Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal
By Vaasanthi
4/5
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Vergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsVadikaal Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Kizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsNaan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Jaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsPlum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Moongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsThunaivi Rating: 2 out of 5 stars2/5Puthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5America Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsKarai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsPathaiyorathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Suriyargal Rating: 0 out of 5 stars0 ratingsJananam Rating: 4 out of 5 stars4/5Nizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal
Related ebooks
Poiyil Pootha Nijam Rating: 0 out of 5 stars0 ratingsPuriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsThaaraa Thaaraa Thaaraa Rating: 3 out of 5 stars3/5Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Shurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Marma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Rating: 5 out of 5 stars5/5Nerunji Mull Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Kaadhalenum Vaanavil Rating: 4 out of 5 stars4/5Jaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsNaan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsAgni Siragugal Rating: 5 out of 5 stars5/5Yathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 5 out of 5 stars5/5Ver Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsKalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Ellaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Yaathumaki Nindral Rating: 5 out of 5 stars5/5
Reviews for Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal
5 ratings0 reviews
Book preview
Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal - Vaasanthi
http://www.pustaka.co.in
துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள்
Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
1
தூரத்தில் ஜனநடமாட்டம் தெரிந்தது. வீணா சற்று நின்றாள். நிற்காமல் ஓடிவந்ததில் தொண்டை வறண்டு மூச்சிரைத்தது. இதயம் பிளந்து விடுவேன் என்று சத்தம் போட்டது. அதைச் சமாதானப்படுத்துகிற மாதிரி அவள் மார்பை இடது கையால் அமுக்கிக்கொண்டாள். லேசில் அது சமாதானமாகி அடங்காது போலிருந்தது. அதிக நேரம் இங்கே நிற்காதே என்று மூளை வேறு உயிரை வாங்கியது.
கன்னங்களும் கழுத்துப்பட்டையும் கண்ணும் நெருப்பாய்ச் சுட்டன. அவள் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தலையைச் சற்று கோதிக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
எட்டத்தில் தெரிந்தது ரயில்வே ஸ்டேஷன். கடவுளே, எத்தனை நேரம் இன்னும் நடக்க வேண்டும்? அதற்குள் யாராவது நம்மை அடையாளம் கண்டு கொண்டு விட்டால்?
அந்த நினைப்பு குபீரென்று ஒரு பீதியைக் கிளப்பிற்று.
ஓடு… ஓடு…
முடியவில்லை அவளால், ப்ரேக்கிங் பாயிண்டை அடைந்தாயிற்று. என்னால் முடியாது என்று உடம்பு கெஞ்சிற்று.
ஏதோ மாட்டு வண்டி வரும் சத்தம் கேட்டது. அவள் பயத்துடன் முகத்தைச் சட்டென்று வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
அம்மா, ஸ்டேஷனுக்குத் தானே போறிங்க?
இப்பொழுது என்ன செய்வது? தெரிந்தவனாக இருப்பானோ? அடையாளம் கண்டுகொள்வானோ?
ஏறிக்கங்கம்மா. வண்டி சும்மாத்தான் போவுது ஸ்டேஷனுக்கு. கிழக்கே போற ரயில் வரதுக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு
அவள் திரும்பினாள். வண்டிக்காரன் முகம் புதுசாக இருந்தது. சினேகபாவம் தெரிந்தது.
அந்த ரயிலைத் தானே பிடிக்க ஓடறீங்க?
ஆமாம்பா.
ஏறிக்கங்கம்மா, ரெண்டு நிமிஷத்திலே கொண்டுவிடறேன்.
அவள் ஏறி உட்கார்ந்தாள். இன்னும் ஐந்து நிமிஷங்களுக்கு இந்த முகத்துக்கு பாதுகாப்பு என்று ஒரு நிம்மதி ஏற்பட்டது.
ரொம்பத் தொலைவிலேந்து நா கவனிச்சுக்கிட்டு வரேன். என்னமா ஓடறிங்க! வண்டி ஏதும் கிடைக்கல்லியா?
ஊஹும்…
முகம் தக்காளிப்பழம் கணக்கா ஆயிடுச்சி
அவள் தனது முழங்கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மூச்சு இன்னும் இரைத்தது. லேசாகக் கண்களில் நீர் துளிர்த்து விடும் போலிருந்தது.
ஆண்டவனே, என்னைக் காப்பாற்று… என்னை…
ஆ, வந்துட்டம் பார்த்தீங்களா? இரண்டே நிமிஷம்...
அவள் நன்றியுடன் லேசாகப் புன்னகைத்து இறங்கினாள். சில்லறைக்குத் துழாவுகையில்,
அதெல்லாம் வேண்டாம் போங்க. கைகாட்டி மரம் கீழே விழுந்தாச்சு, வண்டி வந்துரும். போங்க…
அவள் பதில் பேசாமல் கைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு விரைந்தாள்.
எந்த ஊருக்கு டிக்கெட் வாங்குவது என்கிற ஒரு வேகமான குழப்பத்துடன் அவள் டிக்கெட் கெளண்டரை அணுகுகையில்,
தாராபுரமா?
என்று உள்ளேயிருந்தவர் கேட்டது போலிருந்தது.
ஆமாம்,
என்றாள் அவள் அவசரமாக.
ரயில் வந்துடுத்து. சீக்கிரம் போங்கோ.
டிக்கெட்டை அவசரமாக வாங்கிப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பெருத்த ஓசையுடன் வந்து நின்ற ரயிலை நோக்கி அவள் ஓடினாள். கிடைத்த பெட்டியில் ஏறி, காலியாக இருந்த ஒரு ஜன்னல் ஓரம் போய் உட்கார்ந்தாள். மூச்சு ஒரு நிதானத்துக்கு வந்ததும் அவள் தன்னைச் சுற்றிலும் ஒரு தயக்கத்துடன் பார்த்தாள். பெட்டியில் அதிகக் கூட்டமில்லை. எதிரே அரைத் தூக்கத்திலிருக்கும் ஒரு கிழத் தம்பதிகள். ஓரத்தில் ஒருமாத நாவலைப் படித்தபடி உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன். தன்னையே அவன் வெட்கமில்லாமல் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் அவளுக்கு லேசாக உதறல் எடுத்தது.
இவன் அசட்டுத்தனமாகப் பார்க்கிறானா அல்லது அடையாளம் தெரிந்து பார்க்கிறானா? அவன் நிதானமாகத் தன் பார்வையைப் புத்தகத்துக்குத் திருப்பிக்கொண்டான்.
ஓ, நமக்கு மூளை கலங்கித்தான் போய்விட்டது என்று அவள் அவசரமாகத் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். வெளியே டீ, காபி, சிகரெட் என்ற ஏக இரைச்சல்கள் அவளை சம்பந்தமில்லாமல் கலவரப்படுத்துகிற மாதிரி இருந்தது.
மேலே இடம் இருக்கே?
என்றான் அந்த இளைஞன் திடீரென்று.
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவன் லேசாகச் சிரித்தான்.
ஸுட்கேஸை மடியிலே வெச்சிருக்கிங்களே, மேலே வெக்கலாம்னு சொன்னேன்.
அவள் ஓர் அசட்டுச் சிரிப்புடன் பெட்டியைத் தூக்கி மேலே வைத்தாள்.
கை விரல்கள் இன்னும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் ஒரு வினாடி அந்த விரல்களைப் பிரமையுடன் பார்த்தபடி நின்றாள். நீள நீள தந்த விரல்கள் பெட்டியை அழுத்திப் பிடித்திருந்ததில் சிவந்து போன விரல்கள் - விரல்களை இன்னும் அதிக நீளமாகக் காண்பிக்கும் - லேசான கூர்மையுடன் U வடிவத்தில் அழகாக அளவாக ட்ரிம் செய்யப்பட்டு… சாயம் பூசப்பட்டு… இடது கையின் மூன்றாவது விரல் நகம் ஒடிந்து போயிருந்ததை அவள் கவனித்தாள்.
அவள் சட்டென்று தன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். கால்களை மீட்டுக்கு மேல் குத்திட்டு வைத்துக் கொண்டு முழங்கால்களைக் கைகளால் அணைத்துக்கொண்டாள்.
ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் டீயும் காப்பியும் சிகரெட்டும் பிஸ்கெட்டும் இரைச்சலுடன் அவசரத்துடன் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தன. ‘நீதான் வீணாவா? நீதானா?’ என்று கேட்கிற மாதிரி பிரமை எழுப்பின.
ரயில் ஏன் இன்னும் கிளம்பவில்லை?
பிளாட்பாரத்தின் கோடியில் ஒரு சிவப்புத் தொப்பி தென்பட்டது. மார்பு மறுபடியும் குபீரென்று டமாரமடித்தது. அவள் தன்னை அறியாமல் ஜன்னலின் ஷட்டரை கீழே இறக்கினாள். முழங்கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். இப்போது இதயம் காதுக்குள்ளேயே வந்து அமர்ந்து கொண்டு எச்சரித்தது.
இதோ இப்பொழுது அந்தச் சிவப்புத் தொப்பி உள்ளே நுழையப் போகிறது… தலையை நிமிர்த்தப் போகிறது.
நீங்கள் தானே மிஸ் வீணா? எழுந்திருங்கள்…
எழுந்திருக்கப் போகிறாள். நடங்கள்.
நடக்கப் போகிறாள்.
திடீரென்று ஒரு குலுக்கலுடன் வண்டி கிளம்பிற்று. அவள் நம்பமுடியாத திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.
டீயும், காப்பியும், வாழைப்பழமும், சிகரெட்டும் ஒருவித ஏக்கத்துடன் நகரும் வண்டியைப் பார்த்தபடி நின்றன. ஸ்டேஷனின் எல்லையைக் கடந்ததும் ஒரு லேசான நிம்மதி அவளுள் ஏற்பட்டது.
பேப்பர் வேணுமா?
அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
தாங்க்ஸ்
என்றபடி அவள் பேப்பரை வாங்கிக்கொண்டாள்.
அவள் மேலெழுந்தவாரியாகத் தலைப்புகளைப் பார்த்தாள். எந்தச் செய்தியிலும் மனசு பதியவில்லை. பதியமாட்டேன் என்று மறுத்தது. திரும்பத் திரும்ப நேற்றைக்குப் போய் நின்றது.
நேற்று. நேற்றா? இன்றா?
அது கூடத் தெளிவாக இல்லை. ஓ, இந்த நினைவுகளிலிருந்து நமக்கு விடிவு உண்டா? ‘நாளை’ என்பது ஒன்றிருக்கிறதா?
அவள் லேசாகத் தலைநிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய பார்வை இன்னும் அவள் மேல்தான் இருந்தது. அவள் அவசரமாகப் பேப்பருக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள். அப்பொழுதுதான் அது கண்ணில்பட்டது. ‘வான்டட்’ பகுதியில் விளம்பரம்
ஒரு பணக்கார வயதான பெண்மணியை கவனித்துக் கொள்ள, ஒரு படித்த யுவதி தேவை. தபால் மூலமோ நேரிலோ வந்து விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம். தங்க இடமும் சாப்பாடும் இலவசம்.
ஒரு விலாசம் கொடுக்கப்பட்டிருந்தது ராஜாராம், த. பை. எண்: 430. சீதாபுரம்.
அது எங்கே இருக்கும் இந்தச் சீதாபுரம்? இவனைக் கேட்டால் என்ன என்று தோன்றிய ஆவலை அவள் உடனே அமுக்கிக்கொண்டாள். இவன் உளவுக்காரனாக இருக்கலாம். நான் ஏதாவது பேசுவேனா என்று பார்ப்பதற்காகவே என்னிடம் பேச்சுக் கொடுக்க முயல்கிறவனாய் இருக்கலாம். இல்லாவிட்டால் இப்படி வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கமாட்டான். நான் யாரையும் நம்பி எதையும்
பேசிவிடக் கூடாது.
எத்தனை நாட்களுக்குத் தன்னால் இப்படி இருக்க முடியும் என்று மறுபடி பீதி ஏற்பட்டது. எதற்காக ஓடுகிறேன் என்று ஆயாசம் ஏற்பட்டது. எந்த எதிர்காலத்தை நோக்கி ஓடுகிறேன்? எங்கே ஓடினாலும் நெஞ்சில் பாரமாக இருக்கப்போகும் நினைவுகளைச் சுமந்து கொண்டு, எதைக் கண்டாலும் பயந்து கொண்டு, யார் பேசினாலும் சந்தேகித்துக் கொண்டு எப்படியிருக்கப் போகிறேன்? அத்தகைய ஒரு வாழ்வு எப்படியிருக்கும்? அதுவே ஒரு ஆயுள் தண்டனையாக இருக்கும். அணு அணுவாகச் சித்ரவதை செய்து உயிரைக் குடிக்கும். அதற்குப் பதில் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி நேராகப் போலீஸுக்குச் சென்று சொல்லலாம்
சார், என்னுடைய பெயர் வீணா. நேற்று…
ராத்திரி உங்களுக்கு சாப்பாடு வேணுமா?
அவள் யதார்த்தத்துக்கு இறங்கிவந்தாள். இதெல்லாம் ரொம்பப் பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் என்று நினைத்துக்கொண்டாள்.
என்மேல் தப்பில்லை ஆண்டவன் காப்பாற்றுவார். வேணும்
அவள் பேப்பரை மூடிவைத்துவிட்டு மறுபடியும் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மறுபடியும் மறுபடியும் எழும்பப் பார்த்த பய அலைகளை அமுக்கியபடி அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
என் மேல் சிறிதும் தப்பில்லை. நடந்தவைக்கு நான் பொறுப்பில்லை… தப்பித்துக் கொண்டு வந்தாயிற்று… இனிமேல் பழசையெல்லாம் மறந்து, புதிய வாழ்வை ஆரம்பிக்க வேண்டும்.
பழசையெல்லாம் மறந்து…
அது சாத்தியமா? புதிய வாழ்வா? அதற்கெல்லாம் ஆசைப்படலாமா? தாராபுரத்தில் இறங்கியவுடன் அவளை எதிர்பார்த்துக்கொண்டு யாரும் நிற்கமாட்டார்களா?
நீங்கள் மிஸ் வீணாதானே?
என்றபடி… மீல்ஸ், மீல்ஸ்!
சாம்பாரும் பச்சை வெங்காயமும் அருகில் வாசனை அடித்தது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததில் வயிறு உறுமிக்கொண்டிருந்தது. உடம்பிலிருந்த அசதியிலும் மனத்தின் சங்கடத்திலும் சாப்பாட்டைத் திறந்து பார்த்ததுமே குமட்டிக்கொண்டு வந்தது. அவள் கொஞ்சம் கொறித்து விட்டு மூடிவைத்து விட்டுப் படுத்துக்கொண்டாள். அன்றைக்கு வெகுதூரம் நடந்ததில் களைப்பு மேலீட்டால் அவள் தன்னையறியாமல் தூங்கிப் போனாள்.
அவள் கண் விழித்தபோது பொழுதுபுலர்ந்திருந்தது. கிழத்தம்பதிகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனைக் காணவில்லை. அவன் படித்துக் கொண்டிருந்த மாதநாவலும் பேப்பரும் அவளுடைய தலைமாட்டில் இருந்தன.
வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றது. அவள் காப்பி கிடைக்குமா என்று எட்டிப்பார்த்தாள். ஸ்டேஷனின் பெயர்ப் பலகை பளிச்சென்று தெரிந்தது.
சீதாபுரம்.
அவள் சட்டென்று ஒரு திகைப்புடன் எதிர்பாராத ஒரு சின்ன சந்தோஷத்துடன் எழுந்து மேலிருந்த ஸ்ட்கேஸை இறக்கி ஸீட்டிலிருந்த அந்த நாவலையும் பேப்பரையும் எடுத்துக் கொண்டு அவசரமாக ரயிலை விட்டு இறங்கினாள்.
ஸ்டேஷனில் எண்ணி ஏழெட்டு பேர்தான் கண்ணில்பட்டார்கள். இன்னும் யாரும் சரியாக விழித்துக் கொள்ளவில்லை என்று தோன்றிற்று.
வீணா ஸூட்கேஸைத் தூக்கிக்கொண்டு நடந்தாள். பெருத்த சத்தத்துடன் குழாய் ஒன்று கேட்பாரில்லாமல் கொட்டிக்கொண்டிருந்தது. அவள் அங்கு நின்று பெட்டியைத் திறந்து சோப்பையும் டவலையும் எடுத்து, பல் விளக்கி முகத்தைக் கழுவிக்கொண்டாள். ஸ்டேஷனில் காப்பியும் குடித்துவிட்டு வெளியில் வருகையில் உடம்பில் சற்று தெம்பு ஊறியிருந்தது.
வெளியில் இரண்டு மூன்று ஜட்கா வண்டிகள் நின்றிருந்தன. அவள் மறுபடி ஒரு அவசரத்துடன் பேப்பரில் அந்த விலாசத்தைப் பார்த்துக்கொண்டாள்.
ராஜாராம், தபால் பை. 430, சீதாபுரம். தெருவின் பெயர் எதுவுமில்லாமல் இது என்ன விலாசம்? யாருக்குப் புரியும் சொன்னால்?
எங்கெம்மா போகணும்?
ஒரு ஜட்காவிடமிருந்து குரல் வந்தது.
ராஜாராம் என்கிறவர் வீட்டுக்குப் போகணும்.
வண்டிக்காரன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். பார்வையில் வினோதம் தெரிந்தது.
உட்காருங்க.
அவள் பேசாமல் ஏறி உட்கார்ந்துகொண்டாள். ஊர் சின்னதாக இருந்தது. அந்த ஊரைத்தாண்டி ஜட்கா வெகுதூரம் போயிற்று. வண்டிக்காரன் எதுவும் பேசாமல் ஏதோ ஒரு தீவிரத்தோடு வண்டியைச் செலுத்தினான். அவனிடமிருந்து லேசான மதுவின் நெடி அடித்தது.
ஊருக்கு வெளியிலே இருக்கா அவங்க வீடு?
என்றாள் அவள் கவலையோடு.
ஆமாம். நீங்க அவங்களுக்குச் சொந்தமா?
இல்லே
ஊருக்கு புதுசா?
ஆமாம்
அதானே பார்த்தேன்!
அவனுடைய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவங்களைத் தெரியுமாப்பா உனக்கு?
தெரியுமாவா? நல்லாக் கேட்டீங்க. பச்சைப் புள்ளை கூடச் சொல்லும்.
என்ன சொல்லும்? இவன் அதிகம் பேசமாட்டான் போலிருந்தது.
ஊரை விட்டுத்தள்ளி ஏன் இருக்காங்க?
அவன் பகபகவென்று சிரித்தான்.
பெரிய மனுஷங்க கொஞ்சம் தள்ளியிருக்கிறதுதாம்மா நல்லது!
அவள் குழப்பத்துடன் பேசாமல் இருந்தாள்.
பெரிய ஜமீன்தாருங்க ஏழை ஜனங்க மத்தியிலே இருப்பாங்கன்னு எதிர்பார்த்தீங்களா!
அவள் ஒன்றும் பேசாமல் வெளியில் தெரிந்த பச்சை வயல்களை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.
ஒரு விஷயமும் தெரியாமே எப்படி வந்தீங்க?
அவள் பேப்பரில் கண்ட விஷயத்தைச் சொன்னாள்.
வண்டிக்காரன் வேகமாகச் சிரித்தான்.
ஓ, அதுவா கதை?
அதற்குப் பிறகு அவன் ஏதோ யோசனையில் தனக்குள் மூழ்கியிருந்தான்.
சட்டென்று வண்டியின் வேகம் குறைந்தது.
வீடு வந்தாச்சு, இறங்குங்க.
அவள் திடுக்கிட்டு இறங்கினாள். அவள் கண்ணில்பட்டது வீடு இல்லை. மாளிகை. பெரிய வெட்டவெளிக்கு நடுவே பிருமாண்டமான மாளிகை. அவளுக்கு ஏற்பட்ட திகைப்பிற்கு நடுவில் ஒரு சின்ன சந்தோஷம் ஏற்பட்டது. பழசை மறக்க, அடைக்கலம் தேட, இதை விட நல்ல இடம் வேறு இருக்க முடியாது என்று தோன்றிற்று. சீதாபுரத்தில் அவளைத் தேடிக்கொண்டு யார் வரப்போகிறார்கள்?
2
வீணா பர்ஸைத் திறந்து வண்டிக்காரனிடம் இரண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள்.
அவன் அதை வாங்கிக்கொண்டு சற்றுநின்றான். என்னப்பா?
அவன் அவள் முகத்தையும் கண்களையும் உதடுகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் குரலைத் தாழ்த்திக்கொண்டான்.
அம்மா, ஜாக்கிரதையா இருங்க.
அவள் ஒரு லேசான புன்னகையுடன் தலையை அசைத்து விட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அந்தப் பிரும்மாண்டமான சாத்தியகேட்டை நோக்கி நடந்தாள். வண்டிக்காரனின் கவலையை நினைத்து அவளுக்குச் சிரிப்புவந்தது.
இன்று காலை வரை அவள் மனசில் இருந்த பயங்களும், நடுக்கங்களும் எத்தனை பயங்கரமானவை என்று அவனுக்குத் தெரியாது.
அவளுக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட அனுபவங்களுக்குப் பிறகு இனிமேல் ஏற்படும் எந்த அனுபவமும் அத்தனை பயங்கரமாக இருக்க முடியாது என்று அவள் தனக்குள் தீர்மானித்துக்கொண்டாள்.
யாரும்மா நீ?
உயர்ந்த கேட்டுக்கு அடியில் சின்ன உருவமாகக் காக்கி உடையில் காவற்காரன் நின்றிருந்தான்.
மிஸ்டர் ராஜாராமைப் பார்க்கணும்.
அதெல்லாம் யாரையும் பார்க்க முடியாது போங்க.
இல்லை. அவரை அவசியம் பார்க்கணும்பா.
இது என்னடா இது தொந்திரவு? அவரையெல்லாம் பார்க்க முடியாது. என்ன விஷயம்?
ஒரு வேலை விஷயமா வந்திருக்கேன்.
என்ன வேலை?
அவளுக்குக் கோபம் வந்தது. ராஜாராமுக்கு மேல் இவனுடைய ஜபர்தஸ்து இருக்கிறதாகத் தோன்றிற்று. பேப்பரிலே விளம்பரம் பண்ணியிருந்தாங்களே?
அவன் சட்டென்று அவளை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்தான். பதிலேதும் பேசாமல் அவன் அந்தப் பிரம்மாண்டக் கதவுகளைத் திறக்கும்போது எண்ணெய் இல்லாத கதவு பெரிய சத்தம் போட்டது. யாருக்கும் தெரியாமல் இந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியே போவதோ உள்ளே வருவதோ அசாத்தியமான காரியம் என்று அவள் கணித்துக்கொண்டாள்.
நீள இந்தப் பாதையிலே நடந்துபோங்க. மாளிகையிலே அந்தச் சின்னப் படிக்கட்டை ஏறினதும் வலது பக்கம் ஒரு ரூம் இருக்கும் அங்கே ஐயாவுடைய செகரட்டரி இருப்பாங்க, போய்ப் பாருங்க.
சரி.
நீள நடக்கையில் தோட்டம் மிக அழகாக இருந்ததை அவள் கவனித்தாள். பெரிய பெரிய பூக்கும் மரங்கள் சூழ மாளிகை மிகவும் தண்ணென்ற குளுமையிலிருந்தது. மனித நடமாட்டமே இல்லாமல் ஒரு மோனத் தவத்திலிருந்தது.
சட்டென்று அவள் கவனம் கலைந்தது. ஓர் ஆள் அவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அவள் சற்று ஆச்சரியத்துடன் நின்றாள். அந்த ஓட்டத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. சாதாரண ஓட்டமாக இல்லாமல் ஒரு குதியல் தெரிந்தது. ஐந்தாறு வயதுப் பிள்ளை துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடுகிற