்லை.
ஒரு முன்கூட்டியே திட்டத்துடன் ஒரு நியதியின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. பொதுவாக வழக்கத்திலிருக்கின்ற பத்திரிகை நிர்ப்பந்தங்களையெல்லாம் என் பொருட்டுத் தளர்த்தித் தினமணி கதிரில் இதனை எழுத வைத்த எனது நண்பர் 'சாவி' அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பலபேரால் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி, 'காலங்கள் மாறும்' என்று இருந்த தலைப்பு ஏன் இவ்விதம் மாற்றப்பட்டது, என்பது. அதைவிட இந்தத் தலைப்பு பொருத்தமாக இருப்பதாக நான் நினைத்ததைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.
என்னுடைய ‘இனிப்பும் கரிப்பும்' சிறுகதைத் தொகுதியைத் தங்களது முதல் பிரசுரங்களில் ஒன்றாக வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையத்தாரின் நூறாவது பிரசுரமாக இந்த நாவல் வெளியிடப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை
04.06.70
த. ஜெயகாந்தன்
*****
1
வெளியிலே மழை பெய்யறது. பஸ் திரும்பறச்சே எல்லாரும் ஒருத்தர் மேலே ஒருத்தர் சாயறா. எனக்கு முன்னாடி நின்னுண்டிருக்கானே அவன் வேணும்னே அழுத்திண்டு என் மேலே சாயறான். எனக்கு நன்னாத் தெரியறது. வேணும்னேதான் சாயறான். என்ன பண்றது? பொண்ணாப் பொறந்துட்டு 'நாங்களும் ஆம்பளைக்குச் சமானம்'னு படிக்கறதுக்கும், சம்பாதிக்கறதுக்கும் வெளியிலே புறப்பட்டுட்டா இதையெல்லாம் தாங்கிக்கத்தான் வேணும். பஸ்ஸிலே பெண்களுக்குன்னு நாலு ஸீட் போட்டு வச்சிருக்கா. ஏதோ பெண்கள் ஒருத்தர் ரெண்டுபேர் படிக்கறதுக்கும் வேலை பார்க்கறதுக்கும் வெளியிலே புறப்பட்ட காலத்திலே போட்ட கணக்குப்படி ஒரு பஸ்ஸிலே நாலு ஸீட்டே அதிகமோ என்னவோ! இப்போ, பெண்களுக்குன்னே தனியா ஒரு பஸ் விட்டாத் தேவலை. ஏன் விடப்படாதா! விட்டா என்னவாம்? பாவம் சின்னஞ் சிறுசுகள், இந்த ஆம்பளைத் தடியன்களோடே போட்டி போட்டுண்டு இடியும் மிதியும் பட்டுண்டு, காசையும் குடுத்து ஏன் அவஸ்தைப் படணும்? பெண்களுக்குன்னு தனியா ஸீட் போடறதிலே இல்லாத அவமானம் தனி பஸ் விட்டா வந்துடுமோ? வெரிகுட் ஐடியா... ஐ யாம் கோயிங் டு ரைட் எ லெட்டர் டு தி லெட்டர்ஸ் டு தி எடிட்டர்.
வெளியிலே நன்னா மழை பெய்யறது. ஜன்னல் ஓரமா போட்டிருக்கற கான்வாஸ் மேலே மழைத்தண்ணி படபடன்னு அடிக்கறது. பஸ்ஸுக்குள்ளே ஈரமும் மண்ணும் சதசதன்னு அருவருப்பாயிருக்கு. நெருக்கத்திலே புழுக்கமும், நாத்தமும் அடிக்கிறது. ஒரே ஆம்பளை நாத்தம்! மேலே தொங்கற கைப் பிடியை யார் யார் பிடிச்சாளோ? கர்மம்! இந்தப் பிடியை எதுக்குத் தோலினாலே போடறா? இது வேறே தோல் நாத்தம் அடிக்கிறது. எலெக்டிரிக் டிரெயின்லே போட்டிருக்காளே அந்த மாதிரி 'மெட்டல்’லே போட்டா என்னவாம்? இதையும் பத்தி எழுதணும்... இப்ப ஒண்ணும் பஸ் திரும்பல்லே; லெவலாதான் போயிண்டு இருக்கு. ஆனா, எனக்குப் பின்னாடி இருக்கானே அவன் கொஞ்சங் கொஞ்சமா நகர்ந்து வந்து வேணுமின்னே என் மேலே உரசி உரசிச் சாயறான். இவனுக்கென்ன தைரியம்? இது என்ன நியாயம்?
அன்னிக்கு ஒரு நாள் கலா சொன்னாளே, இந்த மாதிரி பஸ்லே ஒருத்தன் 'மிஸ்பிகேவ்' பண்ணினப்போ ஸ்லிப்பரைக் கழட்டிண்டு அவனை அடிக்கப்போய் ஒரே ரகளை ஆயிடுத்துன்னு - அவள் செய்யக்கூடியவள்தான். ஆனா இது கொஞ்சம் கப்ஸா - அடிக்கணும்னு நினைச்சிருப்பாள்... இப்போ நான் நினைக்கலையா? ஆனால் ஒரு பொம்மனாட்டி நினைச்சதை யெல்லாம் செய்துட முடியாதா என்ன? பாவம்! நிஜமாகவே அவன் தெரியாமதான் சாயறானோ என்னவோ! வயசான ஆளோ என்னமோ! திரும்பிப் பாக்கணும்னு நினைக்கிறேன். முடியறதா? இல்லே; அவன் வேணும்னேதான் சாயறான், இவன் ஒண்ணும் வயசானவனா இருக்கமாட்டான். நன்னாத் தெரியறது எனக்கு ஆக்ஸிடெண்டலா சாயறவா ஒண்ணும் கொஞ்சம் கொஞ்சமா ஒட்டி ஒட்டிச் சாயமாட்டா. எனக்கு உடம்பெல்லாம் கூசறது. இன்னிக்கு மழையா இருக்கே, குளிக்கவாண்டாம்னு நெனச்சிருந்தேன். ஆனா இப்ப வீட்டுக்குப் போனதும் நன்னா ஒரு தடவை குளிக்கணும். கூட்டத்திலே சிக்கிண்டா அதிலே ஒரு அட்வான்டேஜ் எடுத்துண்டு இப்படியெல்லாம் செய்யறதுக்கு வெக்கப்பட வேண்டாமோ? இது என்ன புருஷத்தனம்? இவாத்திலே இருக்கிறவா போனாலும் இப்படித்தானே எவனாவது பண்ணுவான்கிற நினைப்பு வேண்டாமோ? ஆமாம், இவன்களுக்கெல்லாம் ஆத்து நினைப்பு வேறே இருக்காக்கும்? இவன்களைவிடத் தெருவிலே நிக்கறவளைப் போய் 'வரியாடி'னு கையைப் பிடிச்சு இழுக்கறானே அவன் எவ்வளவோ ஒசத்தி, நிச்சயமா அது ஒசத்திதான். அவளுக்கும் இஷ்டமிருந்தா அந்தப் பிடிச்ச பிடியிலே ஒட்டிண்டு போகப்போறாள். இல்லேன்னா ‘மாட்டேன்'னு கையை உதறிட்டுப் போயிடப்போறாள். இது என்ன? கும்பலைப் பயன்படுத்திண்டு, மனுஷாளுக்கு இருக்கிற பெருந்தன்மையை, மானம் மரியாதையைப் பத்தின பயத்தைப் பயன்படுத்திண்டு நிர்ப்பந்தமா நெருக்கறது? பிளாகார்ட்!
இதைப்பத்தியும் அந்த லெட்டர்ஸ் டு தி எடிட்டர்லே எழுதணும். பொம்மனாட்டிகளுக்குத் தனி பஸ்விடணும்கிற யோசனைக்கு இந்தப் பாயின்ட் ரொம்ப ரெலவன்ட் தமிழ்ப் பத்திரிகையிலெல்லாம் எழுதப்படாது, இங்கிலீஷ் பேப்பர்லே எழுதினாதான் ரெஸ்பான்ஸ் இருக்கும். நாலு வரின்னாலும் 'நறுக்கு'னு தைக்கறாப்போல 'பியூட்டிபுல் லாங்க்வேஜி’லே இருக்கணும். அதுக்காக இரண்டு நாள் மெனக்கெட்டாலும் சரி.
'பொம்மனாட்டிகளுக்கு ஆம்பளைகள் பஸ்ஸிலே எழுந்து ஸீட் கொடுக்கணும்.' (உடனே இவா இளிச்சுப் புளிச்சுண்டு "தாங்க்ஸ்' சொல்லணும். அதுக்கு அவன் 'டோன்ட் மென்ஷன்'னு சொல்லணும். என்ன ஸ்ட்டுப்பிடிட்டி!) அப்படி எல்லாம் நான் எழுதப் போறதில்லே. எனக்கு எவனாவது ஸீட் கொடுத்தால் நான் உட்கார்றதும் இல்லே. இவன் என்ன, என்னை உபசாரம் பண்றது? நான் என்ன, முடமா நொண்டியா? இல்லே வயசான கிழமா? அப்படி என் வயசுக்கோ தகுதிக்கோ மரியாதை தந்து எவனும் எனக்கு ஸீட் தரதில்லே. அப்படி என்ன எனக்கு வயசாயிடுத்து? இன்னும் முப்பது முடியல்லை. எல்லார் மாதிரியும் நான் ஸ்டைல் பண்ணிக்கறதில்லை. இப்படி இருக்கறச்சயே இதோ வந்து இப்படி சாயறான்! ஸ்டைலும் பண்ணிண்டா குறைச்சலில்லை. எப்படி என்னைப் பாத்து இவாளுக்கு இப்படியெல்லாம் தோண்றதோ? என்னைப் பாத்து அப்படியெல்லாம் தோணப்படாதுன்னு நான் ஜாக்கிரதையா இருக்கறதனாலேயே அப்படியெல்லாம் தோண்றதோ? நான் பாத்த எல்லா ஆம்பளைக்கும் என்கிட்டே இப்படித் தோணறதே! ஆமாம். எல்லா ஆம்பளைகளுக்கும், ஒருத்தன் கூட விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா... ரொம்ப யோக்கியன்தான்! நேக்கு அண்ணனா இருக்கற உறவு நடுவிலே நின்னு தடுக்கறது. இல்லேன்னா அந்த மாதிரி வார்த்தைகளெல்லாம் கேக்க முடியுமா? வார்த்தைகள் கேட்டால் போறாதோ? அதுக்காகத்தான் திரும்பத் திரும்ப 'நீ எனக்குத் தங்கை இல்லை, நீ எனக்குத் தங்கை இல்லை'ன்னு சொன்னான்.
இதே மாதிரி பஸ்ஸிலே வரும்போது அவனையும் பஸ்ஸிலே பார்த்திருக்கேன் - இதோ என் மேலே சாயறானே இவன் எவ்வளவோ யோக்கியன்! - அந்தக் கூடப் பொறந்த அண்ணனோட பார்வை இதைவிட அசிங்கமா இருக்கும். அவன் என்னென்ன நினைச்சுண்டு என்னைப் பார்க்கறானோ? என்னென்ன கதை கட்டிண்டு போய் மன்னிகிட்டே அளக்கறானோ? அவள் அதை ஒண்ணுக்குப் பத்தா முடிச்சுப் போட்டுண்டு அந்த ஆத்துலே இருக்கற குடித்தனக்காராகிட்டேல்லாம் என்னென்ன அக்கப்போர் பண்றாளோ?
இதோ இவன் என் மேலே இடிச்சுண்டு நிக்கறான். அதுக்காக இவனை என்னோட முடிச்சுப் போடறதா? எங்க அண்ணா பார்த்தான்னா செய்வான்! தன்னைத் தவிர அவன் எல்லாரையும் என்னோடே முடிச்சுப் போடுவான். இவன் முகம்கூட எனக்குத் தெரியலை. திரும்பிப் பார்க்கக்கூடத் தைரியம் இல்லாமல் நான் நிக்கறேன். இவன் கறுப்போ சிவப்போ? கிழவனோ குமரனோ? யாராயிருந்தால் எனக்கென்ன? அவாளுக்கு யாராயிருந்தாலும் கூட்டத்திலே சிக்கிண்டாப் போறும். ஏதோ அவாளுக்குச் சொந்தம் மாதிரி! எங்க அண்ணா இதைப் பார்க்கணும். அவன் எப்படி இதைப் பார்ப்பான்னு என்னால் பாக்க முடியறது.
இதோ பின்னாலேருந்து என் மேல சாயறானே, இவனையும் என்னையும் அடிக்கடி பார்த்திருக்கறதா முதல்லே அவனுக்குத் தோணும். அப்புறம் இவனுக்கு எங்க ஆபீசிலேயே என்னோடவே வேலை குடுத்துடுவான்! பஸ்ஸிலே வரச்சே நேக்கும் சேர்த்து இவன்தான் டிக்கட் வாங்கினானாம்! நான் வேணும்னே அவனை அவமானப்படுத்தறதுக்காகவே அவன் கண் எதிரே இவனோட கொஞ்சறேனாம். எனக்குத் திமிராம். 'என்னை எவன் கேக்கறது? நானே படிச்சு நானே உத்தியோகம் தேடிண்டு, அவனைவிடப் பெரிய பொஸிஷன்லே இருக்கேன்'கிற திமிராம். 'என்ன கருமமா இருந்தாலும் இப்படி பப்ளிக்லே பஸ்ஸிலேயேவா'ன்னு பஸ்ஸிலே இருக்கற பாசஞ்சர்கள் எல்லாம் என்னைக் காறித் துப்பறாளாம். இவனுக்குத் தலை குனிவாப் போச்சாம். இந்தக் கண்றாவியெக் காணச் சகிக்காம அடுத்த ஸ்டாப்பிங்கிலே இறங்கிட்டானாம்...!
மத்தவாகிட்டே - அண்ணா என்னைப் பாத்துட்டுப் போய் மன்னிகிட்டே சொன்னப்புறம் - மன்னி சொல்ற 'வர்ஷன்' இதுதான். இதைக்கேட்டு அந்த மத்தவாளிலே ஒருத்தி சொல்லுவாள்: 'நான் கூடப் பார்த்தேண்டி. அவனாத்தான் இருக்கும்!'
இன்னொருத்தி சொல்லுவாள்: 'அவன்தானோ? இவன் இன்னொருத்தனோ?'
மறுபடியும் மன்னி சொல்லுவாள்: 'எங்களுக்கென்ன? எக்கேடும் கெடட்டும்னுதான் தண்ணி தெளிச்சு விட்டாச்சே! இருந்தாலும் கூடப்பிறந்தவருக்கு அப்படி இருக்க முடியாதா? அப்படியே கூனிக் குறுகிப் போறார் அவர். இப்படி ஒரு மனுஷரையும் பெத்து, இவர் மானத்தை வாங்கறதுக்கு அப்படி ஒரு பெண்ணையும் பெறுவளோ?'னு சொல்லி அப்படியே இதைச் சாக்கா வச்சு அண்ணா மேலே மன்னி உருகிப் போவாள்.
அண்ணா சொன்ன விஷயத்தை மத்தவாகிட்டே சொல்லிப் பொதுஜன அபிப்பிராயத்தைச் சேகரிச்சுண்டு மறுபடியும் அண்ணாகிட்டேயே மன்னி வந்து சொல்வாள்:
'நமக்கென்னன்னு சொல்லிண்டாலும் மனசு கேக்கறதா? அவள் காசு நமக்கு வேண்டாம்; பணம் நமக்கு வேண்டாம்; வீடு நமக்கு வேண்டாம்னு நாம்ப ஒதுங்கித்தான் இருக்கோம். அதனாலே அவ ஒண்ணும் கெட்டுப் போயிடலை; நன்னாத்தான் இருக்காள். அதுக்காக நம்பளை யாரும் ஒண்ணும் சொல்லிடமாட்டா. அவள் 'ஓஹோ'ன்னு இருந்தால் அந்தப் பெருமை கூட நமக்கு வராது. கெட்டுப்போயி அங்கே இங்கே நின்னா, 'இன்னார் தங்கை’ன்னுதான் எல்லாரும் பேசறா. அந்த வயசிலே அவள் பண்ணிட்டு வந்த தப்புக்கு அண்ணாங்கிற முறையிலே கண்டிச்சேள். மத்தவன்னா அரிவாளை எடுத்துண்டு வந்து வெட்டியிருப்பான். உங்க அம்மாதான் ஆகட்டும்: 'அடிச்சா என்ன? வசா என்ன? அண்ணாதானே'ன்னு சமாதானம் பண்ணி வச்சாரா? பொண்ணை வெளியிலே போகச் சொன்ன உடனே அவ கையைப் பிடிச்சுண்டு அவரும் புறப்பட்டுட்டார். ஆமாம், அப்படிப் போகலைன்னா சொந்த வீடும் சொகுசான வாழ்க்கையும் கெடைச்சிருக்குமா? இந்த முப்பது ரூபா வாடகை வீட்டிலே மூட்டைப் பூச்சிகள் பிடுங்கிண்டு, இந்தச் சனியன்களோட மாரடிச்சிண்டு இருக்கணும்னு அவருக்கென்ன தலை எழுத்தா? எல்லாம் முன்கூட்டியே போட்ட பிளான்தான். உங்க தங்கை பண்ணிட்டு வந்த காரியமும், அதுக்காக நீங்க அடிச்சு விரட்டினதும், சாக்காப் போச்சு! அப்பவே அடிக்கடி சொல்லுவரே: 'பெரிசா என் பிள்ளையைத்தான் நம்பியிருந்தேன், பெரிய படிப்பு படிச்சுட்டுப் பெரிய உத்யோகம் பண்ணப்போறான்னு. நான் ஆசைப்பட்டா மட்டும் போறுமா? மெட்ரிக்குலேஷன்லேயே மூணு வருஷம் இவன் போட்டுட்டான். இனிமேல் என் பொண்ணுதான். பாருங்கோ - அவள் மாகாணத்திலேயே முதல்லே பாஸ் பண்ணி, கலெக்டராக்கூட ஆவாள்... ஆண்டவன் ஆயுசைக் குடுக்கணும்’னு சொல்லிண்டே இருப்பாரே; அவர் ஆசை நிறைவேறிப் போச்சு; பெரிய படிப்பும் படிச்சு, பெரிய உத்தியோகத்துக்கும் போய்ட்டாள். இனிமே அவள் எவனோட திரிஞ்சா இவருக்கென்ன? ஆனால் நம்ம தலைன்னா உருள்றது - 'இன்னார் தங்கை' 'இன்னார் தங்கை’ன்னு! நீங்கதான் அடிக்கடி போய்ப் பார்க்களே, உங்க அருமை அம்மாவை! அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வையுங்கோ... இந்தப் பஞ்சவடிக்குப் பக்கத்திலே பார்க்க இருக்கோன்னோ அங்கே ராத்திரி ஏழு மணிக்கு மேலே வந்து வந்து நிக்கறாளாமே... படிச்சுட்டா போறுமா? உத்யோகம் பாத்தா போறுமா? ஒவ்வொத்தரும் ஒவ்வொண்ணும் சொல்லும்போது அப்படியே ஊசி போட்டுத் தைக்கறது எனக்கு...' - மன்னி பேச ஆரம்பிச்சா அண்ணா அவ பேசி முடிக்கிறவரைக்கும் ஒரு வார்த்தை குறுக்கே பேசமாட்டான். மந்த்ரோபதேசம் மாதிரி கேட்டுண்டு மெளனமாயிருப்பான்.
'சரி சரி... அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே’ன்னு பல்லைக் கடிச்சிண்டு அண்ணா கடைசியிலே கத்துவான்: 'நான் போய்ச் சொன்னா உடனே கேட்டுடப் போறாளாக்கும்.'
'கேட்டா கேக்கறா, கேக்காட்டாப் போறா. நம்ப காதிலே விழறதைச் சொல்லி வைப்போம். அப்புறம் பெத்தவராச்சு; பொண்ணாச்சு. கூடப் பொறந்த குத்தத்துக்கு உங்க மண்டை உருள்றதேன்னு சொன்னேன். நேக்கென்ன போச்சு...?'
'கிறீச்'னு ஒரு சத்தத்தோட பஸ் எதிலேயோ மோதினா மாதிரி அதிர்ந்துண்டு நிக்கறது. எனக்குப் பின்னாடி இருந்தவன் நன்னா ஆசைதீர வந்து மோதிண்டான். ரொம்பத் திருப்தி அவனுக்கு. இந்தத் தடவை அவனை மட்டும் குத்தம் சொல்ல முடியாது.
லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு எழுதறதெப் பத்தின்னா யோசிச்சிண்டு இருந்தேன். எத்தனையோ சமயத்திலே எத்தனையோ விஷயங்களைப் பத்தி எழுதணும்னு நெனைச்சு இருக்கேன். எல்லாம் நெனைக்கறதோட சரி. அப்பறம் அந்த விஷயம் பழசாப் போயிடும். எனக்கே நெனைச்சு, நெனைச்சுப் பழசாகி, 'ஆமா எழுதிட்டாப் போறுமாக்கும்'னு ஒரு சலிப்பு வந்துடும். அந்த விஷயம் அவ்வளவுதான்.
சில சமயத்திலே லெட்டர்ஸ் டு தி எடிட்டர்லே, ரொம்ப சுவாரஸ்யமான லெட்டர்ஸ் வரும். நான் தினம் பேப்பர்லே படிக்கிற முக்கியமான அயிட்டம் அதுதான். அப்பறம்... அப்பறம் 'மேட்ரிமோனியல் கால’த்தைத்தான் ரொம்ப இன்டரஸ்டிங்கா படிக்கறேன். எதுக்கும் ரெஸ்பாண்ட் பண்ணனும்னோ அப்ரோச் பண்ணனும்னோ இல்லே. அதிலே சும்மா ஒரு இன்ட்டரஸ்ட். தட் இஸ் ரியலி இன்ட்டரஸ்டிங்! எனக்குக் கல்யாணமே ஆகாது; ஆகப்படாதுன்னு நான் தீர்மானம் பண்ணி ரொம்ப நாளாச்சு. அதனாலேயே கல்யாண விஷயங்கள்லே எனக்கு ஒரு இன்ட்டரஸ்ட் ஏற்படறது போல இருக்கு. அதிலே ஒண்ணும் தப்பில்லை.
எக்மோர் ஸ்டாப்பிங்கிலே பஸ் வந்து நிக்கறதுபோல இருக்கு. எல்லா ஜன்னலையும் மூடி இருக்கறதனாலே எங்கே வந்திருக்கோம்னு தெரியலே. தப தபன்னு ரொம்பப்பேர் இறங்கறா. வெளியே மழை பெய்யறது.
'எக்மோர் ஸ்டேஷன் எல்லாம் எறங்குங்கோ’ன்னு கண்டக்டர் குரல். முண்டியடிச்சிண்டு பலபேர் ஏறிவரா. லேடீஸ் ஸீட் கொஞ்சம் காலி. 'டப்’னு உட்கார்ந்துட்டேன். இன்னும் மூணு ஸ்டாப்பிங்தானே? இருந்தாலும் இந்த 'சாயற மாடு'கிட்டே இருந்து தப்பிச்சேனே. இப்பத்தான் நான் அவனைப் பாக்கறேன். மோறையைப் பாரேன்! சிரிப்பு என்ன வேண்டியிருக்கு? மானம் கெட்ட ராஸ்கல்! நெத்தியிலே மயிரை இழுத்து விட்டுண்டு... பஸ்லெ 'லவ்' பண்ற மோறைகள் லட்சணமெல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு. நான் பார்த்ததை அவன் கவனிச்சு இருக்க முடியாது, 'ஹாண்ட் பாக்’லேயிருந்து இந்த வாரம் 'ஆ...' பத்திரிகையை எடுத்து முகத்துக்கு நேர விரிச்சு வெச்சுக்கறேன். அதுக்கப்புறம் அவன் ஞாபகமே போயிடறது.
மத்தியானம் லஞ்ச் டயத்திலே ரெண்டு பக்கம் படிச்சுட்டு மூடிவெச்ச கதையைப் புரட்டறேன். என்னோட லைஃப்லே ஏற்பட்ட மாதிரியே ஒரு இன்ஸிடெண்ட்டை வெச்சு ‘ஆர்.கே.வி.' எழுதின கதை. எனக்கு அவர் எழுதற கதைகள் பிடிக்கும். எனக்கென்னவோ ஆர். கே.விங்கிற இன்ஷியல்லே எழுதறது பொம்மனாட்டியாகத்தான் இருக்கணும்னு தோண்றது. அந்தக் கதைகளின் 'தீம்ஸ்' எல்லாமே இந்தக் காலத்துப் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளா இருக்கறது அதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்.
ஆர்.கே.வி.யோட கதைகளைப் பத்தி ஆபீஸ்லே எவ்வளவு கான்ட்ரவர்ஸி நடக்கறது! நான் எந்தக் கான்ட்ரவர்ஸிலேயும் தலையிட்டுக்கிறதில்லே. எல்லாரும் அபத்தமா உளர்றச்சே சில சமயத்திலே சிரிப்பு வரும்; சில சமயத்திலே எரிச்சல் வரும்.
அவா நெனச்சுக்கிறா: எனக்கு இலக்கியத்திலே டேஸ்ட்டே கெடையாதுன்னு. அவா பேசறதிலேருந்து அவாளைப்பத்தி நானும் அதையேதான் தெரிஞ்சுக்கறேன். என் டேஸ்ட் என்னோட! ஒய் ஷுட் ஐ ஷேர் இட் வித் அதர்ஸ்?
சரி, கதையைப் படிப்போம், இது ஆர்.கே.வி. எழுதின கதை:
அவளைப் பார்க்கிற யாருக்கும், எளிமையாக அரும்பி உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து ஈரத்தில் நின்று நின்று, தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப்போய், பழந்துணித் தாவணியும், ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி, ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில் அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக்கூடத் தோன்றும்...
இப்படியெல்லாம் எழுத ஆர்.கே.விக்கு மட்டும்தான் வரும். வாக்கியம் எவ்வளவு நீண்டு போனாலும் நீளமாப்போற பிரக்ஞையே இல்லாம, சித்திரம் சித்திரமா மனசிலே வர்ற மாதிரி எழுதற முறை...
நானும் அன்னிக்கு, பன்னெண்டு வருஷத்துக்கு